search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    5 மாநிலங்களில் ஆட்சியை பிடிப்பது யார்? - இன்று ஓட்டு எண்ணிக்கை
    X

    5 மாநிலங்களில் ஆட்சியை பிடிப்பது யார்? - இன்று ஓட்டு எண்ணிக்கை

    சட்டசபை தேர்தல் நடைபெற்ற தெலுங்கானா, மத்தியபிரதேசம், சத்தீஷ்கார், ராஜஸ்தான், மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் இன்று ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது. #AssemblyElections
    ஐதராபாத்:

    சட்டசபை தேர்தல் நடைபெற்ற தெலுங்கானா, மத்தியபிரதேசம், சத்தீஷ்கார், ராஜஸ்தான், மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் இன்று ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது. இந்த மாநிலங்களில் ஆட்சியை பிடிப்பது யார்? என்பது இன்று பிற்பகலில் தெரிந்துவிடும்.

    90 இடங்களை கொண்ட சத்தீஷ்கார் மாநில சட்டசபைக்கு நவம்பர் 12 மற்றும் 20-ந்தேதிகளில் இரு கட்டங்களாகவும், 230 இடங்களை கொண்ட மத்தியபிரதேச சட்டசபைக்கும், 40 இடங்களை கொண்ட மிசோரம் சட்டசபைக்கும் நவம்பர் 28-ந் தேதியும் தேர்தல் நடைபெற்றது.



    119 இடங்களை கொண்ட தெலுங்கானா சட்டசபைக்கும், 200 இடங்களை கொண்ட ராஜஸ்தான் சட்டசபைக்கும் கடந்த 7-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. ராஜஸ்தானில் ஒரு தொகுதியில் வேட்பாளர் மரணம் அடைந்ததால் 199 தொகுதிகளில் தேர்தல் நடந்தது.

    இந்த 5 மாநிலங்களிலும் மொத்தம் 679 சட்டசபை தொகுதிகள் உள்ளன. 8,500-க்கும் அதிகமான வேட்பாளர்கள் போட்டியிட்டனர். ஒரு லட்சத்து 74 ஆயிரத்துக்கும் அதிகமாக வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. ஓட்டுப்பதிவுக்கு பின்னர் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டன.

    5 மாநிலங்களிலும் இன்று (செவ்வாய்க்கிழமை) வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்குகிறது. இதையொட்டி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. இந்த மாநிலங்களில் எந்த கட்சி ஆட்சியை பிடிக்கும் என்பது இன்று பிற்பகலில் தெரிந்து விடும்.

    தெலுங்கானா மாநிலத்தை பொறுத்தவரை, அங்கு முதல்-மந்திரியாக இருந்த தெலுங்கானா ராஷ்டிர சமிதியின் தலைவர் சந்திரசேகர ராவ் சட்டசபையை முன்கூட்டியே கலைத்துவிட்டு தேர்தலை சந்தித்தார். தெலுங்கானா ராஷ்டிர சமிதி, காங்கிரஸ்-தெலுங்குதேசம், பாரதீய ஜனதா ஆகிய 3 அணிகள் போட்டியிட்டன. இங்கு மொத்தம் உள்ள 119 தொகுதிகளில் 1,821 வேட்பாளர் போட்டியிட்டனர். இங்கு 43 மையங்களில் ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது.

    மத்தியபிரதேசம், சத்தீஷ்கார், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் ஆளும் பாரதீய ஜனதாவுக்கும், காங்கிரசுக்கும் இடையேதான் கடும் போட்டி நிலவியது.

    மிசோரம் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ், எதிர்க்கட்சியான மிசோ தேசிய முன்னணி ஆகியவை மொத்தம் உள்ள 40 தொகுதிகளிலும் போட்டியிட்டன. பாரதீய ஜனதா 39 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியது. அங்கு 13 மையங்களில் வாக்குகள் எண்ணப்படுகின்றன.

    தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளில் ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்க வாய்ப்பு இருப்பதாகவும், மத்தியபிரதேசம், சத்தீஷ்கார் மாநிலங்களில் யாருக்கு வெற்றி? என்பதில் இழுபறி ஏற்படலாம் என்றும், தெலுங்கானாவில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி வெற்றியை தக்கவைத்துக்கொள்ளும் என்றும் தெரியவந்து இருக்கிறது.

    இன்னும் சில மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால் இந்த 5 மாநிலங்களின் சட்டசபை தேர்தல் முடிவு நாடு முழுவதும் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. நாடாளுமன்ற தேர்தலுக்கு இந்த 5 மாநில தேர்தல் முடிவு ஒரு முன்னோட்டமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

    கடந்த 2014-ம் ஆண்டில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் மத்தியபிரதேசம், சத்தீஷ்கார், ராஜஸ்தான் ஆகிய 5 மாநிலங்களில் மொத்தம் உள்ள 65 தொகுதிகளில் 63 தொகுதிகளை பாரதீய ஜனதா கைப்பற்றியது. இந்த மாநிலங்களில் தற்போது பாரதீய ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது.

    எனவே இந்த 3 மாநிலங்களின் தேர்தல் முடிவு பாரதீய ஜனதா கட்சியை பொறுத்தவரை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. #AssemblyElections
    Next Story
    ×