search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேசிய குற்ற ஆவண காப்பகம்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 5 ஆண்டுகளில் மொத்தம் 41 ஆயிரத்து 621 பெண்கள் மாயமாகி உள்ளனர்.
    • குஜராத் மாநிலத்தில் 2019-20 ஆண்டில் அகமதாபாத்திலும், வதோதராவிலும் 4,722 பெண்கள் காணாமல் போய் உள்ளதாக 2021-ம் ஆண்டு மாநில சட்டசபையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    அகமதாபாத்:

    குஜராத் மாநிலத்தில், 5 ஆண்டுகளில் 41 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் காணாமல் போய் இருக்கிறார்கள். 2016-ம் ஆண்டு 7,105 பெண்களும், 2017-ம் ஆண்டு 7,712 பெண்களும், 2018-ம் ஆண்டு 9,246 பெண்களும், 2019-ம் ஆண்டு 9,268 பெண்களும், 2020-ம் ஆண்டு 8,290 பெண்களும் காணாமல் போய் உள்ளனர். 5 ஆண்டுகளில் மொத்தம் 41 ஆயிரத்து 621 பெண்கள் மாயமாகி உள்ளனர்.

    இந்தத் தகவல்கள், என்.சி.ஆர்.பி. என்று சொல்லப்படக்கூடிய தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டவை ஆகும்.

    அந்த மாநிலத்தில் 2019-20 ஆண்டில் அகமதாபாத்திலும், வதோதராவிலும் 4,722 பெண்கள் காணாமல் போய் உள்ளதாக 2021-ம் ஆண்டு மாநில சட்டசபையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதையொட்டி, முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரியும், குஜராத் மாநில மனித உரிமைகள் கமிஷன் உறுப்பினருமான சுதிர் சின்கா கூறும்போது, "காணாமல் போன பெண்களைப் பொறுத்தமட்டில், சிறுமிகள் மற்றும் பெண்கள் என சிலர் எப்போதாவது குஜராத்தைத் தவிர மற்ற மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு விபசாரத்தில் தள்ளப்படுவதையும் நான் கவனித்துள்ளேன்" என கூறி உள்ளார்.

    • உத்தரபிரதேசம் முதலிடம் பிடித்துள்ளது.
    • பொதுச்சொத்துக்கு சேதம் விளைவித்த வழக்குகள்தான் அதிகம்.

    புதுடெல்லி :

    மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய குற்ற ஆவண காப்பகம் 'இந்தியாவில் குற்றங்கள்-2021' என்ற புள்ளிவிவர அறிக்கையை வெளியிட்டுள்ளது.

    அதன்படி, கடந்த ஆண்டு, தேசத்துக்கு எதிரான குற்றச்செயல்களுக்காக 5 ஆயிரத்து 164 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அதாவது, நாள் ஒன்றுக்கு சராசரியாக 14 வழக்குகள் பதிவாகி உள்ளன.

    இது, கடந்த 2019 மற்றும் 2020 ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை விட குறைவாகும்.

    தேசத்துக்கு எதிரான குற்ற வழக்குகளில், தேசத்துரோக வழக்குகள், அரசாங்க ரகசிய சட்ட வழக்குகள், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்ட (உபா) வழக்குகள், பொதுச்சொத்துக்கு சேதம் விளைவித்த வழக்குகள் ஆகியவை அடங்கும்.

    தேசத்துக்கு எதிரான குற்ற வழக்குகளில், உத்தரபிரதேசம் முதலிடம் பிடித்துள்ளது. அங்கு 1,862 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 654 வழக்குகளுடன் தமிழ்நாடு 2-ம் இடம் பிடித்துள்ளது. அசாம், காஷ்மீர், மேற்கு வங்காளம் ஆகியவை அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன.

    தேசத்துக்கு எதிரான குற்ற வழக்குகளில், பொதுச்சொத்துக்கு சேதம் விளைவித்த வழக்குகள்தான் அதிகம். அத்தகைய 4 ஆயிரத்து 69 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    தேசத்துரோக வழக்குகள் 76-ம், 'உபா' சட்ட வழக்குகள் 814-ம், அரசாங்க ரகசிய சட்ட வழக்குகள் 55-ம் பதிவாகி உள்ளன. அதிகமான தேசத்துரோக வழக்குகள் ஆந்திராவிலும் (29 வழக்குகள்), அதிகமான 'உபா' சட்ட வழக்குகள் மணிப்பூரிலும் (157) பதிவு செய்யப்பட்டுள்ளன.

