search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாரியம்மன் கோவில்"

    • வருகிற 16-ந் தேதி தேர் முகூர்த்தகால் நடுதலும், 19-ந்தேதி காலை 7.30 மணிக்கு கொடியேற்றத்துடன் விழா தொடங்குகிறது.
    • 17-ந்தேதி கம்பம் போடுதலும், 25-ந்தேதி பொங்கல் விழாவும், 26-ந்தேதி மறுஅபிஷேகமும் நடைபெற உள்ளது.

    வெள்ளகோவில்:

    திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலை அடுத்த ஓலப்பாளையம் அருகே உள்ள கண்ணபுரத்தில் வருடந்தோறும் சித்திரை மாதத்தில் விக்ரம சோழீஸ்வரர் கோவில் சித்ரா பவுர்ணமி தேர்த்திருவிழா மற்றும் மாரியம்மன் கோவில் பொங்கல் விழா நடைபெற்று வருகிறது.

    இந்த ஆண்டு சித்ராபவுர்ணமி அன்று விக்ரமசோழீஸ்வரர் கோவில் தேர்த்திருவிழா நடைபெற உள்ளது. இதையொட்டி வருகிற 16-ந் தேதி தேர் முகூர்த்தகால் நடுதலும், 19-ந்தேதி காலை 7.30 மணிக்கு கொடியேற்றத்துடன் விழா தொடங்குகிறது.

    வருகிற 23-ந்தேதி காலை 7.30 மணிக்கு மேல் 9 மணிக்குள் சாமி ரதத்திற்கு எழுந்தருளலும், பின்னர் மாலை 4.30 மணிக்கு மேல் 6 மணிக்குள் திருத்தேர் வடம் பிடித்து தேரோட்டம் நடைபெற உள்ளது.

    கண்ணபுரம் மாரியம்மன் கோவில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு நாளை (புதன்கிழமை) பூச்சாட்டுலுடன் பொங்கல் விழா தொடங்குகிறது. 17-ந்தேதி கம்பம் போடுதலும், 25-ந்தேதி பொங்கல் விழாவும், 26-ந்தேதி மறுஅபிஷேகமும் நடைபெற உள்ளது. தேர்த்திருவிழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் மாட்டுச்சந்தை நடைபெறுவது வழக்கம். இந்த மாட்டுச்சந்தைக்கு கோவை, திருப்பூர். ஈரோடு, திண்டுக்கல், கரூர், மதுரை, திருவாரூர், திருச்சி, தஞ்சை, கடலூர் மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் மாடுகளை கொண்டு வந்து விற்பனை செய்து விட்டு புது காங்கேய இன மாடுகளை வியாபாரிகள் வாங்கிச்செல்வார்கள்.

    இது குறித்து வியாபாரிகளிடம் கேட்டபோது, நேற்று அமாவாசை முடிந்து இன்று பாட்டி அம்மை என்பதால் மாடுகளின் வரத்து குறைவாக உள்ளது. நாளை (புதன்கிழமை) மாடுகளின் வரத்து அதிகமாக இருக்கும் என்றனர். 

    • மாசி தேர் திருவிழா மிக சிறப்பாக கொடியேற்றத்துடன் நடைபெறுவது வழக்கம்.
    • மாசி தேர் திருவிழா இந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டது.

    பவானி:

    பவானி நகர மக்களின் காவல் தெய்வமாக விளங்கி வருகிறது செல்லாண்டி அம்மன், மாரியம்மன் கோவில். இந்த கோவிலில் ஆண்டு தோறும் மாசி தேர் திருவிழா மிக சிறப்பாக கொடியேற்றத்துடன் நடைபெறுவது வழக்கம்.

    செல்லியாண்டி அம்மன் மற்றும் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடை பெற்று 12 ஆண்டுகளுக்கு மேல் முடிவடைந்த நிலையில் தமிழக அரசு இந்து அறநிலைத்துறை அனுமதி பெற்று கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

    இதையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன் 2 கோவிலிலும் கும்பாபிஷேக பணிகள் தொடக்க விழா பக்தர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து செல்லியாண்டி அம்மன் கோவில் வளாகத்தில் செல்லியாண்டி அம்மன் கோவில் நிர்வாகம் சார்பில் திருவிழா நடத்துவது பற்றி கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.

