search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மகளிர் தினம்"

    • பழங்குடியின மக்களுடன் கேக் வெட்டி கொண்டாடினர்.
    • அதிகாரிகள் அங்கு வைக்கப்பட்டிருந்த செல்பி ஸ்டாண்ட் முன்பு நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

    கோத்தகிரி:

    நீலகிரி மாவட்ட சமூக நலத்துறை சார்பில் "தனித்திறமையை வளர்த்து முன்னேற்றத்தை விரிவுபடுத்துங்கள்" என்கிற வாசகத்தை மையமாக கொண்டு, கோத்தகிரி குஞ்சப்பனை இருளர் பழங்குடியின கிராமத்தில், கலெக்டர் அருணா தலைமையில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி முன்னிலை வகித்தார்.

    தொடர்ந்து பெண்கள், குழந்தைகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து நடைபெற்ற கலைநிகழ்ச்சியில் கலெக்டர் அருணா மற்றும் கீர்த்தி பிரியதர்ஷினி உள்ளிட்ட அதிகாரிகள் பழங்குடியின பெண்கள் மற்றும் குழந்தைகளுடன் நடனமாடி மகிழ்ந்தனர்.

    பின்னர் பழங்குடியின மக்களுடன் கேக் வெட்டி கொண்டாடினர். தொடர்ந்து அதிகாரிகள் அங்கு வைக்கப்பட்டிருந்த செல்பி ஸ்டாண்ட் முன்பு நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

    இதில் மாவட்ட சமூகநல அலுவலர் பிரவீனாதேவி, கோத்தகிரி தாசில்தார் கோமதி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விஜயா உள்பட திரளானோர் கலந்து கொண்டனர். 

    • நிதி ஆதாரங்களை பொறுத்தவரையில் 50 கோடி அளவிற்கு ஏற்படுத்தப்பட்டுள்ள வங்கி கணக்குகளில் பெண்களும் அதிகமாக உள்ளனர்.
    • 2047-ம் ஆண்டுக்குள் நமது தேசம் தன்னிறைவு பெற்றுள்ள நாடாக திகழ வேண்டும் என்பது நமது நோக்கம்.

    சென்னை:

    சர்வதேச மகளிர் தினத்தையொட்டி சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் உள்ள அவ்வையார் சிலைக்கு கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டு உள்ள திருவுருவப்படத்திற்கு கவர்னர் ஆர்.என்.ரவி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    அதை தொடர்ந்து கவர்னர் ஆர்.என்.ரவி பேசியதாவது:-

    அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். அனைவரையும் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த வளர்ச்சியை மீண்டும் உறுதி செய்ய வேண்டும்.

    பிரதமர் நரேந்திர மோடி பொறுப்பேற்ற பிறகு பெண்களுக்கான பல்வேறு அடிப்படை மாற்றங்களை கொண்டு வந்துள்ளார்.

    குறிப்பாக மகளிர் மேம்பாட்டு திட்டங்கள், பெண்களை முன்னிறுத்தும் வளர்ச்சிகள், பெண்கள் நிர்வாகம் ஆகியவற்றில் முயற்சிகளை மேற்கொண்டு உள்ளார்.

    பல பகுதிகளில் பெண்களுக்கு பாதுகாப்பான கழிப்பறை கட்டுவது, பள்ளி, கல்லூரி நிறுவனங்களில் கழிப்பறைகள் வசதிகள் செய்து கொடுப்பது ஆகிய திட்டங்களால் மாணவிகள் அதிகம் சேர்ந்துள்ளனர்.

    குறிப்பிடத்தக்க அளவிற்கு மாணவிகளின் சேர்க்கை உயர்ந்துள்ளது. பல இடங்களில் மாணவர்களைவிட மாணவிகள்தான் ஆராய்ச்சி படிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பெண்களின் சுகாதாரத்திற்கும் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. தற்போது தாய்மார்கள் பிறந்த குழந்தைகள் உட்பட அனைவரும் நலமாக உள்ளனர்.

