search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சத்குரு"

    • சர்வதேச நதிகள் பாதுகாப்பிற்கான நடவடிக்கைகள் தினம் இன்று கொண்டாடப்படுகிறது.
    • வளமிழந்த மண்ணால் தண்ணீரை உறிஞ்சவோ, சேர்க்கவோ முடியாது.

    கோவை:

    சர்வதேச நதிகள் அமைப்பு "சர்வதேச நதிகள் பாதுகாப்பிற்கான நடவடிக்கைகள் தினத்தை" ஆண்டுதோறும் மார்ச் 14 ஆம் தேதி கொண்டாடி வருகிறது. அந்த வகையில் இந்தாண்டு சர்வதேச நதிகள் பாதுகாப்பிற்கான நடவடிக்கைகள் தினம் இன்று கொண்டாடப்படுகிறது.

    இதையொட்டி சத்குரு தனது ட்விட்டர் பக்கத்தில் தனது கருத்தை பதிவிட்டுள்ளார். அதில் அவர் குறிபிட்டுள்ளதாவது:

    "கரிமவளம் நிறைந்த மண்ணால்தான் மழைநீரை உறிஞ்சி, நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தி, நதிகளில் நீரோடச் செய்திட முடியும்; வளமிழந்த மண்ணால் தண்ணீரை உறிஞ்சவோ, சேர்க்கவோ முடியாது. எனவே நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அல்லது வறண்டுவிடும். மண்காப்போம், நதிகளை காப்போம். இவ்வாறு அவர் குறிபிட்டுள்ளார்.

    • மனிதர்கள் நல்வாழ்வு என கருதும் அனைத்தும் பைரவியின் அருளை பெற்றால், அவர்கள் வசமாகும் என சத்குரு கருத்து
    • இந்தியாவிற்கு வெளியே பிரதிஷ்டை செய்யப்பட்ட முதல் லிங்கபைரவி தேவி கோவில் இதுவாகும்.

    பெண்மையின் சக்திமிக்க வெளிப்பாடான லிங்கபைரவி தேவி கோவிலை நேபாள நாட்டில் சத்குரு பிரதிஷ்டை செய்தார். இந்தியாவிற்கு வெளியில் முதல் முறையாக லிங்கபைரவி கோவில் நேபாள நாட்டில் தான் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இது பல்வேறு வழிகளில் சத்குருவிற்கும் நேபாளம் மற்றும் அங்குள்ள மக்களுக்கும் உள்ள ஆழமான தொடர்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாக அமைந்துள்ளது.

    லிங்கபைரவி தேவியை பிராண பிரதிஷ்டை எனும் சக்திவாய்ந்த செயல்முறை மூலம் சத்குரு பிரதிஷ்டை செய்தார். இது உயிர் ஆற்றலை பயன்படுத்தி கல்லை தெய்வமாக மாற்றும் அரிய மறைஞான செயல்முறை ஆகும். லிங்க பைரவியின் ஆற்றல் மனித அமைப்பில் உள்ள மூன்று அடிப்படை சக்கரங்களை பலப்படுத்துகிறது. இது ஒருவரின் உடல், மனம் மற்றும் சக்தி அமைப்பை உறுதிப்படுத்துகிறது. ஒருவர் வாழ்வின் உடல் மற்றும் பொருள் தன்மையிலான அம்சங்களை பெற, அனுபவிக்க அல்லது கடந்து செல்ல முனைந்தால் அவருக்கு அதையும், அதை தாண்டிய பலவற்றையும் அருள்பவளாக தேவி இருக்கிறாள்.

    லிங்கபைரவியை பற்றி சத்குரு கூறும் போது, "பைரவியின் அருளை பெறுபவர்கள் வாழ்க்கை, மரணம், வறுமை, தோல்வி குறித்த பயத்துடனோ, கவலையுடனோ வாழ வேண்டியதில்லை. மனிதர்கள் நல்வாழ்வு என கருதும் அனைத்தும் பைரவியின் அருளை பெற்றால், அவர்கள் வசமாகும்." என்றார்.

    மேலும் இது குறித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ள அவர் "ஆண்தன்மையின் ஆதிக்கம் அடைதலைக் குறிக்கிறது, பெண்தன்மை அரவணைப்பால் ஆதிக்கம் செலுத்துகிறது. நேபாளத்தில் தேவியின் பிறப்பு, அன்பு மற்றும் பக்தியின் அற்புதமான வெளிப்பாடாகும். இது பெண்தன்மை வழிபாட்டை உயிர்ப்புடன் வைத்திருக்கும் இந்த கலாச்சாரத்தின் செழுமைக்கான அஞ்சலியாகும்." என்று குறிப்பிட்டுள்ளார்.

    நேபாளத்தில் லிங்கபைரவி தேவி கோவில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள இந்த சிறப்பான தருணத்தை குறிக்கும் விதமாக மார்ச்-9 ஆம் தேதி அன்று அங்குள்ள கன்டிபத்தில் உள்ள துண்டிகேலில் இரவு 7 மணி முதல் 9.30 மணி வரை "தேவி உற்சவம்" என்ற நிகழ்வு நடைபெறவுள்ளது. இப்பைரவி உற்சவம் சத்குரு யூடியூப் பக்கத்தில் நேரலையாக ஒளிபரப்பப்படுகிறது.

