search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மீனவர்கள் வேலைநிறுத்தம்"

    • எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்கிறது.
    • மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    ராமேஸ்வரம்:

    கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை அவ்வப்போது கைது செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளது.

    அந்த வகையில், நேற்று கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் 8 17 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது. மீனவர்களின் விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட மீனவர்களை காங்கேசன் துறைமுகத்திற்கு இலங்கை கடற்படையினர் அழைத்துச் சென்றனர்.

    இந்நிலையில், இலங்கை கடற்படையால் கைதுசெய்யப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி ராமேஸ்வரத்தில் உள்ள விசைப்படகு மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வரும் 17ம் தேதி வரை இந்த வேலை நிறுத்தம் தொடரும் என தெரிவித்தனர்.

    • கோவளம் கடற்கரை பகுதியில் மீனவர்கள் பாதுகாப்பாக மீன்பிடி தொழில் செய்ய முடியாத நிலை நீடிக்கிறது.
    • மீனவர்களின் வேலை நிறுத்த போராட்டத்தினால் கடற்கரையில் உள்ள மீன் சந்தைகளும் மீன் வரத்து இன்றி வெறிச்சோடி காணப்படுகின்றன.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி அருகே உள்ள கோவளம் கடற்கரை கிராமம் அரபிக்கடல் ஓரம் அமைந்து உள்ளது. இங்கு மீனவர்கள் அதிக அளவில் வசித்து வருகிறார்கள். இவர்களது முக்கிய தொழில் மீன்பிடித்தொழில் ஆகும்.

    இங்கு 1000-க்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகள் மற்றும் வள்ளங்களில் மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த கடற்கரை பகுதியில் அடிக்கடி கடல் சீற்றமாகவும் கொந்தளிப்பாகவும் காணப்படுகிறது.

    இந்த கடல்சீற்றத்தின் போது ஏற்படும் ராட்சத அலையில் நாட்டுப் படகுகள் மற்றும் வள்ளங்கள் சிக்கி கவிழ்ந்து விடுகின்றன. இதனால் மீனவர்களுக்கு காயம் ஏற்படுவதோடு மட்டுமின்றி உயிர் பலியாகும் ஆபத்தான நிலையும் இருந்து வருகிறது.

    இதனால் கோவளம் கடற்கரை பகுதியில் மீனவர்கள் பாதுகாப்பாக மீன்பிடி தொழில் செய்ய முடியாத நிலை நீடிக்கிறது. இந்த சீற்றத்தை கட்டுப்படுத்தும் வகையில் ஏற்கனவே போடப்பட்டிருந்த தூண்டில் வளைவு பாலம் ராட்சத அலையினால் உடைந்து சேதம்அடைந்துவிட்டன.

    இதனால் சேதம் அடைந்த இந்த தூண்டில்வளைவு பாலத்தை சீரமைக்க வேண்டும் என்று இந்த பகுதி மீனவர்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். மீனவர்களின் இந்த கோரிக்கையை ஏற்று தற்போது இந்த தூண்டில் வளைவுப் பாலம் நீட்டிக்கப்பட்டு சீரமைக்கும் பணி நடந்து வருகிறது.

    தூண்டில்வளைவு பாலத்தில் பெரியபெரிய பாறாங்கற்களை போடாமல் சிறிய கற்களை போட்டு தூண்டில் வளைவு பாலத்தை கடலுக்குள் நேராக அமைக்காமல் வளைவாக அமைத்து வருவதால் மீனவர்களுக்கு மீண்டும் பாதுகாப்பாக மீன்பிடி தொழில் செய்ய முடியாத நிலை இருந்து வருகிறது.

