search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாமல்லபுரம்"

    • 7 டி.எக்ஸ் டிஜிட்டல் தொழில் நுட்பத்துடன் கூடிய காட்சியரங்கம் விரைவில் கட்டப்பட உள்ளது.
    • நிகழ்ச்சியில் திருப்போரூர் எம்.எல்.ஏ எஸ்.எஸ்.பாலாஜி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    மாமல்லபுரம்:

    கோவளம் அடுத்த முட்டுக்காட்டில் தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டு கழகத்தின் படுகு குழாம் உள்ளது. இங்கு ரூ.50லட்சம் செலவில் புதிய சுகாதார மையம், குழந்தைகள் விளையாட்டு மையம், கழிவுநீர் சுத்திகரிப்பு, காற்றில் இருந்து குடிநீர் உற்பத்தி உள்ளிட்டவை அமைக்கப்பட்டது. இதன் தொடக்க விழா நடைபெற்றது. இதில் சுற்று லாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு திறந்து வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மாமல்லபுரத்தில் உள்ள புரான சின்னமான அர்ச்சுனன் தபசு அருகில் ரூ.5 கோடி மதிப்பில், 7 டி.எக்ஸ் டிஜிட்டல் தொழில் நுட்பத்துடன் கூடிய காட்சியரங்கம் விரைவில் கட்டப்பட உள்ளது.

    இதில் மாமல்லபுரம் புராதன சின்னங்களின் வரலாறு குறித்து "3டி லேசர்" ஒளி, ஒலி காட்சி ஒளிபரப்பு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் திருப்போரூர் எம்.எல்.ஏ எஸ்.எஸ்.பாலாஜி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • வரும் நாட்களில் மற்ற இடங்களும் மின்னொளியில் ரசிக்க ஏற்பாடுகள் செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
    • இரவு 9மணிவரை ஏராளமான சுற்றுலா பயணிகள் மின்னொளியில் கடற்கரை கோவிலை பார்த்து ரசித்தனர்.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் சிறந்த சுற்றுலா தலமாக உள்ளது. தினந்தோறும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்கள் மற்றும் வெளி நாட்டு சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் இங்குள்ள புராதன சின்னங்களான கடற்கரை கோவில், ஐந்துரதம், அர்சுணன்தபசு, வெண்ணை உருண்டை பாறை உள்ளிட்ட இடங்களை பார்த்து ரசித்து செல்கிறார்கள்.

    புராதன சின்னங்களை மின்னொளியில் இரவிலும் பார்வையிட ஏற்பாடு செய்யவேண்டும் என்று சுற்றுலா பயணிகள் தொடர்ந்து மத்திய தொல்லியல்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இதைத்தொடர்ந்து நேற்று முதல்(15-ந்தேதி) புராதன சின்னங்களை இரவில் மின்னொளியில் ரசிக்கலாம் என்று மத்திய தொல்லியல் துறையினர் அறிவித்து இருந்தனர். இரவு 9மணி வரை அலங்கார மின்னொளியுடன், புராதன சின்னங்கள் திறந்திருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது.

    இதைத்தொடர்ந்து நேற்று இரவு புராதன சின்னங்களான கடற்கரை கோவில், ஐந்துரதம், அர்சுணன்தபசு, வெண்ணை உருண்டை பாறை பகுதிகளை மின்னொளியில் ரசிக்கலாம் என எதிர் பார்த்து ஏராளமான சுற்றுலா பயணிகள் மாமல்லபுரம் வந்தனர். ஆனால் கடற்கரை கோவிலை மட்டும் மின்னொளியில் சுற்றுலா பயணிகள் ரசிக்க அனுமதி வழங்கப்பட்டது. மற்ற இடங்களில் மின்னொளி ஏற்பாடுகள் செய்யப்பட வில்லை. பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு பணிகளுக்கான ஆட்கள் பற்றாக்குறை காரணமாக மத்திய தொல்லியல்துறை கடற்கரை கோவிலை மட்டும் முதல் கட்டமாக மின்னொளியில் சுற்றுலா பயணிகள் பார்வையிட அனுமதி அளித்து உள்ளதாக தெரிகிறது.