    பைரவி உற்சவத்தை நேரலையில் காண:- https://www.youtube.com/watch?v=PSlrccb6bXI

    இந்நிகழ்வில் இசை, நடனம், மற்றும் பக்தி ஆகியவற்றை வெளிபடுத்தும் ஆழமான கலாச்சார கொண்டாட்டம் நடைபெறவிருக்கிறது. இது லிங்கபைரவியின் தீவிரமான ஆற்றல் மற்றும் அருளில் உறைவதற்கும் அனுபவிப்பதற்குமான வாய்ப்பை வழங்குகிறது. இந்த வேளையில், சத்குரு நடத்தவிருக்கும் சிறப்பு சத்சங்கத்தில் தேவியின் பல்வேறு அம்சங்களை வெளிப்படுத்துவதோடு, பங்கேற்பாளர்களுக்கு சக்தி வாய்ந்த தியானங்களையும் வழிநடத்துகிறார்.

    நேபாளத்தில் உள்ள லிங்கபைரவி தேவி, இந்தியாவிற்கு வெளியே பிரதிஷ்டை செய்யப்பட்ட முதல் தேவி கோவில் ஆகும். இந்தியாவில் கோவை ஈஷா யோகா மையம், கோபிசெட்டிப்பாளையம், சேலம் மற்றும் புதுடெல்லி ஆகிய இடங்களில் லிங்க பைரவி கோவில்கள் அமைந்துள்ளன.

    இந்த கோவில்கள் அனைத்தும் தனித்துவமான வகையில் பெண்களால் நிர்வகிக்கப்படுகின்றது. ஆண்கள், பெண்கள் என இருபாலரும் தேவியை தரிசிக்க வருகின்றனர் என்றாலும், பெண்கள் மட்டுமே கருவறைக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். இவர்கள் வெவ்வேறு சாதிகள், மதங்கள் மற்றும் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பெண்கள் ஆண்களைவிட தாழ்ந்தவர்கள் எனும் கருத்து அபத்தமானது.
    • ஒரு ஆணே பெண்ணிலிருந்து பிறக்கிறான் எனும்போது அவன் உயர்வாகவும் அவள் தாழ்வாகவும் எப்படி இருக்கமுடியும்.

    சர்வதேச அளவில் ஆண்டுதோறும் மார்ச் 8ஆம் தேதி மகளிர் தினமாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இந்தாண்டு இன்று கொண்டாடப்படும் மகளிர் தினத்தையொட்டி சத்குரு அவர்கள் ட்விட்டரில் பதிவொன்றை பதிவிட்டுள்ளார்

    அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது,

    "பெண்கள் ஆண்களைவிட தாழ்ந்தவர்கள் எனும் கருத்து அபத்தமானது. ஒரு ஆணே பெண்ணிலிருந்து பிறக்கிறான் எனும்போது அவன் உயர்வாகவும் அவள் தாழ்வாகவும் எப்படி இருக்கமுடியும்."

    https://twitter.com/IshaTamil/status/1633293963330490368?t=WErZ94b9C6OJYkLPee0R-A&s=19

    இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

    • உலக காஷ்மீரி பண்டிட் புலம்பெயர்ந்தோர் கூட்டமைப்பு என்ற அமைப்பை தொடங்கி உள்ளனர்.
    • இந்த அமைப்பு சார்பில் நடந்த மாநாட்டில் சத்குரு பங்கேற்று சிறப்புரை நிகழ்த்தினார்.

    ஜம்மு:

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நிகழ்ந்த காஷ்மீரி பண்டிட்கள் மீதான இனப் படுகொலையை உலகம் அங்கீகரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் புலம்பெயர்ந்த காஷ்மீரி பண்டிட்கள் ஒன்றிணைந்து, உலக காஷ்மீரி பண்டிட் புலம்பெயர்ந்தோர் கூட்டமைப்பு என்ற அமைப்பை தொடங்கி உள்ளனர். இந்த அமைப்பு சார்பில் நடந்த மாநாட்டில் சத்குரு பங்கேற்று சிறப்புரை நிகழ்த்தினார்.