    இதனால் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்களின் நாட்டுப் படகுகள் மற்றும் வள்ளங்கள் ராட்சதஅலையில் சிக்கி அடிக்கடிக வீழ்ந்து உயிர்ச்சேதம் ஏற்படும் அபாயமும் இருந்து வருகிறது. இதனால் கோவளம் பகுதி மீனவர்கள் நாடோடி போன்று ஊரு விட்டு ஊரு சென்று கன்னியாகுமரி, சின்னமுட்டம்போன்ற பகுதிகளுக்கு தங்களது நாட்டுப் படகுகள் மற்றும் வள்ளங்களை கொண்டு சென்று மீன்பிடி தொழில் செய்து வரும் அவல நிலை இருந்து வருகிறது. எனவே கோவளம் கடற்கரையில் அமைக்கப்படும் தூண்டி வளைவு பாலத்தை தரமாகவும் நீளமாகவும் அமைத்து தர வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கோவளம் பகுதியைச் சேர்ந்த சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் இன்று காலை கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

    இதனால் இங்கு உள்ள நூற்றுக்கணக்கான நாட்டுப் படகுகள் மற்றும் வள்ளங்கள் கடற்கரையில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. மீனவர்களின் வேலை நிறுத்த போராட்டத்தினால் கடற்கரையில் உள்ள மீன் சந்தைகளும் மீன் வரத்து இன்றி வெறிச்சோடி காணப்படுகின்றன.

    • ராமேசுவரம் மீனவர்கள் சவுதி அரேபியா, துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்து வருகிறார்கள்.
    • ராமேசுவரத்தை சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் இன்று நள்ளிரவு முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர்.

    ராமேசுவரம்:

    ராமேசுவரத்தில் இருந்து 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் வாரத்தில் 3 நாட்கள் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்கிறார்கள். இதேபோல் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்படகு மீனவர்களும் கடலுக்கு சென்று வருகின்றனர்.

    இதில் ராமேசுவரம் மீனவர்களுக்கு பல டன் கணக்கில், பல்வேறு வகையான மீன்கள் கிடைக்கின்றன. உள்ளூர் தேவைகளுக்கும், வெளி மாநிலங்களுக்கும் இங்கிருந்து மீன்கள் பதப்படுத்தி அனுப்பி வைக்கப்படுகிறது. மேலும் ராமேசுவரம் மீனவர்கள் சவுதி அரேபியா, துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்தும் வருகிறார்கள்.

    அவ்வாறு மீனவர்களிடம் இருந்து மீன்களை வாங்கி ஏற்றுமதி வணிகம் செய்துவரும் நிறுவனங்கள் போதிய விலை தருவதில்லை என்ற புகார் எழுந்துள்ளது. அந்த நிறுவனங்கள் தங்களுக்குள் ஒரு கூட்டமைப்பை ஏற்படுத்திக்கொண்டு விலையை நிர்ணயம் செய்து கொள்கிறது.

    இதனால் மீனவர்கள் பெரும் பாதிப்பிற்கு ஆளாகி வருகின்றனர். பல்வேறு சிரமங்களுக்கு இடையே மீனவர்கள் பிடித்து வரும் விலை உயர்ந்த ஏற்றுமதி தரம் வாய்ந்த மீன்களுக்கு குறைந்த விலை கிடைப்பதால் வாழ்வாதாரம் நலிவடைந்து விட்டதாகவும், உரிய விலை கிடைக்க தொடர்ந்து வலியுறுத்தி வந்தபோதிலும் ஏற்றுமதி நிறுவனங்கள் கண்டுகொள்ளவில்லை என்றும் பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்து வந்தனர்.

    இதனை கண்டித்து ராமேசுவரத்தை சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் இன்று நள்ளிரவு முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர். ஏற்கனவே மீன்பிடி தடைக்காலத்திற்கு பிறகு கடலில் ஏற்பட்ட மாறுபட்ட நீரோட்டத்தால் மீன்கள் வரத்தும் குறைந்துள்ள நிலையில் மீனவர்கள் அறிவித்துள்ள இந்த காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • நெல்லை மாவட்டத்தில் மட்டும் சுமார் 10 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.
    • கடந்த 25 வருடங்களாக தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை வைத்து வருகிறோம்.