    அப்போது கட்டளைதாரர்கள், ஊர் பொதுமக்கள், முக்கிய பிரமுகர்கள் என பலர் கலந்து கொண்டு கோவில் திருப்பணி நடைபெறும் காரணத்தால் மாசி திருவிழா நடத்த வேண்டாம் என ஒரு மனதாக முடிவு செய்தனர்.

    இதனைத் தொடர்ந்து பவானி நகரத்தில் லட்சக்கணக்கான மக்கள் கூடி உடலில் சேறு பூசி பல்வேறு வகையான வேடங்களில் அணிந்து சுவாமிக்கு நேர்த்திக்கடன் செலுத்தும் மாசி தேர் திருவிழா இந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து பவானி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள எல்லையம்மன் கோவில், வர்ணபுரம் சமயபுரம் மாரியம்மன் கோவில், மேற்குத்தெரு மாரியம்மன் கோவில் செல்லியாண்டி அம்மன், மாரியம்மன் கோவில் ஆகிய கோவில்களில் உள்ள மூலவருக்கு பக்தர்கள் மற்றும் கட்டளை தாரர்கள் கும்பாபிஷேக விழா குழுவினர் முன்னிலையில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாரதனை நடைபெற்றது.

    பவானி நகரில் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடி செல்லியாண்டி அம்மன் மற்றும் மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தி கோலாகலமாக கொண்டாடப்படும் இந்த மாசி திருவிழா ரத்து செய்யப்பட்டதால் தொடர்ந்து பவானி நகரம் களை இழந்து காணப்பட்டது.

    • திருவிழாவை சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்.
    • 4 நாட்கள் நடந்த இந்த திருவிழாவிற்காக 20-க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் பொக்காபுரம் என்ற அடர்ந்த வனப்பகுதியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. முதுமலை புலிகள் காப்பகத்தை ஒட்டி இந்த கோவில் அமைந்துள்ளது.

    ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் இந்த கோவிலில் 5 நாள் தேர்த்திருவிழா நடைபெறும். ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த கோவில் திருவிழாவில் நீலகிரி மட்டுமின்றி தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் கேரளா, கர்நாடகா உட்பட வெளிமாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பது வழக்கம்.

    பழங்குடியின மக்கள் மற்றும் படுகர் சமுதாய மக்களால் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான திருவிழாவை சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்.

    அப்போது அமைச்சருக்கு பழங்குடியி னர் மக்களின் பாரம்பரிய இசையுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 4 நாட்கள் நடந்த இந்த திருவிழாவிற்காக 20-க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

    தேர்த்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி இரவு 10.30 மணிக்கு பல்வேறு சிறப்பு பூஜைகளுடன் மாரியம்மன் சிம்ம வாகனத்தில் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளினார். நிகழ்ச்சியில் கலெக்டர் அருணா கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார்.

    தேர் திருவிழாவில் மேள தாளங்கள் முழங்க, படுகர் இன மக்கள் அவர்களின் மொழிப் பாடல்களைப் பாடி நடனமாடி பங்கேற்றனர்.

    வடம் பிடிக்கப்பட்ட தேர், கோவிலை இரண்டு முறை சுற்றி வந்தது. அப்போது வழிநெடுகிலும் தேரில் பவனி வந்த மாரியம்மனுக்கு, பக்தர்கள் உப்பை இறைத்து வேண்டுதல்களை நிறைவேற்றி வழிபட்டனர்.

    • பள்ளிபாளையம் பேப்பர் மில் சாலையில் மிகவும் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற கண்ணனூர் மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு வாரந்தோறும் வெள்ளிக்கிழமை அமாவாசை நாட்களில் மட்டும் ஏராளமான மக்கள் சாமி தரிசனம் செய்ய வருவார்கள்.
    • பள்ளிபாளையம் போலீசார் கோவிலுக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கோவில் வளாகத்தில் பொருத்தப் பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளில் கொள்ளை யர்களின் உருவம் பதிவாகி இருக்கிறதா? என ஆராய்ந்து வருகின்றனர்.

    பள்ளிபாளையம்:

    நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பேப்பர் மில் சாலையில் மிகவும் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற கண்ணனூர் மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு வாரந்தோறும் வெள்ளிக்கிழமை அமாவாசை நாட்களில் மட்டும் ஏராளமான மக்கள் சாமி தரிசனம் செய்ய வருவார்கள்.

