செய்திகள்

இரட்டை இலை சின்னத்தை மீட்க ஈ.பி.எஸ். - ஓ.பி.எஸ். அணியினர் டெல்லி பயணம்

Published On 2017-09-18 04:44 GMT   |   Update On 2017-09-18 04:44 GMT
இரட்டை இலை சின்னத்தை மீட்கும் விவகாரம் தொடர்பாக ஈ.பி.எஸ். மற்றும் ஓ.பி.எஸ். அணியினர் இன்று டெல்லிக்கு புறப்பட்டு சென்றனர்.
சென்னை:

அ.தி.மு.க.வில் பிளவு ஏற்பட்டதால் 45 ஆண்டுகளாக அக்கட்சியின் அதிகாரபூர்வ சின்னமாக இருந்த இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது. சின்னத்தை பெறுவதற்காக அ.தி.மு.க. அணிகள் சார்பில் பிரமாண பத்திரங்கள் உள்பட பல்வேறு ஆவணங்கள் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக மதுரை உயர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதிகள், தேர்தல் ஆணையம் தாமதப்படுத்தாமல் இதுபோன்ற பிரச்சனைகளுக்கு விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே அக்டோபர் 31-ம் தேதிக்குள் இரட்டை இலை சின்னம் யாருக்கு? என்பதை முடிவெடுத்து தேர்தல் ஆணையம் அறிவிக்க வேண்டும் என்று
உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

இந்நிலையில், இரட்டை இலை சின்னத்தை மீட்பது தொடர்பாக ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் அணியினர் இன்று டெல்லி செல்கின்றனர்.

கடந்த 12-ம் தேதி நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழுவில் இரட்டை இலை சின்னத்தை மீட்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் தொடர்ச்சியாகவே ஈ.பி.எஸ். மற்றும் ஓ.பி.எஸ். அணியினர் இன்று டெல்லி புறப்பட்டு செல்கின்றனர்.

அமைச்சர் ஜெயகுமார், கே.பி.முனுசாமி, உதயகுமார், மனோஜ்பாண்டியன் உள்பட பலர் இன்று புறப்பட்டனர். அவர்கள் இரட்டை இலை சின்னத்தை மீட்பது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் முறையிட உள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் நாளை தேர்தல் அதிகாரிகளை சந்திக்க உள்ளனர் என அ.தி.மு.க. வட்டாரம் தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News