search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாநிலங்கள்"

    பசு பாதுகாவலர்கள் என்ற போர்வையில் வன்முறையில் ஈடுபடுவோரை மாநில அரசுகளே கண்காணிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. #CowVigilantism #SC
    புதுடெல்லி:

    இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் பசு பாதுகாப்பு என்ற பெயரில் தாக்குதல் சம்பவம் அரங்கேறியது.  இந்த சம்பவத்துக்கு பல்வேறு தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் பசு பாதுகாப்பு என்ற பெயரில் நடைபெறும் வன்முறைகளை தடுத்த நிறுத்த அரசுகளுக்கு உத்தரவிடுமாறு மகாத்மா காந்தியின் கொள்ளு பேரனான பத்திரிக்கையாளர் தூஷார் காந்தி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கு தொடர்பாக கடந்த ஆண்டு செப்டம்பர் 6-ம் தேதி உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில், பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் நடைபெறும் வன்முறைகளை தடுக்க மாவட்டம் தோறும் உயரதிகாரிகளை சிறப்பு கண்காணிப்பு அதிகாரிகளாக நியமித்து கண்காணிக்குமாறு உத்தரவிட்டது.

    சுப்ரீம் கோர்ட்டின் இந்த உத்தரவை ராஜஸ்தான், அரியானா மற்றும் உத்தரபிரதேசம் போன்ற மாநில அரசுகள் பின்பற்றவில்லை.

    இந்நிலையில், மாநில அரசுகள் கண்காணிக்கவில்லை என தொடரப்பட்ட வழக்குகள் மீதான விசாரணை இன்று சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஏ.எம் கன்வில்கார் மற்றும் டி.ஒய் சந்திரசூட் ஆகிய நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன் நடைபெற்றது.

    இந்த வழக்கு விசாரணையில், பசு பாதுகாப்பு என்ற பெயரில் யாரும் சட்டத்தை கையில் எடுப்பதை அனுமதிக்க முடியாது என்றும், இந்த சட்ட ஒழுங்கு பிரச்சனையை கண்காணிப்பது ஒவ்வொரு மாநிலத்தின் பொறுப்பாகும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    இதையடுத்து, பசு பாதுகாப்பு என்ற பெயரில் நடைபெறும் வன்முறைகளை தடுக்க வழிமுறையை உருவாக்க கோரிய வழக்குகளின் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு ஒத்திவைத்துள்ளது.

    இதற்கிடையே முந்தைய உத்தரவை பின்பற்றாத ராஜஸ்தான், அரியானா மற்றும் உத்தரபிரதேச மாநில அரசுகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முன்னெடுக்க கோரிய வழக்கில் அம்மாநிலங்கள் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #CowVigilantism #SC
    காவிரி மேலாண்மை ஆணையத்துக்கான அறிவிப்பு மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டதை அடுத்து, ஆணையத்துக்கான உறுப்பினர்களை நியமிக்குமாறு தமிழக அரசுக்கு மத்திய நீர்வளத்துறை கடிதம் எழுதியுள்ளது. #CauveryManagementAuthority
    புதுடெல்லி:

    காவிரி நதிநீர் பங்கீட்டு பிரச்சனையில் மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு இருந்தது. அதன்படி, மத்திய அரசு செயல் திட்டத்தை தாக்கல் செய்தது. மத்திய அரசு தாக்கல் செய்த வரைவு திட்டத்தை சுப்ரீம் கோர்ட் ஏற்றுக்கொண்டது.

    இதனை உடனே அரசிதழில் வெளியிட வேண்டும், பருவமழை தொடங்குவதற்குள் மேலாண்மை ஆணையத்தை அமைக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டது.

    இந்நிலையில், சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி மத்திய அரசு அமைத்த காவிரி மேலாண்மை ஆணையம் குறித்த அறிவிப்பு நேற்று மாலை மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டது.

    காவிரி ஆணையம் அமைக்கும் உத்தரவில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கையெழுத்திட்டுள்ளார். மேலும், ஆணையத்தின் தற்காலிக தலைவராக நீர்வளத்துறை செயலாளர் யூ.பி.சிங் செயல்படுவார் என்றும் ஆணையத்திற்கு நிரந்தர தலைவர் நியமனம் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், காவிரி மேலாண்மை ஆணையத்துக்கான உறுப்பினர்களை நியமிக்குமாறு மத்திய நீர்வளத்துறை தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளது. நீர்வளத்துறை சார்ந்த நிர்வாக செயலர் அந்தஸ்தில் ஒருவரையும், காவிரி நீர் ஒழுங்காற்று குழுவிற்கு தலைமை பொறியாளர் அந்தஸ்தில் ஒருவரையும் உறுப்பினராக நியமிக்குமாறு கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இதேபோல, கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி மாநில அரசுகளும் உறுப்பினர்களை நியமிக்குமாறு, மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது. #CauveryManagementAuthority
    ×