என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கிராம மக்கள்"
- பசுமாட்டு பாலை குப்புசாமி குடும்பத்தினர் விற்பனை செய்ததில்லை.
- முதலாவதாக பிறந்த கன்று குட்டியையும் பெருமாள் கோவிலுக்கு கொடுத்து விட்டது குறிப்பிடத்தக்கது.
திண்டுக்கல்:
குஜிலியம்பாறை அருகே கரிக்காலி கோமுட்டிபட்டியை சேர்ந்தவர் குப்புசாமி (வயது51). இவர் சமையல் மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 24 ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கு கண்ணன் என்ற ஆண் குழந்தை பிறந்தது. கண்ணன் நீண்ட நாட்களாக வாய் பேச முடியாமல் இருந்துள்ளார்.
இதற்காக வழிபாடு நடத்திய குப்புசாமி கரூர் தாந்தோன்றி மலை பெருமாள் கோவிலுக்கு நேர்த்திக்கடனாக பசு மாட்டை வளர்த்து வந்தார். ஒவ்வொரு ஆண்டும் பெருமாள் கோவிலுக்கு குடும்பத்துடன் பசுமாட்டை அழைத்து சென்று வழிபாடு செய்துள்ளார்.
இந்நிலையில் 8 ஆண்டுகளுக்கு பிறகு கண்ணன் வாய் பேச தொடங்கி உள்ளார். இதனால் குப்புசாமி குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்தனர்.
மேலும் அப்பகுதி கிராம மக்கள் பசுமாட்டை கோவில் மாடாக நினைத்து வணங்கி வந்தனர். இந்த நிலையில் அந்த பசு திடீரென உயிரிழந்தது கிராம மக்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
குப்புசாமி வீட்டு முன்பு ஏராளமான மக்கள் ஒன்று திரண்டு பசுமாட்டை குளிப்பாட்டி அலங்காரம் செய்து பூமாலையிட்டு இறுதிச்சடங்குகள் செய்தனர்.
முன்னதாக தாந்தோன்றி மலை பெருமாள் கோவிலில் இருந்து தீர்த்தம் கொண்டு வரப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் பல்வேறு அர்ச்சனைக்கு பின்னர் தோட்டத்து நிலத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இறந்த பசுமாடு இதுவரை 10 கன்றுகளை ஈன்றுள்ளது. இந்த பசுமாட்டு பாலை குப்புசாமி குடும்பத்தினர் விற்பனை செய்ததில்லை.
கன்று குட்டிகளுக்கே கொடுத்து விடுவார். மேலும் அப்பகுதியில் உள்ள குழந்தைகளுக்கு பசுமாட்டு பாலை இலவசமாக கொடுத்து வந்துள்ளார். முதலாவதாக பிறந்த கன்று குட்டியையும் பெருமாள் கோவிலுக்கு கொடுத்து விட்டது குறிப்பிடத்தக்கது. இவ்வாறான பசுமாடு இறந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பல்வேறு கிராமங்களில் இருந்து பொதுமக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.
- தார் சாலை அமைக்க வலியுறுத்தி பல ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
- வருகின்ற பாராளுமன்ற தேர்தலை புறக்கணிப்பதாக பிளக்ஸ் போர்டு வைத்துள்ளனர்.
குளித்தலை:
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே மருதூர் பேரூராட்சிக்குட்பட்ட விசுவநாதபுரம், சுப்பன் ஆசாரி களப்பகுதியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இவர்களுக்கு செல்வதற்கு முறையான சாலை வசதிகள் இல்லாமல் மழை காலங்களில் சேரும் சகதியுடன் பல்வேறு நிலைகளில் பாதிக்கப்படுவதாக கூறி அப்பகுதி மக்கள் தார் சாலை அமைத்து தர வேண்டி பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தியுள்ளனர். ஆனால் இன்று வரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில் தார் சாலை வசதி செய்து தராமலும், கன்னி வாய்க்கால் பகுதியில் பயன்படுத்தி வந்த வாய்க்கால் பகுதியில் தனி நபர்கள் கம்பி வேலி கட்டி தடுத்துள்ளதாலும் இதனை அகற்றவும், தார் சாலை அமைக்கவும் வலியுறுத்தி பல ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
இதனால் கரூர் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து, அப்பகுதி மக்கள் வீடுகளில் கருப்பு கொடி கட்டியும், கருப்பு கொடி தோரணங்கள் கட்டியும் தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்து வருகின்ற பாராளுமன்ற தேர்தலை புறக்கணிப்பதாக பிளக்ஸ் போர்டு வைத்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- வெள்ளம் வடியாத தெருவில் மண்மூட்டைகளை வரிசையாக அடுக்கி வைத்து அதன் வழியாக சிலர் தங்களது வீடுகளுக்கு சென்று வருகின்றனர்.
