search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கோவில் திருவிழாவையொட்டி பக்தர் ஒருவர் சாட்டை அடி வாங்கி நேர்த்திக்கடன் செலுத்தியதை படத்தில் காணலாம்.
    X
    கோவில் திருவிழாவையொட்டி பக்தர் ஒருவர் சாட்டை அடி வாங்கி நேர்த்திக்கடன் செலுத்தியதை படத்தில் காணலாம்.

    கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழா: சாட்டை அடி வாங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன்

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி பக்தர்கள் சாட்டை அடி வாங்கி நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.
    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வடக்குப்பேட்டையில் பிரசித்திப்பெற்ற கோட்டை மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழா ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த மாதம் 27-ந்தேதி பூச்சாட்டுதல் மற்றும் கம்பம் நடுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

    முன்னதாக அம்மனுக்கு தினமும் அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. கம்பத்தை சுற்றி அந்தப்பகுதி இளைஞர்கள் தினமும் இரவு 9 மணி முதல் 1 மணி வரை ஆடினார்கள். மேலும் பெண்கள் புனிதநீர் ஊற்றி வழிபட்டனர். நேற்று முன்தினம் மாவிளக்கு பூஜை நடைபெற்றது.

    இதைத்தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் கோட்டை மாரியம்மன் கோவிலில் இருந்து அந்தப்பகுதியில் உள்ள கோட்டை முனியப்பன் கோவிலுக்கு ஊர்வலமாக சென்றனர். பின்னர் அங்கு கோட்டை முனியப்பனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. இதையொட்டி 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பவானி ஆற்றுக்கு சென்று தீர்த்தம் எடுத்து வந்தனர். அப்போது சாட்டை அடி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பக்தர்கள் கோவில் நிர்வாகி ஒருவரிடம் சாட்டையடி வாங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். சாட்டையடி வாங்கினால் நோய் தீரும், சகல தோஷங்களும் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

    அதைத்தொடர்ந்து பக்தர்கள் தீர்த்தக்குடங்களுடன் கோட்டை மாரியம்மன் கோவிலுக்கு வந்தனர். பின்னர் அம்மனுக்கு தீர்த்த அபிஷேகம் நடைபெற்றது. நேற்று முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் விழா நடைபெற்றது. விழாவில் ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்துகொண்டு கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர்.
    Next Story
    ×