search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பட்டியல் இன மக்கள்"

    • பட்டியல் இன மக்களுக்கு கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு இலவச நிலம் வழங்கப்பட்டது.
    • ஆனால் பயனாளிகளுக்கு இதுவரை பட்டா வழங்கப்படவில்லை.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைமை நிலைய செயலாளர் தகடூர் தமிழ்செல்வன், அமைப்பு செயலாளர் கோவேந்தன், மாவட்ட செயலாளர் ஜெயந்தி தலைமையில் விடுதலை சிறுத்தை கட்சியினர் தருமபுரி மாவட்ட கலெக்டர் சாந்தியை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.

    அதில் கூறியுள்ளதாவது, தருமபுரி மாவட்டம் ஏ.ரெட்டிஅள்ளியில் பட்டியல் இன மக்களுக்கு கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு இலவச நிலம் வழங்கப்பட்டது.

    ஆனால் பயனாளிகளுக்கு இதுவரை பட்டா வழங்கப்படவில்லை. அதன் தற்போதைய நிலையை கண்டறிய வேண்டும் என கலெக்டரிடம் வலியுறுத்தினர்.

    தருமபுரியில் கோல்டன் தெரு, அம்பேத்கர் காலனி, நியூகாலனி, பிடமனேரியில் உள்ள பட்டியல் இன ஏழை எளிய மக்களுக்காக வாங்கப்பட்ட இடத்தில் 2 ஆயிரம் பயனாளிகளுக்கு பட்டா வழங்க வேண்டும் என கலெக்டரிடம் வலியுறுத்தினர்.

    இதில் மாவட்ட செய்தி தொடர்பாளர் பாண்டியன், தருமபுரி தொகுதி செயலாளர் சக்தி, ஒன்றிய செயலாளர் ஆட்டோ கிருஷ்ணன், ராமதுரை, வசந்தன், மாதேஷ், உதயசந்திரன், பார்த்திபன், கிருஷ்ணன், பாரதி, முருகன், சுதாகர், கணேசன், பிரபு, செடிமுருகன், தனபால் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    • கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்ள பட்டியல் இன மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
    • பட்டுக்கோட்டை தாசில்தார் அலுவலகத்தில் இருதரப்பினருக்கும் இடையே தாசில்தார் பிரபாகர் தலைமையில் பேச்சு வார்த்தை நடைபெற்றது.

    பட்டுக்கோட்டை:

    தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள ஆலம்பள்ளம் கிராமத்தில் மலை மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் கடந்த பிப்ரவரி 23ஆம் தேதி கும்பாபிஷேகம் நடந்து முடிந்தது.

    அப்போது கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்ள பட்டியல் இன மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அதிகாரிகள் அனுமதியோடு பட்டியல் இன மக்கள் கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டனர்.

    கும்பாபிஷேகம் முடிந்த நிலையில் 48 நாள் மண்டகப்படி நடந்து வந்தது. அப்போது 48 நாளில் ஏதாவது ஒரு நாளாவது மண்டகப்படியில் கலந்து கொண்டு தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று பட்டியலின மக்கள் கேட்டுக்கொண்டனர். ஆனால் அதற்கும் அனுமதி கொடுக்கப்படவில்லை.

    இதனால் ஆத்திரமடைந்த பட்டியல் இன மக்கள் கோவிலுக்குள் செல்ல எங்களுக்கு அனுமதி உண்டு. நீங்கள் தடுப்பது சரியில்லை என கூறினர். இருந்த போதிலும் பட்டியல் இன மக்களை மண்டகப்படி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மற்ற இன மக்களில் சிலர் அனுமதிக்கவில்லை.

    இதையடுத்து ஊராட்சி மன்ற தலைவர் உமாராணி தலைமையில் பட்டியல் இனமக்கள் கோவிலுக்குள் செல்ல முயன்றனர். தொடர் எதிர்ப்பால் அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவியது.

    தகவல் அறிந்த பட்டுக்கோட்டை தாலுகா போலீசார், வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பேச்சு வார்த்தையில் சுமுக முடிவு எட்டப்படவில்லை. இதனையடுத்து பட்டுக்கோட்டை தாசில்தார் அலுவலகத்தில் இருதரப்பினருக்கும் இடையே தாசில்தார் பிரபாகர் தலைமையில் பேச்சு வார்த்தை நடைபெற்றது. அந்த கூட்டத்திலும் சுமுக முடிவு எட்டப்படவில்லை.

    இதையடுத்து சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்பு உள்ளதால் தீர்வு வரும் வரை மலை மாரியம்மன் கோவில் போலீசார் கட்டுப்பாட்டில் இருப்பது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து மலை மாரியம்மன் கோவிலை போலீசார் பூட்டி சீல் வைத்ததோடு போலீசார் பாதுகாப்பும் அளித்துள்ளனர். இதனால் ஆழம்பள்ளம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • பல மாவட்டங்களில் பட்டியல் இன மக்கள் வாழும் கிராமங்களில், கழிப்பறை வசதிகள் கூட அமைத்துத் தரப்படவில்லை என்ற செய்திகளும் நாளிதழ்களில் வெளிவந்திருக்கின்றன.
    • ஆதிதிராவிட நலத் துறையால் நடத்தப்படும் பள்ளிகளில் போதுமான அளவு ஆசிரியர்கள் இல்லை.