    அதேபோல், நிதி ஆதாரங்களை பொறுத்தவரையில் 50 கோடி அளவிற்கு ஏற்படுத்தப்பட்டுள்ள வங்கி கணக்குகளில் பெண்களும் அதிகமாக உள்ளனர்.

    முத்ரா கடன் எடுத்து தொழில் தொடங்கிய பெண்கள் 40 கோடி பேர் உள்ளனர். அவர்கள் 23 லட்சம் கோடி கடனாக பெற்று உள்ளனர்.

    பெண்கள் தங்கள் வாழ்நாளில் ஒவ்வொரு அம்சங்களிலும் ஆண்களுக்கு சமமாக பங்களித்து வருகிறார்கள். பாராளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் பெண்களின் பங்களிப்பு அதிகமாக உள்ளதால், சட்டங்களை உருவாக்குவதிலும் பெண்களின் பங்கு அதிகரித்துள்ளது.

    2047-ம் ஆண்டுக்குள் நமது தேசம் தன்னிறைவு பெற்றுள்ள நாடாக திகழ வேண்டும் என்பது நமது நோக்கம். இந்த தேசிய கனவு பெண்களின் சரி பாதி பங்களிப்புடன் நிறைவேற்றப்படும்.

    அனைவரையும் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த வளர்ச்சியை மீண்டும் உறுதி செய்ய வேண்டும் என தெரிவித்து 'பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்' பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • நம்முடைய வாழ்வில் பெண்களின் பங்களிப்பும் தியாகமும் அளவீடற்றவை.
    • எதிலும் சளைக்காத பெண்ணினத்தை எல்லா விஷயங்களிலும் இணைத்துக்கொண்டு அனைத்திலும் சம உரிமை கிடைக்கச் செய்வோம்.

    சென்னை :

    நடிகரும், மக்கள் நீதி மய்யத் தலைவருமான கமல்ஹாசன் இன்று எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    நம்முடைய வாழ்வில் பெண்களின் பங்களிப்பும் தியாகமும் அளவீடற்றவை. அவர்களின் கண்ணியத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்வேன் என ஒவ்வொரு ஆணும் உறுதிமொழி எடுத்துக்கொள்ளவேண்டும்.

    எதிலும் சளைக்காத பெண்ணினத்தை எல்லா விஷயங்களிலும் இணைத்துக்கொண்டு அனைத்திலும் சம உரிமை கிடைக்கச் செய்வோம்.

    சாதிக்கத் துடிக்கும் பெண்கள் அனைவரையும் சர்வதேச மகளிர் தினத்தில் வாழ்த்தி மகிழ்கிறேன் என கூறியுள்ளார்.

    • மகளிர் தினம் என்பது ஆண்டுதோறும் மார்ச் 8-ம் தேதி கொண்டாடப்படுகிறது.
    • பெண்கள் சமுதாயத்தில் முதலீடு செய்யுங்கள், முன்னேற்றத்தை விரைவுபடுத்துங்கள்.

    சர்வதேச மகளிர் தினம் என்பது ஆண்டுதோறும் மார்ச் 8-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நாளானது, வரலாற்றிலும், தற்காலத்திலும் சமூக, பொருளாதார, கலாச்சார, அரசியல் என பல்வேறு துறைகளில் பெண்களின் பங்களிப்பை கவுரவப்படுத்தும் வகையில் கொண்டாடப்படுகிறது. பாலின சமத்துவத்தை நோக்கிய பெண்களின் பயணத்தின் மிக முக்கிய படியாக இந்த நாள் அமைந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. எப்போது தொடங்கியது

    மகளிர் தினம்

    1975-ம் ஆண்டு முதல் சர்வதேச மகளிர் தினமானது மார்ச் 8-ந் தேதி கொண்டாடப்படுவதாக ஐக்கிய நாடுகள் அவை அறிவித்தது. ஆனாலும், பல ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. 1911-ம் ஆண்டு அமெரிக்கா மற்றும் சில ஐரோப்பிய நாடுகளிலும் மகளிர் நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.

