மகள் காதல் திருமண விவகாரம்: ஸ்டூடியோ அதிபர் மனைவியுடன் கடத்தல்
மதுரை:
மதுரை ஜெய்ஹிந்துபுரம் ஜீவா நகர் 2-வது தெரு மீனாம்பிகை நகரைச் சேர்ந்தவர் தர்மராஜ். இவரது மகன் மணிமாறன், போட்டோ ஸ்டூடியோ நடத்தி வருகிறார்.
இவரது மகள் ராஜலட்சுமி. கடந்த மாதம் (ஜுன்) 21-ந் தேதி ஏற்கனவே திருமணமான சார்லஸ் என்பவரை காதல் திருமணம் செய்தார்.
இதற்கு மணிமாறன், அவரது மனைவி சாந்தி உடந்தையாக இருந்ததாக சார்லசின் மனைவி இந்து திருப்பரங்குன்றம் போலீசில் புகார் செய்தார்.
இது தொடர்பான வழக்கில் முன் ஜாமீன் பெற்ற மணிமாறன் தம்பதியர், திருப்பரங்குன்றம் போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட்டு வந்தனர்.
நேற்று காலையும் அவர்கள் கையெழுத்து போட்டுவிட்டு மோட்டார் சைக்கிளில் திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த ஆம்னி வேன், மோட்டார் சைக்கிளை வழிமறித்தது. வேனில் வந்த கும்பல், மணிமாறன்-சாந்தியை கடத்திக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றது.
இது குறித்து மணிமாறனின் தாய் கர்ணம், போலீசில் புகார் செய்தார். அதில் சார்லசின் தந்தை டேவிட்ராஜன், கோட்டைசாமி மற்றும் சிலர் தான் இந்த கடத்தலில் ஈடுபட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.