    வரும் நாட்களில் மற்ற இடங்களும் மின்னொளியில் ரசிக்க ஏற்பாடுகள் செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். புராதன சின்னங்களில் இரவு மின்னொளி காட்சியை அறிந்து விடுதிகளில் தங்கியிருந்த உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் மாலையில் கடற்கரை கோவில் வளாகத்தில் திரண்டு இருந்தனர். உள்நாட்டவர்களுக்கு ரூ.40, வெளிநாட்டவர்களுக்கு- ரூ.600-ம் கட்டணமாக வசூலிக்கப்பட்டது. இரவு 9மணிவரை ஏராளமான சுற்றுலா பயணிகள் மின்னொளியில் கடற்கரை கோவிலை பார்த்து ரசித்தனர். செல்போன்களில் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

    இதுகுறித்து சுற்றுலா பயணிகள் கூறும்போது, கடற்கரைகோவில் போல் ஐந்துரதம், அர்சுணன்தபசு, வெண்ணை உருண்டை பாறை பகுதிகளும் மின்னொளியில் காட்சியளித்தால் கூடுதல் மகிழ்ச்சியாக இருந்திருக்கும் என்றனர்.

    • 2019ல் பிரதமர் மோடியும், சீன அதிபரும் மாமல்லபுரம் வந்த போது மின்னொளியால் அலங்கரிக்கப்பட்டது.
    • சுற்றுலா பயணிகள் தொல்லியல் துறை உயர் அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்து வந்தனர்.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களான கடற்கரை கோயில், ஐந்து ரதம், அர்சுன் தபசு, வெண்ணெய் உருண்டை பாறை, பகுதிகளை இரவிவிலும் பார்த்து ரசிப்பதற்காக, கடந்த 2019ல் பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜின்பிங்கும் மாமல்லபுரம் வந்த போது மின்னொளியால் அலங்கரிக்கப்பட்டது. இரவு 9 மணிவரை சுற்றுலா பயணிகள் உள்ளே சென்று பார்க்க அனுமதியும் வழங்கப்பட்டது. பின்னர் ஓரிரு வாரத்தில் பராமரிப்பு இல்லாமல், பாதுகாப்பு கருதி நிறுத்தப்பட்டது.

    இந்த இரவு ஒளிக்காட்சி குறித்து அறிந்து உள்நாட்டு, வெளிநாட்டு பயணிகள் மாலை நேரத்தில் வந்தனர். ஆனால் அவர்கள் ஒளிக்காட்சியை பார்க்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

    அதன்பின்னர், மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட், ஜி-20 சர்வதேச கூட்டங்கள், காத்தாடி திருவிழா, அலைச்சறுக்கு என சர்வதேச நிகழ்ச்சிகள் நடைபெற்றதால், நிகழ்ச்சிக்கு வரும் வெளிநாட்டு பிரதிநிதிகள் புராதன சின்னங்களை இரவிலும் பார்வையிட மீன்டும் அலங்கார ஒளி விளக்குகள் அமைக்கப்பட்டன. இதை சுற்றுலா பயணிகளும் கண்டு ரசிக்கும் வகையில் இரவு 9 மணி வரை, ஒளிவிளக்குகளை எரியவிட்டு, உள்ளே அனுமதிக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் தொல்லியல் துறை உயர் அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்து வந்தனர்.

    இதையடுத்து வரும் 15ஆம் தேதியில் இருந்து இரவு 9 மணி வரை அலங்கார மின்னொளியுடன், புராதன சின்னங்கள் திறந்திருக்கும் என தொல்லியல்துறை தெரிவித்துள்ளது. இதேபோல் கங்கைகொண்ட சோழபுரம், தஞ்சாவூர், சிவகங்கை, திருச்சி மற்றும் வெளி மாநிலம் என 14 இடங்களுக்கு 9 மணிவரை அனுமதி வழங்கியுள்ளது.

    • சிறப்பு அதிகாரி சால்வ்குர்ணி குழுவினர் அனைத்து புராதன சின்னங்களிலும் விளக்குகளை எரிய விட்டு பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
    • விடுமுறை நாட்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மின்னொளியில் சுற்றுலா பயணிகள் பார்க்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் புராதன சின்னம் பகுதிக்கு கடந்த 2019-ம் ஆண்டு சீன அதிபரும், இந்திய பிரதமர் மோடியும் வந்தபோது, இங்குள்ள புராதன சின்னங்களான கடற்கரை கோவில், அர்ச்சுனன்தபசு, வெண்ணெய் உருண்டை பாறை, ஐந்துரதம் பகுதிகளை இரவிலும் பார்த்து ரசிக்கும் வண்ணம், அலங்கார மின்விளக்கு அமைக்கப்பட்டது. பின்னர் ஓரிரு வாரங்களில் அவை நிறுத்தப்பட்டது.