    வெறும் கொண்டாட்டமாக மட்டுமல்லாமல், பாலின சமத்துவம் மற்றும் பல்வேறு துறைகளிலும் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு கவனம் செலுத்துவதை இலக்காகக் கொள்ள வேண்டியதை வலியுறுத்தும் நாளாகவும் அமைகிறது. சம ஊதியம், கல்வி பெறுவது, தலைமை வாய்ப்பில் தற்போதும் பெண்களுக்கு சம வாய்ப்பு மறுக்கப்படுவதன் காரணங்கள் கண்டறியப்பட்டு, அந்த சிக்கலுக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்பதே இந்த நாளின் முக்கிய குறிக்கோள்.

    பெண்களுக்கு இருக்கும் தடைகளை உடைத்தெறிந்த, முன்னேறிய பெண்களைப் பற்றியும், பெண்களுக்கு இருக்கும் வாய்ப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்தும் கவனம் செலுத்தும் நாளாக இருக்கிறது.

    மகளிர் தினத்தின் கருப்பொருள்:

    2024-ம் ஆண்டின் சர்வதேச மகளிர் தினத்தின் கருப்பொருள், 'பெண்கள் சமுதாயத்தில் முதலீடு செய்யுங்கள், முன்னேற்றத்தை விரைவுபடுத்துங்கள்,' என்பதாகும். இதன் மூலம், பொருளாதாரத்தை வலுவாக்குவதை இலக்காகக் கொண்டு கவனம் செலுத்தப்படும். தொடர்ந்து இந்த ஆண்டுக்கான விழிப்புணர்வு கருப்பொருள் 'திறமையை ஊக்குவிப்பது.

    சர்வதேச மகளிர் தினம் எதற்காக கொண்டாடப்படுகிறது?

    பாலின பாகுபாடு சம்பந்தமாக நடந்து கொண்டிருக்கும் போராட்டத்தை அனைவரது கவனத்திலும் கொண்டு வருவதே இந்நாளின் நோக்கம். ஆண்களுக்கு நிகரான ஊதியம், படிப்பு மற்றும் தலைமைத்துவ வாய்ப்புகள் போன்ற பல்வேறு விஷயங்களில் பெண்கள் சந்தித்து வரும் சவால்களையும் வேறுபாடுகளையும் இந்த நாள் பறைசாற்றுகிறது.

    அதுமட்டுமல்லாமல் உலகம் முழுவதும் உள்ள பெண்களிடையே ஒற்றுமையையும், தோழமையையும் இந்த நாள் ஊக்குவிக்கிறது. பெண்கள் தங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களை பகிர்ந்து கொண்டு, ஒருவருக்கொருவர் ஆதரவு அளித்து, சம உரிமைகள் மற்றும் வாய்ப்புகளை அடையும் பொருட்டு அவர்களது கூட்டு வலிமையை கொண்டாடுவதற்கு அனைவரையும் ஒன்றிணைக்கிறது.

    மிக முக்கியமாக பெண்களின் சாதனைகளை கொண்டாடவும், உலகில் நிலவிவரும் சமத்துவமின்மைக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தவும் மற்றும் சம உரிமைகள் மற்றும் வாய்ப்புகள் கிடைக்கக்கூடிய வகையில் எதிர்காலத்தை அமைக்கும் பொருட்டு வாதிடுவதற்கான ஒரு தளமாக அமைகிறது.

    • 657-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்யப்படாமல் அதே விலையே நீடிக்கிறது.
    • பெண்களின் முன்னேற்றத்தை உறுதிபடுத்துதல் மற்றும் அவர்கள் எளிமையாக வாழ்வதை உறுதிபடுத்துவதற்கான எங்களின் உறுதிமொழியாகும்.

