என் மலர்tooltip icon

    உலகம்

    • 2025-ஆம் ஆண்டில் தரவரிசையில் ஆசிய நாடுகளும் ஐரோப்பிய நாடுகளும் இந்தப் பட்டியலில் முன்னிலை வகிக்கின்றன.
    • ஒரு நாட்டின் பொருளாதார நிலை, அரசியல் ஸ்திரத்தன்மை ஆகியவை வலிமையை தீர்மானிக்கின்றன.

    ஒரு நாட்டில் பாஸ்போர்ட் வலிமையை வைத்தே உலக நாடுகளில் அந்நாட்டின் முக்கியத்துவம் அளவிடப்படுகிறது.

    அந்த வகையில் 2025 ஆம் ஆண்டின் உலக நாடுகளின் பாஸ்போர்ட் வலிமை ஹென்லி பாஸ்போர்ட் குறியீட்டின் (Henley Passport Index 2025) மூலம் தெரியவந்துள்ளது.

    ஒரு நாட்டின் பாஸ்போர்ட்டை வைத்துக்கொண்டு எத்தனை நாடுகளுக்கு விசா இல்லாமல் அல்லது சென்றவுடன் விசா  பெற்று நுழைய முடியும் என்பதே இந்த தரவரிசையின் அடிப்படை.

    அந்த வகையில் 2025-ஆம் ஆண்டில் தரவரிசையில் ஆசிய நாடுகளும் ஐரோப்பிய நாடுகளும் இந்தப் பட்டியலில் முன்னிலை வகிக்கின்றன.

    முதலிடத்தில் சிங்கப்பூர். உலகின் மிகவும் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்டாக சிங்கப்பூர் தொடர்ந்து முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது. சிங்கப்பூர் பாஸ்போர்ட்டை வைத்திருப்பவர்கள் 193 நாடுகளுக்கு விசா இன்றி பயணிக்கலாம்.

    தென் கொரியா மற்றும் ஜப்பான் இரண்டாம் இடத்தை பகிர்ந்துகொண்டுள்ளன. இவ்விரு நாடுகளின் பாஸ்போர்ட்டுடன் 190 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்கலாம்.

    டென்மார்க், அயர்லாந்து, பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகள் 189 நாடுகளுக்கு விசா இல்லாத அனுமதியுடன் மூன்றாம் இடத்தில் உள்ளன.

    ஆஸ்திரியா, பெல்ஜியம், நெதர்லாந்து போன்ற ஐரோப்பிய நாடுகள் நான்காம் இடத்தில் உள்ளன. இந்த பாஸ்போர்ட்களுக்கு 188 நாடுகளில் விசா இல்லாத அனுமதி கிடைக்கும்.

    சுவிட்சர்லாந்து, நியூசிலாந்து மற்றும் கிரீஸ் ஆகியவை 187 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்கும் அனுமதியோடு பட்டியலில் 5 ஆம் இடத்தில் உள்ளன.

    இந்த ஆண்டுப் பட்டியலில் இந்தியா 83-வது இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த ஆண்டின் தரவுகளுடன் ஒப்பிடும்போது இந்தியா தனது நிலையை ஓரளவு மேம்படுத்தியுள்ளது.

    இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் தற்போது சுமார் 59 நாடுகளுக்கு விசா இல்லாமல் அல்லது 'விசா ஆன் அரைவல்' முறையில் பயணம் செய்ய முடியும்.

    சமீபகாலமாக தாய்லாந்து, இலங்கை மற்றும் மலேசியா போன்ற நாடுகள் இந்தியர்களுக்கு விசா விலக்கு அளித்தது இந்தியாவின் தரவரிசைக்கு வலு சேர்த்துள்ளது.

    அதேநேரம் அண்டை நாடான பாகிஸ்தான் பட்டியலில் 102-வது இடத்தில் உள்ளது. இதன் மூலம் மிகக் குறைவான நாடுகளுக்கே பாகிஸ்தான் குடிமக்கள் எளிதாகச் செல்ல முடியும்.

    சுவாரஸ்யமாக சீனா 58-வது இடத்தைப் பிடித்துள்ளது. உலகின் வளர்ந்த நாடுகளில் ஒன்றாகி இருந்தபோதிலும் சீனா மேற்கத்திய நாடுகளிடம் இருந்து தனித்து உள்ளதால் அதன் தரவரிசை பிந்தங்கி உள்ளது.

    ஆனால் கடந்த சில ஆண்டுகளில் சீனா தனது தூதரக உறவுகள் மூலம் தனது தரவரிசையை வேகமாக உயர்த்தி வருகிறது.      

    ஆப்கானிஸ்தான் இந்தப் பட்டியலில் மிகக் கடைசியாக உள்ளது.

    ஒரு நாட்டின் பொருளாதார நிலை, அரசியல் ஸ்திரத்தன்மை மற்றும் பிற நாடுகளுடனான தூதரக உறவுகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே இந்த பாஸ்போர்ட் வலிமை கணக்கிடப்படுகிறது.

    இந்தியா பல நாடுகளுடன் விசா இல்லாத பயண ஒப்பந்தங்களை மேற்கொண்டு வருவதால், வரும் ஆண்டுகளில் இந்தியாவின் தரவரிசை மேலும் உயர வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கருதுகின்றனர். 