    இதற்கிடையே புராதன சின்னங்களை பார்வையிட ஜி-20 மாநாட்டு வெளிநாட்டு பிரதிநிதிகள் மாமல்லபுரம் வந்த போது அவர்கள் ரசிக்க மின் விளக்குகள் பழுது நீக்கி கூடுதல் விளக்குகள் அமைக்கப்பட்டது.

    இதையடுத்து புராதன சின்னங்களை பார்வையாளர்களுக்கு தொடர்ந்து தினமும் குறிப்பிட்ட நேரம் வரை அல்லது விடுமுறை நாட்களில் மட்டும் இரவு நேரத்தில் மின்னொளியில் பார்த்து ரசிக்க தொல்லியல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இதையடுத்து நேற்று இரவு டெல்லியில் இருந்து மாமல்லபுரம் வந்த தொல்லியல்துறை சிறப்பு அதிகாரி சால்வ்குர்ணி குழுவினர் அனைத்து புராதன சின்னங்களிலும் விளக்குகளை எரிய விட்டு பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் அதற்கான மின் கட்டண விபரம், கூடுதல் காவலாளி நியமனம், தொடர் பாதுகாப்பு, நுழைவு கட்டணம் உள்ளிட்ட விபரங்களை கேட்டரிந்து சென்றார். எனவே விரைவில் இரவிலும் மாமல்லபுரம் புராதன சின்னங்களை தினமும் அல்லது விடுமுறை நாட்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மின்னொளியில் சுற்றுலா பயணிகள் பார்க்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • கடற்கரை பகுதியில் குளிக்க வேண்டாம் என்று போலீசார் அறிவுறுத்தியும் பலர் ஆபத்தை உணராமல் கடலில் குளித்ததையும், காண முடிந்தது.
    • ரூ.40 நுழைவு சீட்டு வாங்குவதற்காக தொல்லியல் துறையின் கட்டண கவுண்ட்டர்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

    மாமல்லபுரம்:

    செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் நகரம் சர்வதேச அளவில் யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்ட உலக புராதன நகரமாக திகழ்வதால் நாள்தோறும் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.

    இந்த நிலையில் தற்போது கோடைகாலம் மற்றும் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டதை முன்னிட்டு மாமல்லபுரத்திற்கு உள்நாட்டு பயணிகள் வருகை அதிகரித்து காணப்படுகிறது.

    நேற்று கோடை விடுமுறையின் ஞாயிற்றுகிழமை என்பதாலும், இன்னும் 2 வாரங்களில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் அரசு பஸ்களிலும் சுற்றுலா வாகனங்களிலும் கூட்டம், கூட்டமாக வந்து இருந்ததை காண முடிந்தது.

    கடற்கரை கோவில் ஐந்தரதம், வெண்ணை உருண்டைக்கல் போன்ற புராதன பகுதிகள் மக்கள் கூட்டத்தால் களைகட்டி காணப்பட்டது. அங்குள்ள பாறை சிற்பங்களை ரசித்து பார்த்து புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

    கடற்கரை பகுதியில் குளிக்க வேண்டாம் என்று போலீசார் அறிவுறுத்தியும் பலர் ஆபத்தை உணராமல் கடலில் குளித்ததையும், காண முடிந்தது. மேலும் கடற்கரையில் பாறைகள் உள்ள ஆபத்தான பகுதிகளில் குளிக்க வேண்டாம் என்று பொதுமக்களிடம் போலீசார் அவ்வப்போது எச்சரித்து, அறிவுறுத்தி கொண்டே இருந்தனர். குறிப்பாக பள்ளிகள் மூடப்பட்டதால் தங்கள் பெற்றோர்களுடன் கோடை விடுமுறையை கழிக்க வந்த சிறுவர், சிறுமிகளும் பள்ளி விடுமுறை விடப்பட்ட உற்சாகத்தில் கடலில் மகிழ்ச்சியுடன் குளித்ததை காண முடிந்தது.

