search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பூரணம் அம்மாள்"

    • பூரணம் அம்மாளுக்கு குடியரசு தினத்தன்று “முதலமைச்சரின் சிறப்பு விருது” வழங்கி முதலமைச்சர் கவுரவித்தார்.
    • தான பத்திரத்தை மதுரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகாவிடம் ஆயி என்ற பூரணம் அம்மாள் வழங்கினார்.

    மதுரை:

    மதுரை கிழக்கு ஒன்றியம், யா.கொடிக்குளம் ஊராட்சியை சேர்ந்தவர் ஆயி என்ற பூரணம் அம்மாள். இவர் மதுரை தல்லாகுளத்தில் உள்ள வங்கியில் எழுத்தராக பணிபுரிந்து வருகிறார்.

    இவர் தனது மகள் ஜனனியின் நினைவாக யா.கொடிக்குளம் பகுதி குழந்தைகளின் கற்றல் திறனை மேம்படுத்தும் உயரிய நோக்கில் நடுநிலைப்பள்ளியை உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த ரூ.7 கோடி மதிப்பிலான 1 ஏக்கர் 52 சென்ட் நிலத்தை தானமாக வழங்கினார். அவரது சேவையை பாராட்டி, பூரணம் அம்மாளுக்கு குடியரசு தினத்தன்று "முதலமைச்சரின் சிறப்பு விருது" வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவுரவித்தார்.

    கடந்த வாரம் மதுரையில் நடந்த பெற்றோர் ஆசிரியர் கழக மண்டல மாநாட்டில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ஆயி என்ற பூரணம் அம்மாளுக்கு விருது வழங்கி கவுரவித்தார்.

    இந்த நிலையில் அதே பள்ளிக்கு கூடுதல் கட்டிடம் கட்ட மேலும் 91 சென்ட் நிலத்தை அவர் தானமாக வழங்கி உள்ளார்.

    இதற்கான தான பத்திரத்தை மதுரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகாவிடம் ஆயி என்ற பூரணம் அம்மாள் நேற்று வழங்கினார். அப்போது, அவர் தனது மகள் ஜனனியின் படத்தை கொண்டு வந்திருந்தார். அந்த படத்தின் முன்பாக வைத்து, பத்திரத்தை முதன்மை கல்வி அதிகாரியிடம் கொடுத்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

    ஆயி அம்மாள், கொடிக்குளம் அரசு பள்ளிக்கு மேலும் ரூ.3.5 கோடி மதிப்பிலான 91 சென்ட் நிலத்தை தானமாக வழங்கி இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. இது சம்பந்தமான படம் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. மக்களும் தங்கள் பாராட்டை தெரிவித்து வருகிறார்கள்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மகளை வளர்க்க தன்னந்தனியாக கடுமையாக சிரமப்பட்டேன்.
    • பெண் வங்கி ஊழியர் நிலத்தை தானமாக வழங்கிய இந்த செயலை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.

    மதுரை:

    அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல், ஆலயம் பதினாயிரம் நாட்டல் போன்ற தரும காரியங்களை விட ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் என்பது கோடி புண்ணியங்களை செய்வதற்கான பலனை அளிக்கும் என்ற பாரதியின் வரிகளை மெய்ப்பிக்கும் வகையில் மதுரையை சேர்ந்த பெண் ஒருவர் ரூ.7 கோடி மதிப்புள்ள நிலத்தை அரசு பள்ளிக்கு தானமாக வழங்கி உள்ளார். அவரின் இந்த செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த பெருமைக்கு சொந்தக்காரர் மதுரை சர்வேயர் காலனியை சேர்ந்தவர் ஆயி என்ற பூரணம் (வயது52) ஆவார். இவர் தல்லாக்குளம் பகுதியில் உள்ள கனரா வங்கி கிளையில் எழுத்தராக பணியாற்றி வருகிறார். இவரது கணவர் வங்கியில் பணியாற்றியபோது கடந்த 1991-ம் ஆண்டு இறந்தார்.

    இதையடுத்து ஆயி பூரணத்திற்கு அதே வங்கியில் கருணை அடிப்படையில் பணி வழங்கப்பட்டது. கணவர் இறந்த நிலையில் மகள் ஜனனியை பாசத்தோடு வளர்த்து வந்த ஆயி அம்மாளுக்கு மீண்டும் பேரிடி காத்திருந்தது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மகள் ஜனனி திடீரென இறந்தார். இது ஆயி பூரணத்தை பெருமளவில் பாதித்தது. தனது மகள் இருக்கும்போது மாணவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவ வேண்டும் என அடிக்கடி தாய் ஆயி பூரணத்திடம் கூறி வந்துள்ளார்.

    மகளின் ஆசையை நிறைவேற்றும் வகையில் மதுரை மாவட்டம் கொடிக்குளம் அரசு நடுநிலைப் பள்ளிக்கு தனக்கு சொந்தமான 1 ஏக்கர் 52 சென்ட் நிலத்தை தானமாக வழங்கி உள்ளார். அந்த நிலத்தின் தற்போதைய சந்தை மதிப்பு ரூ.7 கோடி ஆகும்.

    வங்கி பெண் ஊழியரின் இந்த கொடை செயல் பலரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது. இதுகுறித்து ஆயி பூரணம் கூறியதாவது:-

    எனது கணவர் இறந்தபோது மகள் ஜனனிக்கு 1½ வயது. மகளை வளர்க்க தன்னந்தனியாக கடுமையாக சிரமப்பட்டேன். சிறு வயது முதலே எனது மகள் ஏழை, எளிய மாணவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என அடிக்கடி கூறி வந்தார். எனது தந்தைக்கும் அதே நோக்கம் இருந்தது.

