search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புட்லூர் கோவில்"

    • புட்லூர் அம்மன் கோவிலில் பக்தர்கள் கூட்ட நெரிசலை பயன்படுத்தி நகை பறிக்கும் சம்பவம் அதிகரித்து உள்ளது.
    • கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ஏராளமானோரிடம் நகை பறிப்பு சம்பவம் நடந்து இருப்பதாக கூறப்படுகிறது.

    திருவள்ளூர்:

    ஆடி மாதம் பிறந்ததை முன்னிட்டு அம்மன் கோவில்களில் பெண்கள் சிறப்பு வழிபாடு செய்து வருகின்றனர். இதனால் அனைத்து அம்மன் கோவில்களிலும் தினந்தோறும் கூட்டம் காணப்படுகிறது.

    திருவள்ளூரை அடுத்த புட்லூரில் உள்ள ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. வழக்கமான நாட்களை விட ஆடி மாதம் முழுவதும் சிறப்பு தரிசனம் செய்ய திரளான பெண்கள் வந்து செல்வது வழக்கம்.

    இந்த நிலையில் புட்லூர் அம்மன் கோவிலில் பக்தர்கள் கூட்ட நெரிசலை பயன்படுத்தி நகை பறிக்கும் சம்பவம் அதிகரித்து உள்ளது. தினந்தோறும் பெண்பக்தர்கள் தங்களது நகையை பறிகொடுக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.

    ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளான நேற்று பல்வேறு இடங்களில் இருந்து புட்லூருக்கு ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். இதனால் காலை முதலே கோவிலில் கூட்டம் அலை மோதியது.

    அப்போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி புதுச்சேரி மாநிலம், ரெட்டியார்பாளையம் பகுதியை சேர்ந்த கலாவதி என்பவர் அணிந்து இருந்த 4 பவுன் செயினை மர்மகும்பல் பறித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இது குறித்து திருவள்ளூர் தாலுகா போலீசில் புகார் செய்தார்.

    இதே போல் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ஏராளமானோரிடம் நகை பறிப்பு சம்பவம் நடந்து இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் பெரும்பாலானோர் இது பற்றி போலீசில் புகார் கொடுக்காமல் சென்று உள்ளனர். இதனால் மர்ம கும்பலின் கைவரிசை அதிகரித்து உள்ளது.

    எனவே ஆடிமாதத்தையொட்டி புட்லூர் அம்மன் கோவிலில் போலீசார் கூடுதல் கண்காணிப்பில் ஈடுபடவேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • திருமண பாக்கியம் வேண்டி பிரார்த்திப்பவர்கள், மஞ்சள் சரடை வேப்பமரத்தில் கட்டி, வேண்டிக் கொள்ளலாம்.
    • முதல் வார பிரார்த்தனையை திங்கள் அன்று துவங்கினால் 9 வாரங்களும் திங்கட்கிழமையில் கோவிலுக்கு வரவேண்டும்.

    சென்னை அருகில் உள்ள புட்லூரில் அமைந்துள்ள அங்காள பரமேசுவரியம்மன் ஆலயத்தில் ஆடி மாதம் முழுவதும் கோலாகலமாக இருக்கும்.

    திருமணம் மற்றும் குழந்தை பாக்கியம் வேண்டுவோர், கோவிலில் நீராடிவிட்டு, ஈரத்துணியுடன் அம்மனை வணங்கி, பிராகாரத்தை 11 முறை சுற்றி வந்து வழிபட வேண்டும்.

    குழந்தைப் பேறு வேண்டுவோர் எலுமிச்சைப் பழம் மற்றும் தொட்டிலை எடுத்து வந்து, கோவிலின் உள்ளே இடது புறத்தில் புற்றுக்கு அருகில் உள்ள வேப்பமரத்தில், கட்டிவிட்டு பிரார்த்திக்க வேண்டும். திருமண பாக்கியம் வேண்டி பிரார்த்திப்பவர்கள், மஞ்சள் சரடை வேப்பமரத்தில் கட்டி, வேண்டிக் கொள்ளலாம்.

    கருவறையில் உள்ள புற்று வடிவில் கோலோச்சும் பூங்காவனத்தம்மனது பாதத்தில் எலுமிச்சைப் பழத்தை வைத்து, அப்படியே உருட்டிவிடுவார் பூசாரி. இதை பெண்கள், தங்கள் புடவைத் தலைப்பு அல்லது சுடிதார் துப்பாட்டாவால் ஏந்தி எடுத்துவந்து, கோவில் வளாகத்தில் அமர்ந்து அப்படியே தோலுடன் கடித்துச் சாப்பிட வேண்டும்.

    இதே போல் தொடர்ந்து 9 வாரங்கள் இங்கு வந்து அம்மனை தரிசித்து பிரார்த்திக்க வேண்டும். முதல் வாரம் மட்டுமே தொட்டில் கட்ட வேண்டும் (மஞ்சள் சரடும் அப்படியே!). பிறகு ஒவ்வொரு வாரமும் எலுமிச்சைப் பழம் மட்டும் எடுத்துவந்தால் போதும்!

    செவ்வாய், வெள்ளி மட்டுமின்றி எந்த நாளும் வழிபடலாம்! முதல் வார பிரார்த்தனையை திங்கள் அன்று துவங்கினால் 9 வாரங்களும் திங்கட்கிழமையில் கோவிலுக்கு வரவேண்டும். செவ்வாய்க்கிழமை என்றால், ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமையன்று வரவேண்டும். பக்தர்களில் சிலர், ஆடி மாதம் முழுவதும் பிரார்த்தனையைத் தொடர்வதுண்டு. ஆடிப்பூரம் மிகவும் விசேஷ நாளகும். அன்று பெண்கள் தங்கள் வேண்டுதலை நினைத்து பிரார்த்தனையைத் தொடங்கலாம்.

    ×