search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஷாரிக்"

    • செல்போனில் பேசிய அசாம் வாலிபரிடம் மங்களூரூ போலீசார் இன்று விசாரணை
    • கன்னியாகுமரி,சுசீந்திரம் பகுதியில் நாசவேலைக்கு திட்டமிட்டாரா?

    நாகர்கோவில்:

    கர்நாடகா மாநிலம் மங்களூரூ அருகே நாகுரி பகுதியில் கடந்த 19-ந்தேதி ஆட்டோவில் குண்டு வெடித்தது. இதில் ஆட்டோ டிரைவரும், அதில் வந்த ஒருவரும் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்தி ரியில் அனுமதிக்கப்பட்டனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக மங்களூரூ போலீசார் விசாரணை நடத்திய போது, ஆட்டோ வில் வெடித்தது குக்கர் வெடிகுண்டு என தெரிய வந்தது. படுகாயத்துடன் மீட்கப்பட்டவர் தான் அதனை கொண்டு வந்தவர் என்பதும் தெரியவந்தது.

    தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் அவனது பெயர் ஷாரிக் என்ற முகமது ஷாரிக் என்பதும் ஐ.எஸ்.தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பில் இருந்த அவன் ஏற்கனவே போலீஸ் கண்காணிப்பில் இருந்துள்ளான். ஆனால் கடந்த ஆகஸ்ட் மாதம் அவன் திடீரென மாயமாகி உள்ளான்.

    அதன்பிறகு கடந்த மாதம் கர்நாடக மாநிலம் திரும்பிய அவன், மங்களூரூ ரெயில் நிலையத்தை தகர்க்கும் முயற்சியில் இறங்கிய போது தான், எதிர்பாராதவிதமாக ஆட்டோவிலேயே குண்டு வெடித்திருப்பது போலீஸ் விசாரணையில் கண்டு பிடிக்கப்பட்டது.

    குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக என்.ஐ.ஏ. மற்றும் உளவுத்துறை போலீசாரும் விசாரணையில் இறங்கினர். இதற்கிடையில் முகமது ஷாரிக்கின் செல்போனை மங்களூரூ போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது அவன் பல்வேறு மாநிலங்களில் உள்ளவர்களுடன் பேசியிருப்பது தெரியவந்தது.

    அதில் நாகர்கோவிலைச் சேர்ந்த பெண் ஒருவரது எண்ணும் இருந்தது. இதுபற்றி மங்களூரூ போலீசார், குமரி மாவட்ட போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் ஆலோசனைப்படி போலீசார் விசாரணையில் இறங்கினர். நாகர்கோவிலைச் சேர்ந்த பெண் யார்? என்பதை கண்டு பிடித்து விசாரித்தனர்.

    அந்தப் பெண் தனக்கு ஒரு அழைப்பு வந்ததாகவும், அதில் பேசியவன் மொழி தனக்கு புரியவில்லை என்பதால், தங்களது துரித உணவகத்தில் பணிபுரிந்த அசாம் வாலிபரிடம் செல்போனை கொடுத்து பேசச் சொன்னதாகவும் கூறினார்.

    இதனைத் தொடர்ந்து நாகர்கோவில் கோட்டாரில் அறை எடுத்து தங்கி இருந்த அசாம் வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அவனும், பெண் கூறிய தகவலையே தெரிவித்தான். தான் அந்த செல்போனை வாங்கி பேசியதும் இணைப்பு துண்டிக்கப்பட்டு விட்டது என்றும் கூறினான். இருப்பினும் அவனிடம் போலீசார் பல்வேறு கேள்விகளை கேட்டு விசாரணை நடத்தினர். சுமார் 30 மணி நேர விசாரணைக்குப் பிறகு போலீசார், அவரை விடுவித்தனர்.

    இதற்கிடையில் ஆகஸ்ட் மாதம் மாயமான ஷாரிக், எங்கு சென்றான் என போலீசார் தீவிர விசா ரணை நடத்தியதில், அவன் தமிழகம் வந்து கோவை, மதுரை மற்றும் நாகர்கோவிலில் அறை எடுத்து தங்கியதும் அதன் பின்னர் கேரளா சென்றிருப்பதும் தெரிய வந்தது.