    இதுபோக, முந்தைய ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்ட 8 ஆயிரத்து 600 வழக்குகளில் விசாரணை நிலுவையில் உள்ளது.

    • ராஜஸ்தான் மாநிலத்தில் அதிக அளவில் கற்பழிப்பு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
    • பெண்களுக்கு எதிரான 4 லட்சத்து 28 ஆயிரத்து 278 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    புதுடெல்லி :

    கடந்த ஆண்டில் 'இந்தியாவில் நடந்த குற்றங்கள்' என்ற தலைப்பில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய குற்ற ஆவண காப்பகம் ஒரு புள்ளிவிவர அறிக்கை வெளியிட்டுள்ளது.

    அதில், கடந்த ஆண்டில் நாடு முழுவதும் 31 ஆயிரத்து 677 கற்பழிப்பு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதாவது, சராசரியாக நாள் ஒன்றுக்கு 86 கற்பழிப்பு வழக்குகள் பதிவாகி உள்ளன.

    அதிக அளவாக ராஜஸ்தான் மாநிலத்தில் 6 ஆயிரத்து 337 கற்பழிப்பு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மத்தியபிரதேசம் (2,947 வழக்குகள்), மகாராஷ்டிரா (2,496), உத்தரபிரதேசம் (2,845), டெல்லி (1,250) ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

    அதுபோல், பெண்களுக்கு எதிரான 4 லட்சத்து 28 ஆயிரத்து 278 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதாவது, மணிக்கு சராசரியாக 49 குற்ற வழக்குகள் பதிவாகி உள்ளன.

    அதிக அளவாக உத்தரபிரதேசத்தில் மட்டும் 56 ஆயிரத்து 83 வழக்குகள் பதிவாகி உள்ளன.

    பெண்களுக்கு எதிரான குற்றங்களில் கற்பழிப்பு, கற்பழித்து கொலை, வரதட்சணை கொடுமை, ஆசிட் வீச்சு, தற்கொலைக்கு தூண்டுதல், கட்டாய திருமணம், ஆள் கடத்தல் ஆகியவை அடங்கும்.

    கடந்த ஆண்டு, நாடு முழுவதும் 52 ஆயிரத்து 974 இணைய குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது முந்தைய ஆண்டை விட 5 சதவீதம் அதிகம்.

    இவற்றில் 70 சதவீத இணைய குற்ற வழக்குகள் தெலுங்கானா, உத்தரபிரதேசம், கர்நாடகா, மகாராஷ்டிரா, அசாம் ஆகிய மாநிலங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகளில், 15 இணைய பயங்கரவாத வழக்குகளும் அடங்கும்.

    • விபத்துகள் மூலம் பலியானர்கள் பட்டியலில் தமிழ்நாடு 2-ம் இடத்தை பிடித்துள்ளது.
    • 3-வது இடத்தில் மகாராஷ்டிரா உள்ளது.

    புதுடெல்லி :

    கடந்த ஆண்டு, நாடு முழுவதும் ஒவ்வொரு மாநிலத்திலும் நடந்த தற்கொலைகள் அடிப்படையில், ஒரு பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. தேசிய குற்ற ஆவண பிரிவு பதிவு செய்துள்ள தகவல்கள் அடிப்படையில், இப்பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, கடந்த ஆண்டு நாடு முழுவதும் 1 லட்சத்து 64 ஆயிரத்து 33 தற்கொலைகள் பதிவாகி உள்ளன. இது முந்தைய ஆண்டை விட 7.2 சதவீதம் அதிகம்.

    இதில், அதிக தற்கொலைகள் அடிப்படையில் மகாராஷ்டிரா மாநிலம் முதலிடம் பிடித்துள்ளது. அங்கு 22 ஆயிரத்து 207 தற்கொலைகள் நடந்தன. மொத்த தற்கொலையில் இது 13.5 சதவீதம்.

    அதையடுத்து, 18 ஆயிரத்து 925 தற்கொலைகளுடன் தமிழ்நாடு 2-வது இடத்தில் உள்ளது. மொத்த தற்கொலையில் இது 11.5 சதவீதம் ஆகும்.

    மத்தியபிரதேசம் (14 ஆயிரத்து 965 தற்கொலைகள்), மேற்கு வங்காளம் (13 ஆயிரத்து 500), கர்நாடகா (13 ஆயிரத்து 56) ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களை பெற்றுள்ளன. மேற்கண்ட 5 மாநிலங்களில் மட்டும் 50.4 சதவீத தற்கொலைகள் நடந்துள்ளன.