    • இந்த செய்தியாளர் சந்திப்பு நேரலையில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.
    • சிறிது நேரத்திற்கு பிறகு அவரது காதலி திருமணத்துக்கு ஒப்புக்கொண்டதாக அந்த அரங்கில் தெரிவிக்கப்பட்டது.

    ரஷிய அதிபர் புதின், வருடாந்திர செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேட்டி அளித்தார். இதில் அவரிடம் உக்ரைன் - போர் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து நிருபர்கள் கேள்வி கேட்டனர். இந்த செய்தியாளர் சந்திப்பு நேரலையில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

    அப்போது இளம் நிருபர் கிரில் பஜானோவ் என்பவர் நான் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன் என்று எழுதப்பட்ட சுவரொட்டியை காண்பித்தப்படி தனது காதலியிடம் நீ என்னை திருமணம் செய்து கொள்வாயா என்று தனது ஆசையை வெளிப்படுத்தினார்.

    அப்போது அவர் கூறும்போது 'என் காதலி இந்தப் பத்திரிகையாளர் சந்திப்பைப் பார்த்துக் கொண்டிருக்கிறார் என்று எனக்குத் தெரியும், என்னை மணந்துகொள் என்றார். இதை அங்கிருந்தவர்கள் கைதட்டி வரவேற்றனர். சிறிது நேரத்திற்கு பிறகு அவரது காதலி திருமணத்துக்கு ஒப்புக்கொண்டதாக அந்த அரங்கில் தெரிவிக்கப்பட்டது.

    உடனே ரஷிய அதிபர் புதின் மற்றும் அங்கிருந்தவர்கள் கைதட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அப்போது புதின் கூறும்போது, நீங்கள் பதிவாளர் அலுவலகத்திற்குச் செல்லத் தயாராகிவிட்டீர்கள் என்றார்.

    அதற்கு பஜானோவ் புதினிடம், எங்கள் திருமணத்திற்கு நீங்கள் வந்தால் நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைவோம் என்றார்.

    • நம்பிக்கை மோசடி செய்ததற்காக 7 ஆண்டுகள், ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் 10 ஆண்டுகள், ஆக மொத்தம் 17 ஆண்டுகள் சிறை தண்டனை
    • ஏற்கனவே "தோஷகானா 1" வழக்கில் தண்டனை அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது தோஷகானா பார்ட் 2 வழக்கில் தண்டனை கிடைத்துள்ளது.

    பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபி ஆகியோருக்கு மற்றுமொரு ஊழல் வழக்கில் பாகிஸ்தான் நீதிமன்றம் 17 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.

    பாகிஸ்தான் பிரதமராக இருந்தபோது இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபி பெற்ற பரிசுகளில் ஊழல் செய்ததாக வழக்கு.

     இந்த வழக்கு 'தோஷகானா 2' என்று அழைக்கப்படுகிறது. அரசு கருவூல பரிசுகள் தோஷகானா என்று அளிக்கப்படுவதால் இந்த பெயர் 

    2021-ம் ஆண்டு சவுதி அரேபியாவிடமிருந்து இம்ரான் கான் தம்பதி பரிசாக பெற்ற விலைமதிப்பற்ற நகைகள், வைரங்கள் மற்றும் ரோலக்ஸ் கைக்கடிகாரங்கள் உள்ளிட்ட அரசு பரிசுகளை, அரசு கருவூலத்தில் ஒப்படைக்காமல் மோசடி செய்தததே இவர்கள் மீதான குற்றச்சாட்டு. 

    சுமார் 10.9 கோடி ரூபாய் மதிப்புள்ள பரிசுகளை அவர்கள் கையாடல் செய்ததாக புலனாய்வு அமைப்பு தெரிவித்தது.

    இந்நிலையில், ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கியது.

    அதன்படி நம்பிக்கை மோசடி செய்ததற்காக 7 ஆண்டுகள், ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் 10 ஆண்டுகள், ஆக மொத்தம் 17 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், தலா 1.64 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

    ஏற்கனவே இதேபோல் மற்ற சில பரிசுகளை கையாடல் செய்ததாக "தோஷகானா 1" வழக்கில் தண்டனை பெற்றுள்ள இம்ரான் கானுக்கு இந்த தோஷகானா பார்ட் 2 வழக்கில் 17 ஆண்டு தண்டனை பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது. இதுமட்டுமின்றி பல்வேறு ஊழல் வழக்குகளில் சிறை தண்டனை பெற்று இம்ரான் கான் ஏற்கனவே அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் அண்மையில் உயிரிழந்ததாக சர்ச்சை எழுந்தது. ஆனால் சிறை நிர்வாகம் அதை மறுத்தது.

    இதற்கிடையே இம்ரான் கான் மனைவி புஷ்ரா பீபி ஏற்கனவே இந்த 'தோஷகானா 2' வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள நிலையில், தற்போது அவருக்கு 17 ஆண்டுகள் தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இம்ரான் கானின் பிடிஐ கட்சி இத்தீர்ப்பை அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றும், சட்டத்தை கேலி செய்யும் செயல் என்றும் கடுமையாக விமர்சித்துள்ளது. இத்தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாகவும் அக்கட்சி அறிவித்துள்ளது.  

