என் மலர்
வழிபாடு

உடுமலைப்பேட்டை மகா சக்தி மாரியம்மன் வரலாறு
- ஜமத்கனி எனும் முனிவரின் மனைவியாக திகழ்ந்தவள் ரேணுகா.
- மாரியம்மன் எனும் பெயரில் ரேணுகை அருள்பாலித்து வருகின்றாள்
ஜமத்கனி எனும் முனிவரின் மனைவியாக திகழ்ந்தவள் ரேணுகா. அவள் கற்பில் சிறந்த காரிகை. ஒருநாள் ரேணுகை அவ்வாறு நீரெடுக்கும்போது வான்வழிச் சென்ற கந்தவர் ஒருவரின் நிழல் நீரில் விழக்கண்டதனால் ஒரு நொடிப் பொழுது பிற ஆடவரின் நிழலைக் கண்டதால் கற்புநிலை தடுமாறிப் பசுமட்குடம் நீரில் கரைந்தது. பதறிய ரேணுகை உடனே தம் மனத்தை திண்மை செய்து மீண்டும் மட்குடம் வனைந்து நீர் எடுத்து வந்தாள்.
ரேணுகை சற்று காலந்தாழ்த்தி வந்தமைக்கான காரணத்தை தம் அகக்கண்ணால் உணர்ந்த ஜமதக்னி முனிவர் வெகுண்டார். தன் மகன் பரசுராமனை அழைத்து "கற்பு நிலை வழுவிய நின் தாயை கொன்று விடு என்று கட்டளையிட்டார்.
பரசுராமன் இருதலைக்கொள்ளி எறும்பானான். தாயிற் சிறந்ததொரு கோவிலுமில்லை என்பர். அத்தாயைக் கொல்வதா? தந்தை சொல்மிக்க மந்திரமுமில்லை என்பரே! அத்தந்தை சொல்லை மீறுவதா? என்ன செய்வது! என்று சற்றுத் திணறிய மைந்தன், இறுதியில் தந்தை சொல்லை முதலில் நிறைவேற்ற முடிவு செய்தான். பரசினை எடுத்துக் கொண்டு தாயை நோக்கி ஓடினான்.
மகனிடமிருந்து தப்பிக்கத் தாயும் ஓடினாள். தமையன்மார் தடுத்தனர். தடுத்தவர் அனைவரையும் வெட்டி வீழ்த்தினான் பரசுராமன். இறுதியில் ரேணுகை ஒரு தாழ்த்தப்பட்ட பெண்ணின் குடிசைக்குள் ஓடி ஒளிந்தாள்.
இரக்கம் உடைய அந்த ஏழைப்பெண் அடைக்கலமாக வந்த அன்னையைக் காக்க எவ்வளவோ முயன்றாள். அவளையும் பரசுராமன் வெட்டி வீழ்த்துகிறான். கடைசியில் தன் அன்னையையும் வெட்டி முடித்து விடுகிறான்.
கட்டளையை நிறைவேற்றிய பரசுராமன், தந்தையிடம் சென்று பணிகிறான். மகனின் கடமை உணர்வைப் பாராட்டிய தந்தை, மகனைப் பார்த்து "நீ வேண்டும் வரங்களைக் கேள்" என்கிறார்.
புத்திசாலியான பரசுராமன், "தந்தையே என்னால் கொல்லப்பட்ட அனைவரும் பிழைத்தெழ வேண்டும்" என்று கேட்டுக்கொள்கிறான். மகனின் சாமர்த்தியத்தையும் நல்ல உள்ளத்தையும் பாராட்டிய தந்தை "அப்படியே ஆகட்டும்" என்றார்.
பரசுராமன் தந்தையின் கட்டளைக்கு இணங்காமல் இருந்திருந்தால் அவனையும் முனிவர் சபித்திருப்பார். இதனை உணர்ந்தே பரசுராமன் தந்தையின் ஆசியையும் பெற்று, இறந்தவர்களையும் பிழைத்தெழுமாறு அனுமதியையும் பெற்றுவிடுகிறான்.
வெட்டுண்ட உடல்களின் மீது நீரைத் தெளித்து இறந்தவர்களைப் பிழைக்கச் செய்கிறான். அப்போது ஒரு விபரீதம் நிகழ்ந்து விடுகின்றது. வெட்டுண்ட தன் தாயின் தலையையும் அவளைக் காப்பாற்ற முயன்று வெட்டுண்ட பெண்ணின் உடலையும் ஒன்று சேர்த்து விடுகிறான்.