    திசையன்விளை:

    தமிழகத்தில் பாரம்பரியமாக நாட்டு படகு மூலம் மீன் பிடிக்கும் ஒரே மாவட்டம் நெல்லை மாவட்டம் தான். இங்கு ராதாபுரம் தாலுகாவில் கூட்டப்புளி, பெருமணல், பஞ்சல், இடிந்தகரை, தோமையார்புரம், கூத்தங்குழி, உவரி, கூட்டப்பனை, கூடுதாழை உள்ளிட்ட 10 மீனவ கிராமங்கள் உள்ளன.

    இதில் கூட்டப்புளி மற்றும் கூடுதாழை ஆகிய இரு மீனவ கிராமங்களில் தூண்டில் வளைவு கிடையாது. இதனால் கடல் அலை இந்த கிராமங்களை பாதித்து வருகிறது. மீனவர்களும் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து வருகின்றனர் என்று புகார்கள் எழுந்து வருகிறது.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக கூடுதாழை மீனவ கிராமத்தில் கடல் அரிப்பின் வேகம் அதிகரித்து கடற்கரை ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த மீனவர்களின் மீன்பிடி வலைகள், மீன்பிடி உபகரணங்கள், மீன்பிடி என்ஜீன்கள் ஆகியவை கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டன.

    இந்த கிராமங்களில் உள்ள சுமார் 300-க்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். இதனால் கூடுதாழையில் கடல் அரிப்பை தடுக்க தூண்டில் வளைவு அமைக்க வலியுறுத்தி அப்பகுதி மீனவர்கள் கடந்த 11-ந்தேதியில் இருந்து பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

    அதன் தொடர்ச்சியாக இன்று 10-வது நாளாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் உண்ணாவிரதத்திலும் இருக்க போவதாக அறிவித்துள்ளனர். இவர்களுக்கு ஆதரவாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த நாட்டு படகு மீனவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    நெல்லை மாவட்டத்தில் மட்டும் சுமார் 10 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. தூத்துக்குடி மாவட்டத்திலும் கூடுதாழை மீனவர்களுக்கு ஆதரவாக புன்னக்காயல், ஆலந்தழை, அமலிநகர், பெரியதாழை, குலசேகரபட்டினம், மணப்பாடு பகுதிகளில் வசிக்கும் நாட்டுப்படகு மீனவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மீனவர்கள் கூறுகையில், கடந்த 25 வருடங்களாக தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை வைத்து வருகிறோம். தற்பொழுது 100 அடி வரை கடல் ஊருக்குள் புகுந்து உள்ளதால் மணல்மேடுகள் மட்டுமே உள்ளது.

    இது இன்னும் ஓரிரு நாட்களில் சரிந்து விடும் என்றும் இதனால் பல வீடுகள் கடலில் மூழ்கும் அபாயத்தில் உள்ளது என்றனர்.

    • ராமேசுவரம் பகுதியில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வரும் 5 ஆயிரம் மீனவர்கள் வேலை நிறுத்தத்தால் வருமானத்தை இழந்துள்ளனர்.
    • மீன்பிடி சார்ந்த தொழிலில் ஈடுபடும் 15 ஆயிரம் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    ராமேசுவரம்:

    ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் மற்றும் பாம்பன் பகுதிகளில் வசிக்கும் மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். 820 விசைப்படகுகள் மூலம் மீனவர்கள் இந்த தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடிக்க செல்லும்போது இலங்கை கடற்படை அத்துமீறி வந்ததாக கைது செய்து வருவது வாடிக்கையாக உள்ளது.

    இந்த நிலையில் கடந்த 5-ந்தேதி 2 படகுகளில் ராமேசுவரத்தைச் சேர்ந்த 15 மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் கச்சத்தீவு அருகில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் அவர்களை கைது செய்து மன்னார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    மீனவர்கள் சென்ற விசைப்படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்து வைத்துள்ளது.

    ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்பு 6 மீனவர்கள் மீன்பிடிக்க சென்றபோது அவர்களையும் இலங்கை கடற்படை சிறைபிடித்துச் சென்றது. தொடர்ந்து ராமேசுவரம் மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடித்து வருவதால் அச்சத்துடன் மீன்பிடிக்கச் செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

    தற்போது இலங்கை கடற்படை பறிமுதல் செய்துள்ள 29 விசைப்படகுகள் மீட்கப்படாமல் உள்ளது. இதனால் அந்த விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இது தொடர்பாக ராமேசுவரம் மீனவர் சங்கத்தினர் நேற்று ஆலோசனை கூட்டம் நடத்தினர். அதில் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி இன்று (7-ந்தேதி) முதல் வேலை நிறுத்த போராட்டம் நடத்துவது என்றும், நாளை (8-ந் தேதி) தங்கச்சிமடத்தில் ஆர்ப்பாட்டம் செய்வது என்றும் முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி இன்று ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பெரிய விசைப்படகுகள் கடலுக்கு செல்லவில்லை. சின்ன விசைப்படகுகள் மட்டும் அனுமதி பெற்று மீன்பிடிக்க சென்று வருகின்றன.

    ராமேசுவரம் பகுதியில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வரும் 5 ஆயிரம் மீனவர்கள் இந்த வேலை நிறுத்தத்தால் வருமானத்தை இழந்துள்ளனர். மேலும் மீன்பிடி சார்ந்த தொழிலில் ஈடுபடும் 15 ஆயிரம் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று வேலை நிறுத்தம் காரணமாக ரூ.6 கோடி வரை மீன் வர்த்தகம் பாதிக்கப்படும் என்று மீனவர்கள் தெரிவித்தனர்.

    இந்த போராட்டம் தொடர்பாக பெரிய விசைப்படகு மீனவர் சங்கத்தினர் கூறும்போது, இலங்கை கடற்படை ஏற்படுத்தும் தடை காரணமாக ஆண்டுக்கு 20 நாட்கள் முதல் 30 நாட்கள் வரையில் தான் மீன்பிடிக்க செல்கின்றோம். இதனால் எங்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக மாறியுள்ளது.

    எனவே எங்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கும் வகையிலும், சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை உடனடியாக விடுவிக்கவும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை பெற்றுத்தரவும் மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • மீன்கள் கிலோ ரூ.400 வரை விற்பனையாகி வந்த நிலையில் தற்போது விலை சரிந்துள்ளது.
    • புரட்டாசி மாதம் என்பதால் மீன்விலை மந்தநிலையை அடைந்துள்ளது.

    ராமேசுவரம்:

    ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பகுதியில் மீன் பிடி முக்கிய தொழிலாக உள்ளது. இங்கிருந்து 110 விசைப்படகுகள் தினமும் மீன் பிடிக்கச் செல்கின்றனர். 1000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் தென்கடல் பகுதிக்கு சென்று ஆழ்கடலில் மீன் பிடித்து வருவார்கள்.

    இவர்கள் பிடித்து வரும் மீன்கள் சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும். ஒரு விசைப்படகில் 1 டன் முதல் 1.50 டன் வரை மீன்கள் பிடிபடும். முரல் மற்றும் மருத்துவ குணங்கள் கொண்ட சில மீன்கள் வியாபாரிகளால் வாங்கிச் செல்லப்பட்டு வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படும்.

    இந்த மீன்கள் கிலோ ரூ.400 வரை விற்பனையாகி வந்த நிலையில் தற்போது விலை சரிந்துள்ளது. புரட்டாசி மாதம் என்பதால் மீன்விலை மந்தநிலையை அடைந்துள்ளது.

    இந்தநிலையில் மீன்களுக்கு சரியான விலை கிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டதாலும், வெளியூர் வியாபாரிகள் வருகை குறைந்துவிட்டதாலும் பாம்பன் பகுதி மீனவர்கள் இன்று (2-ந்தேதி)முதல் வேலை நிறுத்தம் அறிவித்துள்ளனர். இதனால் பாம்பன் மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லவில்லை.