    அவர் மூலம் பலர் ஏழை, எளிய மாணவர்கள் கல்வி பெற்று பயனடைந்துள்ளனர். எனது தந்தை வழியிலும், மகளின் ஆசையை நிறைவேற்றும் வகையிலும் திருமணத்தின்போது எனக்கு சீதனமாக வழங்கப்பட்ட நிலத்தை நான் படித்த பள்ளியான கொடிக்குளம் அரசு நடுநிலைப்பள்ளிக்கு தானமாக வழங்கி உள்ளேன்.

    உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் என்ற நோக்கத்தில் எனக்கு சொந்தமான இடத்தை கல்வித்துறை பேரில் பத்திரம் பதிந்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகாவிடம் ஒப்படைத்துள்ளேன். இம்முயற்சிக்கு எனது உறவினர்கள் மிகவும் ஒத்துழைப்பாக இருந்தனர். யாரும் தடை போடவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ரூ.7 கோடி மதிப்புள்ள நிலத்தை தானமாக அளித்த ஆயி பூரணம் வெளி உலகம் அதிகம் அறியாதவர். தான் உண்டு, தன் குடும்பம் வேலை என வாழ்ந்து வருகிறார். இவரது கொடை செயலை அறிந்து மதுரை பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் பாராட்ட வங்கிக்கு சென்று அவரை சந்தித்துள்ளார். ஆனால் வந்தது எம்.பி. என்று கூட அறியாமல் ஆயி பூரணம்மாள் இருந்துள்ளார்.

    பின்னர் அங்கிருந்தவர்கள் எடுத்து கூறிய பின்பு தான் தனக்கு வாழ்த்து கூற எம்.பி. வந்துள்ளார் என ஆயி பூரணம்மாளுக்கு தெரிய வந்துள்ளது. பெண் வங்கி ஊழியர் நிலத்தை தானமாக வழங்கிய இந்த செயலை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர். அதற்கு முத்தாய்ப்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆயி பூரணத்தை பாராட்டி உள்ளார்.

    மேலும் முதலமைச்சர் சிறப்பு விருது ஆயி அம்மாளுக்கு வருகிற குடியரசு தினத்தன்று வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கல்விதான் உண்மையான, அழிவற்ற செல்வம்.
    • ஆயி அம்மாளின் கொடையால் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயன்பெறுவார்கள்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    கல்விதான் உண்மையான, அழிவற்ற செல்வம். ஒரு தலைமுறையில் பெறும் கல்வி ஏழேழு தலைமுறைக்கும் அரணாக அமையும் என்பதை உணர்ந்து தனது 1 ஏக்கர் 52 சென்ட் நிலத்தை அரசுப் பள்ளிக்குக் கூடுதல் கட்டடம் கட்டுவதற்காகக் கொடையாக அளித்துள்ளார் மதுரை யா.கொடிக்குளத்தைச் சேர்ந்த ஆயி அம்மாள் என்கிற பூரணம் அவர்கள்.

    ஆயி அம்மாளின் கொடையால் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயன்பெறுவார்கள். கல்வியையும் கற்பித்தலையும் உயர்ந்த அறமாகப் மதிக்கும் தமிழ்ச் சமூகத்தின் அடையாளமாக விளங்கும் ஆயி அம்மாளின் கொடையுள்ளத்தைப் போற்றிப் பெருமைப்படுத்தும் வகையில் வருகிற குடியரசு நாள் விழாவில் அரசின் சார்பில் அவருக்கு முதலமைச்சரின் சிறப்பு விருது வழங்கப்படும் என கூறியுள்ளார்.

    • மறைந்த ஜனனியின் சேவை மனப்பான்மையைப் போற்றுகிறேன்.
    • ஜனவரி 29-ஆம் தேதி மதுரையில் நடைபெறவிருக்கும் பெற்றோர் ஆசிரியர் கழக மண்டல மாநாட்டில் பூரணம் அம்மாள் கௌரவிக்கப்பட உள்ளார்கள்.

    சென்னை:

    பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    மதுரை ஒத்தக்கடை கொடிக்குளம் நடுநிலைப் பள்ளியின் ஆசிரியப் பெருமக்கள் சார்பாகவும், அப்பள்ளியில் பயிலும் வருங்கால அறிஞர்கள் சார்பாகவும் பூரணம் அம்மாள் அவர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்து, அவரின் செல்வ மகள் மறைந்த ஜனனியின் சேவை மனப்பான்மையைப் போற்றுகிறேன்.

    "அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்

    ஆலயம் பதினாயிரம் நாட்டல்

    அன்னயாவினும் புண்ணியம் கோடி

    ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்" எனும் பாரதியின் வரிகளுக்கு ஏற்ப வாழும் பூரணம் அம்மாள் அவர்களின் தொண்டு மகத்தானது!

    தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அறிவுறுத்தலின்படி ஜனவரி 29-ஆம் தேதி மதுரையில் நடைபெறவிருக்கும் பெற்றோர் ஆசிரியர் கழக மண்டல மாநாட்டில் பூரணம் அம்மாள் கௌரவிக்கப்பட உள்ளார்கள் என கூறியுள்ளார்.

    ×