    அந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

    உலகளவில் காஷ்மீரி பண்டிட்கள் மீதான கருத்துருவாக்கத்தை மாற்ற வேண்டியது மிகவும் அவசியம். குறைந்தப்பட்சம் இந்தியாவில் வாழும் அனைத்து இந்தியர்களும் நம்முடைய காஷ்மீரி பண்டிட்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட அவலங்களைக் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். தனி நபராகவும் குடும்பமாகவும் நீங்கள் சந்தித்த வலிகளை 10 முதல் 20 நிமிட குறும்படங்களாக தயாரித்து வெளியிட வேண்டும். இதற்கு திரையரங்குகள் தேவையில்லை. நம் அனைவரிடமும் மொபைல் போன்களும், கம்ப்யூட்டர்களும் உள்ளன. இந்த தொழில்நுட்பங்களே போதுமானது.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவுகளில், உங்கள் ஒவ்வொருவருடைய ஆழமான வலிகளுக்கும் என் இதயம் அனுதாபம் கொள்கிறது. காஷ்மீர் கருத்துருவாக்கத்தை மீண்டும் பேச வேண்டிய நேரமிது. காஷ்மீர் இளைஞர்கள் இந்தப் பொறுப்பை கையிலெடுக்க வேண்டும். காஷ்மீரின் தலையெழுத்தை மாற்றி எழுதவேண்டும்.

    நம்மால் நடந்து முடிந்தவற்றை சரிசெய்ய முடியாது. ஆனால், கொண்டாட்டம் மிகுந்த எதிர்காலத்தை உருவாக்க நம்மால் உறுதி எடுக்கமுடியும். காஷ்மீரின் எதிர்காலம் மற்றும் கருத்துருவாக்கத்தை மாற்றும் பணியில் இளைஞர்கள் சக்திவாய்ந்த மற்றும் பொறுப்பு மிக்கவர்களாக திகழ வேண்டும். என் வாழ்த்துக்களும், ஆசியும் உங்களுடன் இருக்கும்." என பதிவிட்டுள்ளார்.

    இதுதவிர, காஷ்மீரின் செழிப்பான கலாச்சாரம் மற்றும் ஆன்மீக அம்சங்களைப் பாதுகாக்க, ஆதரவு அளிக்க தான் தயாராக இருக்கிறேன். இந்தியாவின் தென் பகுதிகளில் நீங்கள் காஷ்மீர் தினம் என்ற பெயரில் ஒரு நிகழ்ச்சியை நடத்தலாம். அதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் நாங்கள் செய்து தருகிறோம். அந்நிகழ்ச்சி மூலம் உங்களுடைய கலை, இலக்கியம், இசை என அனைத்தையும் பிற மக்கள் அறிந்து கொள்ளட்டும். உங்களுடைய கதைகள் வலிகளுடன் மட்டும் நின்று விடாமல், காஷ்மீர் கலாச்சாரத்தின் அழகையும், உங்களுக்குள் இருக்கும் துடிப்பான அதிர்வுகளையும் வெளிப்படுத்தும் வண்ணம் இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

    • ஆண்டு முழுவதும் எந்த நாளிலும், தமிழ் குழந்தைகள் தேவாரம் பாடி பரிசுகளை பெற்றுக் கொள்ளலாம்.
    • தமிழ்நாட்டுக் குழந்தைகள் தங்கள் ஆழமான கலாச்சாரத்தை அறியவேண்டும் என சத்குரு கூறியுள்ளார்.

    "பக்தி நயம் ததும்பும் தேவாரம் பாடல்களை ஆதியோகி முன்பு பாடி அர்ப்பணிக்கும் குழந்தைகளுக்கு தினமும் சிறப்பு பரிசு வழங்கப்படும்" என சத்குரு தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "தேவாரம் ஆழமான பக்தி மற்றும் உயிரோட்டத்தை வளர்த்து, இந்த தன்மைகளை ஒருவரது வாழ்வின் அடித்தளமாக்குகிறது. ஆதியோகி முன் தேவாரம் பாடும் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தினமும் சிறப்புப் பரிசுகளை வழங்க உள்ளோம்! தமிழ்நாட்டுக் குழந்தைகள் தங்கள் ஆழமான கலாச்சாரத்தை அறியவேண்டும்" என கூறியுள்ளார்.

    முன்னதாக, இது தொடர்பாக ஈஷா மஹாசிவராத்திரி விழாவில் சத்குரு பேசுகையில், "12 வயதுக்கு கீழ் உள்ள தமிழ் குழந்தைகள் நம் நாட்டில் எங்கிருந்தாலும், வெளி நாடுகளில் இருந்தாலும் இங்கு வந்து தேவாரப் பாடல் பாடினால் அவர்களுக்கு சிறப்பு பரிசு அளிக்கப்படும். இது ஆண்டு முழுவதும் எந்த நாளிலும், தமிழ் குழந்தைகள் எங்கிருந்து வந்தாலும் ஆதியோகி முன்பு தேவாரம் பாடிவிட்டு அவர்கள் பரிசுகளை பெற்றுக் கொள்ளலாம். கிராமங்கள்தோறும் ஆயிரக்கணக்கான குழந்தைகள் தேவாரம் கற்றுக்கொண்டு ஆதியோகி முன்பு தேவாரம் பாட நீங்கள் அனைவரும் உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும். இதை நாம் அனைவரும் நிகழ செய்ய வேண்டும்" எனக் கூறினார்.