- மெஞ்ஞானபுரம் அருகே சிதம்பரபுரம் கிராமத்தைச் சூழ்ந்த தண்ணீர் இன்னும் வடியாததால் தீவாகவே காட்சியளிக்கிறது.
தூத்துக்குடி:
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 17, 18-ந்தேதிகளில் பெய்த வரலாறு காணாத மழையால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பேரிழப்பை ஏற்படுத்தியது. தாமிரபரணி ஆற்றின் மருதூர் தடுப்பணையின் மேலக்கால் மூலம் பாசன வசதி பெறும் சடையநேரி குளம் நிரம்பி உடைந்ததால், உடன்குடி அருகே வட்டன்விளை, வெள்ளாளன்விளை, சீயோன்நகர், சிதம்பரபுரம், லட்சுமிபுரம், மருதூர்கரை, செட்டியாபத்து உள்ளிட்ட பகுதிகளில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது.
தொடர்ந்து வெள்ளத்தை வடிய வைக்கும் பணியில் மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை மேற்கொண்டது. பொக்லைன் எந்திரம் மூலம் வாறுகால் அடைப்புகளை அகற்றி தூர்வாரி, தண்ணீரை வடிய வைக்கும் பணியில் ஈடுபட்டனர். ராட்சத மோட்டார்கள் மூலமும் தண்ணீரை உறிஞ்சி தேரிக்காட்டு பகுதிக்கு அனுப்பினர். எனினும் சுமார் 2 மாதங்களாகியும் வட்டன்விளை, வெள்ளாளன்விளை, சிதம்பரபுரம் பகுதிகளில் தேங்கிய மழைநீர் இன்னும் வடியாததால் கிராமமக்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றனர்.
வெள்ளாளன்விளை வேதகோவில் தெருவில் குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம் வடியாததால், அப்பகுதியைச் சேர்ந்த பெரும்பாலானவர்கள் வெளியூர்களில் உள்ள தங்களது உறவினர்களின் வீடுகளில் வசித்து வருகின்றனர். வெள்ளம் வடியாத தெருவில் மண்மூட்டைகளை வரிசையாக அடுக்கி வைத்து அதன் வழியாக சிலர் தங்களது வீடுகளுக்கு சென்று வருகின்றனர். எனினும் அவசர தேவைக்கு அந்த வழியாக வாகனங்களில் செல்ல முடியவில்லை. பல நாட்களாக வடியாத வெள்ளத்தால் வீடுகளும் வலுவிழந்து காணப்படுவதாக பொதுமக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.
இதேபோன்று வட்டன்விளையில் இருந்து பரமன்குறிச்சி, மெஞ்ஞானபுரத்துக்கு செல்லும் மெயின் ரோட்டில் தேங்கிய தண்ணீர் வடியாததால், வெள்ளாளன்விளை, சீயோன்நகர் வழியாக மாற்றுப்பாதையில் சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்கின்றனர். மேலும் அங்குள்ள தோட்டங்களில் தேங்கிய தண்ணீரும் வடியாததால் விவசாயிகள் தண்ணீரில் தத்தளிக்கின்றனர். விவசாய பணிகளுக்கும் செல்ல முடியாத நிலை உள்ளது.
மெஞ்ஞானபுரம் அருகே சிதம்பரபுரம் கிராமத்தைச் சூழ்ந்த தண்ணீர் இன்னும் வடியாததால் தீவாகவே காட்சியளிக்கிறது. இப்பகுதி மக்களும் அவசர தேவைக்கு அருகில் உள்ள மெஞ்ஞானபுரத்துக்கு செல்வதற்கு பதிலாக, பரமன்குறிச்சி வழியாக மாற்றுப்பாதையில்தான் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் பொதுமக்கள், மாணவ-மாணவிகள், விவசாயிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பெரிதும் அவதிப்படுகின்றனர்.