    இது தொடர்பாக மங்களூரூ போலீசார் மற்றும் உளவுத் துறையினர் தீவிர விசாரணையில் இறங்கினர். என்.ஐ.ஏ. அமைப்பினர் கேரளாவில் சென்று விசாரணை நடத்தினர். மங்களூரூ போலீசார் கோவை, மதுரை சென்று விசாரணை நடத்தினர். அப்போது பிரேம்ராஜ் என்ற பெயரில் விடுதியில் அறை எடுத்து ஷாரிக் தங்கியது தெரியவந்தது. அங்கு சில தகவல்களை சேகரித்த மங்களூரூ போலீசார், நேற்று குமரி மாவட்டம் வந்தனர்.

    மங்களூரூ போலீஸ் இன்ஸ்பெக்டர் நிரஞ்சன் குமார் தலைமையில் வந்த குழுவினர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத்தை சந்தித்து ஆலோசனை நடத்தினர். அப்போது தீவிரவாதி ஷாரிக், கடந்த செப்டம்பர் மாதம் 8-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை நாகர்கோவில் விடுதியில் தங்கி உள்ளதாக தெரிவித்தனர்.

    அதன்பிறகு மாவட்ட போலீசார் துணையுடன், மங்களூரூ போலீசார் விசாரணையில் இறங்கினர். அப்போது ரெயில் மூலம் நாகர்கோவில் வந்த ஷாரிக், அண்ணா பஸ் நிலையம் அருகே ஒரு விடுதியில் பிரேம்ராஜ் என்ற பெயரில் போலி முகவரி கொடுத்து அறை எடுத்து தங்கி இருப்பது தெரியவந்தது. அதன்பேரில் குறிப்பிட்ட விடுதிக்குச் சென்ற போலீசார், அங்கு ஆவணங்களை ஆய்வு செய்தனர்.

    ஷாரிக் விடுதியில் தங்கியிருந்த போது அவனை சந்தித்தது யார்? அவன் எப்போது வெளியில் சென்றான்? என்பது தொடர்பாக விடுதி மேலாளர் மற்றும் ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர். விடுதி வாடகையை பணமாக செலுத்தினானா? அல்லது அவனுக்காக யாராவது ஆன்லைன் மூலம் செலுத்தினார்களா? என பகல் 12 மணி முதல் இரவு 8 மணி வரை சுமார் 8 மணி நேரத்துக்கும் மேலாக போலீசார் விசாரணை நடத்தினர்.

    அப்போது ஷாரிக்கை விடுதிக்கு வந்து யாரும் சந்திக்கவில்லை என்பதும், ஷாரிக் 2 நாட்கள் வெளியே சென்று வந்தான் என்பதும் தெரியவந்தது. அவன் வெளியே சென்று யாரை சந்தித்தான் என போலீசார் விசாரணை நடத்திய போது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.

    அறையில் இருந்து 2 நாட்கள் வெளியே சென்ற ஷாரிக், கன்னியாகுமரி, சுசீந்திரம் ரதவீதிகளில் சுற்றித் திரிந்துள்ளான். கன்னியாகுமரிக்கு தினமும் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்து செல்லும் நிலையில் அங்கு ஏதும் சதி செயலை அரங்கேற்ற ஷாரிக் திட்டமிட்டிருக்கலாமா? என போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

    இதனால் அந்தப் பகுதிகளில் அவன் யாரை யாவது சந்தித்திருக்க லாம் என போலீசார் கருதுகின்றனர். எனவே கன்னியாகுமரி, சுசீந்திரம் பகுதிகளில் உள்ள சி.சி.டி.வி. காமிரா பதிவுகளில் ஷாரிக் யாரை சந்தித்தான் என்பதற்கான ஆதாரங்கள் கிடைக்குமா? என்று போலீசார் விசாரணை நடத்தினர். இதேபோல் ஷாரிக், நாகர்கோவிலுக்கு ரெயிலில் வந்தபோது, அவனை யாராவது வரவேற்று அழைத்துச் சென்றார்களா? என்பது தொடர்பாக நாகர்கோவில் ரெயில் நிலையத்திலும் மங்களூரூ போலீசார் விசாரணை நடத்தினர்.