    மஹாசிவராத்திரி விழாவில் 'தில்லை வாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன்' என்ற தேவாரப் பாடலுடன் துவங்கியது. அதேபோல் விழா நிறைவு பெறுவதற்கு முன்னரும் 'மாதர் பிறை கண்ணி யானை' என்ற தேவாரப் பாடல் பாடப்பட்டது. ஈஷாவில் உள்ள சம்ஸ்கிருதி பள்ளி மாணவர்களுக்கு தேவார, திருவாசகப் பாடல்கள் கற்றுக் கொடுக்கப்படுகிறது. அதேபோல் அந்த மாணவர்கள் பாடி சவுண்ட்ஸ் ஆஃப் ஈஷா வெளியிட்ட தேவார பாடல் ஆல்பம் மிகுந்த வரவேற்பை பெற்றதோடு அனைவராலும் வெகுவாக பாராட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • தலித் மக்கள் 80 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக முத்துமாரியம்மன் கோவிலுக்குள் நுழைந்து வழிபாடு செய்தனர்.
    • ஈஷாவில் உள்ள தியானலிங்கம் மற்றும் லிங்க பைரவியில் அனைத்து தரப்பு மக்களும் பாகுபாடின்றி அனுமதிக்கப்படுகின்றனர்.

    கோவை:

    திருவண்ணாமலை மாவட்டம் தென்முடியனூர் கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலுக்குள் தலித் மக்கள் செல்ல கடந்த 80 ஆண்டுகளாக அனுமதி வழங்கப்படாமல் இருந்தது. இதையடுத்து, அந்தப் பகுதியை சேர்ந்த தலித் மக்கள் மாவட்ட ஆட்சிரியரிடம் இது குறித்து புகார் அளித்தனர்.

    இதை தொடர்ந்து கடந்த வாரம் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை அதிகாரிகளின் முன்னிலையில் தலித் மக்கள் 80 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக முத்துமாரியம்மன் கோவிலுக்குள் நுழைந்து வழிபாடு செய்தனர்.

    இச்சம்பவம் தொடர்பாக சத்குரு அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "தெய்வீகமும் பாகுபாடும் ஒன்றாக இருக்க முடியாதவை. தெய்வீகத்தின் சன்னிதியில் மனிதர்களுக்கிடையே நாம் பிரித்துப் பார்ப்பதே வெட்கப்பட வேண்டிய விஷயம். யார் தலித், யார் தலித் இல்லை என்று நாம் யோசிக்கவே கூடாது. தென்முடியனூருக்கு வாழ்த்துக்கள்" என தெரிவித்துள்ளார்.

    ஈஷாவில் உள்ள தியானலிங்கம் மற்றும் லிங்க பைரவியில் துவக்கம் முதலே அனைத்து தரப்பு மக்களும் எந்த வித பாகுபாடின்றி அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் அமாவாசை, பவுர்ணமி நாட்களில் யார் வேண்டுமானாலும் தியானலிங்கத்திற்கு பால் மற்றும் தண்ணீர் அபிஷேகம் செய்யும் வாய்ப்பும் வழங்கப்பட்டு வருவதாக ஈஷா தெரிவித்துள்ளது.

    • கனிவான பாரதம் உருவாக்குவதற்கு ஒவ்வொரு குடிமகனும் தொடர்ந்து பங்களிக்க வேண்டும் என சத்குரு தெரிவித்துள்ளார்.
    • ஈஷா சம்ஸ்கிரிதி மற்றும் ஈஷா ஹோம் ஸ்கூல் பள்ளி மாணவர்கள் தேசப் பக்தி பாடல்களை பாடினர்.

    ஈஷாவில் இன்று நடைபெற்ற குடியரசு தின விழாவில் சத்குரு, தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். விழாவில் அவர் பேசியதாவது:

    பாரத தேசத்தில் வாழும் நாம் ஜாதி, மதம், மொழி, இனம், உணவு பழக்கம், கலாச்சாரம் என பல விதங்களில் வேறுப்பட்டு உள்ளோம். நம்மிடம் எவ்வளவு வேறுபாடுகள் இருந்தாலும் நாம் அனைவரும் பல நூறு ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்து வருகிறோம். சுதந்திரத்திற்கு முன்பு நம் தேசத்தை 600-க்கும் மேற்பட்ட குறு நில அரசர்கள் ஆட்சி செய்து வந்தனர். இருப்பினும், வெளியில் இருந்து வந்தவர்கள் அனைவரும் நம்மை இந்துஸ்தான் அல்லது பாரதம் என்று ஒற்றை பெயர் வைத்தே அழைத்தனர்.

    நம்மிடம் இருக்கும் இந்த பன்மைத்துவத்தையும், வேறுபாடுகளையும் பயன்படுத்தி நமக்குள் பிரிவினையை உருவாக்கும் செயல்கள் கடந்த 600 முதல் 700 ஆண்டுகளில் மிகவும் தீவிரமாக நடந்துள்ளன. நம் தேசத்தின் மீது படையெடுத்தவர்களும், ஆக்கிரமித்தவர்களும் இதை பல வழிகளில் மிகவும் திட்டமிட்டு செய்துள்ளனர். குறிப்பாக, நம் தேசத்தின் பொருளாதார முதுகெலும்பை தகர்ப்பதற்கும் அவர்கள் செயல் செய்துள்ளார்கள்.