    சென்னை:

    பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    மத்திய அரசு, ஆண்டுதோறும் பட்டியல் பிரிவு மக்கள் முன்னேற்றத்திற்காக, மாநிலங்களுக்குப் பெருமளவில் நிதி ஒதுக்கி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் பல ஆயிரம் கோடிகள் நிதி, பட்டியல் பிரிவு மக்கள் பயன்பெறும் வகையில் மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்திட மாநிலங்களுக்கு வழங்கப்படுகிறது.

    இந்நிலையில் SCSP திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதி, முந்தைய ஆட்சிக் காலத்தில் (2016-2021) சுமார் 2900 கோடி பயன்படுத்தப்படாமல் இருந்து வந்திருக்கிறது, திமுக ஆட்சியில், 2021-2022 ஒரு ஆண்டிலேயே தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியில் 2418 கோடி ரூபாய் பயன்படுத்தப்படவில்லை என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் வெளிவந்திருக்கும் செய்தி மிகவும் அதிர்ச்சியளிக்கிறது.

    மேலும் 2022-23 நிதி ஆண்டு டிசம்பர் மாதம் வரையிலான தகவலின்படி மத்திய அரசு தமிழகத்தின் பட்டியிலின சகோதர சகோதரிகளுக்கு ஒதுக்கிய 16,442 கோடி ரூபாய் நிதியில், தமிழக அரசு 10,466 கோடி ரூபாய் செலவிடாமல் உள்ளது என்ற செய்தியை கேட்டு மீண்டும் ஒருமுறை அதிர்ச்சிக்குள்ளானேன் .

    கல்வி, வீட்டு வசதித் திட்டங்கள், வேலைவாய்ப்பு, நூலகங்கள், மாணவர் விடுதிகள் போன்ற அடிப்படைத் தேவைகள் பல நிறைவேற்றப்படாமல் இருக்க, அதற்காக ஒதுக்கப்பட்ட நிதியையும் முழுவதுமாகப் பயன்படுத்தாமல் இருப்பது, திமுக அரசின் மெத்தனத்தையும் சமுதாயத்தில் பின் தங்கியிருக்கும் மக்கள் மீதான கடும் அலட்சிய போக்கையும் காட்டுகிறது.

    தமிழக பட்டியல் இன சகோதர சகோதரிகள் தினம் தினம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளில் சில, மாநில பட்டியல் மற்றும் பழங்குடி மக்களுக்கான ஆணையத்தில் போதுமான அளவு ஊழியர்கள் இல்லாததும், மாநில அரசிடம் இருந்து நிதி சரிவர ஒதுக்கப்படாததும் தான் என செய்திகள் வெளிவந்திருக்கின்றன.

    பல மாவட்டங்களில் பட்டியல் இன மக்கள் வாழும் கிராமங்களில், கழிப்பறை வசதிகள் கூட அமைத்துத் தரப்படவில்லை என்ற செய்திகளும் நாளிதழ்களில் வெளிவந்திருக்கின்றன. இவை தவிர, தமிழகத்தில், ஆதிதிராவிடர் நலத்துறையால் நடத்தப்படும் மாணவர் விடுதிகள், அடிப்படை வசதிகளே இல்லாத அவல நிலையில் இருக்கின்றன. தமிழகத்தைச் சேர்ந்த பட்டியல் பிரிவு மாணவர்களுக்கு, கல்வி உதவித் தொகை சரிவர வழங்கப்படாமல் இருக்கிறது. ஆதிதிராவிட நலத் துறையால் நடத்தப்படும் பள்ளிகளில் போதுமான அளவு ஆசிரியர்கள் இல்லை.

    செயல்படுத்தப்பட வேண்டிய திட்டங்கள் எத்தனையோ இருக்க, அவற்றைப் பற்றிச் சிறிதும் கவலை இல்லாமல், மத்திய அரசு வழங்கும் நிதியையும் பயன்படுத்தாமல், தொடர்ந்து பட்டியல் பிரிவு சகோதர சகோதரிகளை வஞ்சித்து வருகிறது திறனற்ற திமுக.

    இது மட்டுமல்லாது, பட்டியல் இன மக்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை, மற்ற திட்டங்களுக்குப் பயன்படுத்துவதாகவும் திமுக அரசின் மேல் குற்றச்சாட்டு உள்ளது. இது தொடர்பாக, ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சரை பத்திரிகையாளர்கள் தொடர்பு கொண்டபோது, இடைத் தேர்தல் பிரச்சாரத்தில் இருப்பதாக அலட்சியமாகப் பதிலளித்திருக்கிறார் அமைச்சர்.

    பொதுமக்கள் மேல், திமுகவின் அக்கறை இந்த அளவில்தான் இருக்கிறது. பெயரளவில் சமூக நீதி என்று மேடை மேடையாக நாடகம் ஆடுவதை நிறுத்திவிட்டு, பட்டியல் இன சகோதர சகோதரிகள் முன்னேற்றத்துக்காக, மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் முன்னெடுத்து வரும் நலத்திட்டங்களைச் செயல்படுத்த திறனற்ற திமுக அரசு முன்வர வேண்டும் என்று தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறேன்.

    ×