    மேலும் நாகர்கோவில் துரித உணவகத்தில் வேலை பார்த்த அசாம் வாலிபருக்கு தொடர்பு இருக்கலாமா? என போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. எனவே அசாம் வாலிபரை மீண்டும் விசாரணைக்கு அழைத்தனர். அவரிடம் மங்களூரூ போலீசார் இன்று மீண்டும் விசாரணை நடத்தினர்.

    தொடர்ந்து மங்களூரூ போலீசார் கேரளா சென்றனர். அங்கும் அவர்கள் ஷாரிக் தொடர்பாக விசாரணை நடத்தினர்.

    • ஷாரிக் மதுரையில் எங்கெல்லாம் சென்றார்? என்பது குறித்து விசாரணை நடைபெறுகிறது
    • இணையதளம் மூலம் பல்வேறு தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பை ஏற்படுத்தி உள்ளார்.

    மதுரை:

    கர்நாடக மாநிலம் மங்களூருவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு குக்கர் குண்டு வெடிப்பு தாக்குதல் நடந்தது. இதில் முக்கிய மூளையாக செயல்பட்டதாக, சிவமொக்கா மாவட்டம் தீர்த்தஹள்ளியை சேர்ந்த ஷாரிக்(வயது 22) என்பவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.

    ஷாரிக்கின் மைசூர் வீடு மற்றும் உறவினர்-நண்பர்களின் வீடுகளில் அதிரடியாக சோதனை நடத்தப்பட்டது. அப்போது அங்கு ஒரு டைரி சிக்கியது. அதில் தீவிரவாதி ஷாரிக் தமிழகத்தில் கோவை, சேலம், மதுரை, நாகர்கோவில் ஆகிய 4 நகரங்களுக்கு வந்து சென்ற விவரம் உள்ளது.

    எனவே தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இது தொடர்பாக மதுரை மண்டல மத்திய உளவுத்துறை ஏஜென்சிகளுக்கு தகவல் தெரிவித்து உள்ளனர். இதன் அடிப்படையில் போலீசார் இங்கு உள்ள 40-க்கும் மேற்பட்ட அடிப்படை மதவாத அமைப்புகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் தடை செய்யப்பட்ட அமைப்புகள் உள்பட பல்வேறு இடங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் ஷாரிக் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மதுரைக்கு வந்து தங்கியிருந்தது தெரியவந்துள்ளது. அப்போது அவர் இங்கு உள்ள ஒரு வீட்டில் 2 வாரங்கள் தங்கி உள்ளார். அவரை அடிப்படை மதவாத அமைப்புகளின் நிர்வாகிகள் மற்றும் தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு உடையவர்கள் சந்தித்து பேசி உள்ளனர்.

    அப்போது தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு உடைய இளைஞர்களுக்கு ஷாரிக் மூளைச்சலவை செய்து ஏதேனும் சதி திட்டங்களை வகுத்துக் கொடுத்தாரா? என்பது பற்றிய விவரங்கள் சேகரிக்கப்படுகிறது.

    மதுரைக்கு ஷாரிக் வந்தபோது எங்கெல்லாம் சென்றார்? அவரை எத்தனை அமைப்புகளின் நிர்வாகிகள் சந்தித்து பேசினார்கள்? தனி அறையில் ரகசிய ஆலோசனை நடத்தியது யார்? அவர்கள் எந்த பகுதியைச் சேர்ந்தவர்கள்? என்பது தொடர்பாக மத்திய உளவுத் துறை ரகசிய விசாரணை நடத்தி வருகிறது.

