செய்திகள்
ராசிபுரம் அருகே சீரான குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்
ராசிபுரம் அருகே சீரான குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ராசிபுரம்- வெண்ணந்தூர் சாலையில் சிறிது போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
ராசிபுரம்:
ராசிபுரம் அருகேயுள்ள வெண்ணந்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்டது ஆலாம்பட்டி. இங்கு கடந்த சில மாதங்களாக சீராக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனிடையே 15 நாட்களாக தண்ணீர் வரவில்லை என்று கூறி அப்பகுதி மக்கள் அத்தனூரில் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த வெண்ணந்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அனந்தராமன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் அதிகாரிகளிடம் பேசி சீரான குடிநீர் கிடைக்க உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் உறுதி அளித்தனர். இதையடுத்து மறியலை கைவிட்டு பொதுமக்கள் சாலையில் இருந்து கலைந்து சென்றனர்.
இதனால் ராசிபுரம்- வெண்ணந்தூர் சாலையில் சிறிது போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.