- மூதாட்டியிடம் கொடுத்து வீட்டை சரி செய்து கொள்ளுமாறும், அரிசி உள்ளிட்ட மளிகை ஜாமான்களை வாங்கி கொள்ளுமாறும் கூறினார்.
- சம்பவ இடத்திற்கு வராத கிராம நிர்வாக அலுவலரை உடனடியாக சஸ்பெண்ட் செய்ய திட்டக்குடி தாசில்தாருக்கு உத்தரவிட்டார்.
திட்டக்குடி:
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த ஆவினங்குடி ஊராட்சியில் உள்ள கொட்டாரம் போத்திரமங்கலத்தில் உள்ள பொது மக்களின் குறைகளை தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ கணேசன் கேட்டறிந்தார்.
அப்போது கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணியால் தனது வீடு பாதிக்கப்படுவதாக கொளஞ்சி என்ற மூதாட்டி அமைச்சரிடம் அழுத படி முறையிட்டார். அவரை அழைத்து கண்களை துடைத்து விட்டு, அழ வேண்டாமென கூறிய அமைச்சர், அதிகாரிகளை அழைத்து இந்த இடத்தை முறையான அளவீடு செய்து, பின்னர் கழிவுநீர் வாய்க்கால் கட்டுமாறு உத்தரவிட்டார்.
மேலும் அதே பகுதியில் வைரம் என்ற மூதாட்டியின் ஓட்டு வீடு முற்றிலும் சேதமானதை கண்ட அமைச்சர், உடனடியாக ரூ.50 ஆயிரம் பணத்தை மூதாட்டியிடம் கொடுத்து வீட்டை சரி செய்து கொள்ளுமாறும், அரிசி உள்ளிட்ட மளிகை ஜாமான்களை வாங்கி கொள்ளுமாறும் கூறினார். பொதுமக்கள் கூறிய புகார்கள் மீது, சம்பந்தப்பட்ட அதிகாரிகளை செல்போனில் தொடர்பு கொண்டு நேரில் வரவழைத்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். சம்பவ இடத்திற்கு வராத கிராம நிர்வாக அலுவலரை உடனடியாக சஸ்பெண்ட் செய்ய திட்டக்குடி தாசில்தாருக்கு உத்தரவிட்டார்.
ஆய்வின் போது தி.மு.க. ஒன்றிய செயலாளர் பட்டூர் அமரலிங்கம், மங்களூர் ஒன்றிய சேர்மன் சுகுணா சங்கர், திட்டக்குடி நகர செயலாளர் பரமகுரு ஆகியோர் உடனிருந்தனர்.
- ஊருக்குள் வந்த சிறுத்தை எங்கு சென்றது என்று தெரியவில்லை
- சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க தானியங்கி கேமராக்கள் பொருத்தி கண்காணிக்கப்படும்.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 10 வனச்சரகங்கள் உள்ளன. இதில் யானை, மான், புலி, சிறுத்தை, கரடி, காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன.
இதில் புலி, சிறுத்தை அவ்வப்போது வனப்பகுதியை விட்டு வெளியேறி கிராமத்துக்குள் புகுந்து கால்நடைகளை வேட்டையாடி வருவது தொடர்கதையாகி வருகிறது.
இந்நிலையில் சத்தியமங்கலம் வனச்சரகத்திற்கு உட்பட்ட அரியப்பம்பாளையம் பகுதியில் நேற்று இரவு 9 மணி அளவில் டீக்கடையின் முன்பு ஒருவர் நின்று கொண்டிருந்தார். தற்போது வனப்பகுதியை விட்டு வெளியேறி வந்த ஒரு சிறுத்தை அந்த நபர் கண்முன்னே பாய்ந்து ஓடியதை நேரில் பார்த்தார்.
இதை பார்த்து அந்த நபர் அலறி கூச்சலிட்டார். இதையடுத்து அப்பகுதியில் மக்கள் திரண்டு வந்து பார்த்தனர். அப்போது சிறுத்தை சென்ற கால் தடம் அங்கு பதிவாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து அங்கு பதிவாகி இருந்த கால் தடயங்களை சேகரித்து ஆய்வு செய்தனர். அது சிறுத்தை கால் தடம் தான் என்பதை அவர்கள் உறுதி செய்தனர்.