    மேலும் ஆடி 18 திருவிழா வெகு விமரிசையாக இந்த கோவிலில் நடைபெறும். ஆடி 18 திருவிழாவில் நாமக்கல், சேலம், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமானவர்கள் வந்து பொங்கல் வைத்து சாமி தரிசனம் செய்வார்கள்.

    இந்த கோவில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. நேற்று இரவு வழக்கம் போல் கோவில் பூசாரி பூஜை முடித்துவிட்டு கோவில் கதவை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார்.

    இன்று அதிகாலை 4 மணிக்கு பூசாரி வந்து பார்க்கும்போது கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பூசாரி கோவில் உள்ளே சென்று பார்த்த போது உண்டியல் பூட்டு உடைக்கப்பட்டு அதிலிருந்து பணம் திருட்டு போயிருப்பது தெரியவந்தது. நள்ளிரவில் கொள்ளையர்கள் கோவிலுக்குள் புகுந்து இந்த கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியுள்ளனர்.

    இது குறித்து தகவல் அறிந்த பள்ளிபாளையம் போலீசார் கோவிலுக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கோவில் வளாகத்தில் பொருத்தப் பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளில் கொள்ளை யர்களின் உருவம் பதிவாகி இருக்கிறதா? என ஆராய்ந்து வருகின்றனர்.

    • பொங்கல் விழா காலை தொடங்கி நடந்தது.
    • பக்தர்கள் ஆடு, கோழி பலி கொடுத்து மாரியம்மனை வழிபாடு செய்தனர்.

    சென்னிமலை:

    சென்னிமலை டவுன் காங்கேயம் மெயின் ரோட்டில் அமைந்துள்ளது மாரியம்மன் கோவில். மாரியம்மனுக்கு ஆண்டு தோறும் ஐப்பசி மாதம் 15 நாள் பொங்கல் வைபோகம் சிறப்பாக கொண்டாடப்படும் . இந்த ஆண்டு விழா கடந்த மாதம் 18-ந் தேதி பூச்சாட்டுதல் நிக ழ்ச்சியுடன் தொடங்கியது.

    தொடர்ந்து 25-ந் தேதி கம்பம் நடுதல் நிகழ்ச்சி நடந்தது. அன்று முதல் தினமும் சிறப்பு பூஜைகள் நடந்தது. மேலும் காலை பூவோடு எடுத்தல் நிகழ்ச்சி நடந்து வந்தது.

    கம்பத்திற்கு தினமும் பெண்கள் பயபக்தியுடன் மஞ்சள் நீர் ஊற்றியும், கம்பத்திற்கு வேப்பிலை அலங்காரம் செய்தும், மஞ்சள் பூசியும் வழிபாடு நடத்தினர்.

    வேண்டுதல்காரர்கள் அக்னி சட்டி எடுத்தும் நேர்த்திகடன் செலுத்தி வந்தனர். தினமும் இரவு மாரியம்மன் பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா காட்சியும் நடந்தது.

    இதனை தொடர்ந்து நேற்று இரவு மாவிளக்கு ஊர்வலமும் சிறப்பு பூஜையும் நடந்தது. இன்று பொங்கல் விழா காலை 7 மணிக்கு தொடங்கி நடந்தது.

    பக்தர்கள் பொங்கல் வைத்தும், ஆடு, கோழி பலி கொடுத்தும், முடி காணிக்கை செலுத்தியும் பக்தி பரவ சத்துடன் மாரியம்மனை வழிபாடு செய்தனர். நாளை மஞ்சள் நீர் நிகழ்ச்சியுடன் பொங்கல் விழா நிறைவு பெறுகிறது.

    விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் சரவணன் தலைமையில் கோவில் தலைமை பூசாரி வாசுதேவன், புலவர் அறிவு, மற்றும் பணியாளர்கள், கட்டளைதாரர்கள் சிறப்பாக செய்து இருந்தனர்.

    • ராஜபாளையம் அருகே மாரியம்மன் கோவில் புரட்டாசி பொங்கல் விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • 9-ம் திருவிழாவை முன்னிட்டு திருத்தேர் வீதி உலா நடக்கிறது.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் அருகே உள்ள சொக்கநாதன்புத்தூர் இந்து நாடார் உறவின் முறை மகிமை பண்டுக்கு பாத்தியப்பட்ட மாரியம்மன் கோவில் புரட்டாசி பொங்கல் திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது.