    • ISIS இன் கோட்டையாக இருக்கும் சிரியா மீது நாங்கள் ஒரு சக்திவாய்ந்த தாக்குதலைத் தொடங்குகிறோம்.
    • இதுவரை கண்டிராத வலிமையான தாக்குதலை நடத்துவோம்

    இந்த மாத தொடக்கத்தில் சிரியாவில் இரண்டு அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, சிரியாவில் உள்ள ISIS இலக்குகள் மீது அமெரிக்கா நேற்று வான்வழித் தாக்குதல்களை நடத்தியது.

    Operation Hawkeye என்ற பெயரிடப்பட்ட இந்த நடவடிக்கையை, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் "கொலைக்கு காரணமான பயங்கரவாதிகளுக்கு எதிரான மிகவும் கடுமையான பழிவாங்கல்" என்று விவரித்தார்.

    மேலும், "ISIS சிரியாவில் துணிச்சலான அமெரிக்க தேசபக்தர்களைக் கொன்றது, அவர்களின் புனித ஆன்மாக்களை இந்த வாரம் மிகவும் மரியாதைக்குரிய விழாவுடன் அமெரிக்க மண்ணுக்கு வரவேற்றேன்.

    நான் ஏற்கனவே உறுதியளித்தபடி, ISIS இன் கோட்டையாக இருக்கும் சிரியா மீது நாங்கள் ஒரு சக்திவாய்ந்த தாக்குதலைத் தொடங்குகிறோம்.

    சிரியாவிற்கு மீண்டும் மகத்துவத்தை கொண்டு வர கடுமையாக உழைத்த ஒரு மனிதரின் தலைமையிலான சிரிய அரசாங்கத்தை நாங்கள் முழுமையாக ஆதரிக்கிறோம்.

    அமெரிக்காவைத் தாக்கும் அனைத்து பயங்கரவாதிகளுக்கும், அவர்கள் நாட்டைத் தாக்கினால் அல்லது அச்சுறுத்தினால், நாங்கள் இதுவரை கண்டிராத வலிமையான தாக்குதலை நடத்துவோம் என்று இதன் மூலம் நான் எச்சரிக்கிறேன்" என்று டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் பதிவில் கூறினார். 

    • தெருவில் மேலும் புகை குண்டுகளை வீசியதோடு கத்தியை எடுத்து அவ்வழியே சென்றவர்களை தாக்கியுள்ளார்.
    • ஒரு கட்டத்தில் போலீசிடம் இருந்து தப்பிக்க உயரமான கட்டிடம் ஒன்றில் இருந்து கீழே குதித்துள்ளார்.

    ஆசிய நாடான தாய்வானின் தலைநகர் தைபேயில் நேற்று மாலை நடந்த கத்திக் குத்து தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டனர்.

    நகரின் பிரதான ரெயில் நிலையத்திற்கு அருகே சுரங்கப்பாதையில் நபர் ஒருவர் புகை குண்டுகளை வீசிவிட்டு அங்கிருந்து வெளியேறி தெருவுக்குள் நுழைந்துள்ளார்.

    தெருவில் மேலும் புகை குண்டுகளை வீசியதோடு கத்தியை எடுத்து அவ்வழியே சென்றவர்களை தாக்கியுள்ளார். 

    தாக்குதலில் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் 3 பேர் இதுவரை உயிரிழந்தனர்.

    தாக்குதல் நடத்தியவரை போலீசார் துரத்திச் சென்றனர். அந்த நபர் போலீசிடம் இருந்து தப்பி ஓடும் காட்சிகள் வெளியாகி உள்ளது. ஒரு கட்டத்தில் போலீசிடம் இருந்து தப்பிக்க உயரமான கட்டிடம் ஒன்றில் இருந்து கீழே குதித்துள்ளார்.

    மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. அந்த நபரின் பெயர் சாங் என்றும் அவருக்கு ஏற்கனவே குற்றப் பின்னணி உள்ளது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை தொடர்கிறது.  

     

    • ஆபரேஷன் செய்யும்போது மயக்கம் அடைவதற்காக நோயாளிகளுக்கு பொட்டாசியம் குளோரைடு கலந்த விஷ ஊசியை செலுத்தி உள்ளார்.
    • 2008 முதல் 2021-ம் ஆண்டு வரை 30 நோயாளிகளுக்கு அவர் விஷ ஊசி செலுத்தியதாக கூறப்படுகிறது.

    பாரீஸ்:

    பிரான்சின் பெசான்கான் நகரை சேர்ந்த டாக்டர் பிரடெரிக் பெஷியர் (வயது 53). இவர் 12 பேரை விஷ ஊசி செலுத்தி கொன்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. எனவே போலீசார் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அங்கு நடந்த விசாரணையில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகின.

    அதாவது ஆபரேஷன் செய்யும்போது மயக்கம் அடைவதற்காக நோயாளிகளுக்கு பொட்டாசியம் குளோரைடு கலந்த விஷ ஊசியை செலுத்தி உள்ளார். இதனால் அவர்களுக்கு மாரடைப்பு ஏற்பட்டு உள்ளது. பின்னர் அவரே அதற்கு சிகிச்சை அளித்து காப்பாற்றி தன்னை கதாநாயகன் போல காட்டி உள்ளார். இதுபோன்று 2008 முதல் 2021-ம் ஆண்டு வரை 30 நோயாளிகளுக்கு அவர் விஷ ஊசி செலுத்தியதாக கூறப்படுகிறது. இதில் 12 பேர் சிகிச்சை பலனின்றி இறந்தது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து வேண்டுமென்றே விஷ ஊசி செலுத்தி 12 பேரை கொன்ற பெஷியருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.

    • சிட்னியின் போண்டி கடற்கரையில் கடந்த ஞாயிறு அன்று துப்பாக்கிச்சூடு நடந்தது.
    • இதில் அப்பாவி பொதுமக்கள் 16 பேர் பரிதாபமாக பலியாகினர்.

    கான்பெரா:

    ஆஸ்திரேலியாவின் நியுசவுத் வேல்ஸ் மாகாணத்தின் சிட்னி நகரில் போண்டி என்ற இடத்தில் உள்ள கடற்கரை மிக பிரபலமானது.

    அந்தக் கடற்கரையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை யூதர்கள் நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது அப்போது அங்கு வந்த 2 மர்ம நபர்கள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் அப்பாவி பொதுமக்கள் 16 பேர் பலியாகினர்.

    முதல் கட்ட விசாரணையில் தாக்குதல் நடத்தியது பாகிஸ்தானைச் சேர்ந்த சாஜித் அக்ரம், நவீத் அக்ரம் (24) என்பதும், தந்தை, மகனான அவர்கள் இருவரும் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பதும் உறுதியானது.

    இதற்கிடையே, துப்பாக்கிச்சூடு நடத்தியவர் மீது பாய்ந்து துப்பாக்கியை பிடுங்கிய அல் அகமதுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. அவர் சிட்னியின் சதர்லேண்ட் பகுதியில் வணிக வளாகம் நடத்தி வரும் அல் அகமது (40) என தெரியவந்தது.

    மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அல் அகமதுவை ஆஸ்திரேலியா பிரதமர் அந்தோனி அல்பானீஸ் நேரில் சென்று நலம் விசாரித்தார்.

    இதுகுறித்து, அல்பானீஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்ட வீடியோவில், அகமது நீங்கள் ஒரு ஆஸ்திரேலிய ஹீரோ. சிட்னி கடற்கரையில் மக்களைக் காப்பாற்ற உயிரை பணயம் வைத்து பயங்கரவாதியிடம் இருந்த துப்பாக்கியை பிடுங்கி சரணடைய வைத்த உங்களுக்கு ஒவ்வொரு ஆஸ்திரேலிய மக்களின் சார்பாகவும் நன்றி கூறுகிறேன் என பதிவிட்டிருந்தார்.

    இந்நிலையில், துணிச்சலாக செயல்பட்ட பல உயிர்களைக் காப்பாற்றிய கதாநாயகன் அல் அகமதுவின் சிகிச்சைக்காக பல்வேறு தன்னார்வ அமைப்புகள் வசூலித்த ஒரு மில்லியன் டாலர் நன்கொடையை அவரிடம் வழங்கினர்.

    • ஸ்டேட்ஸ்வில்லி விமான நிலையத்திலிருந்து புளோரிடா நோக்கி விமானம் புறப்பட்டது.
    • சுமார் 2,000 அடி உயரத்தை அடைந்தபோது விமானத்தில் திடீரென கோளாறு ஏற்பட்டது.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவைச் சேர்ந்தவர் கிரெக் பிபிள் (55). இவர் முன்னாள் கார் பந்தய சாம்பியன் ஆவார். இவர் தனது மனைவி கிறிஸ்டினா, குழந்தைகள் ரைடர், எம்மா ஆகியோருடன் செஸ்னா சி550 என்ற சிறிய ரக விமானத்தில் பயணம் செய்தார். இவர்களுடன் டென்னிஸ் டட்டன், அவரது மகன் ஜாக், கிரெக் வாட்ஸ்வொர்த் ஆகியோரும் இருந்தனர்.

    ஸ்டேட்ஸ்வில்லி விமான நிலையத்திலிருந்து புளோரிடாவை நோக்கிப் புறப்பட்ட இந்த விமானம் சுமார் 2,000 அடி உயரத்தை அடைந்தது. அப்போது திடீரென ஏற்பட்ட கோளாறு காரணமாக அந்த விமானம் விமான நிலையத்திற்கே திரும்பியது.

    அவசரமாகத் தரையிறங்க முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்த விமானம் ரன்வேயைத் தாண்டிச் சென்று ஆண்டனா மற்றும் சுற்றுச்சுவர் மீது மோதி பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது.

    இதில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டு விமானத்தில் பயணித்த 7 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

    கட்டுப்பாட்டை இழந்த விமானம் சுவரில் மோதி தீப்பிடித்ததில் 7 பேர் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • மாணவர்கள் இயக்கமான இன்கிலாப் மஞ்சா அமைப்பின் தலைவர் ஷெரீப் உஸ்மான் ஹாடி.
    • தலையில் குண்டு பாய்ந்து ஷெரீப் உஸ்மான் ஹாடி படுகாயம் அடைந்தனர்.

    வங்காளதேசத்தில் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா அரசுக்கு எதிராக கடந்த ஆண்டு மாணவர் அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    போராட்டத்தை ஒடுக்க நடத்தபட்ட துப்பாக்கி சூட்டில் பலர் உயிரிழந்ததையடுத்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மாணவர்கள் மிகப்பெரிய அளவில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பயங்கர வன்முறை வெடித்தது.

    இதையடுத்து ஷேக் ஹசீனா, பதவியை ராஜினாமா செய்து நாட்டைவிட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்தார். இதையடுத்து முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டது.

    ஷேக் ஹசீனா அரசுக்கு எதிரான போராட்டத்தை நடத்தியவர்களில் முக்கியமானவராக இருந்தவர் மாணவர்கள் இயக்கமான இன்கிலாப் மஞ்சா அமைப்பின் தலைவர் ஷெரீப் உஸ்மான் ஹாடி(வயது 32).

    வங்காளதேசத்தில் வருகிற பிப்ரவரி மாதம் பொதுத் தேர்தல் நடப்பதை முன்னிட்டு அதில் போட்டியிட முடிவு செய்த ஷெரீப் உஸ்மான் ஹாடி தனது பிரசாரத்தை கடந்த 12-ந்தேதி மத்திய டாக்காவின் பிஜோய்நகர் பகுதியில் தொடங்கினார்.

    அப்போது அவர் மீது முகமூடி அணிந்த மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டனர். இதில் தலையில் குண்டு பாய்ந்து ஷெரீப் உஸ்மான் ஹாடி படுகாயம் அடைந்தனர். அவருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

    ஷெரீப் உஸ்மானின் நிலைமை மோசமடைந்ததையடுத்து அவரை மேல்-சிகிச்சைக்காக விமான ஆம்புலன்ஸ் மூலம் சிங்கப்பூருக்கு இடைக்கால அரசாங்கம் அனுப்பியது.

    சிங்கப்பூர் மருத்துவமனையில் உயிர்காக்கும் கருவிகளுடன் ஷெரீப் உஸ்மானுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். ஏற்கனவே ஷெரீப் உஸ்மான் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதால் போராட்டம் நடத்தி வந்த மாணவர்கள், அவர் இறந்த செய்தியை அறிந்ததும் கடும் ஆத்திரம் அடைந்தனர்.

    நேற்று இரவு தலைநகர் டாக்காவில் உள்ள சாலைகளில் ஏராளமானோர் திரண்டனர். அவர்கள் ஷெரீப் உஸ்மான் கொலைக்கு நீதி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். டாக்கா பல்கலைக்கழக வளாகத்திற்கு அருகிலுள்ள ஷாபாக் சந்திப்பில் நூற்றுக்கணக்கான மாணவர்களும் பொதுமக்களும் திரண்டு முழக்கங்களை எழுப்பினர்.

    ஷெரீப் உஸ்மானை கொன்றவர்களை கைது செய்யத் தவறியதற்காக உள்துறை ஆலோசகரின் உருவ பொம்மையை எரித்தனர்.

    நேரம் செல்ல செல்ல ஆயிரக்கணக்கானோர் வீதிகளில் குவிந்ததால் போராட்டம் தீவிரமடைந்து வன்முறை வெடித்தது. மேலும் நாட்டின் மற்ற நகரங்களிலும் போராட்டங்கள் பரவியது.

    தலைநகர் டாக்காவில் வன்முறையில் ஈடுபட்ட போராட்டக்காரர்கள் தி டெய்லி ஸ்டார் மற்றும் புரோதோம் அலோ ஆகிய 2 செய்தி அலுவலகங்கள் மீது கற்களை வீசி தாக்கினர். மேலும் அந்த அலுவலக கட்டிடங்களுக்கு தீ வைத்தனர். இதனால் அங்கு தீ கொளுந்துவிட்டு எரிந்தது.

    இதில் அக்கட்டிடங்களுக்குள் ஊழியர்கள் சிக்கி கொண்டனர். சம்பவ இடத்துக்கு உடனடியாக விரைந்து வந்த பாதுகாப்புப் படையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள், அலுவலகத்தில் இருந்த பத்திரிகையாளர்கள் மற்றும் ஊழியர்களை பத்திரமாக மீட்டுத் தீயை அணைத்தனர்.

    டாக்கா முழுவதும் தீவிரமான போராட்டங்கள் நடந்ததால் பெரும் பரபரப்பு நிலவியது. போராட்டம்-வன்முறையை கட்டுபடுத்த துணை ராணுவப் படைகள் குவிக்கப்பட்டன.

    அவர்களை பல இடங்களில் போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்தினார்கள். ஆனாலும் போராட்டத்தை கட்டுபடுத்த முடியவில்லை.

    ராஜ்ஷாஹியில் உள்ள முன்னாள் பிரதமர் ஷேக் முஜிபுர் ரஹ்மானின் இல்லத்திற்கும், ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி அலுவலகத்திற்கும் தீ வைத்தனர். இதில் அந்த கட்டிடங்கள் கடும் சேதடைந்தன.

    மேலும் டாக்காவில் உள்ள ஷேக் ஹசீனா வீட்டுக் கும் தீ வைக்கப்பட்டது. சிட்டகாங்கில் ஒரு முன்னாள் அமைச்சரின் இல்லத்தையும் தாக்கினர். டாக்கா-மைமன்சிங்கை இணைக்கும் ஒரு முக்கிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

    சுட்டுக்கொல்லப்பட்ட ஷெரீப் உஸ்மான், இந்தியாவுக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்து வந்தார். இதனால் போராட்டகாரர்கள் இந்திய தூதரகம் மீது தாக்குதல் நடத்தினார்கள். ராஜ ஷாஹி நகரில், போராட்டக்காரர்கள் இந்தியத் தூதரக அலுவலகத்தை நோக்கிச் சென்றபோது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

    இந்தியத் துணைத்தூதரக அலுவலகம் அருகே கல்வீச்சுச் சம்பவங்கள் நடந்தன. சிட்டகாங்கில் உள்ள இந்திய தூதரகம் முன்பு போராட்டம் நடந்தது. அப்போது இந்தியாவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

    நேற்று முன்தினம் டாக்காவில் உள்ள இந்திய துணை தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டங்கள் நடந்தது. அப்போது ஷெரீப் உஸ்மான் மீது துப்பாக்கி சூடு நடத்தியவர்கள் இந்தியாவுக்கு தப்பி சென்றுவிட்டதாக அவர்கள் குற்றம் சாட்டியிருந்தனர்.

    தாக்குதல் நடத்தியவர்களை திருப்பி அனுப்பும் வரை இந்திய தூதரகத்தை மூட வேண்டும் என்று போராட்டக்காரர்கள் தெரிவித்திருந்தனர். இதற்கிடையே ஷெரீப் உஸ்மான் இறந்ததால் இந்திய தூதரகத்தை போராட்டக்காரர்கள் குறிவைத்து தாக்குதல் நடத்தி உள்ளனர்.

    தலைநகர் டாக்கா, சிட்ட காங் மற்றும் பிற நகரங்களில் நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை போராட்டங்கள், வன்முறை சம்பவங்கள் நடந்தது. இன்று காலை வன்முறையை கட்டுக்குள் கொண்டு வர நாடு முழுவதும் துணை ராணுவத்தினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு ரோந்து சுற்றி வருகிறார்கள்.

    ஆனால் ஷெரீப் உஸ்மான் மரணத்துக்கு நீதி கிடைக்கும் வரை போராட் டம் தொடரும் என்று மாணவர் இயக்கங்கள் அறிவித்துள்ளன. இதனால் வங்காளதேசத்தில் பதற்றம் நிலவி வருகிறது.

    • தங்களின் எதிர்காலம் அவர்களின் ஆடம்பரங்களுக்காக கொள்ளை அடிக்கப்படுவதை இளைஞர்கள் உணர்ந்தனர்.
    • புகைந்து கொண்டிருக்கும் நெருப்பை கிளறி விட ஒரு உடனடி காரணி தேவை.

    2025, நேபாள வரலாற்றில் ஒரு திருப்புமுனை ஆண்டாக அமைந்தது. பல்லாண்டுகளாக நீடித்த பழைய அரசியல் கட்டமைப்பை 1997 முதல் 2012 இடையில் பிறந்த 'ஜென்-சி' (Gen Z) என்று அழைக்கப்படும் இளம் தலைமுறையினர் தங்கள் போராட்டத்தின் மூலம் தகர்த்தெறிந்துள்ளனர்.

    ஒரு புரட்சி தொடங்க 2 காரணிகள் உண்டு. ஒன்று நீண்டகால காரணி. மற்றொரு உடனடி காரணி.

    நேபாளத்தை அரசியல் மாற்றத்திற்கான விதைகள் 2025 தொடக்கத்திலேயே தூவப்பட்டன.

    பிரதமர் கே.பி. சர்மா ஒலி தலைமையிலான கம்யூனிஸ்ட் கூட்டணி அரசு மீது ஊழல் புகார்கள், பொருளாதாரத் மந்த நிலை மற்றும் வேலையில்லாத் திண்டாட்டம் காரணமாக இளைஞர்கள் கடும் கோபத்தில் இருந்தனர்.

    இதேநேரம் அரசியல் தலைவர்களின் மகன்களும் மகள்களும் ஆடம்பர வாழ்க்கை வாழும் புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரப்பப்பட்டன. தங்களின் எதிர்காலம் அவர்களின் ஆடம்பரங்களுக்காக கொள்ளை அடிக்கப்படுவதை இளைஞர்கள் உணர்ந்தனர். இதுவே நீண்டகால காரணிகள்.

    புகைந்து கொண்டிருக்கும் நெருப்பை கிளறி விட ஒரு உடனடி காரணி தேவை. அந்த வகையில் செப்டம்பர் 4, 2025 அன்று, அரசு பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட 26 சமூக வலைதள செயலிகளுக்குத் தடை விதித்தது. கருத்துச் சுதந்திரத்தைப் பறிக்கும் இந்த நடவடிக்கையே நாடு தழுவிய போராட்டத்திற்கு உடனடி காரணியாக அமைந்தது.

    செப்டம்பர் 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நேபாளத்தின் வீதிகள் போர்க்களமாக மாறின.

    பாராளுமன்றக் கட்டிடம், உச்ச நீதிமன்றம் மற்றும் பிரதமரின் அலுவலகம் உள்ளிட்ட முக்கிய அரசு கட்டிடங்கள் போராட்டக்காரர்களால் சேதப்படுத்தப்பட்டன.

    பாதுகாப்புப் படையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் குறைந்தது 51 பேர் உயிரிழந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நிலைமையைக் கட்டுப்படுத்த ராணுவம் களம் இறக்கப்பட்டது.

    இந்தப் போராட்டங்களால் நேபாளத்திற்கு சுமார் 586 மில்லியன் அமெரிக்க டாலர் இழப்பு ஏற்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

    போராட்டத்தின் தீவிரத்தைத் தாங்க முடியாமல் செப்டம்பர் 9-ஆம் தேதி பிரதமர் கே.பி. சர்மா ஒலி தனது பதவியை ராஜினாமா செய்தார்.

    இதனைத் தொடர்ந்து இடைக்கால அரசு அமைக்கப்பட்டு, நேபாளத்தின் முன்னாள் தலைமை நீதிபதி சுஷிலா கார்கி, நாட்டின் முதல் பெண் பிரதமராக பொறுப்பேற்றார்.

    சுவாரஸ்யமாக, இவரது தேர்வு Discord என்ற சமூக வலைதளம் மூலம் இளைஞர்களிடம் நடத்தப்பட்ட வாக்கெடுப்பு மற்றும் ராணுவம், ஜனாதிபதியுடன் நடத்தப்பட்ட ஆலோசனையின் அடிப்படையில் அமைந்தது.

    நேபாள நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, புதிய பொதுத்தேர்தல் 2026 மார்ச் 5 அன்று நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    2025-ஆம் ஆண்டு நேபாள இளைஞர்கள் தங்களின் வலிமையால் ஒரு ஆட்சியையே கவிழ்க்க முடியும் என்பதை உலகிற்கு நிரூபித்தனர்.

    வரும் 2026 தேர்தல், நேபாளத்தில் மீண்டும் பழைய அரசியல்வாதிகளின் கைகளுக்குச் செல்லுமா அல்லது புதிய இளம் தலைமுறைத் தலைவர்களை உருவாக்குமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். 

    இதேபோல் மற்ற சில நாடுகளிலும் அரசுக்கு எதிராக ஜென் z போராட்டங்கள் வெடித்தன.

    மடகாஸ்கர்: அகடோபர் மாதம் மடகாஸ்கரில் கடும் குடிநீர் மற்றும் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்பட்டது.

    இதனை எதிர்த்துத் தொடங்கிய இளைஞர்களின் போராட்டம், விரைவிலேயே அரசின் ஊழல் மற்றும் நிர்வாகச் சீர்கேட்டிற்கு எதிரான மாபெரும் புரட்சியாக உருவெடுத்தது.

    இந்தோனேசியா: நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட அதிகப்படியான வீட்டு வாடகைப் படிக்கு எதிராக ஆகஸ்ட் மாதம் இந்தோனேசிய இளைஞர்கள் போராடினர்.

    இந்தப் போராட்டத்தின் தீவிரத்தால் அந்நாட்டின் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

    மொராக்கோ: 2030 பிபா கால்பந்து உலகக் கோப்பைக்காக அரசு கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கிய அதே வேளையில், கல்வி மற்றும் சுகாதாரம் புறக்கணிக்கப்பட்டதை எதிர்த்து இளைஞர்கள் கொதித்தெழுந்தனர்.

    'GenZ 212' என்ற ஆன்லைன் குழுவின் மூலம் இந்தப் போராட்டங்கள் ஒருங்கிணைக்கப்பட்டன.

    பல்கேரியா: 2026-ஆம் ஆண்டுக்கான வரைவு பட்ஜெட் ஊழலுக்கு வழிவகுப்பதாகக் கூறி நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் பல்கேரியத் தலைநகர் சோஃபியாவில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் போராடினர்.

    பிலிப்பைன்ஸ்: வெள்ளக் கட்டுப்பாட்டுத் திட்டங்களில் நடந்த பெரும் ஊழலைக் கண்டித்து பிலிப்பைன்ஸ் இளைஞர்கள் களமிறங்கினர். தவறு செய்த அதிகாரிகளை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என அதிபர் மார்க்கோஸ் ஜூனியருக்கு அவர்கள் கடும் எச்சரிக்கை விடுத்தனர்.

    கென்யா: கென்யாவில் வரி உயர்வு மற்றும் விலைவாசி உயர்வைக் கண்டித்து தொடங்கிய போராட்டம், 2025 ஜூலை மாதத்தில் போலீஸ் அராஜகத்திற்கு எதிரான போராட்டமாக மாறியது. இளைஞர்கள் கடத்தப்படுவதையும் சட்டவிரோதக் கைதுகளையும் எதிர்த்து அவர்கள் இடைவிடாமல் போராடினர்.

    மெக்சிகோ: குற்றச் சம்பவங்கள் அதிகரிப்பு மற்றும் மேயர் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து இளைஞர்கள் தேசிய மாளிகைக்குள் அதிரடியாகப் புகுந்து போராடினர்

    பெரு: அரசியல் ஸ்திரமின்மை மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக அதிபர் தினா பொலுவார்டே பதவி விலகக் கோரி செப்டம்பரில் போராட்டங்கள் வெடித்தன.

    2025-ஆம் ஆண்டில் 'ஜென் Z' இளைஞர்கள் வெறும் சமூக வலைதளங்களில் மட்டும் கருத்துகளைப் பதிவிடாமல், களத்தில் இறங்கி மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளனர். ஒரு புதிய அரசியல் வடிவதற்கான ஆரம்பமாகவே இந்த உலகளாவிய போராட்டங்கள் பார்க்கப்படுகின்றன. 

    • இதில் ஹாலிவுட் நடிகர் இட்ரிஸ் எல்பா உட்பட பல முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.
    • கடந்த மாதம் இங்கிலாந்து பிரதமர் இந்தியா வருகை தந்து மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்தியபோதும் இவர்கள் இருவரையும் நாடுகடத்துவது தொடர்பான எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை

    இந்திய சட்டங்களிலிருந்து தப்பிக்க லண்டனில் ஒளிந்து கொண்டிருக்கும் தொழிலதிபர்களான லலித் மோடி மற்றும் விஜய் மல்லையா பார்ட்டி, கொண்டாட்டம் என கூத்தடிக்கும் வீடியோக்கள் அடிக்கடி வெளியாகி வருகின்றன.