    300 ஆண்டுகளுக்கு முன்பு வரை உலகளவில் பொருளாதாரத்தில் வளமான தேசமாக நம் பாரத தேசம் இருந்தது. அந்த நிலையை மீண்டும் அடையும் முயற்சியில் நாம் தற்போது ஈடுப்பட்டு உள்ளோம். பொருளாதார பலம் இல்லாமல் கலாச்சாரம், ஆன்மீக விழுமியங்கள் என நாட்டில் உள்ள எதையும் நம்மால் பாதுகாக்க முடியாது. மேலும், நம்மிடம் இருக்கும் பல விதமான வேறுபாடுகளை கடந்து எது நம்மை ஒற்றுமையாக வைத்துள்ளது என்பதை நீங்கள் கண்டறிந்து அதைப் மேலும் பலப்படுத்த வேண்டும்.

    இவ்வாறு சத்குரு கூறினார்.

    மேலும், குடியரசு தினத்தை முன்னிட்டு சத்குரு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "#குடியரசுதினம் - மிகப்பெரிய ஜனநாயகமாக ஆனது மட்டுமல்லாமல், துடிப்பான, வேற்றுமைகளுடன் ஒற்றுமையான தேசியத்தின் முத்திரையாக மாறியுள்ள நம் அன்பான பாரதத்தின் அருமையான பயணத்தின் நினைவூட்டல். வலிமையான, அனைவரையும் இணைத்துக்கொள்ளக்கூடிய, கனிவான #பாரதம் உருவாக்குவதற்கு ஒவ்வொரு குடிமகனும் தொடர்ந்து பங்களிக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

    ஈஷாவில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் ஈஷா சம்ஸ்கிரிதி மற்றும் ஈஷா ஹோம் ஸ்கூல் பள்ளி மாணவர்கள் தேசப் பக்தி பாடல்களை பாடி விழாவை சிறப்பித்தனர்.

    இது தவிர, ஈஷாவின் பிரதான நுழைவு வாயிலான மலைவாசலில் இக்கரை போளூவாம்பட்டி பஞ்சாயத்து தலைவர் சதானந்தம் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் பழங்குடி மக்கள் உட்பட நூற்றுக்கணக்கான கிராம மக்கள் பங்கேற்றனர்.

    • சிக்கபல்லாபுரத்தில் 112 அடியில் ஆதியோகி திருவுருவம் உருவாக்கப்பட்டது.
    • கோவை ஈஷா ஆதியோகி திருவுருவம் கின்னஸ் சாதனை பட்டியலில் இடம்பெற்றுள்ளது

    பெங்களூரு:

    கோவையில் உள்ள ஆதியோகி திருவுருவத்தை பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2017-ம் ஆண்டு திறந்து வைத்தார். இதையடுத்து, ஆதியோகியை தரிசனம் செய்வதற்காக இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் இருந்து ஆண்டுதோறும் கோடிக்கணக்கான மக்கள் கோவைக்கு வருகை தருகின்றனர். ஆதியோகி திருவுருவமானது உலகளவில் மிகப்பெரிய மார்பளவு சிலை என்ற அடிப்படையில் கின்னஸ் சாதனை பட்டியலிலும் இடம்பெற்றுள்ளது.

    இதற்கிடையே, கோவை ஈஷா யோகா மையத்தில் அமைந்துள்ள ஆதியோகி திருவுருவம் போன்று பெங்களூரு அருகே உள்ள சிக்கபல்லாபுரத்தில் 112 அடியில் ஆதியோகி திருவுருவம் உருவாக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், மகர சங்கராந்தி தினமான நேற்று சத்குரு முன்னிலையில் நடைபெற்ற இவ்விழாவில் முதல் மந்திரி பசவராஜ் பொம்மை கலந்துகொண்டு ஆதியோகி திருவுருவத்தை திறந்து வைத்தார்.

    திறப்பு விழாவின் ஒரு பகுதியாக, ஆதியோகி சப்த ரிஷிகளுக்கு யோக விஞ்ஞானத்தை பரிமாறிய வரலாற்றை 3டி ஒளி, ஒலி காட்சியாக விவரிக்கும் கண்ணை கவரும் 'ஆதியோகி திவ்ய தரிசனம்' நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும், ஈஷா சம்ஸ்கிருதி மாணவர்கள் மற்றும் சவுண்ட்ஸ் ஆப் ஈஷா குழுவினரின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

    இதற்கு முன்பு, கடந்த அக்டோபர் மாதம் அங்கு நாக பிரதிஷ்டை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

    • ஆதியோகிக்கு முன்பாக, சக்திவாய்ந்த யோகேஸ்வர லிங்கத்தை சத்குரு பிரதிஷ்டை செய்ய உள்ளார்.
    • லிங்க பைரவி, இரண்டு தீர்த்த குண்டங்கள், ஈஷா சம்ஸ்கிரிதி பள்ளி படிப்படியாக உருவாக்கப்பட உள்ளன.

