செய்திகள்

ரூ.1000 லஞ்சம் வாங்கிய ரேஷன் கடை ஊழியர் மீது நடவடிக்கை

Published On 2017-08-20 16:47 GMT   |   Update On 2017-08-20 17:15 GMT
ரேசன் கடையில் வாடிக்கையாளரிடம் ரூ. 1000 லஞ்சம் வாங்கிய கடை ஊழியரை அங்கு மறைந்திருந்த வட்ட வழங்கல் அதிகாரிகள் பிடித்தனர்.
தக்கலை:

வெட்டிகோணம் பகுதியை சேர்ந்த வேலப்பன் மனைவி சாரதாபாய். இவர் தக்கலை அருகே சாரோடு ரேஷன் கடையில் வறுமைகோட்டின் கீழ் 35 கிலோ விலையில்லா அரிசியை பெற்று வந்தார்.

இந்தநிலையில் தொடர்ந்து வறுமைகோட்டின் கீழ் 35 கிலோ விலையில்லா அரிசி பெற வேண்டுமென்றால் ரூ.1,000 லஞ்சமாக தர வேண்டும் என்று சாரதாபாயிடம் அங்கு பணிபுரியும் ஊழியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும் பணம் தரவில்லையென்றால் வறுமைக்கோடு பட்டியலில் இருந்து ரேஷன் கார்டை நீக்கி விடுவேன் என மிரட்டினார். இந்த சம்பவத்தை சாரதாபாய் தன்னுடைய மகன் முருகனிடம் கூறினார். உடனே அவர் இதுகுறித்து தக்கலை வட்ட வழங்கல் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தார். இதனையடுத்து வட்ட வழங்கல் ஆய்வாளர் அனில்குமார் கூறியபடி முருகன் ரேஷன் கடைக்கு சென்று சம்பந்தப்பட்ட ஊழியரிடம் 1,000 ரூபாயை லஞ்சமாக கொடுத்தார்.

அப்போது அங்கு மறைந்திருந்த அனில்குமார் மற்றும் சிலர் அந்த ஊழியரை கையும், களவுமாக மடக்கி பிடித்தனர். லஞ்சம் வாங்கியது தொடர்பாக அவர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆய்வாளர் அனில்குமார் தெரிவித்தார்.
Tags:    

Similar News