திருவையாறு அருகே விபத்து: திருச்சி கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் பலி
திருவையாறு:
திருவையாறை அடுத்த கண்டியூர் சுற்றுகுளம் மெயின் ரோட்டில் திருவையாறிலிருந்து தஞ்சை நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளும், தஞ்சையிலிருந்து திருவையாறு நோக்கி வந்த லாரியும் நேருக்கு நேருக்கு மோதிக்கொண்டதில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டு ஒருவர் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார்.
மற்றொருவரை உயிருக்கு ஆபத்தான நிலையில் தஞ்சை மருத்துவக் கல்லூரி கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவரும் இறந்துவிட்டார். இதுபற்றி தகவல் கிடைத்ததும் திருவையாறு துணை போலீஸ் சூப்பிரண்டு அன்பழகன், திருவையாறு இன்ஸ்பெக்டர் சிவராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
விசாரணையில் சம்பவ இடத்தில் இறந்து கிடந்தவர் பாக்கெட்டில் இருந்த அடையாள அட்டையை எடுத்து பார்த்தபோது அவர் திருச்சி மாவட்டம், கல்லக்குடி டால்மியாபுரம் பகுதி பழனியாண்டி நகரை சேர்ந்த பிரவீன்குமார் என்பது தெரியவந்தது. இவர் தனியார் கல்லூரியில் பி.காம் படித்து வந்துள்ளார். மற்றொருவர் டால்மியாபுரம் பகுதி வடுகப்பட்டி மெயின்ரோட்டை சேர்ந்த சாலமன் மகன் பேட்டரிக் ரோசாரி (20) என்று தெரியவந்தது.
இது சம்மந்தமாக திருவையாறு போலீசார் வழக்கு பதிவு செய்து பிரவீன்குமார் உடலை கைப்பற்றி திருவையாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். பேட்டரிக் ரோசாரியோ உடல் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்து வமனை பிரேத கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது.