காதலியால் சிக்கிய கடத்தல் மன்னன்.. மெக்சிகோ போதைப்பொருள் கும்பல் தலைவன் கொல்லப்பட்டது எப்படி?

எல் மென்சோவுடன் சேர்த்து கூட்டாளிகள் 7 பேரும் கொல்லப்பட்டனர்.துப்பாக்கிச் சண்டைக்கு நடுவே காயங்களுடன் காட்டுக்குள் தப்பியோடின்னான்
காதலியால் சிக்கிய கடத்தல் மன்னன்.. மெக்சிகோ போதைப்பொருள் கும்பல் தலைவன் கொல்லப்பட்டது எப்படி?
Published on

லத்தீன் அமெரிக்க நாடான மெக்சிகோவில் பல்வேறு போதைப்பொருள் கும்பல்கள் செயல்பட்டு வருகின்றன.

அவற்றுள் ஜாலிஸ்கோ நியூ ஜெனரேசன் என்ற முக்கியமான கும்பலின் தலைவனாக இருந்தவன் நெமேசியோ ஒசெகுவேரா செர்வாண்டஸ்.

கடத்தல் கும்பல்கள் இடையே எல் மென்சோ என்ற பெயரில் பரவலாக அறியப்படும் இவனை, மெக்சிகோ ராணுவம் ஜாலிஸ்கோ பகுதியில் போர்ட்டோ வல்லார்தா என்ற இடத்தில் வைத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை சுட்டுக் கொன்றனர்.

எல் மென்சோவுடன் சேர்த்து அவரது கூட்டாளிகள் 7 பேரும் கொல்லப்பட்டனர்.

இதனால் எல் மென்சோவின் கும்பலை சேர்ந்தவர்கள் மற்றும் ஆதரவாளர்கள் அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டம், சாலை மறியல் மற்றும் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் எல் மென்சோ எப்படி சிக்கினான் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

எல் மென்சோவைப் பிடித்துக் கொடுப்பவர்களுக்கு அமெரிக்க அரசு 15 மில்லியன் டாலர் சன்மானம் அறிவித்திருந்தது.

இதற்கிடையே அமெரிக்க உளவு அமைப்பான CIA வழங்கிய ரகசியத் தகவல்களின் அடிப்படையில், மெக்சிகோ ராணுவம் ஜலிஸ்கோ மாநிலத்தின் தபால்பா பகுதியில் மாபெரும் தேடுதல் வேட்டையை நடத்தியது.

எல் மென்சோவின் காதலியின் நடமாட்டத்தை ராணுவம் தீவிரமாகக் கண்காணித்து வந்தது. பிப்ரவரி 20 அன்று, அவரது தோழி ஒருவரைப் பின்தொடர்ந்ததன் மூலம் எல் மென்சோ கிராமப்புறம் ஒன்றில் பதுங்கியிருந்த ரகசிய இடம் கண்டறியப்பட்டது.

ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சிறப்புப் படையினர் அந்தப் பகுதியைச் சுற்றி வளைத்தனர். அப்போது எல் மென்சோவின் பாதுகாவலர்கள் ராணுவத்தின் மீது சரமாரியாகத் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று சேதமடைந்து அவசரமாகத் தரைஇறக்கப்பட்டது.

துப்பாக்கிச் சண்டைக்கு நடுவே காயங்களுடன் காட்டுக்குள் தப்பியோடிய எல் மென்சோவை ராணுவம் துரத்திப் பிடித்தது. சிகிச்சைக்காக ஹெலிகாப்டர் மூலம் மெக்சிகோ சிட்டிக்குக் கொண்டு செல்லும் வழியில் எல் மென்சோவின் உயிர் பிரிந்தது.

மென்சோவின் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டுள்ள நிலையில் இதில் 25 பாதுகாப்புப் படையினர் உட்பட 70-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மெக்சிகோவில் நிலவும் இந்த உள்நாட்டுக் கலவரம் மற்றும் வன்முறை, அங்கு நடைபெறவுள்ள உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளுக்கும் பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.   

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com