    மீனவர்களின் வேலைநிறுத்தம் காரணமாக நேரடியாக 1000 மீனவர்களும், மீன் சார்ந்த தொழிலில் ஈடுபடும் 2 ஆயிரம் தொழிலாளர்களும் வேலை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த வேலை நிறுத்தம் காரணமாக தினமும் ரூ.1 கோடி வரை வர்த்தகம் பாதிக்கும் என்று மீனவர்கள் தெரிவித்தனர்.

    இது பற்றி பாம்பன் பகுதி மீனவர்கள் கூறுகையில், மீன்களுக்கு நல்ல விலை கிடைத்தால் மட்டுமே நாங்கள் தொழில் செய்ய முடியும். மீன்களுக்கு விலை இல்லாமல் நாங்கள் மீன் பிடித்து வந்தால் நஷ்டமே ஏற்படும். மீண்டும் மீன் விலை உயர்ந்த பின்னரே மீன்பிடிக்க செல்லலாம் என்று முடிவு செய்துள்ளோம் என்றனர்.

    • ராமேசுவரம் பஸ் நிலையம் முன்பு மீனவர் சங்கங்கள் சார்பில் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட ராமேசுவரம் மீனவர்கள் 6 பேரையும் உடனே விடுதலை செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • இதில் கைது செய்யப்பட்ட 6 மீனவர்களின் குடும்பத்தினரும் கலந்து கொண்டனர்.

    ராமேசுவரம்:

    ராமேசுவரம் பகுதியில் இருந்து மீன்பிடிக்க செல்லும் மீனவர்களை இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி வந்து மீன் பிடிப்பதாக கூறி கைது செய்யும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது.

    இதேபோல் கடந்த 20-ந்தேதி ராமேசுவரத்தில் இருந்து ஏராளமான மீனவர்கள் விசைப்படகுகளில் சென்று மீன்பிடித்து கொண்டிருந்தனர். சில மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன் பிடித்தனர்.

    அப்போது அந்த வழியாக ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் அங்கு மீன் பிடித்து கொண்டிருந்த ராமேசுவரத்தை சேர்ந்த அந்தோணி, மடகு பிச்சை, பாலமுருகன், தங்க பாண்டி, அர்ஜூனன், ராஜா ஆகிய 6 மீனவர்களையும், அவர்கள் சென்ற விசைப்படகையும் சிறைபிடித்தனர். எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி கைது செய்யப்பட்ட மீனவர்கள் 6 பேரும், கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    அந்த மீனவர்கள் 6 பேரையும், அவர்களது விசைப்படகையும் விடுவிக்கக்கோரி ராமேசுவரம் மீனவர்கள் நேற்று வேலைநிறுத்த போராட்டம் நடத்தினர்.

    இதை தொடர்ந்து இன்று ராமேசுவரம் பஸ் நிலையம் முன்பு மீனவர் சங்கங்கள் சார்பில் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட ராமேசுவரம் மீனவர்கள் 6 பேரையும் உடனே விடுதலை செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கைது செய்யப்பட்ட 6 மீனவர்களின் குடும்பத்தினரும் கலந்து கொண்டனர்.

    இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மீனவர் சங்க தலைவர் சகாயம் தலைமை தாங்கினார். இதில் ஏராளமான மீனவர்கள் கலந்து கொண்டு இலங்கை கடற்படையை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

    போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர் சங்கத்தினர் கூறும்போது, இலங்கை கடற்படை கைது செய்த மீனவர்களை விடுதலை செய்ய மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்த விசைப்படகுகளையும் மீட்டு தர வேண்டும்.

    இலங்கை கடற்படை தாக்குதலில் சேதமான படகுகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும், மீனவர்களுக்கு வழங்கப்படும் மானிய டீசலுக்கு விதிக்கப்படும் ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவித்தனர்.