    கோவை ஈஷா யோகா மையத்தில் அமைந்துள்ள உலக புகழ்பெற்ற ஆதியோகி திருவுருவத்தை போன்று, பெங்களூரு அருகே உள்ள சிக்கபல்லாபுரத்தில் 112 அடியில் ஆதியோகி திருவுருவம் ஜனவரி 15-ம் தேதி திறக்கப்பட உள்ளது.

    மகர சங்கராந்தி தினமான நாளை மறுநாள் சத்குரு முன்னிலையில் நடைபெறும் இவ்விழாவில் துணை குடியரசு தலைவர் ஜகதீப் தன்கர் கலந்துகொண்டு ஆதியோகி திருவுருவத்தை திறந்து வைக்க உள்ளார். கர்நாடக மாநில ஆளுநர் தவார் சந்த் கெலாட், முதல்வர் பசவராஜ் பொம்மை உள்ளிட்ட பல முக்கிய விருந்தினர்கள் இவ்விழாவில் பங்கேற்க உள்ளனர். மேலும், சத்குரு சந்நிதியில் நடைபெறும் இந்த பிரமாண்ட விழாவில் சுற்றுவட்டார கிராம மக்கள் உட்பட ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

    திறப்பு விழாவின் ஒரு பகுதியாக, ஆதியோகி சப்தரிஷிகளுக்கு யோக விஞ்ஞானத்தை பரிமாறிய வரலாற்றை 3டி ஒளி, ஒலி காட்சியாக விவரிக்கும் கண்ணை கவரும் 'ஆதியோகி திவ்ய தரிசனம்' நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. மேலும், ஈஷா சம்ஸ்கிருதி மாணவர்கள் மற்றும் சவுண்ட்ஸ் ஆப் ஈஷா குழுவினரின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும். இவ்விழாவை சத்குரு செயலி மற்றும் சத்குரு யூடியூப் சேனல், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் சேனல்களில் நேரலையில் காணலாம்.

    முன்னதாக, ஆதியோகிக்கு முன்பாக, சக்திவாய்ந்த யோகேஸ்வர லிங்கத்தை சத்குரு பிரதிஷ்டை செய்ய உள்ளார். இதற்கு முன்பு, கடந்த அக்டோபர் மாதம் அங்கு நாக பிரதிஷ்டை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

    மக்களின் ஆன்மீக வளர்ச்சிக்காக சிக்கபல்லாபுரத்தில் உருவாக்கப்பட்டுள்ள சத்குரு சந்நிதியில், ஆதியோகி மட்டுமின்றி, கோவை ஈஷா யோகா மையத்தில் இருப்பதை போன்று லிங்க பைரவி, இரண்டு தீர்த்த குண்டங்கள், ஈஷா சம்ஸ்கிரிதி பள்ளி, ஈஷா ஹோம் ஸ்கூல், ஈஷா லீடர்ஷிப் அகாடமி ஆகிய கட்டமைப்புகளும் படிப்படியாக உருவாக்கப்பட உள்ளன.

    கோவையில் உள்ள ஆதியோகி திருவுருவத்தை பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2017-ம் ஆண்டு திறந்து வைத்தார். இதையடுத்து, ஆதியோகியை தரிசனம் செய்வதற்காக இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் இருந்து ஆண்டுதோறும் கோடிக்கணக்கான மக்கள் கோவைக்கு வருகை தருகின்றனர். ஆதியோகி திருவுருவமானது உலகளவில் மிகப்பெரிய மார்பளவு சிலை என்ற அடிப்படையில் கின்னஸ் சாதனை பட்டியலிலும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    மனிதகுலம் அனைத்திற்கும் 'ஒரு துளி ஆன்மீகத்தை' வழங்க உலகம் முழுவதும் 'ஆன்மீக கட்டமைப்புகளை' நிறுவ வேண்டும் என்பது சத்குருவின் நோக்கம். சத்குரு சந்நிதி என்பது தனி மனிதர்களின் ஆன்மீக வளர்ச்சியை, முன்னேற்றத்தை ஊக்குவிக்கிற, பிரதிஷ்டை செய்யப்பட்ட சக்தி மிகுந்த இடமாகும். இது மனம், உடல், உணர்வுகள் மற்றும் ஆற்றலுக்கு தேவையான கருவிகள் மற்றும் தொழில்நுட்பங்களை பண்டைய யோக அறிவியலில் இருந்து நமக்கு வழங்குகிறது. ஒரு மனிதனின் உள்நிலையை மேம்படுத்துவதும், சாதகர்களின் முழு திறனை உணரச்செய்யும் வாய்ப்பை உருவாக்குவதும் இதன் நோக்கம்.

    மனித அமைப்பிலுள்ள ஐந்து சக்கரங்களை வெளிப்படுத்தும் வகையில் ஆதியோகியின் அருகே யோகேஸ்வர லிங்கத்தை சத்குரு பிரதிஷ்டை செய்கிறார். யோகேஸ்வர லிங்கத்தின் இருப்பில் ஆதியோகி உயிர்ப்புமிக்க அம்சமாக மாறுவார்.

