search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம்"

    • பெண்களின் வாழ்வாதாரத்துக்கு உதவும் வகையில் சமூக நலத்துறையில் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
    • அரசின் சார்பில் வைப்புத்தொகையாக தலா 25 ஆயிரம் ரூபாய் செலுத்தப்படுகிறது

    உடுமலை : 

    பாதிக்கப்பட்ட மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள பெண்களின் வாழ்வாதாரத்துக்கு உதவும் வகையில் சமூக நலத்துறையில் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இதில் பெண் குழந்தைக்கான பாதுகாப்பு திட்டமும் உள்ளது.

    பொருளாதாரத்தில் பின்தங்கியும், இரண்டு பெண் குழந்தைகள் இருக்கும் பெற்றோர், குழந்தைகளின் 3 வயது நிறைவு பெறுவதற்குள் திட்டத்தில் பதிவு செய்திருக்க வேண்டும். ஆண் வாரிசு இல்லாமலும், பெற்றோருக்கு திருமண வயது நிறைவடைந்து இருப்பதும் அவசியம். இக்குழந்தைகளுக்கு அரசின் சார்பில் வைப்புத்தொகையாக தலா 25 ஆயிரம் ரூபாய் செலுத்தப்படுகிறது.

    தவிர குழந்தைகளின் 6 வயது முதல் 15 வயது வரை, 150 ரூபாய் வட்டியும் பயனாளிகளுக்கு வழங்கப்படுகிறது. திட்டத்தில் விண்ணப்பிக்கும்போது அதற்கான விதிமுறைகளையும் அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.அதில் பலரும் முழுமையாக விபரங்களை அறியாமல் திட்டத்தில் விண்ணப்பிக்கின்றனர். திட்டத்தில் விண்ணப்பிக்கும் பெண் குழந்தைகளுக்கு 18 வயது நிறைவடையும் தருணத்தில் அவர்களுக்கான தொகை வழங்கப்படும். மேலும் 18 வயது நிறைவு பெறாமல் அந்த குழந்தைகள் திருமணம் செய்து கொண்டாலும் திட்டத்தில் பயன்பெற முடியாது.

    இது மட்டுமில்லாமல் பயனாளிகளாக உள்ளவர்கள் 10-ம் வகுப்பு தேர்வு எழுதி சான்றிதழ் பெற்றிருந்தால் மட்டுமே முதிர்வு தொகையை பெற முடியும்.விண்ணப்பிக்கும் போது விதிமுறைகளை அறிந்து கொண்டும் பலரும் 10-ம் வகுப்பை முடிக்காமல், முதிர்வு தொகைக்கு ஒன்றிய அலுவலகங்களை அணுகுகின்றனர். தகுதி இல்லை என அறிந்து ஏமாற்றமடைகின்றனர்.

    இது குறித்து சமூக நலத்துறை அலுவலர்கள் கூறியதாவது:-

    பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் விதிமுறைகள் கட்டாயம் பின்பற்றினால் மட்டுமே முதிர்வு தொகையை பெற முடியும். தற்போது அனைத்து விபரங்களும் ஆன்லைனில் பதிவாகிறது. இதனால் திட்டத்துக்கு உரிய சான்றிதழ்கள் இருந்தால் மட்டுமே ஆன்லைன் பதிவுகள் விண்ணப்பங்களை ஏற்று க்கொள்கின்றன. பயனாளிகள் முழுமையாக விதிமுறைகளை அறிந்து கொள்ள வேண்டும்.திட்டத்தில் விண்ணப்பித்து விட்டு முதிர்வு காலத்தின் போது தேவையான படிப்பில்லாமல் இருப்பதால் பயன்பெறுவதற்கான தகுதியை இழக்கின்றனர். பெண் குழந்தைகள் கட்டாயம் 10-ம் வகுப்பு முடிக்க வேண்டும் என்பதும் இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாக உள்ளது என்றார்.  

    • தமிழக அரசும் தனது பல்வேறு திட்டங்களில் ஆதார் எண் இணைப்பை கட்டாயமாக்கி வருகிறது
    • தமிழக சமூக நலத்துறை சார்பில், முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    சென்னை:

    மத்திய அரசு திட்டங்களின் பயனை அடைவதற்காக அதன் பயனாளிகள் தங்களின் ஆதார் எண்ணை அந்த திட்டங்களில் இணைப்பதை கட்டாயமாக்கியுள்ளது.

    இந்தநிலையில் தமிழக அரசும் தனது பல்வேறு திட்டங்களில் ஆதார் எண் இணைப்பை கட்டாயமாக்கி வருகிறது. குறிப்பாக, உதவித்தொகை, ஓய்வூதியம், மின்சார இணைப்பு உள்ளிட்ட பல திட்ட பலனை பெறுவதற்கு ஆதார் எண் இணைப்பை கட்டாயப்படுத்தி உள்ளது. அதை மேலும் பல திட்டங்களில் சேர்க்க அரசு முடிவு செய்துள்ளது.

    இந்நிலையில், முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் வரும் பயனாளிகளின் ஆதார் எண் இணைப்பையும் கட்டாயமாக்கி சமீபத்தில் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    இது தொடர்பாக தமிழக அரசிதழில் வெளியிடப்பட்ட சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறையின் அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    அரசின் திட்டங்களில் வெளிப்படைத்தன்மை மற்றும் செயல்பாடுகளை மேம்படுத்தும் நோக்கில், ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. தமிழக சமூக நலத்துறை சார்பில், முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    அதன்படி, அந்த துறையின் சார்பில் பெண் குழந்தையின் பெயரில் ரூ.50 ஆயிரம் தொகையை வைப்புத்தொகையாக தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழகத்தில் வைக்கப்படுகிறது. 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25 ஆயிரம் வீதம் வைப்புத்தொகை செலுத்தப்படுகிறது. அந்த வைப்புத்தொகைக்கான ஆவணம் குழந்தையின் பெற்றோரிடம் வழங்கப்படுகிறது.

    தற்போது மத்திய அரசு விதிகளின்படி, திட்டப்பயனாளிகளுக்கு ஆதார் எண் இணைப்பு கட்டாயமாக்கப்படுகிறது. அதன்படி, இத்திட்டத்தின் கீழ்வரும் பயனாளிகள், ஆதார் எண்ணை அடையாள ஆவணமாக சமர்ப்பிக்க வேண்டும். இதுவரை ஆதார் எண் பெறப்படாத நிலையில், ஆதார் எண்ணுக்காக பெற்றோர் மூலம் விண்ணப்பித்து, அதைக்கொண்டு திட்டத்தின் பயனைப் பெற விண்ணப்பிக்க வேண்டும்.

    ஆதாருக்கு விண்ணப்பித்து காத்திருக்கும் நிலையில், ஆதார் எண்ணுக்காக விண்ணப்பித்தபோது வழங்கப்படும் ஆவணம் அல்லது ஆதார் எண்ணை பெறுவதற்கான விண்ணப்பத்தின் நகலை வைத்து இந்த திட்டத்திற்காக விண்ணப்பிக்கலாம்.

    அதோடு, புகைப்படத்துடன் கூடிய வங்கி கணக்கு புத்தகம், பான் அட்டை, பாஸ்போர்ட், ரேஷன் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அட்டை, புகைப்படத்துடன் கூடிய கிசான் பாஸ்புக், ஓட்டுநர் உரிமம், தாசில்தார் உள்ளிட்ட சான்றொப்ப அதிகாரியால் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய சான்றிதழ் அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட எதாவது ஒரு சான்றிதழ் ஆகியவற்றில் ஒன்றை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×