search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பருத்தி விலை"

    • ஜவுளித் தொழிலை பாதுகாக்க வேண்டிய அவசியத்தை முதல்வர் வலியுறுத்தி உள்ளார்.
    • பருத்தி மீதான 11 விழுக்காடு இறக்குமதி வரியைத் திரும்பப் பெறவேண்டுமென்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் பருத்தி, நூல் விலை உயர்வின் காரணமான ஜவுளித் தொழிலில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை நீக்கிடும் வகையில். இறக்குமதி வரி நீக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டுமென வலியுறுத்தி, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.

    பருத்தி விலை கடுமையாக உயர்ந்துள்ளது குறித்தும், அதனால் நூல் மற்றும் ஜவுளி விலையில் ஏற்பட்டுள்ள தாக்கம் குறித்தும் பிரதமருக்கு எழுதியுள்ள அந்த கடிதத்தில், குறு சிறு நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் கீழ் செயல்படும் நூற்பாலைகளின் அவல நிலையைப் போக்கிடவும், நூற்பாலைத் துறையில் மீண்டும் வேலைவாய்ப்பினைக் கொண்டுவர உதவிடும் பொருட்டும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

    தமிழ்நாட்டில் நூற்பாலைத் தொழிலில் 15 லட்சம் தொழிலாளர்களைக் கொண்டு 1,500 நூற்பாலைகள் இயங்கி வருவதாகவும், இவை தமிழ்நாட்டின் தொழில் பொருளாதாரத்தில் முக்கியப் பங்காற்றி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளதோடு, பருத்தி விலையில் ஏற்பட்டுள்ள கடுமையான விலை உயர்வு. வங்கி வட்டி உள்ளிட்ட செயல்பாட்டுச் செலவு அதிகரிப்பு மற்றும் உள்நாட்டு மற்றும் பன்னாட்டு சந்தைகளில், தேவையில் ஏற்பட்டுள்ள சரிவு போன்றவை நூற்பாலை சங்கம், ஜூலை 15, 2023 முதல் உற்பத்தி நிறுத்தத்தை அறிவிக்கும் அளவுக்கு, இத்துறையை ஒரு கடுமையான நெருக்கடிக்குள் தள்ளியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

    கொரோனா பெருந்தொற்றுக் காலத்திற்குப் பிறகு, குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களைப் புதுப்பிக்கவும். மறுசீரமைக்கவும் ஒன்றிய அரசு அவசரகால கடன் உத்தரவாதத் திட்டத்தின்கீழ் (Emergency Credit Line Guarantee Scheme) குறுகிய கால கடனைத் கடன்களை வழங்கியுள்ளதாகவும், இந்தத் திட்டத்தின்கீழ் பெற்ற திருப்பிச் செலுத்தும் நூற்பாலைகளுக்குக் கூடுதல் சுமை பணி தற்போது தொடங்கியுள்ளதால், ஏற்பட்டுள்ளதோடு, உற்பத்திச் செலவும் அதிகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ள முதலமைச்சர், இந்தியாவில் பருத்தி இறக்குமதிக்கு ஒன்றிய அரசால் விதிக்கப்படும் 11 விழுக்காடு இறக்குமதி வரி, இந்தியாவிற்கும், சர்வதேச அளவிலான போட்டியாளர்களுக்கும் இடையிலான மற்றொரு குறிப்பிடத்தக்க விலை வேறுபாடு எனச் சுட்டிக்காட்டியுள்ளார்.

    இதுதொடர்பாக தனது 16-5-2022 நாளிட்ட முந்தைய கடிதத்தில், நூற்பாலைகள் பருத்தி கொள்முதல் செய்வதற்கான ரொக்கக் கடன் வரம்பை மூன்று மாதங்களில் இருந்து 8 மாதங்களாக நீட்டிக்கவும், வங்கிகள் கோரும் விளிம்புத் தொகையை கொள்முதல் மதிப்பில் 25 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாகக் குறைக்கவும் கோரியிருந்ததைச் சுட்டிக்காட்டியுள்ள முதலமைச்சர், ஜவுளித் தொழிலை (நூற்பு முதல் துணிகள் வரை) பாதுகாக்க வேண்டிய அவசியத்தையும், அதனால் உருவாகும் வேலைவாய்ப்புகளையும் கருத்தில்கொண்டு, தனது முந்தைய வேண்டுகோளை மீண்டும் வலியுறுத்துவதாகத் தெரிவித்துள்ளார்.

