search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    சர்கார் படத்துக்கு தடை விதிக்க மறுப்பு -ஐகோர்ட்டு உத்தரவு
    X

    சர்கார் படத்துக்கு தடை விதிக்க மறுப்பு -ஐகோர்ட்டு உத்தரவு

    விஜய் நடிப்பில் ‘சர்கார்’ படத்துக்கு தடை விதிக்கக் கோரி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்த நிலையில், தடை விதிக்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது. #Sarkar #Vijay
    நடிகர் விஜய், கீர்த்தி சுரேஷ் உள் ளிட்டோர் நடித்துள்ள சர்கார் என்ற திரைப்படம், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளது.

    இந்த திரைப்படத்தின் கதை, வசனம் எழுதி ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார்.

    இந்த படத்துக்கு எதிராகவும், படத்தை வெளியிட தடை கேட்டும் வழக்கு தொடரப்படும் என்ற தகவல் கடந்த சில நாட்களாக உலாவியது. இதையடுத்து, தங்கள் கருத்தை கேட்காமல், இந்த படத்துக்கு தடை விதிக்கக்கூடாது என்று சர்கார் படத்தை தயாரித்துள்ள சன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில், சென்னை ஐகோர்ட்டில் ‘கேவியட்’ மனு தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த நிலையில், சர்கார் படத்தின் கதை, திரைக்கதை தன்னுடையது என்றும் சர்கார் படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டில் வருண் என்ற ராஜேந்திரன் வழக்கு தொடர்ந்துள்ளார்.

    அந்த வழக்கு மனுவில் கூறி இருப்பதாவது:-

    ‘செங்கோல் என்ற தலைப்பில் நான் கதை எழுதினேன். இந்த கதையை தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் பதிவு செய்துள்ளேன். இந்த நிலையில், என்னுடைய கதையை திருடி, சர்கார் என்ற தலைப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் படம் இயக்கி உள்ளார். இது குறித்து தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் புகார் செய்தேன்.



    அந்த சங்கத்தின் தலைவர் கே.பாக்கியராஜ், இருதரப்பையும் அழைத்து விசாரித்தார். இறுதியில், இருவரது கதையும், ஒரே கதை தான் என்று உத்தரவிட்டுள்ளார். எனவே, சர்கார் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும். அந்த படத்தின் கதை என்னுடையது என்று அறிவிக்க வேண்டும்’.

    இவ்வாறு அவர் கூறி இருந்தார்.

    இந்த வழக்கு நீதிபதி எம்.சுந்தரம் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி படத்துக்கு தடை விதிக்க மறுத்து விட்டார்.

    வழக்கிற்கு பதிலளிக்க சர்கார் படத்தின் இயக்குனர் முருகதாஸ், தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் பாக்கியராஜ் உள்ளிட்டோருக்கு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டார். #Sarkar #Vijay

    Next Story
    ×