ஆனால் நேற்று இரவு ஊருக்குள் வந்த சிறுத்தை எங்கு சென்றது என்று தெரியவில்லை. இதனையடுத்து அரியப்பம்பாளையம் பகுதி பொதுமக்கள் மிகுந்த கவனத்துடனும் இரவு நேரங்களில் தேவையில்லாமல் வெளியே செல்ல வேண்டாம் எனவும் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க தானியங்கி கேமராக்கள் பொருத்தி கண்காணிக்கப்படும். தேவைப்பட்டால் கூண்டு வைத்து பிடிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.
- ராணுவத்தில் பணியாற்றும் வாலிபர்கள் விமானத்தில் சொந்த ஊருக்கு அடிக்கடி வந்து செல்கின்றனர்.
- ஊர்மக்கள் அனைவரும் பணத்தை சிறுக சிறுக சேமித்து விமானத்தில் பறக்க திட்டமிட்டனர்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் அம்பையை அடுத்த வி.கே.புரம் அருகே தாட்டான்பட்டி என்ற கிராமம் உள்ளது. இங்கு சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இந்த கிராமத்தில் பெரும்பாலானோர் விவசாயத்திலும், பெண்கள் பீடி சுற்றும் தொழிலிலும் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ராணுவம், காவல்துறை உள்ளிட்ட அரசு துறைகளிலும் வாலிபர்கள் சேவை புரிந்து வருகின்றனர்.
இந்த நிலையில் இப்பகுதியை சேர்ந்த ராணுவத்தில் பணியாற்றும் வாலிபர்கள் விமானத்தில் சொந்த ஊருக்கு அடிக்கடி வந்து செல்கின்றனர். இதனால் தாட்டான்பட்டியில் வசிக்கும் பெண்களுக்கும் எப்படியாவது ஒரு முறையாவது விமானத்தில் நாமும் பறந்து செல்ல வேண்டும் என்று ஆசைப்பட்டனர். ஆனால் அந்த ஆசை நீண்ட ஆண்டுகளாக கனவாகவே இருந்துள்ளது. அந்த கனவை நிறைவேற்றும் விதமாக ஊர்மக்கள் அனைவரும் பணத்தை சிறுக சிறுக சேமித்து விமானத்தில் பறக்க திட்டமிட்டனர்.
அதன்படி கனவு நிறைவேறும் விதமாக பணத்தை சேமித்து வந்த கிராம மக்கள் நேற்று முன்தினம் இரவு புனித சுற்றுலாவாக விமானம் மூலமாக கோவா புறப்பட்டனர். தொடர்ந்து அங்குள்ள சவேரியாரை இன்று காலை பார்வையிட்டனர். இதற்காக அந்த கிராமத்தை சேர்ந்த பெண்கள் உள்பட சுமார் 134 பேர் விமானத்தில் பறந்தனர். இதற்கான ஏற்பாடுகளை அருளகம் பங்கு தந்தை எட்வர்ட் ராயன் தலைமையில் அருள்பால்துரை, அருளானந்தம் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
முன்னதாக அவர்கள் ஊரில் இருந்து புறப்பட்டபோது, அங்குள்ள புனித அருளானந்தர் ஆலயம் முன்பு அருளகம் பங்கு தந்தை எட்வர்ட் ராயன் தலைமையில் கிராம மக்கள் அனைவரும் கேக் வெட்டி கொண்டாடி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும் அனைவருக்கும் தனியாக அடையாள அட்டை, உடைமைகள் தொலைந்து விடாமல் இருக்க அனைவரது உடைகளிலும் சிவப்பு நிற துணி உள்ளிட்டவை அடையாளமாக வைத்து பல்வேறு திட்டமிடுதலுடன் சென்றனர்.