    முன்னதாக அம்மனுக்கு பால் பன்னீர் தேன் இளநீர் போன்ற 16-வகை அபி ஷேகங்கள் நடத்தப்பட்டு தீப ஆராதனை வழிபாடு நடைபெற்றது. அதிகாலை 3 மணி அளவில் கொடி யேற்று விழா சிறப்பாக நடை பெற்றது. ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதனைத்தொடர்ந்து பிரசாதம் வழங்கப்பட்டது.

    முதல்நாள் விழாவில் இன்று மாலையில் அம்மன் குடை சப்பரத்தில் எழுந் தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இரவு இன்னிசை கச்சேரி நடை பெற்றது. 9-ம் திருவிழாவை முன்னிட்டு திருத்தேர் வீதி உலா நடக்கிறது. நிகழ்ச்சிக் கான ஏற்பாடுகளை கோவில் விழா கமிட்டியினர் செய்து வருகின்றனர்.

    • விமான கோபுரங்கள் திருப்பணி தொடக்க விழா நடைபெற்றது.
    • மஹா கணபதி ஹோமம், வாஸ்து பூஜை நடைபெற்றது.

    பவானி:

    பவானி நகர மக்களின் காவல் தெய்வமாக விளங்கி வரும் செல்லாண்டி அம்மன் மற்றும் மாரியம்மன் கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு விமான கோபுரங்கள் திருப்பணி தொடக்க விழா நடைபெற்றது.

    தொடர்ந்து சங்கமே ஸ்வரர் கோவில் சிவா சிவாச்சாரியார், உதயபிரகாஷ் சிவாச்சாரியார் குழுவினர் மூலம் விநாயகர் பூஜை, சங்கல்பம், மஹா கணபதி ஹோமம், வாஸ்து பூஜை நடைபெற்றது.

    இதை தொடர்ந்து 2-ம் கால பூஜை தொடங்கி பாலஸ்தாபன பூஜைகள், மஹா தீபாராதனை நடை பெற்று திருப்பணி தொடக்க விழா நடைபெற்றது.

    இவ்விழாவில் பவானி நகர தி.மு.க. செயலாளர் ப.சீ.நாகராசன், நகர்மன்ற தலைவர் சிந்தூரி இளங்கோ வன், நகர்மன்ற துணை தலைவர் மணி, அ.தி.மு.க. நகர செயலாளர் சீனிவாசன், முன்னாள் நகர செயலாளர் கிருஷ்ண ராஜ், பாட்டாளி மக்கள் கட்சி நகர செயலா ளர் தினேஷ்குமார் நாயகர்,

    செல்லியாண்டியம்மன் கோவில் திருப்பணி விழா குழுவினர் மகேந்திரன், சண்முகசுந்தரம், பி.என்.ஆர்.மனோகரன், செல்லியாண்டியம்மன் கோவில் சரவணன், தி.மு.க. தலைமை பேச்சாளர் கண்ணன், ஊர் கவுண்டர், ஊர் கொத்துகாரர், 37 சமூக கட்டளைதாரர்கள், பொதுமக்கள், பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    பவானி செல்லியாண்டி யம்மன், மாரியம்மன் கோவில் உள்பட நரின் பல்வேறு பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களில் ஆண்டு தோறும் மாசி திருவிழா மிக விமர்ச்சியாக நடைபெறுவது வழக்கம்.

    இந்த நிலையில் கோவில் திருப்பணிகள் நடைபெற உள்ளது. இதையொட்டி பவானி செல்லியாண்டியம்மன், மாரியம்மன், பட்டத்தரசியம்மன், எல்லையம்மன், மேட்டு தெரு மாரியம்மன், வர்ணபுரம் மாரியம்மன் கோவில்களில் இந்த ஆண்டு மற்றும் திரப்பணிகள் முடியும் வரை மாசி திருவிழா நடை பெறாது என இந்து சமய அறநிலையத்துறை, விழா குழுவினர் மற்றும் 37 கட்டளைதாரர்கள் முன்னிலையில் முடிவு எடுக்கப்பட்டு அறிவிக்க ப்பட்டது.