    புதுடெல்லி:

    சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோலிய பொருட்களின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

    சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்தால் இந்தியாவிலும் பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் சிலிண்டர் உள்ளிட்ட பெட்ரோலிய பொருட்களின் விலை அதிகரிக்கும். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தால் பெட்ரோலிய பொருட்களின் விலையும் குறையும்.

    கடந்த 6 மாதங்களாகவே சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் மிகப்பெரிய அளவில் உயர்வு ஏற்படவில்லை. மாறாக கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. எனவே இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் இன்று 657-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்யப்படாமல் அதே விலையே நீடிக்கிறது. அதாவது சென்னையில் தற்போது பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.102.63-க்கும், டீசல் விலை லிட்டர் ரூ.94.24-க்கும் விற்கப்படுகிறது. இதன் மூலம் எண்ணெய் நிறுவனங்களுக்கு பல ஆயிரம் கோடி வருமானம் கிடைக்கிறது. எனவே எப்போது வேண்டுமானாலும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில் சர்வதேச மகளிர் தினம் இன்று கொண்டாடப்படுவதையொட்டி பெண்களுக்கு மகளிர் தின பரிசாக, வீட்டு உபயோக சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை மத்திய அரசு குறைத்துள்ளது. மகளிர் தினத்தையொட்டி வீட்டு உபயோக சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை ரூ. 100 குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக பிரதமர் மோடி அதிரடியாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பை பிரதமர் மோடி தனது எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில் பிரதமர் மோடி கூறி இருப்பதாவது:-

    மகளிர் தினமான இன்று நமது அரசு வீட்டு உபயோக கியாஸ் சிலிண்டர் விலையை 100 ரூபாய் குறைக்க முடிவு செய்துள்ளது. இந்த முடிவு நாடு முழுவதும் உள்ள மக்களின் குடும்ப நிதிச்சுமையை பெருமளவு குறைக்கும். குறிப்பாக, பெண்சக்தி திட்டத்தின்கீழ் நல்ல பலன் கிடைக்கும்.

    சமையல் கியாசை மலிவு விலைக்கு கொண்டு வருவதன் மூலம் குடும்பங்கள் நலமுடன் இருக்கவேண்டும், அவர்களின் குடும்ப சூழ்நிலை வளமாக அமைய வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். இது பெண்களின் முன்னேற்றத்தை உறுதிபடுத்துதல் மற்றும் அவர்கள் எளிமையாக வாழ்வதை உறுதிபடுத்துவதற்கான எங்களின் உறுதிமொழியாகும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    வீட்டு உபயோக சமையல் கியாஸ் சிலிண்டர் ஏற்கெனவே ரூ.918.50-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது 100 ரூபாய் குறைக்கப்பட்டு இருப்பதன் மூலம் இனி சமையல் கியாஸ் ரூ.818.50-க்கு கிடைக்கும்.

    பிரதமரின் உஜ்வாலா யோஜனா திட்டத்தில் சமையல் கியாஸ் சிலிண்டர் பெறும் பயனாளிகளுக்கு வழங்கப்படும் ரூ.300 மானியத்தை ஓராண்டுக்கு நீட்டிக்க மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய மந்திரிசபை கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டதாக மத்திய மந்திரி பியூஷ் கோயல் நேற்று தெரிவித்திருந்தார்.

    சமையல் கியாஸ் திட்ட மானியத்துக்கு மத்திய மந்திரிசபை ரூ.12 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்து உள்ளது. இதன் மூலம் பிரதமர் உஜ்வாலா யோஜனா திட்ட பயனாளிகளுக்கு ரூ.603-க்கு மானியத்துடன் சிலிண்டர் கிடைக்கும். மகளிர் தினத்தையொட்டி இந்த சிறப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக மந்திரி பியூஷ் கோயல் தெரிவித்து இருந்தார்.