இதுகுறித்து பங்கு தந்தை எட்வர்ட் ராயன் கூறுகையில், சிறு சிறு சேமிப்பு மூலமாக புனித பயணமாக சவேரியாரை தரிசனம் செய்ய உள்ளோம். எங்கள் கிராமத்தினர் நீண்ட ஆண்டுகளாக விமானத்தில் செல்ல வேண்டும் என கூறினர். அதனால் இந்த புனித சுற்றுலாவிற்கு விமானத்தில் சென்றுவிட்டு, ரெயிலில் ஊருக்கு திரும்ப உள்ளோம். சுமார் 10 ஆண்டுகளாக சிறு சிறு சேமிப்பு மூலமாக எங்கள் பணத்தில் செல்கிறோம். இதனால் எங்களது நீண்ட நாள் கனவு நிறைவேறி இருக்கிறது. இன்றும், நாளையும் என 2 நாட்கள் கோவாவில் தங்கி புனித சவேரியார் ஆலயத்தை சுற்றி பார்க்க உள்ளோம் என்றார்.
- ஒவ்வொரு கிராமத்திற்கும் பொதுவாக வளர்க்கப்படும் சலங்கை மாடுகள் விவசாயத்திற்கு பயன்படுத்தப்படுவதில்லை.
- கோவிலுக்கு சொந்தமானது என்பதை குறிக்கும் வகையில் மாடுகளின் மீது சூலாயுதம் போன்று குறிகள் காணப்படுகிறது.
குடிமங்கலம்:
திருப்பூர் மாவட்டம் உடுமலை சுற்றுவட்டார கிராமங்களில் உருமி இசைக்கேற்ப ஆடும் வகையில் மார்கழி மாதம் முழுவதும் மாடுகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த வகை மாடுகள் சலங்கை மாடுகள் என்று அழைக்கப்படுகிறது.
ஒவ்வொரு கிராமத்திற்கும் பொதுவாக வளர்க்கப்படும் சலங்கை மாடுகள் விவசாயத்திற்கு பயன்படுத்தப்படுவதில்லை. கோவிலுக்கு சொந்தமானது என்பதை குறிக்கும் வகையில் மாடுகளின் மீது சூலாயுதம் போன்று குறிகள் காணப்படுகிறது.
மாட்டுப்பொங்கலன்று பயிற்சி அளிக்கப்பட்ட சலங்கை மாடுகளுடன் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இரண்டு குச்சிகளை கையில் வைத்து சலங்கை மாடுகளுடன் ஆல்கொண்டமால் கோவிலுக்கு கொண்டு வந்து உருமி இசைக்கேற்ப ஆடுகின்றனர்.
பின்னர் சலங்கை மாடுகளை தங்களது ஊர்களுக்கு கொண்டு சென்று ஊரின் பொதுவான இடத்திலோ அல்லது கோவிலில் வைத்து பால், பழம் பொங்கல் வைத்து வழிபாடு செய்கின்றனர். கிராம மக்கள் சாமி பாடல்களை தொடர்ந்து பாடும் போது சலங்கை மாடுகள் தானாகவே சென்று பால், பழம், பொங்கல்களை சாப்பிடுவது சிறப்பாக கருதப்படுகிறது.
உடுமலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இவ்வழக்கம் பாரம்பரியமாக தொடர்ந்து கடைபிடிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில் குடிமங்கலம் அருகே பண்ணைகிணரில் கிராமமக்கள் பொது இடத்தில் பால், பழம், பொங்கல் வைத்து சலங்கை மாடுகளுக்கு பூஜை செய்து வழிபட்டனர். இதில் ஏராளமான கிராம மக்கள் கலந்து கொண்டனர்.
- ஒவ்வொரு ஆண்டும் மழைகாலத்தில் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது தண்ணீரில் மூழ்கி விடுகிறது.
- ஊராட்சி மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி அதிகாரிகளுக்கு அளித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை.
பொன்னேரி,ஜன.5-
மீஞ்சூரை அடுத்த வெள்ளி வாயல் சாவடி பகுதியில் கொசஸ்தலை ஆற்றின் கரைகளை ஒட்டி உள்ள பல ஏக்கர் விவசாய நிலங்கள், செங்கல் சூளை மற்றும் தொழில் நிறுவனங்கள் உள்ளன.
வெள்ளிவாயல் வரை செல்வதற்கு பயன்படுத்தும் பாதை ஒவ்வொரு ஆண்டும் மழைகாலத்தில் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது தண்ணீரில் மூழ்கி விடுகிறது. இதனால் அவ்வழியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டு கிராமமக்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.