    • அர்ஜென்டினா அணி ‘பெனால்டி ஷூட் அவுட்டில்’ 4-2 என்ற கோல் கணக்கில் பிரான்ஸை வீழ்த்தியது.
    • ஏராளமானோர் தங்களுடைய சிறப்பான கால்பந்து ஆட்டத்தை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தனர்.

    கத்தாரில் நேற்று நடைபெற்ற உலக கோப்பை இறுதிப் போட்டியை சத்குரு நேரில் சென்று பார்வையிட்டார். மிகவும் விறுவிறுப்பாக சென்ற இறுதிப் போட்டியில் மிகத் திறமையாக விளையாடிய இரு அணிகளுக்கும் சத்குரு பாராட்டு தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "அற்புதமான இறுதிச்சுற்று. இது கால்பந்துக்கு கிடைத்துள்ள வெற்றி! உண்மையிலேயே மிகத் திறமையாக விளையாடி அசத்திய அர்ஜென்டினா & பிரான்சு அணிகளுக்கு பாராட்டுகள்" என பதிவிட்டுள்ளார்.

    பரபரப்புக்கு பஞ்சம் இல்லாத இந்தப் போட்டியில் அர்ஜென்டினா அணி 'பெனால்டி ஷூட் அவுட்டில்' 4-2 என்ற கோல் கணக்கில் பிரான்ஸை வீழ்த்தியது.

    உலக அளவில் அதிகப்படியான விளையாட்டு ரசிகர்களால் கொண்டாடப்படும் உலக கோப்பை கால்பந்து நடைபெற்ற சமயத்தில், 'மண் காப்போம்'இயக்கம் குறித்த விழிப்புணர்வை அதிகப்படுத்தும் செயலில் சத்குரு ஈடுப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதற்காக அவர் #ScoreforSoil என்ற விழிப்புணர்வு பிரச்சாரத்தை அவர் தொடங்கினார். இதையடுத்து ஏராளமானோர் 'மண் காப்போம்' இயக்கத்திற்கு தங்களது ஆதரவை வெளிக்காட்டும் விதமாக, தங்களுடைய சிறப்பான கால்பந்து ஆட்டத்தை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தனர்.

    உலகளவில் விவசாய நிலங்களில் கரிம சத்தின் அளவை குறைந்தப்பட்சம் 3 முதல் 6 சதவீதமாக அதிகரிக்க தேவையான சட்டங்களை அந்தந்த நாடுகள் உருவாக்கி செயல்படுத்த வேண்டும் என்பதே 'மண் காப்போம்' இயக்கத்தின் பிரதான குறிக்கோள் ஆகும்.

    • கால்பந்தாட்ட சீசன் வேளையில், வளமான மண்ணை நாம் இழந்து கொண்டு இருக்கிறோம்.
    • வளமான நிலம் பாலைவனமாகி கொண்டு இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

    உலக மண் தினமான இன்று, மண் காப்போம் இயக்கம் சார்பில் பெங்களூருவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உலகளாவிய விழிப்புணர்வு பிரச்சாரத்தை சத்குரு தொடங்கி வைத்தார். கால்பந்தை பயன்படுத்தி சமூக வலைத்தளங்களின் வாயிலாக மண் வளப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பது இப்பிரச்சாரத்தின் நோக்கமாகும்.

    உலக கோப்பை கால்பந்து போட்டிகள் நடைபெற்றும் இவ்வேளையில் இளைஞர்கள் மற்றும் பொது மக்கள் தங்களுடைய சிறந்த கால்பந்தாட்ட வீடியோவை #ScoreForSoil என்ற ஹாஸ் டேக்கை பயன்படுத்தி சமூக வலைத்தளங்களில் பதிவிடலாம். மேலும், அந்த வீடியோவில் மண் வளப் பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்தும் அவர்கள் பேசி விழிப்புணர்வு ஏற்படுத்தலாம். 


    நிகழ்ச்சியில் சத்குரு கூறுகையில், நாம் கடந்த 25 ஆண்டுகளில் மட்டும் உலகின் மண் வளத்தை 10 சதவீதம் இழந்துவிட்டோம். கால்பந்தாட்ட சீசன் நடைபெறும் இவ்வேளையில், உலகளவில் ஒவ்வொரு 5 வினாடியும் ஒரு கால்பந்தாட்ட மைதானம் அளவிற்கு வளமான மண்ணை நாம் இழந்து கொண்டு இருக்கிறோம்; வளமான நிலம் பாலைவனமாகி கொண்டு இருக்கிறது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்

    எனவே, மண் அழிவை தடுத்து, இழந்த மண் வளத்தை மீட்டெடுப்பதற்காக நாம் மண் காப்போம் இயக்கத்தை கடந்த மார்ச் மாதம் தொடங்கினோம். இவ்வியக்கம் தொடங்கப்பட்ட பிறகு உலகளவில் மண் தொடர்பான பார்வை மாறியுள்ளது. கடந்தாண்டு க்ளாகோவில் நடைபெற்ற சுற்றுச்சூழல் மாநாட்டில் பருவநிலை மாற்றத்தில் முக்கிய பங்காற்றும் மண் குறித்து யாரும் பேசவில்லை.