    • விழாவில் முதல் நாள் காலையில் பாபநாசத்தில் இருந்து புனித நீர் கொண்டுவரப்பட்டது.
    • சந்தன மாரியம்மன் மற்றும் பரிவார தேவதைகளுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    கடையம்:

    கடையம் அருகே உள்ள கோதாண்ட ராமபுரம் சந்தன மாரியம்மன் கோவில் கட்டுமான பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்றது.இதைத் தொடர்ந்து கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழாவில் முதல் நாள் காலையில் பாபநாசத்தில் இருந்து புனித நீர் கொண்டுவரப்பட்டது. மாலையில் மங்கள இசை, திருமுறை பாராயணத்துடன் விழா தொடங்கப்பட்டது.

    பின்னர் மகாகணபதி பூஜை, மகாகணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், வாஸ்துசாந்தி , யாகசாலை பூஜை நடைபெற்றது. பின்னர் பிரசாதம் வழங்குதல் நடைபெற்றது. இதையடுத்து 2-வது நாள் இரண்டாம் கால யாக பூஜை, மகாகணபதி பூஜை பின்னர் சந்தன மாரியம்மன் மற்றும் பரிவார தேவதைகளுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து அன்னதானம் நடைபெற்றது. இதில் சுற்றுவட்டாரப் பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.

    • அம்மனை தரிசிக்க அனுமதிக்க வேண்டும் என கூறி ஒரு தரப்பினர் போஸ்டர் அடித்து ஒட்டி இருந்தனர்.
    • கடந்த 3 மாதத்திற்கும் மேலாக பேளுக்குறிச்சி போலீசார் பெரிய மாரியம்மன் கோவில் வளாகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கொல்லிமலை:

    நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அடுத்த பேளுக்குறிச்சி பகுதியில் பிரசித்தி பெற்ற பெரிய மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் கடந்த 30 வருடங்களாக பட்டியலின மக்கள் வழிபடுவதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக இருதரப்பினர்களுக்கும் இடையே பிரச்சனை இருந்து வருகிறது.

    இந்நிலையில் ஒரு தரப்பினர் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில் சென்னை உயர்நீதிமன்றம் கோவிலில் கடந்த 2017-ம் ஆண்டு முதல் திருவிழா நடத்தக்கூடாது என உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் கோர்ட்டில் தொடர்ந்து வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

    இதனிடையே அம்மனை தரிசிக்க அனுமதிக்க வேண்டும் என கூறி ஒரு தரப்பினர் போஸ்டர் அடித்து ஒட்டி இருந்தனர். இதனால் இருதரப்பினரையும் அழைத்து ஆர்.டி.ஓ.மற்றும் தாசில்தார் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் இரு தரப்பினரும் சமாதானம் அடையவில்லை.

    இதையடுத்து சட்டம்-ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக முன் எச்சரிக்கையாக கடந்த 3 மாதத்திற்கும் மேலாக பேளுக்குறிச்சி போலீசார் பெரிய மாரியம்மன் கோவில் வளாகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் இன்று காலை பட்டியலின மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் பெரிய மாரியம்மனை தரிசிப்பதற்காக கோவிலுக்குள் தாம்பூல தட்டு மற்றும் நீதிமன்ற உத்தரவு நகலுடன் நுழைய முயன்றனர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடுத்து நிறுத்தினர்.

    இதனால் அவர்கள் அம்மனை வழிபட விடுங்கள் என கூறி கோவில் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போலீசார் அவர்களிடம் கோர்ட்டில் வழக்கு விசாரணையில் உள்ளது, அதனால் யாரையும் அனுமதிக்க முடியாது என கூறி பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் இதில் உடன்பாடு ஏற்படவில்லை.

    இதையடுத்து நாமக்கல் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராஜி மற்றும் ஆர்.டி.ஓ. சரவணன் உள்ளிட்டோர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். மேலும் அப்பகுதியில் எவ்வித அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    • உலக நன்மை வேண்டி வண்டுறை மாரியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை நடந்தது.
    • 1008 பெண்கள் அமர்ந்து உலக நன்மை வேண்டி விளக்கு ஏற்றி வழிபாடு செய்தனர்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் வாய்மேட்டை அடுத்த வண்டுவாஞ்சேரி வண்டுறை மாரியம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

    முன்னதாக மாரியம்மனுக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், நெய், தேன், திரவியம் உள்ளிட்டவைகளால் அபிஷேகம் நடைபெற்று.

    மாரியம்மனுக்கு சந்தன காப்பு சாத்தப்பட்டு மகாதீபாராதனை நடைபெற்றது.