    ரூ.40 நுழைவு சீட்டு வாங்குவதற்காக தொல்லியல் துறையின் கட்டண கவுண்ட்டர்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. பல மணி நேரம் வரிசையில் காத்திருந்து நுழைவு சீட்டு வாங்கி சென்றதை காண முடிந்தது. கடற்கரையில் திருட்டு சம்பவங்களை தடுக்க மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் உள்ளிட்ட ஏராளமான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். பயணிகள் வருகை அதிகமிருந்த காரணத்தால் நேற்று சுற்றுலா வாகனங்களால் மாமல்லபுரத்தில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.

    கிழக்கு ராஜ வீதி, மேற்கு ராஜ வீதி, கடற்கரை சாலை பகுதியில் கடும் நெரிசலில் வாகனங்கள் ஊர்ந்து சென்றன. இதனால் சாலையில் சென்ற வாகனங்களை நெரிசலில் சிக்கிவிடாமல் இருக்க மாமல்லபுரம் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஷ் தலைமையில் போக்குவரத்து காவலர்கள் மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலை பகுதியிலும், மாமல்லபுரம் நகர பகுதியிலும் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தியதை காண முடிந்தது. மாமல்லபுரம் நகர பகுதியில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வரை ஒரு கிலோ மீட்டர் தூரம் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. மாமல்லபுரம் சாலவான்குப்பம் பகுதியில் உள்ள புலிக்குகை புராதன சின்னத்திலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.

    • மாமல்லபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட சிற்பக்கூடங்கள் உள்ளது.
    • மாமல்லபுரம் சர்வதேச கற்சிற்ப பகுதி என அறிவிக்கபட்டு அதற்கான புவிசார் குறியீடும் வழங்கப்பட்டு உள்ளது.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் சிறந்த சுற்றுலா தலமாக விளங்குகிறது. இங்குள்ள புராதன சிற்பக்கலை சின்னங்களை சுற்றுலா பயணிகள் ஆச்சரியத்துடன் ரசித்து செல்கிறார்கள்.

    மாமல்லபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட சிற்பக்கூடங்கள் உள்ளது. இதில் பல சிற்ப கூடங்கள் போக்குவரத்து மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு இடையூறாக கற்களை சாலை ஓரம் மற்றும் வீதிகளில் போட்டு அறுத்து வருகிறார்கள். இதனால் தூசு பறந்து சுற்றுலா பயணிகள் மற்றும் அவ்வழியே செல்பவர்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

    மாமல்லபுரம் சர்வதேச கற்சிற்ப பகுதி என அறிவிக்கபட்டு அதற்கான புவிசார் குறியீடும் வழங்கப்பட்டு உள்ளது. தற்போது சர்வதேச விளையாட்டு போட்டிகள், கருத்தரங்கங்கள், மாநாடுகள் மற்றும் வெளிநாட்டு தலைவர்கள் அதிகளவில் வந்து செல்லும் முக்கிய சுற்றுலா பகுதியாக மாறி வருகிறது.

    இதைத்தொடர்ந்து சிற்பக்கூடங்களை ஒழுங்குபடுத்தும் விதமாக மத்திய-மாநில அரசுகள் பங்களிப்புடன் சிற்ப பூங்கா அமைக்க அரசு முடிவு செய்தது.

    கைவினைத் தொழில் மேம்பாடு, சிற்பக்கூடங்கள் ஒழுங்குமுறை கருதி சிட்கோ நிறுவனம் மாமல்லபுரம் அடுத்த கடம்பாடி கிழக்கு கடற்கரை சாலையில் "சிட்கோ" சிற்ப பூங்கா அமைக்க இடம் தேர்வு செய்து உள்ளது. இது 19 ஏக்கர் நிலப்பரப்பில், 23கோடி செலவில் அமைய உள்ளது.இதற்கான முதல்கட்ட பணியாக நில அளவை தொடங்கி நடந்து வருகிறது. சிற்பபூங்கா அமைய உள்ளதால் மாமல்லபுரம் சிற்பக்கலை சிற்பிகள், ஸ்தபதிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

    • சுற்றுலா பயணிகள் உள்ளே சென்று பார்க்க முடியாத நிலை ஏற்பட்டது.
    • மாமல்லபுரம் மற்றும் சுற்று வட்டார பகுதியில் பூமியின் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசுகிறது.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரத்தில் நேற்று நள்ளிரவில் இருந்து இன்று காலை வரை கனமழை பெய்தது. மழை காரணமாக, கிருஷ்ணர் மண்டபம் வளாகம் முழுவதும் மழைநீர் தேங்கியது. இதனால் சுற்றுலா பயணிகள் உள்ளே சென்று பார்க்க முடியாத நிலை ஏற்பட்டது.

