ஆன்மிகம்
வெள்ளி மூஷிக வாகனத்தில் விநாயகரும், பூத வாகனத்தில் சந்திரசேகரரும் வீதி உலா வந்தபோது எடுத்த படம்.

தீபத்திருவிழாவின் 3-ம் நாள் விழா: பூத வாகனத்தில் சந்திரசேகரர் வீதி உலா

Published On 2018-11-17 05:17 GMT   |   Update On 2018-11-17 05:17 GMT
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழாவில் வெள்ளி மூஷிக வாகனத்தில் விநாயகரும், பூத வாகனத்தில் சந்திரசேகரரும் வீதி உலா வந்தனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 14-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. அன்றைய தினம் காலையிலும், மாலையிலும் பஞ்சமூர்த்திகள் வீதிஉலா நடைபெற்றது. நேற்று முன்தினம் முதல் காலையில் விநாயகர், சந்திரசேகரர் வீதிஉலாவும், இரவில் பஞ்சமூர்த்திகள் வீதிஉலாவும் நடக்கிறது.

தீபத்திருவிழாவின் 2-வது நாளான நேற்று முன்தினம் இரவில் பஞ்ச மூர்த்திகளான விநாயகர், சுப்பிரமணியர், அருணாசலேஸ்வரர், உண்ணாமலை அம்மன், பராசக்தி அம்மன் ஆகிய சாமிகள் தனித்தனி வெள்ளி இந்திர விமானங்களிலும், சண்டிகேஸ்வரர் மர விமானத்திலும் கோவிலை சுற்றியுள்ள மாடவீதியை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். சாமி வீதியுலாவின் போது மழை பெய்ததால் பக்தர்கள் மழையையும் பொருட்படுத்தாமல் மழையில் நனைந்தபடியும், கையில் குடை பிடித்தபடியும் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

3-ம் நாள் விழாவான நேற்று காலை 10.30 மணியளவில் விநாயகர் வெள்ளி மூஷிக வாகனத்திலும், சந்திரசேகரர் பூத வாகனத்திலும் அருணாசலேஸ்வரர் ராஜகோபுரம் எதிரே உள்ள 16 கால் மண்டபத்தில் எழுந்தருளினர். அங்கு சாமிக்கு சிறப்பு அலங்காரம், பூஜைகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பின்னர் மேளதாளங்கள் முழங்க வெள்ளி மூஷிக வாகனத்தில் விநாயகரும், அதன்பின்னே பூத வாகனத்தில் சந்திரசேகரரும் கோவில் மாடவீதியை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில் 20-க்கும் மேற்பட்டவர்கள் நாயனம், தவில் மூலம் மங்கல இசை இசைத்தனர்.

மாட வீதிகளில் பக்தர்கள் தங்களின் வீடுகளின் அருகே சாமி வந்ததும் தேங்காய் உடைத்து கற்பூரம் ஏற்றி வழிப்பட்டனர்.

தீபத்திருவிழாவின் 3-ம் நாள் விழாவின் போது பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்காக பிரார்த்தனை உண்டியல் வைக்கப்படும். அதன்படி 3-ம் நாள் விழாவை முன்னிட்டு நேற்று காலை கோவிலில் பிரார்த்தனை உண்டியல் கோவில் கொடிமரம் அருகில் வைக்கப்பட்டது.

இதற்கான நிகழ்ச்சியில் கோவில் இணை ஆணையர் ஞானசேகரன் மற்றும் கோவில் அலுவலர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

கோவிலில் பகல் 12 மணியளவில் சங்காபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக கோவிலில் சங்குகளில் புனிதநீர் ஊற்றப்பட்டு சிறப்பு யாக சாலை பூஜை நடைபெற்றது. மேலும் கோவில் கலையரங்கத்தில் பரதநாட்டியம், பக்தி இன்னிசை கச்சேரிகள் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இரவு 10 மணியளவில் நடைபெற்ற உற்சவத்தில் பஞ்சமூர்த்திகளான விநாயகர், சுப்பிரமணியர், அருணாசலேஸ்வரர், உண்ணாமலை அம்மன், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் சிம்ம வாகனம் மற்றும் வெள்ளி அன்ன வாகனத்தில் கோவில் மாடவீதிகளை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News