    பின்னர் கோவிலின் எதிர்புறத்தில் 1008 பெண்கள் அமர்ந்து உலக நன்மை வேண்டி விளக்கு ஏற்றி வழிபாடு செய்தனர்.

    இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு மாரியம்மனை தரிசனம் செய்தனர்.

    • இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் ஆடி திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது.
    • பக்தர்களின் வசதிக்காக நவீன கழிப்பறை, குளியல் தொட்டி, சுகாதார மையங்கள் மற்றும் பாதுகாப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    சாத்தூர்

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே தென் தமி–ழகத்தின் மிகவும் பிரசித்தி பெற்ற இருக்கன்குடி மாரி–யம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆடி மாத கடைசி வெள்ளி திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதா–கும். ஆண்டுதோறும் நடை–பெறும் இந்த திருவிழாவை காண தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் இருக் கன்குடி மாரியம்மன் கோவி–லில் குவிவார்கள்.

    இங்கு தென் மாவட்டங் களான மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, உள்ளிட்ட பல்வேறு மாவட் டங்களில் இருந்து லட்சக்க–ணக்கான பக்தர்கள் பாத–யாத்திரையாக வந்து அம் மனை தரிசித்து, அக்கி–னிச் சட்டி, மாவிளக்கு, பறவை காவடி, தேர் இழுத்தல் உள்ளிட்ட பல்வேறு நேர்த் திக்கடன்களை செலுத்தி–னார்கள். பக்தர்களின் வச–திக்காக சிறப்புப் பேருந்து–களும் இயக்கப்பட்டன

    இதையொட்டி இருக்கன்குடி மாரியம்மன் கோவில் ஆடி மாத கடைசி வெள்ளி திருவிழா வருகிற 11-ந்தேதி நடைபெற்ற உள்ளது. இதற்கான நிகழ்ச்சிகள் இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இதையொட்டி இன்று மாலை இருக்கன்குடி மேல–மடை குடும்புகள் தலைமை–யில் இருக்கன்குடி கீழத்தெரு பொதுமக்கள் கோவில் தலைவாசல் முன்பு வேப் பிலை கொடி கட்டுவார் கள். இதில் இருக்கன்குடி, நத்தத்துப்பட்டி, கே.மேட் டுப்பட்டி என்.மேட்டுப்பட்டி கிராம பொதுமக்கள் கலந்து கொள்கிறார்கள்.

    விழாவை முன்னிட்டு கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களின் வசதிக்காக நவீன கழிப்பறை, குளியல் தொட்டி, தாய்மார்களுக்கான பாலூட்டும் அறை, மருத்துவ வசதிக்கான சுகா–தார மையங்கள் மற்றும் பாதுகாப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    விழா ஏற்பாடுகளை விருதுநகர் அறநிலையத் துறை கோவில் ஆணையர் (கூடுதல் பொறுப்பு) வளர் மதி, பரம்பரை அறங்கா–வலர் ராமமூர்த்தி பூசாரி மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள், கோவில் ஊழியர்கள் செய்திருந்தனர்.

    • இடைச்செருவாய் கிராமத்தில் பிரசித்தி பெற்ற முத்து மாரியம்மன் கோயில் உள்ளது.
    • இந்த ஆண்டும் முத்து மாரியம்மனுக்கு காப்பு கட்டப்பட்டது.

    கடலூர்:

    திட்டக்குடி அருகே இடைச்செருவாய் கிராமத்தில் பிரசித்தி பெற்ற முத்து மாரியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஆண்டு தோறும் தீமிதி திருவிழா விமர்சையாக நடைபெறும்.

    அதன்படி இந்த ஆண்டும் முத்து மாரியம்மனுக்கு காப்பு கட்டப்பட்டது. தொடர்ந்து அம்மன் நாள்தோறும் சிறப்பு அலங்காரத்துடன் மேலதாலங்கள் முழங்க வீதி உலா நடைபெற்றது. அம்மனுக்கு பக்தர்கள் மாவிளக்கு போட்டும், தேங்காய் உடைத்தும் வழிபாடு செய்தனர். தொடர்ந்து நேற்று தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதித்து தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். அம்மனுக்கு சிறப்பு அபிஷேக செய்யப்பட்டு தீபாதனை நடைபெற்றன. ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    ×