செய்திகள்

விருதுநகர் அருகே வேன் மீது அரசு பஸ் மோதல்: 10 பயணிகள் படுகாயம்

Published On 2017-06-29 11:16 GMT   |   Update On 2017-06-29 11:16 GMT
விருதுநகர் அருகே வேன் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் 10 பயணிகள் படுகாயமடைந்தனர். விபத்து தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்:

மதுரையில் இருந்து இன்று காலை ஒரு வேன் விருதுநகருக்கு புறப்பட்டது. காலை 10 மணி அளவில் விருதுநகர் அருகே உள்ள சத்திரரெட்டியபட்டி காவிரி நகர் பகுதியில் வந்து கொண்டிருந்தது.

திடீரென டயர் வெடித்து வேன் நிலைதடுமாறி ஓடி ரோட்டின் மறுபுறத்துகு சென்றது. அப்போது நெல்லையில் இருந்து மதுரை வந்த அரசு பஸ் எதிர்பாராதவிதமாக மோதியது. மேலும் பின்னால் வந்த மற்றொரு அரசு பஸ்சும் வேன் மீது அடுத்தடுத்து மோதியது.

விபத்து நடந்தபோது அரசு பஸ்களில் இருந்த பயணிகள் கூக்குரலிட்டனர். உடனே அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பஸ்சில் சிக்கி இருந்த பயணிகளை மீட்டனர்.

இந்த விபத்தில் 10 பயணிகள் படுகாயம் அடைந்தனர். இவர்கள் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விபத்து குறித்து தகவல் அறிந்த பாண்டியன் நகர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
Tags:    

Similar News