search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புதிய வேட்பாளர்"

    • பாராளுமன்ற தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் வேட்பாளர் திடீரென மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
    • திமுக கூட்டணியில், உதயசூரியன் சின்னத்தில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.

    மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 19ம் தேதி முதல் 7 கட்டங்களாக ஜூன் 1ம் தேதி வரை நடைபெறுகிறது.

    முதற்கட்டமாக ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

    இதற்கிடையே, கட்சிகள் தங்களின் கூட்டணிகளை முடிவு செய்த நிலையில் தொகுதி பங்கீடுகள் நிறைவடைந்து வேட்பாளர்களை அறிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் வேட்பாளர் திடீரென மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    ஏற்கனவே சூரியமூர்த்தி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தார்.

    வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சூரியமூர்த்தி, முன்னதாக பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது ஆணவப்படுகொலை செய்வேன் என்றும், தாயோடு சேர்த்து குழந்தையையும் கருவறுப்போம் என்றும், வருகின்ற காலத்தில் கொங்கு நாட்டில் பல்வேறு கொலைகள் விழும் என்று உளவுத்துறைக்கே சவால் விட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இதை தொடர்ந்து சூரியமூர்த்திக்கு பதிலாக வேறு வேட்பாளரை நியமிக்க கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் ஆட்சி மன்றக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

    இந்நிலையில், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் நாமக்கல் மாவட்ட செயலாளர் வி.எஸ். மாதேஸ்வரன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

    வேட்பாளராக அறிவிக்கப்பட்ட மாதேஸ்வரனும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு குடிபோதையில் காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதும், காவல் துறையினருக்கு சவால் விடுவதுமான வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

    இதுபோன்ற நிகழ்வுகளால் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் வேட்பாளர்கள் மீது மக்கள் தங்கள் நம்பிக்கை இழந்து வருவதுடன், இதுபோன்ற சர்ச்சையான வேட்பாளர்களை தேர்தலில் போட்டியிட அறிவிக்க கூடாது எனவும் மக்கள் தங்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

    திமுக கூட்டணியில், உதயசூரியன் சின்னத்தில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.

    ×