    இதேபோல் ஐந்து ரதம் நுழைவு வாயில், கலங்கரை விளக்கம் சாலை, கடற்கரை சாலை பகுதிகளிலும் மழைநீர் தேங்கி நின்றது இதனால் சுற்றுலா பயணிகள் சிரமம் அடைந்தனர். வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்த நிலையில், இந்த கனமழையால் மாமல்லபுரம் மற்றும் சுற்று வட்டார பகுதியில் பூமியின் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசுகிறது.

    • உலக பாரம்பரிய தினத்தை முன்னிட்டு அனைத்து சுற்றுலா பயணிகளும் இலவசமாக பார்க்கலாம் என தொல்லியல்துறை அறிவித்தது.
    • மாமல்லபுரம் புராதன சின்னங்களை பார்க்க வந்த சுற்றுலா பயணிகள் அனைவரும் கட்டணமின்றி அனுமதிக்கப்பட்டனர்.

    மாமல்லபுரம்:

    உலகின் பாரம்பரிய நினைவு சின்னங்களை பாதுகாத்து அதை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, யுனெஸ்கோ அமைப்பினர் ஆண்டுதோறும் ஏப்ரல் 18-ந் தேதியை உலக பாரம்பரிய தினமான கடைபிடித்து வருகிறார்கள். மத்திய தொல்லியல் துறை சார்பில் நாடு முழுவதும் உள்ள பாரம்பரிய சின்னங்கள் உள்ள இடங்களில் இன்று உலக பாரம்பரிய தினம் கடைபிடிக்கப்பட்டது.

    இதையொட்டி தமிழ்நாட்டில் மத்திய தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் உள்ள சென்னை கோட்டை மியூசியம், மாமல்லபுரம் புராதன சின்னங்கள், செஞ்சிகோட்டை, தஞ்சாவூர், தாராசுரம் கோயில், வேலூர் கோட்டை, கங்கை கொண்ட சோழபுரம் உள்ளிட்ட பகுதிகளை, இன்று உலக பாரம்பரிய தினத்தை முன்னிட்டு அனைத்து சுற்றுலா பயணிகளும் இலவசமாக பார்க்கலாம் என தொல்லியல்துறை அறிவித்தது.

    அதன்படி இன்று மாமல்லபுரம் புராதன சின்னங்களை பார்க்க வந்த சுற்றுலா பயணிகள் அனைவரும் கட்டணமின்றி அனுமதிக்கப்பட்டனர். உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் கடற்கரை கோயில், ஐந்துரதம், வெண்ணெய் உருண்டை பாறை, புலிக்குகை, மற்றும் குடவரை கோயில் பகுதிகளை இலவசமாக பார்த்து ரசித்து சென்றனர். இதனால் வழக்கத்தை விட இன்று சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது.

    • நாடு முழுவதும் உள்ள பாரம்பரிய சின்னங்கள் உள்ள இடங்களில் இன்று உலக பாரம்பரிய தினமாக கடை பிடிக்கப்படுகிறது.
    • மாமல்லபுரம் புராதன சின்னங்களை கண்டுகளிக்க வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு ரூ.600 வசூலிக்கப்படுகிறது.

    மாமல்லபுரம்:

    மத்திய தொல்லியல் துறை சார்பில் நாடு முழுவதும் உள்ள பாரம்பரிய சின்னங்கள் உள்ள இடங்களில் இன்று (செவ்வாய்க்கிழமை) உலக பாரம்பரிய தினமாக கடை பிடிக்கப்படுகிறது.

    உலக பாரம்பரிய தினத்தையொட்டி செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள கடற்கரை கோவில், ஐந்துரதம், அர்ச்சுனன் தபசு, வெண்ணெய் உருண்டைக்கல் உள்ளிட்ட புராதன சின்னங்களை இன்று ஒரு நாள் முழுவதும் பார்வையாளர் நேரமான காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை எந்தவித நுழைவு கட்டமணமும் இன்றி சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும் இங்குள்ள புராதன சின்னங்களை இலவசமாக கண்டுகளிக்கலாம்.

