ஊட்டியில் ‘செல்பி’ எடுத்த சுற்றுலா பயணிகளை விரட்டிய காட்டுயானை
ஊட்டி:
நீலகிரியில் பெய்த மழையால் மீண்டும் பசுமை திரும்பிபுள்ளது. இதனால் வனப்பகுதியில் இருந்து காட்டுயானைகள் மேய்ச்சலுக்காக சாலையோரம் வந்து விடுகின்றன.
சாலையில் முகாமிட்டுள்ள யானைகளால் சுற்றுலா பயணிகளுக்கு பாதிப்பு வராத வகையில் வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் தொரப்பள்ளி- தெப்பக்காடு இடையே சாலையோரம் யானைகள் மேய்ந்தபோது அங்கு வந்த சுற்றுலா பயணிகள் யானைகளை ஆர்வத்துடன் பார்த்தனர். பின்னர் போட்டோ, செல்பி எடுத்தனர்.
இதில் ஆத்திரமடைந்த காட்டுயானைகள் சுற்றுலா பயணிகளை விரட்ட தொடங்கியது. யானைகள் விரட்டுவதை அறிந்த சுற்றுலா பயணிகள் தாங்கள் வந்த வாகனங்களில் ஏறி உயிர் தப்பினர். இது அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஆர்வகோளாறால் சுற்றுலா பயணிகள் சிலர் போட்டோ, செல்பி எடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத்துறையினர் எச்சரித்தனர்.