அதேபோல் அப்பெண்ணின் தலையையும் தாயின் உடலையும் ஒன்று சேர்த்து விடுகின்றான். இருவரும் உயிர் பெற்று எழுகின்றனர். ஆனால் தலைகள் மாறி உள்ளன. இவ்வாறு தலைகள் மாறியதால் ரேணுகையின் தலை பொருந்தியவளை "மாறி அம்மன்" என்று அழைக்கலாயினர் என்று அப்புராணம் கூறுகிறது.
தலைகள் மாறியதால் ஏற்பட்ட பெயர் என்றால் "மாறி அம்மன்" என்று வல்லின "றி" அல்லவாபோட்டு எழுத வேண்டும். ஆனால் இடையின "ரி" போட்டு "மாரி அம்மன்" என்றுதானே எழுதுகிறோம்.
ஆதலின் மேற்படி புராணக் கதை ரேணுகாதேவிக்கே உரியது. அதைத் தமிழ்நாட்டில் தொன்று தொட்டு மழைக்காக வழிபட்டு வரும் மாரி அம்மனுக்கு இடைக்காலத்தில் சிலர் இணைத்து விட்டுள்ளனர். எனவே ரேணுகை வேறு; மழை தரும் மாரிஅம்மன் வேறு.
ரேணுகையின் வரலாறு இன்னொரு விதமாகவும் கூறப்படுகிறது. ஜமத்கனி முனிவரின் காமதேனுவைக் கவர முயன்ற கார்த்த வீரியார்ஜீனனின் பிள்ளைகள் ஜமத்கனி முனிவரைக் கொன்றனர். இக்காட்சியைக் கண்ட ரேணுகை, கணவனை இழந்த பின் உயிர் வாழ விரும்பாமல், தீ மூட்டி அதில் குதித்துவிட்டாள்.
இந்திரன் வருணனை ஏவி, மழை பெய்வித்து ரேணுகையை எரியாமல் காத்தான். தீக்குண்டத்தில் இருந்து எழுந்த ரேணுகை, தன் உடம்பில் இருந்த ஆடை எரிந்து போய்விட்டதால், வேப்பிலையை ஒடித்து ஆடையாக அணிந்து கொண்டாள்.
ஊர் மக்கள் அவள் பசியைத் தீர்க்கப் பச்சரிசி மாவு, வெல்லம், இளநீர், பானகம் ஆகியவற்றைத் தந்தனர். பின்னர் ரேணுகை தன் கணவன் உடலைக் கண்டு அழுது புலம்பினாள்.
அப்போது சிவபெருமானும், வானோரும் அவளுக்குக் காட்சி தந்தனர். "ரேணுகையே! நீ பராசக்தியின் கலாம்சங்களில் ஓர் அம்சம். இதனை உலகோர் அறிவதற்காகவே இத்திருவிளையாடல். இனி நீ பூவுலகில் மாரியம்மன் எனும் பெயரில் மக்களின் துயர் தீர்த்து வருவாய்!
உன் உடம்பிலுள்ள தீக்கொப்புளங்களே மக்களுக்கு அம்மைக்கொப்புளங்களாக உண்டாகும். அவற்றை நீ அணிந்திருக்கும் ஆடைகளாகிய வேப்பிலைகளால் தீர்த்து வைப்பாய் என்று சிவபெருமான் வரம் அருளினார். அதுமுதல் மாரியம்மன் எனும் பெயரில் ரேணுகை அருள்பாலித்து வருகின்றாள் என்றும் ஒரு வரலாறு வழங்கி வருகின்றது.
பைதுரூபம், பிதுரூபம், மிருதி, மாரணம், முரசனி, நுகம், நமலி, கொடி எனும் எட்டு காரணப் பெயர்களால் ஜோதிட சாஸ்திரத்தில் புகழ்ந்து கொண்டாடப்படும் மகம் நட்சத்திரம் "மகா சக்தி மாரியம்மனின்" திருநட்சத்திரமாகும்.
மாரியம்மனுக்காக ஆற்றும் விசேஷ நிகழ்வுகள், உற்சவங்கள், கால்கோள் விழாக்கள், பாலாலயம், கும்பாபிஷேகம் யாவும் மகம் நட்சத்திரத்திற்கே பொருத்தங்களும், தாராபலனும் பார்த்து நிர்ணயிக்கப்படுகிறது.






