ஆன்மிகம்

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது

Published On 2017-06-24 03:14 GMT   |   Update On 2017-06-24 03:14 GMT
மாரியம்மன் கோவில் சக்தி தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலில் அம்மனை தரிசனம் செய்வதற்காக பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் உள்ள மாரியம்மன் கோவில் சக்தி தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். தமிழ்நாட்டில் பழனிமுருகன் கோவிலுக்கு அடுத்தபடியாக பக்தர்கள் கூட்டம் அதிகம் வருவது சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்குத்தான்.

இக்கோவிலுக்கு வெள்ளி, ஞாயிறு, செவ்வாய் போன்ற தினங்களிலும், அமாவாசை, பவுர்ணமி போன்ற நாட்களிலும் அம்மனை தரிசனம் செய்வதற்காகவும், நோய் நொடியில்லாத வாழ்க்கை அமையவும், செல்வ செழிப்போடு குடும்பம் விளங்கவும் வேண்டிக்கொண்டு திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், பக்தர்கள் பாத யாத்திரையாகவும், கார், வேன் போன்ற வாகனங்களிலும், சமயபுரம் வந்து அம்மனை தரிசனம் செய்வது வழக்கம்.

அதன்படி, நேற்று அமாவாசை தினம் என்பதால் ஏராளமான பக்தர்கள் சமயபுரத்திற்கு வந்தனர். அவர்கள் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாது கட்டண வரிசையிலும், பொது தரிசன வரிசையிலும், நீண்ட வரிசையில் நின்று அம்மனை பயபக்தியுடன் வணங்கினர். பக்தர்கள் வசதிக்காக போக்குவரத்து துறையின் சார்பாக திருச்சி மற்றும் துறையூரில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. பக்தர்களை ஒழுங்குபடுத்தும் பணியில் மாரியம்மன் கோவில் பணியாளர்கள் ஈடுபட்டனர்.
Tags:    

Similar News