    ஆனால், மண் காப்போம் இயக்கத்தின் பிரச்சாரத்தால் இந்தாண்டு எகிப்தில் நடைபெற்ற மாநாட்டில் மண் வளம் குறித்த முக்கிய கலந்துரையாடல்கள் நிகழ்ந்துள்ளது. எனவே, மண் வள மீட்டெடுப்பு கொள்கைகள் உலகளவில் கட்டாயம் உருவாக்கப்படும் என்பதில் எனக்கு எவ்வித சந்தேகமும் இல்லை. ஆனால், அது எந்த வேகத்தில் நடக்கும் என்பது மட்டுமே என்னுடைய கவலையாக இருக்கிறது.

    எனவே, இந்த வேகத்தை துரிதப்படுத்துவதற்கு மக்கள் அனைவரும் பல்வேறு வழிகளில் மண் குறித்து தொடர்ந்து இடைவிடாமல் பேசி கொண்டே இருக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். பெங்களூருவில் மண் வளப் பாதுகாப்பு தொடர்பான மோட்டார் சைக்கிள் பேரணியிலும் சத்குரு பங்கேற்றார்.

    • பாரத கலாச்சாரத்தின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி திருநாள் நாளை கொண்டாடப்பட உள்ளது.
    • தெளிவு என்னும் ஒளியை ஏற்றினால் அறியாமை இருள் தானாக மறைந்துவிடும் என சத்குரு வாழ்த்து தெரிவித்தார்.

    கோவை:

    பாரத கலாச்சாரத்தின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி திருநாள் நாளை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, சத்குரு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி:

    அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

    கலாச்சார ரீதியாக தீபாவளி தினமானது நரகாசூரனை கிருஷ்ணர் வதம் செய்த தினமாகவும், வனவாசம் முடித்து அயோத்தியாவிற்கு திரும்பிய ராமரை மக்கள் தீபங்களுடன் வரவேற்ற தினமாகவும் கொண்டாடப்படுகிறது. அடிப்படையில், இந்நாள் அறியாமையை வீழ்த்தி தெளிவு என்னும் வெற்றியைப் பெறும் சாத்தியத்தைக் குறிக்கும் நாளாகும்.

    தீபம் என்றால் வெளிச்சம். பொதுவாக வெளிச்சம் தெளிவோடும், இருள் அறியாமையோடும் ஒப்பிடப்படுகிறது. இருள் என்பது வெளியில் இருந்தாலும், நமக்குள் இருந்தாலும் நம் கண் முன் இருப்பதே நமக்கு புரியாது. தீபாவளி என்பது வெறும் வீட்டில் விளக்கேற்றும் தினம் கிடையாது. நமக்குள்ளும் விளக்கு ஏற்ற வேண்டும்.

    வீட்டில் விளக்கு ஏற்றுவதற்கு சில குறிப்பிட்ட காரணங்கள் இருக்கிறது. மின் விளக்குகள் இல்லாத காலத்தில் எண்ணெய் விளக்கு என்பது மிகவும் முக்கியமான விஷயமாக இருந்தது. அப்போது சூரியன் மறைந்த பிறகு விளக்கின் தேவை அத்தியாவசியமானதாக இருந்தது. அதன் முக்கியத்துவத்தை நீங்கள் உணர வேண்டுமென்றால், தீபாவளி நாளன்று மின் விளக்குகளுக்கு பதிலாக எண்ணெய் விளக்குகளை வீட்டில் ஏற்றுங்கள். அப்படி செய்தால், அதன் தாக்கத்தையும் ஆனந்தத்தையும் நீங்கள் உணருவீர்கள். அது வீட்டின் சூழ்நிலையையே மாற்றிவிடும். பூஜை அறையில் தினமும் எண்ணெய் விளக்குகளை ஏற்றினால், உங்கள் ஆரோக்கியமும் மேம்படும்.

    வெளியில் மட்டுமின்றி, உங்களுக்குள்ளும் வெளிச்சம் வரவேண்டும். உங்களுக்குள் தெளிவை ஏற்படுத்த ஈஷாவின் மூலம் பல யோக கருவிகளை நாங்கள் இலவசமாக வழங்குகிறோம். அதனை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

    அறியாமை என்னும் இருளை நீக்குவதற்கு அதனுடன் நீங்கள் போராடக் கூடாது. இருள் நிறைந்த ஒரு இடத்தில் ஒரு ஒளி விளக்கை ஏற்றினால், இருள் காணாமல் போய்விடும். அதேபோல், தெளிவு பிறந்தால் அறியாமை இல்லாமல் போய்விடும். இந்த தீபாவளி திருநாள் உங்கள் வாழ்வில் ஒரு மகத்தான நாளாக இருக்க வேண்டும் என்னுடைய ஆசை, என்னுடைய அருள் என தெரிவித்துள்ளார்.

    ×