வெள்ளிவாயல்சாவடி கொசஸ்தலை ஆற்றில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடும்போது எதிரே உள்ள விவசாய நிலங்களுக்கு செல்வதற்கும் அருகில் உள்ள வெள்ளிவாயல், சுப்பாரெட்டிபாளையம், விச்சூர் உள்ளிட்ட கிராமமக்கள் 10 கிலோமீட்டர் தூரம் வரை சுற்றி செல்லும் நிலை உள்ளது.
எனவே கொசஸ்தலை ஆற்றில் உயர்மட்ட மேம்பாலம் அமைத்து தரவேண்டும் என்று சுற்றி உள்ள 10 கிராமமக்கள் கோரிக்கை விடுத்து உள்ள னர். மேலும் மேம்பாலம் அமைத்து தர கோரி ஊராட்சி மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி அதிகாரிகளுக்கு அளித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை என்று கிராமமக்கள் தெரிவித்து உள்ளனர்.
- சென்னையில் உள்ள பகுதிகளுக்கு வேலைக்கு செல்பவர்கள், பொதுமக்கள், மாணவ-மாணவிகள் தினமும் சிரமப்பட்டு வருகிறார்கள்.
- சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொது மக்களும் பாதிக்கப்படுகிறார்கள்.
சென்னை:
சென்னையை அடுத்த மணலி புதுநகர் அருகே விச்சூர் மற்றும் வெள்ளிவாயல் கிராம பகுதிகள் உள்ளன. இதை சுற்றியுள்ள 15 கிராமங்களில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். இந்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் பயணம் செய்வதற்காக மாநகர பஸ் வசதியில்லை.
இதனால், இந்த பகுதியை சேர்ந்த தொழிலாளர்கள், பெண்கள், முதியவர்கள், மாணவ-மாணவிகள் என அனைவருமே விச்சூரில் இருந்து சென்னைக்கு செல்ல வேண்டுமென்றால், 6 கிலோ மீட்டர் தூரம் நடந்து மணலி புதுநகருக்கு செல்ல வேண்டும். பின்னர் அங்கிருந்து தான் மாநகர பஸ்சில் ஏறி பயணம் செய்யும் நிலை உள்ளது.
அதேபோல், சோழவரம் செல்ல வேண்டுமென்றால் 9 கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. விச்சூர் பகுதி மக்கள் தங்கள் பகுதிக்கு மாநகர பஸ்களை இயக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் சென்னையில் உள்ள பகுதிகளுக்கு வேலைக்கு செல்பவர்கள், பொதுமக்கள், மாணவ-மாணவிகள் தினமும் சிரமப்பட்டு வருகிறார்கள்.
மேலும் இளம்பெண்கள் மற்றும் மாணவிகள், பொன்னேரி நெடுஞ்சாலையில் இறங்கி, விச்சூர் அல்லது வெள்ளிவாயல் பகுதிக்கு நடந்து செல்ல வேண்டிய நிலை இருப்பதால் அவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்படுகிறது.
இந்த பகுதிகளுக்கு மாநகர பஸ் இயக்க வேண்டும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் மற்றும் மாநகர போக்குவரத்து கழக தலைமை அதிகாரிகளுக்கு மனு கொடுக்கப்பட்டு உள்ளது. அதன் காரணமாக கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சோழவரத்தில் இருந்து வெள்ளிவாயல், விச்சூர் ஆகிய பகுதிகள் வழியாக சென்னைக்கு மாநகர பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டு, இதற்கான ஒத்திகையும் நடத்தப்பட்டது. ஆனால் ஒத்திகைக்கு பிறகு இந்த வழித்தடத்தில் இதுவரை மாநகர பஸ்கள் எதுவும் இயக்கப்படவில்லை. இதனால் இந்த பகுதி மக்கள் தொடர்ந்து சிரமப்பட்டு வருகின்றனர்.
இதுகுறித்து அந்த பகுதி மக்கள் கூறியதாவது:-
நாங்கள் சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு செல்ல வேண்டுமென்றால் 6 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்றே பஸ் ஏற வேண்டிய நிலை உள்ளது. இதனால் இந்த பகுதிகளில் வசிக்கும் சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொது மக்களும் பாதிக்கப்படுகிறார்கள். குறிப்பாக முதியோர்கள் நடந்து செல்ல முடியாமல் சிரமப்படுகிறார்கள். எனவே, அதிகாரிகள் ஏற்கெனவே திட்டமிட்டபடி இந்த வழித்தடத்தில் மாநகர பஸ்களை இயக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
- கடைசியாக கடந்த ஆவணி மாதம் நடை பெற்ற குலதெய்வமான வீரம்மாள் கோவில் கும்பாபிஷேகத்திற்கு நன்கொடை அளித்துள்ளார்.