    • ராமேசுவரம் பகுதியை சேர்ந்த 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் இன்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
    • இதன்காரணமாக 800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் ராமேசுவரம் துறைமுகம் மற்றும் அதனை சுற்றி உள்ள கரையோர பகுதிகளில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டன.

    ராமேசுவரம்:

    கச்சத்தீவு அருகே மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களை எல்லை தாண்டியதாக கூறி இலங்கை கடற்படையினர் சிறைபிடிக்கும் சம்பவங்கள் தொடர் கதையாக நடந்து வருகின்றன.

    இந்த நிலையில் கடந்த 20-ந்தேதி ராமேசுவரத்தில் இருந்து 400-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சென்ற 1500 மீனவர்கள் கச்சத்தீவு அருகே நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தனர்.

    அவர்களில் ராமேசுவரத்தை சேர்ந்த அந்தோணி, மடகு பிச்சை, பாலமுருகன், தங்க பாண்டி, அர்ஜூனன், ராஜா ஆகிய 6 மீனவர்களையும், அவர்களது விசைப்படகையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர். எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி கைது செய்யப்பட்ட மீனவர்கள் 6 பேரும், கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர்.

    அந்த மீனவர்கள் 6 பேரையும், அவர்களது விசைப்படகையும் விடுவிக்கக்கோரி ராமேசுவரம் மீனவர்கள் இன்று வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ராமேசுவரம் பகுதியை சேர்ந்த 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் இன்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

    இதன்காரணமாக 800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் ராமேசுவரம் துறைமுகம் மற்றும் அதனை சுற்றி உள்ள கரையோர பகுதிகளில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டன. மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் மீன் தொழிலை நம்பியுள்ள 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் இன்று வேலையின்றி இருந்தனர்.

    • பரங்கிப்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள 30-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லவில்லை.
    • வெளிமாவட்ட மீனவர்கள் வந்து சுருக்குமடி வலையை பயன்படுத்துவதற்கு எச்சரிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அவர்கள் இந்த போராட்ட த்தில் ஈடுபட்டனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் 49 மீனவ கிராமங்கள் உள்ளது. இந்த தொழிலை நம்பி சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் உள்ளனர். இந்த மீனவர்கள் விசைப்படகு, பைபர் படகு, கட்டு மரங்களில் கடலுக்கு சென்று மீன் பிடித்து வருகிறார்கள்.

    இதனிடையே கடலில் சுருக்கு மடி வலையை பயன்படுத்தி மீன் பிடிக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

    இதற்கு ஒருதரப்பை சேர்ந்த மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். என்றாலும் மாவட்ட நிர்வாகம் இந்த விஷயத்தில் கணடிப்பாக உள்ளதால் சுருக்குமடி வலையை பயன்படுத்தக்கூடாது என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இதற்கிடையே வெளி மாவட்ட மீனவர்கள் சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன் பிடிப்பதாக கடலூர் மாவட்ட மீனவர்கள் கருதுகிறார்கள். இந்த வலையை பயன்படுத்தினால் மீன்வளம் அழியும் என்று அவர்கள் மாவட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்துள்ளனர்.

    இதற்கிடையில் பரங்கிப்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள 30-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லவில்லை. அவர்கள் சுருக்குமடி வலை பயன்படுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும். வெளிமாவட்ட மீனவர்கள் வந்து சுருக்குமடி வலையை பயன்படுத்துவதற்கு எச்சரிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அவர்கள் இந்த போராட்ட த்தில் ஈடுபட்டனர்.

    இதனால் பரங்கிப்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள மீன்பிடி தளங்கள் வெறிச்சோடி காணப்படுகிறது.

    அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்தும் மீனவ கிராமங்களில் ஊர்கூட்டம் நடத்த தயாராக உள்ளனர். மேலும் மீனவர்கள் போராட்டத்தால் எந்தவித அசம்பாவித சம்பவமும் நடைபெறாமல் இருக்க மீனவ கிராமங்களில் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.

    ×