    ஷாரிக் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட்டாளிகளுடன் அல் ஹிந்த் ஐ.எஸ். என்ற அமைப்பை பெங்களூருவில் தொடங்கி உள்ளார். இந்த அமைப்பை தமிழகத்தில் வேரூன்ற வைப்பது தொடர்பாக அவர் இணையதளம் மூலம் பல்வேறு தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பை ஏற்படுத்தி உள்ளார்.

    எனவே அல்ஹிந்த் ஐ.எஸ் இயக்கத்துடன் தொடர்பு உடையவர்கள் பட்டியலில் மதுரையைச் சேர்ந்தவர்கள் உள்ளனரா? என்பது தொடர்பாக புலனாய்வு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மைசூர் ஷாரிக் கடந்த செப்டம்பர் மாதம் கோவை வந்து சிலிண்டர் குண்டு வெடிப்பு குற்றவாளி முபின் உடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டதற்கான ஆதாரங்கள் கிடைத்து உள்ளன. இலங்கையில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதி அம்ஜத் அலி ஒரே நாளில் 7 இடங்களில் தொடர் குண்டு வெடிப்புகளை நிகழ்த்தி பரபரப்பை உருவாக்கினார்.

    அதே மாதிரியான நாச வேலைகளில் ஈடுபடுவது என்று ஷாரிக் தலைமையிலான கும்பல் முடிவு செய்து இருந்ததாக தெரிய வந்துள்ளது. இதற்காக தான் ஷாரிக் கோவை, சேலம், மதுரை, நாகர்கோவில் ஆகிய பகுதிகளுக்கு சென்றிருக்கலாம் என்று போலீசாருக்கு சந்தேகம் உள்ளது.

    இதற்கிடையே மதுரையில் புதிதாக வாஹ்தத்-இ-இஸ்லாமி ஹிந்த் என்ற அமைப்பு உருவெடுத்து உள்ளது. இது முன்னாள் சிமி நிர்வாகிகள் தோற்றுவித்தது என்று கூறப்படுகிறது. வாஹ்தத்-இ-இஸ்லாமி ஹிந்த் அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள் இப்போது தென் மாவட்டங்களில் வலுவாக வேரூன்றி திரை மறைவு வேலைகளில் ஈடுபட்டு வருவதாக மத்திய புலனாய்வு துறைக்கு சந்தேகம் உள்ளது.

    எனவே அந்த அமைப்பு ஷாரிக்கை மதுரைக்கு அழைத்து வந்ததா? என்பது தொடர்பாகவும் விசாரணை நடக்கிறது.

    • நாகர்கோவிலில் பிடிபட்ட அஜிம் ரகுமானிடம், மாவட்ட போலீசார் தீவிர விசாரணை
    • தேசிய விசாரணை முகமை (என்.ஐ.ஏ.) மற்றும் ‘ரா’ உள்ளிட்ட உளவுத்துறையினரும் கேரளாவில் முகாமிட்டு விசாரணை

    நாகர்கோவில்:

    கோவை கார் குண்டு வெடிப்பை தொடர்ந்து, கர்நாடக மாநிலம் மங்களூரூவில் உள்ள நாகுரி பகுதியில் ஆட்டோவில் குண்டு வெடித்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மங்களூரூவில் ஆட்டோவில் வெடித்தது குக்கர் வெடிகுண்டு என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. மேலும் இந்த சம்பவம் தற்செயலாக நடந்தது இல்லை. திட்டமிட்ட நாச வேைல என்பதும் கண்டறியப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து தேசிய விசாரணை முகமை மற்றும் உளவுத்துறையினரும் விசாரணையில் இறங்கினர். இதில் வெடி விபத்துக்கு உள்ளான ஆட்டோவில் படுகாயத்துடன் மீட்கப்பட்டவன் ஷாரிக் என்ற முகமது ஷாரிக் (வயது 24) என்பதும், பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புயைவன் என்பதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

    தொடர்ந்து ஷாரிக் பற்றி போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு தகவல்கள் கிடைத்தன. அவனது செல்போனை ஆய்வு செய்ததில், நாகர்கோ வில், கேரளா உள்ளிட்ட பல இடங்களுக்கு பேசியிருப்பது தெரிய வந்தது.

