ஆன்மிகம்

ஸ்ரீகுமர குருபரர் வாழ்வில் ஸ்ரீகருடன்

Published On 2018-09-22 07:55 GMT   |   Update On 2018-09-22 07:55 GMT
ஸ்ரீகுமர குருபர சுவாமிகள் பிறவியிலேயே ஊமையாக இருந்து, பிறகு திருச்செந்தூர் முருகன் அருளினால் பேச்சாற்றல் மட்டுமின்றி, மறை ஞானமும், வாக்கு வன்மையும் அருளப் பெற்றார்.
ஸ்ரீகுமர குருபர சுவாமிகள் பிறவியிலேயே ஊமையாக இருந்து, பிறகு திருச்செந்தூர் முருகன் அருளினால் பேச்சாற்றல் மட்டுமின்றி, மறை ஞானமும், வாக்கு வன்மையும் அருளப் பெற்றார். அப்போது ஒருமுறை, காசி மாநகரில் ஸ்ரீகுமரக் கடவுளுக்கு ஒரு மடம் அமைப்பதற்காக, அப்பகுதியை ஆண்டு வந்த முஸ்லிம் அரசனைப் பார்க்க அவனது அரசவைக்குச் செல்ல விரும்பினார் ஸ்ரீகுமர குருபரர். அப்பொழுது அவருக்கு வாகனமாக ஒரு சிங்கமே வந்தது.

அதில் ஏறியபடி கம்பீரமாக அரண்மனையை அடைந்தார் சுவாமிகள். அரசனோடு சேர்ந்து அவையே அச்சம் அடைந்தது. இருப்பினும் ஒரு இந்து துறவிதானே என அலட்சியத்துடன் அவரிடம் உருது மொழியில் உரையாடினார் அரசர். கலை வாணியின் அருளால் ஸ்ரீகுமர குருபரரும் அம்மொழியிலேயே பதில் அளித்தார். அதைக் கண்டு மேலும் அதிர்ந்தார் அரசர்.

இனி அவரது கோரிக்கைக்கு செவிசாய்க்க வேண்டியது தான் என்னும் நிலையில், அவ்வரசர் ஒரு வித்தியாசமான நிபந்தனையுடன் மடம் அமைக்க நிலம் தருவதாக ஒப்புக் கொண்டார். அது, காசியில் நாளைக் காலையில் கருடன் எவ்வளவு தூரம் வானில் வட்டம் இடுகிறதோஅந்த பகுதிகள் முழுவதையும் தானம் அளிப்பதாக அரசர் அறிவித்தார்.

காசியில் கருடன் பறக்காது என்னும் இந்துக்களின் நம்பிக்கையையும், அவர் அப்படிப் பறந்து ஒரு போதும் காணாததாலும், அப்படிக் கூறி சாமார்த்தியமாக தானம் தருவதில் இருந்து தப்பிக்கலாம் என்று எண்ணினார்.

மறுநாள் காலையில் அரண்மனை உப்பரிக்கை யில் அரசனும், ஸ்ரீகுமர குருபரரும் நின்று கொண்டு வானத்தையே பார்த்துக் கொண்டிருந்தனர். திடீரென்று ஒரு கழுகு தோன்றி, அரசர் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, காசியின் பெரும் பகுதி இடங்களை சுற்றி வளைக்கும் அளவிற்கு வட்டமிட்டு மறைந்தது.

அரசருக்கு அதிர்ச்சியில் என்ன செய்வதென்றே தெரியவில்லை. அவர் வாக்கு கொடுத்தபடி அந்நிலங்களை ஸ்ரீகுமர குருபரருக்கே தானம் அளிப்பதாக சாசனம் எழுதிக் கொடுத்தார். அந்த மடம் ஸ்ரீகௌமார மடம் என்னும் பெயரில் காசியில் இன்றும் உள்ளது. இதனை இந்துக்களுக்கு வழங்கிய பெருமை ஸ்ரீகருட பகவானையே சாரும்.

Tags:    

Similar News