    குறிப்பாக மாமல்லபுரம் புராதன சின்னங்களை கண்டுகளிக்க வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு ரூ.600-ம் உள்நாட்டு பயணிக்கு ரூ.40-ம் நுழைவு கட்டணமாக தொல்லியல் துறை வசூலிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • மாமல்லபுரம் சிறந்த சுற்றுலா தலமாக உள்ளது
    • மாமல்லபுரத்தில் அனைத்து இடங்களையும் சுற்றி பார்க்க ஒரே இடத்தில் நுழைவு கட்டணம் வசூலிக்க வேண்டும்.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் சிறந்த சுற்றுலா தலமாக உள்ளது. தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் இங்குள்ள புராதன சின்னங்களை ஆச்சரியத்துடன் பார்த்து செல்கிறார்கள்.

    கடற்கரை கோவில், ஐந்துரதம், வெண்ணை உருண்டைகல் மற்றும் குடவரை கோவில் பகுதிகளை அருகில் சென்று பார்த்து ரசிக்க, மத்திய தொல்லியல் துறை உள்நாட்டு சுற்றுலா பயணிகளுக்கு ரூ.40, வெளிநாட்டு பயணிகளுக்கு ரூ.600 கட்டணம் வசூலிக்கிறது. ஒரு இடத்தில் நுழைவுச்சீட்டு பெற்று அனைத்து பகுதிகளையும் பார்வையிடலாம்.

    ஆனால் தொல்லியல்துறை வழிப்பாதையில் கலங்கரை விளக்கம், கடல்சார் அருங்காட்சியகம் அமைந்து இருப்பதால் அதையும் பார்க்கலாம் என கருதி சுற்றுலா பயணிகள் சென்றால் அனுமதிப்பது கிடையாது.

    இதற்கு கப்பல் போக்குவரத்து துறையினர்தனியாக கட்டணம் வசூலிக்கின்றனர். இதனால் பயணிகளுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வருகிறது.

    இதுகுறித்து சுற்றுலாப் பயணிகள் கூறும்போது, மாமல்லபுரத்தில் அனைத்து இடங்களையும் சுற்றி பார்க்க ஒரே இடத்தில் நுழைவு கட்டணம் வசூலிக்க வேண்டும்.

    தற்போது கோடை விடுமுறை தொடங்கும் நிலையில், சுற்றுலா பயணிகள் வருகை அதிக அளவில் காணப்படுகிறது. இதனால் மத்திய அரசின் இரு துறைகளும் ஒரே கட்டணத்தில் பயணிகளை அனுமதிக்க வேண்டும் என்றனர்.

    • மாமல்லபுரம் சிறந்த சுற்றுலா தலமாக உள்ளது.
    • மாமல்லபுரம் நகருக்குள் வரும் வாகனங்களுக்கு நுழைவு கட்டணம் வசூலை பேரூராட்சி நிர்வாகம் ரத்து செய்தது.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் சிறந்த சுற்றுலா தலமாக உள்ளது. இங்குள்ள புராதன சின்னங்களை பார்க்க தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பணிகள் வந்து செல்கிறார்கள்.

    மாமல்லபுரம் நகருக்கு உள்ளே நுழையும் அனைத்து வாகனங்களுக்கும் பேரூராட்சி நிர்வாகம் நுழைவு கட்டணம் வசூலித்து வந்தது. மோட்டார் சைக்கிளுக்கு ரூ.25. கார்-ரூ.50, பஸ், லாரிகளுக்கு ரூ.100 கட்டணம் வசூல் செய்யப்பட்டது.

    வாகன நுைழவு கட்டணம் வசூல் செய்யும் போது ஏற்படும் வாக்குவாதம், மோதல் காரணமாக சுற்றுலா பயணிகள் கடுமையாக பாதிக்கப் பட்டனர். மாமல்லபுரத்தில் நுழைவு கட்டணம் வசூல் செய்வதை ரத்து செய்ய வேண்டும் என்று கோர்ட்டில் பொது நல வழக்குகளும் தொடரப்பட்டது.

    இந்தநிலையில் நேற்று முதல் மாமல்லபுரம் நகருக்குள் வரும் வாகனங்களுக்கு நுழைவு கட்டணம் வசூலை பேரூராட்சி நிர்வாகம் ரத்து செய்தது. இதனால் மாமல்லபுரம் வரும் சுற்றுலா பயணிகள் நுழைவு கட்டணமோ, புராதன சின்னங்கள் அருகே வாகன நிறுத்துமிட கட்டணமோ செலுத்தாமல் மகிழ்ச்சியுடன் சென்று வருகிறார்கள். இதற்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்து உள்ளனர்.

    • மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களை தொல்லியல் துறை அதிக முக்கியத்துவம் கொடுத்து பாதுகாத்து பராமரித்து வருகிறது.
    • சப்த மாதாக்கள் என்று அழைக்கப்படும் சப்த கன்னியர் சிலைகளை, அதுவும் பல்லவர் கால வழிபாட்டின் பழைய சிலைகளை நேரில் பார்ப்பது மகிழ்ச்சியாக உள்ளது.

    மாமல்லபுரம்:

    சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 7-ம் நூற்றாண்டில் ஆட்சி புரிந்த பல்லவ மன்னர்கள் இங்கு வடித்த குடைவரை கோவில்கள், குடைவரை மண்டபங்கள், ரதங்கள், பாறை சிற்பங்கள் உள்ளிட்ட புராதன சின்னங்களை கலைநயத்துடன் வடிவமைத்துள்ளனர். இந்த கற்சிற்ப புராதன சின்னங்களை பார்வையிடுவதற்காக மாமல்லபுரத்திற்கு நாள்தோறும் ஏராளமான, உள்நாட்டு வெளிநாட்டு பயணிகள் வந்து செல்கின்றனர்.

    மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களை தொல்லியல் துறை அதிக முக்கியத்துவம் கொடுத்து பாதுகாத்து பராமரித்து வருகிறது. மாமல்லபுரத்தில் பல்லவர் காலத்திலேயே சப்த கன்னியர் வழிபாடு நடந்துள்ளதாகவும், இதற்காக பிராம்மி, மகேஸ்வரி, கவுமாரி, வைஷ்ணவி, வராகி, இந்திராணி, சாமூண்டீஸ்வரி போன்ற சப்த கன்னியர்களுக்கு (7 கன்னிகள்) பல்லவர்கள் சிலைகள் அமைத்து வழிபட்டுள்ளனர்.

    பொதுமக்கள் குடியிருப்பு வளாக பகுதியில் உள்ள இந்த சப்த கன்னியர் புராதன சின்ன பகுதியில் சமூக விரோதிகள் சிலர் அங்குள்ள கம்பி வேலியை தாண்டி உள்ளே சென்று மது குடிப்பது போன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வந்ததால் அந்த பகுதியில் சுற்றுலா பயணிகள் இதுவரை அனுமதிக்கப்படாமல் நுழைவு வாயில் கதவுகள் பூட்டப்பட்டு பாதுகாக்கப்பட்டு வந்தது.

    தற்போது மாமல்லபுரத்திற்கு குழு குழுவாக சுற்றுலா வரும் பொதுமக்களிடையே வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த சப்த கன்னியர் 7 பேரின் சிலைகள் உள்ள இந்த புராதன சின்னத்தை பார்க்கும் ஆர்வம் அதிகரித்துள்ளது.

    இதையடுத்து தற்போது மாமல்லபுரம் தொல்லியல் துறையின் சிறப்பு அனுமதி பெற்று மாமல்லபுரம் வரும் சுற்றுலா பயணிகள் சப்த கன்னியர் புராதன சின்னத்தை ஆர்வமுடன் பார்த்துவிட்டு செல்கின்றனர்.

    இந்த சப்த கன்னியர் புராதன சின்னம் பகுதிக்கு வந்த சுற்றுலா பயணிகள் கூறும்போது:-

    சப்த மாதாக்கள் என்று அழைக்கப்படும் சப்த கன்னியர் சிலைகளை, அதுவும் பல்லவர் கால வழிபாட்டின் பழைய சிலைகளை நேரில் பார்ப்பது மகிழ்ச்சியாக உள்ளது. இதுவரை 7 செங்கல்லை வைத்து அலங்கரித்து, பொங்கலிட்டு சப்த கன்னியர் பூஜை செய்வதைதான் பார்த்திருக்கிறோம்.

    தற்போது நேரில் 7 தெய்வங்களின் சிலைகளை பார்த்து வழிபட்டு செல்வது மனநிறைவாக உள்ளது. இவ்வாறு அவர்கள் மகிழ்ச்சியோடு தெரிவித்தனர்.

    இதனால் மாமல்லபுரத்தில் மற்ற புராதன சின்னங்களுக்கு வருவதுபோல் இங்கும் தற்போது சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.

    ×