search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரஜினி ஆதரவு தருவார் என்று நம்புகிறேன்- கமல்ஹாசன்
    X

    ரஜினி ஆதரவு தருவார் என்று நம்புகிறேன்- கமல்ஹாசன்

    ரஜினி, சீமான் ஆதரவு தனக்கு இருக்கும் என்று நம்புவதாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். #MakkalNeedhimaiam #KamalHaasan #Rajinikanth
    ஆலந்தூர்:

    மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசன் திருச்சியில் இருந்து இன்று சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-

    நான் மக்களை நேரடியாக சந்திக்கும்போது அவர்கள் அமைதியாக என்னுடைய கருத்துக்களை கேட்டார்கள். கை தட்டி ஆர்ப்பரிக்காமல் யோசிக்க ஆரம்பித்தார்கள். அது நன்றாகவும் மனதுக்கு இதமாகவும் இருந்தது. நம்பிக்கை அளிக்கும் வகையிலும் இருந்தது. மக்களின் கருத்தும் என்னுடைய கருத்தும் ஒத்துப்போனது.

    இதே போல் பல இடங்களில் உள்ள மக்களின் கருத்தும் ஒத்துப்போக ஆசையாக இருக்கிறது. இதுவரையில் நாங்கள் தனித்து போட்டியிடுகிறோம். நாங்கள் ஒரு அணி. எங்களிடம் நேர்மையானவர்கள் சேரலாம். இதுவெறும் அழைப்பு தானே தவிர, சுயநலமோ, யுக்தியோ கிடையாது.



    ரஜினி, சீமான் ஆதரவு எனக்கு இருக்கும் என்று நம்புகிறேன். ஆதரவு என்பது அவர்கள் விரும்பி தர வேண்டும். நான் 3-வது அணி என்று சொல்லவில்லை.

    வேட்பாளர் தேர்வு நல்ல முறையில் நடைபெற்று வருகிறது. விருப்ப மனுக்கான அறிவிப்பு நாளை வெளிவரும். டாக்டர் தமிழிசைக்கு நான் பேசுவது திரைப்பட வசனம்போல் இருக்கிறது என்பதற்கு காரணம் என்னையும் திரைப்படத்தையும் ஒன்றாக சேர்த்து பார்ப்பதுதான்.

    எங்களுடைய தேர்தல் அறிக்கை கவர்ச்சியாக இருக்காது. நாங்கள் கவர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள் அல்ல. நேர்மைக்கும் உணர்ச்சிக்கும்தான் முக்கியத்துவம் கொடுப்போம்.

    அதை நோக்கிதான் எங்கள் தேர்தல் அறிக்கை இருக்கும். தேர்தல் அறிக்கைக்கு ஒன்றும் அவசரமில்லை. கூடிய சீக்கிரம் அறிவிப்போம். செய்யப்போவதை தான் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதிகளாக கொடுப்போம்

    எங்களுடைய பலம் மக்கள் தான். நாங்கள் அதை நோக்கி பயணிக்கிறோம். யாருடன் கூட்டணி சேர்ந்தால் காசு வரும், ஓட்டு கிடைக்கும் என்று நினைக்காமல் மக்கள் நலன் கருதி செயல்படுவோம். பிரதமர் மோடி தமிழகத்திற்கு வரவேண்டும் என்றால் ஏன் வரவில்லை என்று கேள்வி கேட்கலாம். வந்தால் ஒரு சிறிய நன்றி சொல்லலாம்.

    பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதியிலும் பரீட்சை என்றுதான் சொன்னேன். சோதனை என்று சொல்லவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தமிழகத்தில் தண்ணீர் பிரச்சனையை தீர்த்து வைத்தது அ.தி.மு.க. அதனால் ரஜினி ரசிகர்கள் ஓட்டு அ.தி.மு.க.வுக்கு தான் என்று ஒரு நாளிதழில் செய்தி வந்திருக்கிறதே என்று நிருபர்கள் கேட்டபோது, “எந்த தண்ணீர் என்று தெரியவில்லை” என்று கமல் பதில் அளித்தார். #MakkalNeedhimaiam #KamalHaasan #Rajinikanth
    Next Story
    ×