செய்திகள்

சிக்கிமில் மாநில கட்சி ஆட்சி- அருணாச்சல பிரதேசத்தில் பா.ஜனதா வெற்றி

Published On 2019-05-23 05:30 GMT   |   Update On 2019-05-23 05:30 GMT
சிக்கிம் மாநிலத்தில் மாநில கட்சியான சிக்கிம் ஜனநாயக முன்னணி கட்சியும், அருணாச்சல பிரதேசத்தில் பாஜகவும் ஆட்சியை தக்க வைக்க அதிக வாய்ப்பு உள்ளது.
புதுடெல்லி:

சிக்கிம் மாநிலத்தில் 32 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இங்கு ஏப்ரல் 11-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. அங்கு பவன்குமார் சாம்லிங் தலைமையிலான சிக்கிம் ஜனநாயக முன்னணி ஆட்சி நடந்து வருகிறது. சட்டசபை தேர்தலில் சிக்கிம் ஜனநாயக முன்னணிக்கும், சிக்கிம் கிராந்திக்காரி மோர்ச்சாவுக்கும் கடும் போட்டி நிலவியது. இரு மாநில கட்சிகளும் தனித்து களம் இறங்கின. காங்கிரஸ், பா.ஜனதாவும் களத்தில் நின்றன.

இன்று ஓட்டு எண்ணிக்கை நடந்த போது ஆளுங்கட்சியான சிக்கிம் ஜனநாயக முன்னணி கட்சியே பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலையில் இருந்தது. 5 தொகுதிகள் முன்னிலை அறிவித்தபோது அதில் அனைத்திலும் சிக்கிம் ஜனநாயக முன்னணியின் கையே ஓங்கி இருந்தது.

1994-ம் ஆண்டு முதல் பவன்குமார் சாம்லிங் முதல்-அமைச்சராக இருந்து வருகிறார். 1999, 2004, 2009, 2014 ஆகிய தேர்தல்களில் வெற்றிபெற்றார்.

அருணாசல பிரதேச மாநில சட்டசபையில் 60 தொகுதிகள் உள்ளன. அங்கு பா.ஜனதா ஆட்சி நடந்து வருகிறது. முதல்- அமைச்சராக பெமா கண்டு உள்ளார்.

அருணாசல பிரதேச சட்டசபைக்கு ஏப்ரல் 11-ந்தேதி ஒரே கட்டமாக ஓட்டுப்பதிவு நடந்தது. அங்கு ஆட்சியை பிடிக்க பா.ஜனதா, காங்கிரஸ் மல்லுகட்டின. அருணாசலபிரதேச மக்கள் கட்சியும் போட்டியிட்டது. ஓட்டு எண்ணிக்கையின் போது பா.ஜனதா பெருவாரியான தொகுதிகளில் முன்னிலை பெற்றிருந்தது. இதன்மூலம் பா.ஜனதா மீண்டும் அருணாசல பிரதேசத்தில் ஆட்சியை பிடிக்கிறது.
Tags:    

Similar News