    அதன் தொடர்ச்சியாக இன்று மற்ற சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை ரூ.100 குறைத்து பிரதமர் மோடி இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

    • பாரதத்தின் உயரிய விருதான பாரத் ரத்னா இதுவரை ஐந்து பெண்மணிகளுக்கு அளிக்கப்பட்டுள்ளது.
    • அறிவில் சிறந்தவர் ஆணா, பெண்ணா? பெண்ணே தான் என்று அடித்துக் கூறினார் பூங்கோதையார்.

    மார்ச் 8-ம் நாள் உலக மகளிர் தினம். 2024-ம் ஆண்டின் கோஷமாக முன்னிலைப்படுத்தப்படுவது : பெண்கள் முன்னேற்றத்தில் முதலீடு செய்யுங்கள்; முன்னேற்றத்தை துரிதப்படுத்துங்கள்.

    உலக ஜனத்தொகை 810 கோடி என்ற எண்ணிக்கையை 2024-ல் எட்டி விட்டது. இதில் மகளிரின் எண்ணிக்கை 49 சதவீதம்.

    பெண்களின் முன்னேற்றத்தில் கவனம் செலுத்துவதாக அனைவரும் கூறி வந்த போதிலும் உலகில் சுமார் 8 சதவீத பெண்கள் அன்றாட உணவிற்கே அல்லல்படும் நிலையில் இருக்கின்றனர். ஆகவே சுருக்கமாகச் சொல்லப் போனால், "போகுமிடம் வெகு தூரம்; போக வேண்டும் நெடு நேரம்" என்பதே பெண்களின் சம உரிமைப் போராட்டத்தின் இன்றைய நிலை.

    பெண்கள் இன்றிருக்கும் நிலையைக் கூடத் தாமாகப் பெறவில்லை. அதற்கென ஆங்காங்கே உரிமைப் போர்கள் நடைபெற்றே வந்தன.

    பெண்கள் போராடிப் பெற்ற ஓட்டுரிமை: பெண்கள் சாதாரணமாகப் பெறவில்லை ஓட்டுரிமையை! மிகுந்த போராட்டம் அதற்காகவே பிரிட்டனில் வெடித்தது. பெண்கள் ஓட்டுரிமை வேண்டும் என்று கேட்டபோது "பைத்தியக்காரத்தனமான, சூழ்ச்சி நிறைந்த முட்டாள் பெண்கள் கேட்கும் உரிமை இது" என்று கூறிய விக்டோரியா மகாராணியார் ஒரு பெண்ணிற்கு சாட்டையால் அடித்து தண்டனை தர ஆணையிட்டார்.

    ஆனால் பெண்கள் அசரவில்லை. 1901-ம் ஆண்டு ஏழாம் எட்வர்ட் பட்டம் சூட்டியபோது எமிலின் பங்கர்ஸ்ட் என்ற பெண்மணியின் தலைமையில் கூட்டம் கூட்டமாகப் பெண்களின் அணி திரண்டது. ஆண்கள் கூட்டம் போடும் இடங்களிலெல்லாம் அவர்கள் திடீரென வந்து குதித்தனர். மேடை மீது ஏறி மெகா போன் வாயிலாக எங்களுக்கும் ஓட்டுரிமை வேண்டும் என்று கோஷமிட்டனர். உண்ணாவிரதம் இருந்தனர். சிறைக்கும் சென்றனர்.