    பணமோசடி உட்பட பல்வேறு நிதி முறைகேடுகள் தொடர்பான குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு லலித் மோடி 2010 முதல் லண்டனில் வசித்து வருகிறார்.

    மறுபுறம், கிங்பிஷர் ஏர்லைன்ஸ் தலைவர் விஜய் மல்லையா இந்திய வங்கிகளில் சுமார் ரூ.9,000 கோடி கடன்களை ஏய்ப்பு செய்து லண்டனுக்கு தப்பிச் சென்றார்.

    இந்நிலையில் நேற்று விஜய் மல்லையா தனது 70 வது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்காக தனது வீட்டில் லலித் மோடி பிரமாண்ட பார்ட்டி கொடுத்துள்ளார்.

    இதில் ஹாலிவுட் நடிகர் இட்ரிஸ் எல்பா உட்பட பல முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர். மேலும் இதில் லலித் மோடி, விஜய் மல்லையா இருவரும் நடனமாடி மகிழ்ந்தனர். இதன் வீடியோவை லலித் மோடி தனது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.

    முன்னதாக இந்த மாத தொடக்கத்தில் தனது 63வது பிறந்தநாளை கொண்டாடிய லலித் மோடி லண்டனின் மேஃபேரில் உள்ள விலையுயர்ந்த மடாக்ஸ் கிளப்பில் பார்ட்டி வைத்தார்.

    இந்த கிளப்பில் ஒரு மேஜையை புக்கிங் செய்ய குறைந்தபட்சம் ஆயிரம் பவுண்டுகள் (சுமார் ரூ. 1.18 லட்சம்) கட்டணம் ஆகும். இந்த பார்ட்டியின் வீடியோவையும் அப்போது பகிர்ந்து கொண்டார்.

    கடந்த மாதம் இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் இந்தியா வருகை தந்து பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்தியபோதும் இவர்கள் இருவரையும் நாடுகடத்துவது தொடர்பான எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  

    • தலைநகர் டாக்கா உட்பட வங்கதேசத்தின் பல்வேறு நகரங்களில் ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் வீதியில் இறங்கினர்.
    • டாக்கா மற்றும் முக்கிய நகரங்களில் ராணுவம் மற்றும் துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

    வங்கதேசத்தில் 'இன்குலாப் மஞ்ச்' என்ற மாணவர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஷரீப் உஸ்மான் ஹாதி, கடந்த வாரம் வெள்ளிக்கிழமை டாக்காவில் அடையாளம் தெரியாத நபர்களால் சுடப்பட்டார்.

    உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று (வியாழக்கிழமை) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    ஹாடியின் மரணச் செய்தி பரவியதும், தலைநகர் டாக்கா உட்பட வங்கதேசத்தின் பல்வேறு நகரங்களில் ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் வீதியில் இறங்கினர்.

    நேற்று நள்ளிரவு டாக்காவின் ஷாபாக் சதுக்கத்தில் திரண்டு அவர்கள் நடத்திய போராட்டம் வன்முறையாக மாறியது.

    போராட்டக்காரர்கள் டாக்காவில் உள்ள 'புரோதோம் ஆலோ' (Prothom Alo) மற்றும் 'தி டெய்லி ஸ்டார்' (The Daily Star) ஆகிய முன்னணி பத்திரிகை அலுவலகங்களை அடித்து நொறுக்கி தீ வைத்தனர்.

    கட்டிடத்திற்குள் இருந்த ஊழியர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் உள்ளே சிக்கிய நிலையில் சுமார் 4 மணிநேர போராட்டத்தின் பின் தீயணைப்பு துறை மற்றும் ராணுவத்தால் மீட்கப்பட்டனர்.

    இதேபோல் சட்டோகிராமில் உள்ள இந்திய துணை தூதரக அதிகாரி இல்லத்தின் மீது போராட்டக்காரர்கள் கல்வீசித் தாக்குதல் நடத்தினர். இந்தியாவுக்கு எதிராகவும், ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சிக்கு எதிராகவும் அவர்கள் முழக்கமிட்டனர்.

    வங்கதேசத்தின் தந்தை என அழைக்கப்படும் ஷேக் முஜிபுர் ரஹ்மானின் பூர்வீக இல்லதிற்கும் தீவைக்கப்பட்டது. நாட்டின் பல்வேறு இடங்களில் அவாமி லீக் கட்சி அலுவலகங்களும் சூறையாடப்பட்டன.

    வங்கதேச இடைக்கால தலைவர் முகமது யூனுஸ், மக்கள் சட்டத்தை கையில் எடுக்க வேண்டாம் என்றும் அமைதி காக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். ஹாடியின் மரணத்திற்காக இன்று (வெள்ளிக்கிழமை) நாடு தழுவிய துக்க தினத்தை அவர் அறிவித்துள்ளார்.

    இதற்கிடையே டாக்கா மற்றும் முக்கிய நகரங்களில் ராணுவம் மற்றும் துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

    இந்தியத் தூதரகங்கள் மற்றும் விசா மையங்களுக்குப் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பல இடங்களில் பதற்றம் குறையாமல் உள்ளது. 

    ×