- விஜயகாந்த் இனிமேல் வரமாட்டாரா? என்பதை ஏற்கும் மனப்பக்குவத்தை கொண்டு வருவது காங்கேயநத்தம் கிராமத்தினருக்கு சவால்தான்.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த காங்கேயநத்தம் கிராமத்தில் ரெங்கராஜ் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் 4 தலைமுறைகளாக பலருக்கு குல தெய்வ கோவிலாக இருந்து வருவது வீரம்மாள் கோவில். அந்த வகையில் விஜயகாந்த் தனது தந்தை வழியில் வீரம்மாள் கோவிலுக்கு வரத்தவறியதில்லை.
இந்த கோவில் திருப்பணிகளுக்காக ஏராளமான நன்கொடைகளை வாரி வழங்கிய வள்ளலாக திகழ்ந்த விஜயகாந்த், தன்னால் குலதெய்வ கோவிலுக்கு செல்ல முடியாத சூழ்நிலையிலும் தனது மனைவி, மகன்களை அனுப்பி வைத்து உதவிகள் செய்து வந்துள்ளார். கடைசியாக கடந்த ஆவணி மாதம் நடை பெற்ற குலதெய்வமான வீரம்மாள் கோவில் கும்பாபிஷேகத்திற்கு நன்கொடை அளித்துள்ளார்.
சுப நிகழ்ச்சிகள் எதுவாக இருந்தாலும் அதனை தொடங்கும் முன்பு வீரம்மாள் கோவிலுக்கு விஜயகாந்த் தனது குடும்பத்தினருடன் வந்திருந்து பூஜைகளில் கலந்துகொள்வதை வழக்கமாக கொண்டிருந்தார். குறிப்பாக மகா சிவராத்திரி தினத்தன்று மனைவி, மகன்களுடன் வந்து இரவில் கோவிலில் தங்கி படையலிட்டு, 6 கால பூஜையிலும் பங்கேற்று வழிபாடு நடத்தியுள்ளார்.
பின்னர் கோவிலில் இருந்து புறப்படும் முன்பாக அங்கு வரும் பங்காளி முறை கொண்ட அனைவரையும் அழைத்து நலம் விசாரிப்பதோடு, அவர்களின் குடும்பத்தினர், குழந்தைகளின் கல்வி குறித்தும் கேட்டறிந்து மன நிறைவு பெறுவார்.
அதிலும் வறுமைக்கோட்டிற்கு கீழ் கஷ்டப்படுவர்களிடம் அவர்களின் தேவை குறித்து கேட்டறிந்து உதவிகள் பல செய்துள்ளார். இருந்தபோதிலும் அதனை வெட்ட வெளிச்சமாக காண்பித்ததில்லை. நீங்கள் நன்றாக இருந்தால்தான் உங்களின் குழந்தைகளின், அவர்களின் எதிர்காலமும் நன்றாக இருக்கும் என்பதில் எப்போதும் நம்பிக்கை கொண்டவன் என்பதில் உறுதியாக இருந்த கேப்டன் விஜயகாந்த், பலருக்கு பல்வேறு உதவிகளை செய்து கொடுத்துள்ளார்.
தலைமுறைகள் பல கடந்தாலும், குலதெய்வ கோவிலுக்கும், அங்கு வரும் பலரது குடும்பத்தாருக்கும் யாரும் அறியா வண்ணம் உதவிகள் செய்துவந்துள்ள விஜயகாந்த் இனிமேல் வரமாட்டாரா? என்பதை ஏற்கும் மனப்பக்குவத்தை கொண்டு வருவது காங்கேயநத்தம் கிராமத்தினருக்கு சவால்தான்.
காங்கேயநத்தம் கிராமத்தில் வீரம்மாள் கோவில் பலருக்கு குலதெய்வமாக இருந்தபோதிலும், கண்கண்ட தெய்வமாக விஜயகாந்த் இருந்துள்ளார் என்பது வெளியில் தெரியாத உண்மை.
