செய்திகள்

திண்டுக்கல்லில் பலத்த மழை: சுவர் இடிந்து விழுந்து ஆஸ்பத்திரி ஊழியர் பலி

Published On 2017-09-11 11:57 GMT   |   Update On 2017-09-11 11:57 GMT
திண்டுக்கல்லில் பெய்த பலத்த மழையால் சுவர் இடிந்து விழுந்து ஆஸ்பத்திரி ஊழியர் பரிதாபமாக பலியானார்.

திண்டுக்கல்:

தமிழகம் முழுவதும் வெப்பச்சலனம் காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது. திண்டுக்கல் நகர் பகுதியில் மேகங்கள் சூழ்ந்து வந்து மழை வராமல் ஏமாற்றியே வந்தது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதியடைந்தனர். குடிநீருக்கு கூட தட்டுப்பாடு ஏற்பட்டது.

நேற்று மாலை திடீரென சாரல் மழையாக தொடங்கி பின்பு பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். கழிவு நீரோடு மழை நீரும் கலந்து சென்றதால் துர்நாற்றம் வீசியது.

ஆர்.எம்.காலனி ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 21) திண்டுக்கல்லில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் வேலை பார்த்து வந்தார். நேற்று மாலை பலத்த மழை பெய்ததால் இவர் தனது நண்பர்கள் ஆனந்த் (24), காளிதாஸ் (21) ஆகியோருடன் ஒரு வீட்டில் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்தார்.

அப்போது எதிர்பாராத விதமாக சுவர் இடிந்து விழுந்தது. இதில் 3 பேரும் இடிபாடுகளில் சிக்கினர். அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஓடி வந்தனர். அவர்களை மீட்க முயற்சித்த போது ஜெயக்குமார் சம்பவ இடத்திலேயே பலியானார்.

படுகாயமடைந்த காளிதாஸ், ஆனந்த் ஆகியோர் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இது குறித்து திண்டுக்கல் மேற்கு போலீசார் வழக்கு பதிவு செயது விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News