    இது தொடர்பாக விசா ரணை நடத்த மங்களூரூ போலீசார் நாகர்கோவில், கேரளா பகுதிகளுக்கு விரைந்தனர். அப்போது ஷாரிக், கேரளா செல்லும் போது நாகர்கோவில் வழியாக ரெயிலில் சென்றது தெரியவந்தது. இதனால் நாகர்கோவிலில் அவனுக்கு யாருடனாவது தொடர்பு இருக்கலாமா? என போலீ சார் விசாரணை நடத்தினர்.

    அப்போது நாகர்கோவில் கோட்டார் பகுதியில் உள்ள ஒரு செல்போனுக்கு ஷாரிக் பேசியது கண்டு பிடிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் அந்த செல்போன் எண் யாருடையது என்பது தொடர்பாக குமரி மாவட்ட போலீசார் துணையுடன் மங்களூரூ போலீசார் ஆய்வு செய்தனர்.

    அப்போது துரித உணவகத்தில் வேலை பார்க்கும் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த அஜிம் ரகுமான் (22) என்பவர் தான் அந்த செல்போன் எண் வைத்திருப்பவர் என தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு போலீசார், அவரை பிடித்தனர்.தொடர்ந்து அவரை ரகசிய இடம் கொண்டு சென்று விசாரணை நடத்தினர்.

    இந்த நிலையில் நாகர்கோவிலில் பிடிபட்ட அஜிம் ரகுமானிடம், குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் மேற்பார்வையில் மாவட்ட போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். சுமார் 30 மணி நேரம் அவரிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டு விசாரணை நடத்த ப்பட்டது.

    அப்போது அஜிம் ரகு மான், தான் வேலை பார்த்த கடை முதலாளி மனைவியின் செல்போ னுக்கு ஒரு அழைப்பு வந்ததாகவும், அவருக்கு மொழி புரியாத தால், செல்போனை தன்னிடம் கொடுத்த தாகவும் கூறினார்.

    மேலும் அந்த போனை வாங்கி தான் பேசுவதற்குள் 'லைன்' துண்டிக்கப்பட்ட தால், தனது செல்போனில் இருந்து அந்த எண்ணை திரும்ப அழைத்ததாகவும் அப்போது யாரும் பேசவில்லை என்றும் போலீசாரிடம் கூறியுள்ளார். அவரது தகவலின் படி குறிப்பிட்ட கடை உரிமையாளரின் மனைவியையும் போலீசார் அழைத்து விசாரித்தனர்.

    அவரும், அஜிம் ரகுமான் கூறிய தகவலையே தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து 30 மணி நேரத்துக்கு பிறகு அஜிம் ரகுமானை விடுவித்த போலீசார், விசாரணைக்கு தேவைப்பட்டால் மீண்டும் அழைப்போம், வேறு எங்கும் செல்லக் கூடாது என கூறி உள்ளனர்.

    இதற்கிடையில் கேரள மாநிலம் ஆலுவா பகுதியில் உள்ள ஒரு முகவரிக்கு ஷாரிக் பெயருக்கு பார்சல் அனுப்பப்பட்டு இருந்ததாகவும் அதனை வாங்கத் தான் ஷாரிக், நாகர்கோவில் வழியாக கேரளா சென்றதாகவும் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதுகுறித்து விசாரணை நடத்துவதற்காக மங்களூரூ போலீசார் கேரளா விரைந்தனர். இதற்கிடையில் தேசிய விசாரணை முகமை (என்.ஐ.ஏ.) மற்றும் 'ரா' உள்ளிட்ட உளவுத்துறை யினரும் கேரளாவில் முகா மிட்டு விசாரணையை தொடங்கினர்.

    இதில் கேரள மாநிலத்தில் எர்ணாகுளம், ஆலுவா உள்ளிட்ட பகுதிகளுக்கு ஷாரிக் சென்றிருப்பது தெரிய வந்தது. அவன் எதற்காக கேரளா வந்தான்? யாருடன் பேசி னான்? அவனுக்கு முகவரி கொடுத்து உதவியது யார்? என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

    ×