    இந்தச் சூழலில், குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின்கீழ் செயல்படும் நூற்பாலைகளின் அவல நிலையைப் போக்கிடவும், நூற்பாலைத் துறையில் மீண்டும் வேலைவாய்ப்பினைக் கொண்டுவரவும் உதவிடும் பொருட்டு, அவசரகால கடன் உத்தரவாதத் திட்டத்தின்கீழ், உரிய நிதியுதவியினை நூற்பாலைகளுக்கு வழங்கிடவும். அந்நிறுவனங்கள் இந்தத் திட்டத்தின்கீழ் பெற்ற கடனைத் திருப்பிச் செலுத்தும் காலத்தினை மேலும் ஓராண்டு நீட்டிக்கவும், ஏற்கெனவே பெற்ற கடனை ஆறு ஆண்டு காலக் கடனாக மாற்றி திருத்தியமைத்திடவும், இத்திட்டத்தின்கீழ் புதிய கடன்கள் வழங்கிடவும், இக்கடன்களுக்கான வங்கி வட்டி விகிதங்களைக் குறைத்திடவும் பிரதமர் நரேந்திர மோடி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று முதலமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.

    அதோடு, பருத்தி மீதான 11 விழுக்காடு இறக்குமதி வரியைத் திரும்பப் பெறவேண்டுமென்றும், அதன்மூலம் உற்பத்திச் செலவைக் கணிசமாகக் குறைக்கலாம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும், நாட்டின் நூல் உற்பத்தியில் குறுந்தொழில் நிறுவனங்களின்கீழ் வரும் கழிவுப் பஞ்சு நூற்பாலைகள் 35 விழுக்காடு அளவிற்குப் பங்களிக்கின்றன; குறைந்த விலை துணிகளில் பயன்படுத்தப்படும் இந்தக் கழிவுப் பருத்திப் பற்றாக்குறையை சமாளிக்க, இந்தியாவிலிருந்து கழிவுப் பருத்தியை ஏற்றுமதி செய்வதற்கு தற்காலிகத் தடை விதிக்க வேண்டுமென்றும் முதலமைச்சர் தனது கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.

    • அபிராமம் பகுதியில் பருத்தி விலை குறைவால் அதனை பறிக்க விவசாயிகள் ஆர்வம் காட்டவில்லை.
    • சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அபிராமம்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாதபுரம். திருப்புல்லாணி, நயினார் கோவில், பரமக்குடி, முதுகுளத்தூர், கடலாடி, சாயல்குடி, கமுதி, அபிராமம் ஆகிய பகுதிகளில் நெல், மிளகாய்க்கு அடுத்தபடியாக பருத்தி விவசாயம் செய்யப்படுகிறது.

    பருத்தி பணப்பயிர் என்பதால் விவசாயிகள் அதிக ஆர்வத்துடன் விவசாயம் செய்து வருகின்றனர். கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு பருத்தி விலை குறைந்துவிட்டது.

    அபிராமம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் போதிய மழை இல்லாததால் பருத்தியில் கொண்டை புழு பூச்சி தாக்குதல் அதிகமாக இருந்து வரும் நிலையில் பருத்தி விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் போதிய விளைச்சலும் இல்லை. கமிஷன் கடை களில் பருத்தி ஒரு கிலோ ரூ.38-க்கு விற்கப்படுகிறது. விலை குறைவால் விவசாயி கள் கவலை அடைந்துள்ளனர்.

    ராமநாதபுரம், பரமக்குடி, முதுகுளத்தூர், கடலாடி, கமுதி, அபிராமம் உள்பட சுமார் 200-க்கும் மேற்பட்ட கிராமங்களில் செடியில் இருந்து பருத்தி பறிப்பதற்கு விவசாயிகள் ஆர்வம் காட்டவில்லை. இதனால் பருத்தி செடி வீணாகும் நிலை உள்ளது.

