செய்திகள்

தேனி அருகே பெண்களை தாக்கி நகை கொள்ளை

Published On 2017-08-22 11:26 GMT   |   Update On 2017-08-22 11:26 GMT
தேனி அருகே பெண்களை தாக்கி நகை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

தேனி:

தேனி அருகே சின்னமனூர் வடக்கு வணிகர் காலனி தெருவை சேர்ந்தவர் அய்யாத்துரை. இவரது மனைவி பாண்டிமுத்து. சம்பவத்தன்று தனது அண்ணன் மகன் சிவசக்தியை பள்ளிக்கு அனுப்ப பழனிசெட்டிபட்டி பஸ்நிலையத்திற்கு சென்றுள்ளார். அப்போது மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த மர்மநபர்கள் 2 பேர் பாண்டிமுத்து கழுத்தில் இருந்த 2 பவுன் தங்கசெயினை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் மறைந்தனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த பாண்டிமுத்து திருடன் திருடன் என்று சத்தம்போட்டார். அக்கம்பக்கத்தினர் திரண்டு வந்தும் திருடர்களை பிடிக்க முடியவில்லை.

இதுகுறித்து பாண்டிமுத்து பழனிசெட்டிபட்டி போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் துணிகர கொள்ளையில் ஈடுபட்ட மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

பழனிசெட்டிபட்டி மகாத்மாநகர் தெருவை சேர்ந்தவர் ஜனநாதன். அவரது மனைவி மகாலட்சுமி. சம்பவத்தன்று ஊருக்கு செல்வதற்காக பஸ்நிலையத்திற்கு சென்றுள்ளார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் மகாலட்சுமி கழுத்தில் கிடந்த 3½ பவுன் தங்கசெயினை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிசென்றனர். இதுகுறித்த புகாரின்பேரில் பழனிசெட்டிபட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பட்டப்பகலில் நடந்த இந்த வழிப்பறி கொள்ளை சம்பவங்களால் பெண்கள் மற்றும் குழந்தைகள் ரோட்டில் நடமாடவே அச்சம் அடைந்து வருகின்றனர். போலீசார் தீவிர ரோந்து செல்ல வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

Tags:    

Similar News