பெரியகுளத்தில் வியாபாரி வீட்டை உடைத்து நகை-பணம் கொள்ளை
பெரியகுளம்:
தேனி மாவட்டம் பெரியகுளம் கீழவடகரை எஸ்.பி.ஐ. காலனி கோல்டன் சிட்டியை சேர்ந்தவர் அப்துல் நசீர். வியாபாரி. இவர் தனது குடும்பத்துடன் கோவையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார்.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய மர்ம நபர்கள் வீட்டுக்கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் பீரோவை திறந்து அதில் உள்ளவற்றை சுருட்டி கொண்டு தலைமறைவானார்கள்.
இதுகுறித்து வெளியூர் சென்றிருந்த அப்துல் நசீருக்கு அக்கம் பக்கம் உள்ளவர்கள் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த அவர் உடனடியாக ஊருக்கு திரும்பினார். அப்போது கதவு திறந்து கிடப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
வீட்டுக்குள் சென்று பார்த்த போது பீரோவில் இருந்து நகை, ரூ. 60 ஆயிரம் ரொக்க பணம் மற்றும் லேப்டாப், பாஸ் போர்ட் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.
இதுகுறித்து பெரியகுளம் போலீசில் அப்துல் நசீர் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.