செய்திகள்

ரஜினிகாந்த் தனிக்கட்சி தொடங்கினால் வரவேற்போம்: விஜயதரணி

Published On 2017-05-17 04:58 GMT   |   Update On 2017-05-17 04:58 GMT
நடிகர் ரஜினிகாந்த் தனிக்கட்சி தொடங்கினால் வரவேற்போம் என மார்த்தாண்டத்தில் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற கொறடா விஜயதரணி கூறியுள்ளார்.
நாகர்கோவில்:

மார்த்தாண்டத்தில் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற கொறடா விஜயதரணி எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

இந்தியாவில் யார் மத்திய அரசுக்கு எதிராக குரல் கொடுத்தாலோ, செயல்பட்டாலோ அவர்கள் மீது வருமான வரித்துறை, சி.பி.ஐ. சோதனை நடத்தி அச்சுறுத்தலை அளிப்பது கண்டிக்கத்தக்கது.

சில தினங்களுக்கு முன்பு தமிழக அமைச்சர்கள் வீடுகள், அலுவலகங்களில் நடைபெற்ற சோதனை தற்போது காங்கிரஸ் கட்சி பக்கம் திரும்பி உள்ளது. ப. சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் வீடுகளில் நடந்த சோதனை காழ்ப்புணர்ச்சி காரணமாகவே நடந்துள்ளது.

ரஜினிகாந்த் பாரதிய ஜனதாவிற்கு வந்தால் வரவேற்போம் என்று மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் கூறி உள்ளார். ரஜினிகாந்த் காங்கிரஸ் கட்சிக்கு வந்தால் நாங்கள் வரவேற்போம். அகில இந்திய அளவில் அவர் பங்களிப்பு தர வேண்டும்.

ரஜினிகாந்த் தனிக்கட்சி தொடங்கினாலும் அதை வரவேற்போம். அரசியலுக்கு வருவதாக இன்னும் வெளிப்படையாக ரஜினிகாந்த் சொல்லவில்லை. ஆனால் அவரது ரசிகர்கள் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதை விரும்புகிறார்கள்.


தமிழக சட்டமன்றத்தில் மானிய கோரிக்கையை விவாதிக்காமல் சட்டமன்ற கூட்டத்தை முடித்தது மோசமான முன் உதாரணம். கவர்னர் தலையிட்டு சட்டமன்றத்தை கூட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் பல்வேறு பிரச்சனைகளை கவர்னர் கவனிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. எனவே தமிழகத்திற்கு புதிய கவர்னரை நியமிக்க வேண்டும்.

இரண்டாக பிரிந்துள்ள அ.தி.மு.க. ஒன்று சேர்ந்தாலும் பெரிய அளவில் ஒன்றும் நடக்க போவதில்லை. அ.தி.மு.க. சரிவின் பாதையில் உள்ளது. மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் அளவிற்கு அரசு தன் பணியை தொடர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News