செய்திகள்

கருமத்தம்பட்டி அருகே விபத்து: கணவன்-மனைவி மரணம்

Published On 2017-10-20 11:27 GMT   |   Update On 2017-10-20 11:28 GMT
கருமத்தம்பட்டி அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் கணவன், மனைவி பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை:

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள துரைசாமிபுரம் பிள்ளையார் கோவில் வீதியை சேர்ந்தவர் முத்துராஜ்(வயது 50).

இவருக்கு பூபதி(39) என்ற மனைவியும், பிரிதிவிராஜ் (22) என்ற மகனும் உள்ளனர். இவர்கள் கடந்த 2½ வருடமாக கோவையை அடுத்த கருமத்தம்பட்டி அருகே உள்ள வளையபாளையத்தில் தங்கி விசைத்தறி வேலைக்கு சென்று வந்தனர்.

நேற்று இரவு 8.30 மணி அளவில் முத்துராஜ் மனைவி, மகனுடன் மோட்டார் சைக்கிளில் கிட்டாம்பாளையம் நால்ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த கார் இவர்களது மோட்டார் சைக்கிள் மீது வேகமாக மோதியது.

இதில் முத்துராஜ், பூபதி, பிரிதிவிராஜ் ஆகிய 3 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். சம்பவஇடத்துக்கு போலீசார் விரைந்து சென்று படுகாயமடைந்த 3 பேரையும் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

வழியிலேயே முத்துராஜ் இறந்தார். பூபதி, பிரிதிவிராஜ் ஆகியோர் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி பூபதி இன்று அதிகாலை இறந்தார். பிரிதிவிராஜூக்கு கால் முறிவு ஏற்பட்டது. அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சம்பவஇடத்துக்கு டி.எஸ்.பி. ஜெயச்சந்திரன், இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விபத்தை ஏற்படுத்திய காரை அதேபகுதியை சேர்ந்த ரங்கசாமி(34) என்பவர் ஓட்டி வந்துள்ளார். இவர் அப்பகுதியில் விசைத்தறி குடோன் வைத்துள்ளார்.

விபத்து நடந்ததும் ரங்கசாமி காரில் இருந்து இறங்கி தப்பி ஓடி விட்டார். தலைமறைவான அவர் மீது வழக்குபதிவு செய்து போலீசார் தேடி வருகிறார்கள்.
Tags:    

Similar News