    அதிக மக்கள்தொகை கொண்ட உத்தரபிரதேசத்தில் வெறும் 3.6 சதவீத தற்கொலைகள்தான் நிகழ்ந்துள்ளன. யூனியன் பிரதேசங்களில் டெல்லி முதலிடத்தையும், புதுச்சேரி 2-வது இடத்தையும் பிடித்துள்ளன.

    53 பெருநகரங்களில் மட்டும் மொத்தம் 25 ஆயிரத்து 891 தற்கொலைகள் நிகழ்ந்துள்ளன.

    தொழில், பணி தொடர்பான பிரச்சினைகள், தனிமை உணர்வு, வன்முறை, குடும்ப பிரச்சினைகள், மனநல பிரச்சினைகள், மதுவுக்கு அடிமை ஆகுதல், நிதி இழப்பு, நீண்டநாள் வலி ஆகியவை தற்கொலைக்கான முக்கிய காரணங்கள் என்று தேசிய குற்ற ஆவண பிரிவு கூறியுள்ளது.

    இதுபோல், கடந்த ஆண்டில் நடந்த போக்குவரத்து விபத்துகளும், அதனால் ஏற்பட்ட உயிரிழப்புகளும் அடங்கிய பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, நாடு முழுவதும் 4 லட்சத்து 22 ஆயிரத்து 659 போக்குவரத்து விபத்துகள் நடந்துள்ளன. இது முந்தைய ஆண்டை விட (3 லட்சத்து 68 ஆயிரம்) அதிகம்.

    இந்த விபத்துகள் மூலம், அதிகபட்சமாக உத்தரபிரதேசத்தில் 24 ஆயிரத்து 711 பேர் மரணம் அடைந்துள்ளனர். 16 ஆயிரத்து 685 மரணங்களுடன் தமிழ்நாடு 2-ம் இடத்தை பிடித்துள்ளது. இது மொத்த மரணங்களில் 9.6 சதவீதம் ஆகும். 3-வது இடத்தில் மகாராஷ்டிரா உள்ளது.

    தமிழ்நாட்டில், 2020-ம் ஆண்டு 46 ஆயிரத்து 443 ஆக இருந்த போக்குவரத்து விபத்துகள் எண்ணிக்கை, 2021-ம் ஆண்டில் 57 ஆயிரத்து 90 ஆக அதிகரித்துள்ளது.

    • பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நகரமாக டெல்லி முதல் இடத்தில் உள்ளது.
    • 2-வது இடத்தில் மும்பை உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    புதுடெல்லி:

    நாட்டின் பெருநகரங்களிலேயே பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பற்றது தலைநகரான டெல்லிதான் என்று தேசிய குற்ற ஆவண காப்பகம் தெரிவித்துள்ளது.

    டெல்லியில் கடந்த ஆண்டில் பெண்களுக்கு எதிரான 13 ஆயிரத்து 892 குற்றங்கள் பதிவாகியுள்ளன. இது அதற்கு முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது 40 சதவீதத்துக்கும் கூடுதலான அதிகரிப்பு ஆகும்.

    இந்தியாவின் அனைத்து 19 பெருநகரங்களிலும் நடக்கும் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் டெல்லியில் பங்கு மட்டும் 32.20 சதவீதம் ஆகும். கடந்த ஆண்டில் டெல்லியில் தினசரி 2 சிறுமிகள் வீதம் கற்பழிக்கப்பட்டுள்ளனர். தலைநகரில் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் கடத்தல், கணவரின் கொடுமை, சிறுமி கற்பழிப்பு ஆகியவை அதிக இடம்பிடித்திருக்கின்றன.

    பெண்களுக்கு எதிரான குற்றங்களில் டெல்லிக்கு அடுத்து 2-வது இடத்தில் வர்த்தக தலைநகரான மும்பை உள்ளது. 3-வது இடத்தில் பெங்களூரு இருக்கிறது.

    மும்பையில் 5,543 வழக்குகளும், பெங்களூரில் 3,127 வழக்குகளும் பதிவாகியுள்ளது. மும்பை மற்றும் பெங்களூருவில் முறையே 12.76 சதவீதம் மற்றும் 7.2 சதவீதம் குற்றங்கள் பதிவாகியுள்ளன.

    ×