    இது பற்றி அந்த பகுதியை சேர்ந்த விவசாயி கூறியதா வது:-

    கடந்த ஆண்டு பருவமழை இல்லததால் நெல் விவசா யம் பாதிக்கப்பட்டதுடன் மிகப்பெரிய பொருளாதார கஷ்டம் ஏற்பட்டுள்ளது. மேலும் பருத்தியில் நோய் தாக்குதல் ஏற்பட்டுள்ளதால் பருத்தி விவசாயம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.இதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அபிராமம் பகுதியில் பருத்தி விலை குறைவால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.
    • நெல் பயிரிட்ட விவசாயிகள் அரசின் நிவாரணம் மற்றும் பயிர் காப்பீடு நிவாரணத்தை நம்பி காத்திருக்கின்றனர்.

    அபிராமம்

    ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் பகுதியில் கடந்த ஆண்டு வடகிழக்கு பருவ மழை பொய்த்து போனதால் வைகை பாசன பகுதிகள் தவிர மற்ற பகுதிகளில் நெல் விவசாயம் கருகி நஷ்டம் ஏற்பட்டுவிட்டது.

    நெல் பயிரிட்ட விவசாயிகள் அரசின் நிவாரணம் மற்றும் பயிர் காப்பீடு நிவாரணத்தை நம்பி காத்திருக்கின்றனர்.

    இந்தநிலையில் நெற்பயிர்களை அறுத்துவிட்டு அதில் பருத்தியை விவசாயிகள் பயிரிட்டனர். நவம்பர்மாத இறுதியில் தொடங்கிய பருத்தி சாகுபடி பணிகள் தற்போது ஒரளவுக்கு விளைய தொடங்கி உள்ளது.

    முதல் போக சாகுபடி செய்து அறுவடை செய்ய தெடங்கியுள்ள விவசாயிகள் அதனை விற்பனை செய்ய கமிஷன் கடைக்கு கொண்டு சென்றபோது அங்கு விவசாயிகளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

    கடந்த ஆண்டு பருத்தி நன்றாக விளைந்ததோடு மட்டுமில்லாமல் அதிக விலைக்கு விற்பனையானது. இந்த ஆண்டு பருத்தி ஓரளவுக்கு விளைந்த போதும் உரிய விலை கிடைக்கவில்லை என்று விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

    இதுகுறித்து அபிராமம் பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது:-

    கடந்த ஆண்டு பருத்தி நல்ல மகசூல் இருந்தபோதும், நல்ல விலையும் கிடைத்தது. ஒரு கிலோ பருத்தி ரூ.60 முதல் ரூ.110 வரை கிடைத்தது. இந்த ஆண்டு பருத்தியை ஆரம்பத்தில் அறுவடை செய்து கமிஷன் கடைக்கு கொண்டு சென்றபோது ரூ.65-க்கு தான் வாங்குகின்றனர்.

    விலை உயரும் என்ற நம்பிக்கையுடன்தான் தொடர்ந்து பருத்தியை பிரித்தெடுக்கும் பணி செய்து வருகிறோம். அரசு பருத்தி விலையை நிர்ணயம் செய்து விவசாயிகளின் மனக்கவலையை போக்க வேண்டும். பருத்தியில் நோய் தாக்குதல் அதிகமாக உள்ளது.

    மேலும் ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாதபுரம், திருவாடனை, ஆர்.எஸ்.மங்கலம், முதுகுளத்தூர், பரமக்குடி, கடலாடி, கமுதி, அபிராமம் உள்ளிட்ட பகுதிகளில் நெல், மிளகாய்க்கு அடுத்தபடியாக பருத்தி விவசாயம் செய்துவருகிறேம்.

    இந்த ஆண்டு பருத்தியில நோய் தாக்குதலும் அதிக மாக உள்ளது. சில நாட்களுக்கு முன் பெய்த கோடை மழை பருத்தி பயிருக்கு ஏற்ற மழையாகும். பருத்திக்கு விலை ஓரளவாவது கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×