- தொடர்ந்து வெள்ள நீர் உயர்ந்து கொண்டே இருந்ததால் மக்கள் அச்சமடைந்தனர்.
- தங்களுக்கு உரிய நிவாரணம் வேண்டும் என சாலை மறியலில் ஈடுபட்டனர்.
உடன்குடி:
உடன்குடியில் இருந்து மெஞ்ஞானபுரம் செல்லும் மெயின்ரோட்டில் 100-க்கும் மேற்பட்ட பரப்பளவில் சடையனேரி குளம் உள்ளது.
இந்த குளம் சுமார் 25-க்கும் மேற்பட்ட கிராமங்களின் நீர் ஆதாரமாக இருந்து வருகிறது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த மழை வெள்ளத்தினால் குளம் உடைந்து விவசாய தோட்டங்கள் மற்றும் அடப்பநல்லூர், செட்டியா பத்து, கூழையன் குண்டு, அருணாச்சலபுரம், தண்டு பத்து, அரசூர்பேட்டை, வெள்ளாளன்விளை, வட்டன்விளை, செட்டி விளை, பரமன்குறிச்சி ஆகிய பகுதியில் உள்ள ஏராளமான வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது.
இதனால் இந்த வீடுகளில் உள்ளவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். நேற்று தொடர்ந்து வெள்ள நீர் உயர்ந்து கொண்டே இருந்ததால் மக்கள் அச்சமடைந்தனர்.
இந்நிலையில் கிராம அதிகாரி கணேச பெருமாள் நேரில் பார்வையிட சென்ற போது வெள்ளாளன்விளை பொது மக்கள் சிறை பிடித்தனர். தங்களுக்கு உரிய நிவாரணம் வேண்டும் என சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பின்னர் திருச்செந்தூர் தாசில்தார் வாமனன் மற்றும் அதிகாரிகள் நேரில் வந்து விரைவில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறியதால் கலைந்து சென்றனர்.
தொடர்ந்து உடைந்த சடையனேரி குளத்தில் இருந்து அதிக அளவு தண்ணீர் வெளியேறி வருவதால் 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள் அதிக அளவு பாதிக்கப்படும் நிலை உள்ளது இன்று காலை வரை தண்ணீர் வடியாமல் ஏராளமான கிராமங்களில் மக்கள் பரிதவிக்கின்றனர்.
- சென்னையின் 2-வது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைய உள்ளது.
- நிலங்களை கையகப்படுத்த தனியாக மாவட்ட வருவாய் அதிகாரி நியமிக்கப்பட்டு உள்ளார்.
காஞ்சிபுரம்:
சென்னையின் 2-வது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைய உள்ளது. சுமார் ரூ.20 ஆயிரம் கோடி மதிப்பில் 5 ஆயிரத்து 746.18 ஏக்கர் நிலப்பரப்பில் அமைய உள்ளது. இதில் 1917.17 ஏக்கர் நிலம் மட்டுமே அரசுடையது. மற்றவை அனைத்தும் விவசாய மற்றும் பட்டா நிலங்கள் ஆகும். இவை அனைத்தும் கையகப்படுத்த வேண்டி இருக்கிறது.
புதிய விமான நிலைய அறிவிப்பு வெளியான நாள்முதலே பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராமமக்கள் விவசாய நிலங்களை கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இதற்கிடையே கடந்த மாதம் விமான நிலைய பணிக்கு நிலங்களை கையகப்படுத்தும் அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது.
இந்தநிலையில் நிலங்களை கையகப்படுத்த தனியாக மாவட்ட வருவாய் அதிகாரி நியமிக்கப்பட்டு உள்ளார். அவர் நிலங்களை கையகப்படுத்தும் பணியை விரைந்து முடிப்பது, கிராமமக்களுடன் பேச்சுவார்த்தை, இழப்பீடு தொகை வழங்குவது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள உள்ளார்.
விமான பணிக்கு நிலங்களை கையகப்படுத்தும் பணி இன்னும் ஓரிரு மாதங்களில் தொடங்கப்படும் என்று தெரிகிறது. இந்த பணி முடிவடைய குறைந்தது ஒரு ஆண்டு ஆகும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்