search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பழனி மாரியம்மன்"

    பழனி மாரியம்மன் கோவில் மாசித்திருவிழா தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வடம் பிடித்து தேரை இழுத்தனர்.
    பழனி முருகன் கோவிலின் உபகோவிலான மாரியம்மன் கோவிலில் மாசித்திருவிழா ஆண்டுதோறும் வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். அதன்படி இந்த ஆண்டு திருவிழா கடந்த 1-ந்தேதி முகூர்த்தக்கால் நடுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து 5-ந்தேதி கம்பம் சாட்டுதலும், 12-ந்தேதி கொடியேற்றம் மற்றும் பூவோடு வைத்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. திருவிழாவில் அம்மன் திருக்கல்யாணம் நேற்று முன்தினம் நடந்தது. இதையடுத்து முக்கிய நிகழ்ச்சியான மாசித்திருவிழாவின் தேரோட்டம் நேற்று நடந்தது.

    முன்னதாக 3.30 மணி அளவில் அம்மன் தேரில் எழுந்தருளினார். பின்னர் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடந்தது. 4.30 மணி அளவில் தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியை தொடர்ந்து நான்கு ரத வீதிகளில் தேர் சுற்றி வந்து 5.30 மணி அளவில் நிலை வந்து சேர்ந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரை இழுத்தனர்.

    இதற்கிடையே மேடான பகுதிகளில் தேர் செல்லும்போது, அதனை கோவில் யானை கஸ்தூரி தன் தும்பிக்கையால் முட்டி தள்ளியது. இன்று இரவு 10 மணிக்கு கொடி இறக்குதலுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

    இந்நிகழ்ச்சியில் கோவில் இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் செந்தில்குமார், கோவில் மேலாளர் உமா, சித்தனாதன் சன்ஸ் ராகவன், கந்தவிலாஸ் செல்வகுமார், கண்பத் கிராண்ட் ஹரிஹரமுத்து, அ.தி.மு.க. நகர செயலாளர் முருகானந்தம், பழனி போலீஸ் துணை சூப்பிரண்டு விவேகானந்தன் மற்றும் நகர் முக்கிய பிரமுகர் கள் கலந்துகொண்டனர்.
    பழனி மாரியம்மன் கோவிலுக்கு ரூ.18 லட்சத்தில் வடிவமைக்கப்பட்ட தேர் நாளை மறுநாள் ரதவீதிகளில் வெள்ளோட்டம் நடக்கிறது.
    பழனி முருகன் கோவிலின் உபகோவிலாக மாரியம்மன் கோவில் விளங்குகிறது. இந்த கோவிலில் மாசி மாதத்தில் திருவிழா நடத்தப்படும். அப்போது ரதவீதிகளில் தேரோட்ட நிகழ்ச்சியும் நடைபெறும். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான தேரை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து தைப்பூசத்திருவிழாவுக்கு பயன்படுத்தும் தேரையே மாசி மாத திருவிழாவுக்கும் கோவில் நிர்வாகிகள் பயன்படுத்தி வந்தனர்.

    இந்த நிலையில் மாரியம்மன் கோவிலுக்கு என்று புதிதாக தேர் செய்ய கோவில் நிர்வாகம் சார்பில் முடிவு செய்யப்பட்டது. அதையடுத்து ரூ.18 லட்சத்தில் தேர் வடிவமைக்கும் பணி கடந்த 2015-ம் ஆண்டு தொடங்கியது. இழுப்பை, வாகை மரங்களை பயன்படுத்தி தேரை வடிவமைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.

    கடந்த சில வாரங்களுக்கு முன்பு தேர் வடிவமைப்பு பணி நிறைவடைந்தது. இதுகுறித்து கோவில் நிர்வாகிகளிடம் கேட்ட போது, புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ள தேர் 36 அடி உயரம் கொண்டது ஆகும். தேர் வெள்ளோட்டம் பார்க்கும் நிகழ்ச்சி நாளை மறுநாள் (வியாழக்கிழமை) நடக்கிறது.

    முன்னதாக புதிய தேருக்கான சிறப்பு பூஜை, தேர் பிரதிஷ்டை செய்யும் நிகழ்ச்சி உள்ளிட்டவைகள் மேற்கொள்ளப்படும். அதன் பின்னர் நாளை மறுநாள் காலை 10.20 மணிக்கு மேல் தேர் வெள்ளோட்ட நிகழ்ச்சி நடைபெறும். அப்போது ரதவீதிகளில் தேர் சிரமம் இன்றி வலம் வருகிறதா? என்று சோதனை நடத்தப்படும் என்றனர்.

    ×