    இந்தியாவில் வைசிராயாக இருந்த லார்ட் கர்ஸான் பெண்கள் தாழ்ந்தவர்கள் என்பதற்காக பதினைந்து காரணங்களைப் பட்டியலிட்டார். ராயல் கமிஷனோ 'ஒரு பெண்ணின் மூளை எதையும் சமாளித்து ஈடு கொடுக்க வல்லதா" என்று ஆராய முற்பட்டது. ஆனால் பெண்கள் அயர்ந்து போகவில்லை. முதலாம் உலக மகாயுத்தம் 1914-ல் ஆரம்பிக்கவே ஆண்கள் போர்க்களம் செல்லவே, அனைத்து வேலைகளையும் பெண்கள் மேற்கொண்டு தங்கள் திறனைக் காண்பித்தனர். டிராம் விடுவது, கார்களை ஓட்டுவது, மெகானிக்குகளாக அனைத்து வாகனங்களையும் பழுதுபார்ப்பது உள்ளிட்ட வேலைகளை அவர்கள் செய்து காட்டவே உலகமே பிரமித்தது. 1918-ல் யுத்தம் முடிந்தது. பிரதம மந்திரி ஜார்ஜ் 30 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு ஓட்டுரிமை வழங்கினார். போராட்டம் உலகெங்கும் வலுக்கவே இன்னும் 28 நாடுகள் பெண்களுக்கு உரிமையை வழங்கின. 1952-ல் களமிறங்கிய ஐ.நா. உலகெங்கும் ஆண்களுக்கும் இருக்கும் அனைத்து உரிமைகளையும் பெண்களுக்குக் கொடுக்கும் தீர்மானத்தை நிறைவேற்றியது.

    முன்னோடிகள்: பெண்களின் உரிமைக்காகப் போராடிய ஏராளமான அதிசயப் பெண்மணிகள் உள்ளனர். எடுத்துக்காட்டிற்கு எலினார் ரூஸ்வெல்டைச் சொல்லலாம். அமெரிக்க ஜனாதிபதியாக நான்கு முறை பதவி வகித்து சாதனை புரிந்த பிராங்ளின் ரூஸ்வெல்டின் மனைவியான இவர், அவரது வெற்றிக்குக் காரணமாகத் திகழ்ந்தவர்.

    அத்தோடு வெள்ளை மாளிகையில் குடியேறியவுடன் அவர் அடிக்கடி நிருபர்களைச் சந்திக்கப் போகிறேன் என்றார். அனைவரும் மகிழ்ந்த அந்த வேளையில் அற்புதமான அடுத்த வரியை அவர் கூறினார்: "ஆனால் அவர்கள் எல்லோரும் பெண்களாகவே இருக்க வேண்டும்!"

    அனைவரும் பிரமித்தனர். எல்லா பத்திரிகைகளும் போட்டி போட்டுக்கொண்டு பெண் நிருபர்களை வேலைக்கு அமர்த்தின. பத்திரிகை உலகம் புதிய அழகைப் பெற்றது. செய்திகளின் தரமும் கூடியது.

    அதே போல உலக அரங்கில் பெண்களின் தாக்கம் அதிகமானது. இதுவரை அறிவிக்கப்பட்ட 864 நோபல் பரிசுகளில் 64 பரிசுகளை பெண்மணிகள் இலக்கியம், மருத்துவம், அமைதி, ரசாயனம், இயற்பியல், பொருளாதாரம் உள்ளிட்ட துறைகளில் பெற்றுள்ளனர்.

    பாரத ரத்னா: பாரதத்தின் உயரிய விருதான பாரத் ரத்னா இதுவரை ஐந்து பெண்மணிகளுக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்திரா காந்தி, மதர் தெரசா, அருணா ஆசப் அலி, இசையரசி எம்.எஸ். சுப்புலக்ஷ்மி, லதா மங்கேஷ்கர் ஆகியோர் இந்த உயரிய விருதைப் பெற்றுள்ளனர்.

    விண்வெளி வீராங்கனைகள்: 1963-ல் முதல்முறையாக வாலெண்டினா தெரஷ்கோவா என்ற ரஷிய பெண்மணி தனது 26-ம் வயதிலேயே விண்ணில் பறந்து சாதனை நிகழ்த்திக் காட்டினார். தொடர்ந்து விண்வெளிக்குச் சென்ற சுமார் ஐநூறுக்கும் மேற்பட்ட விண்வெளிப் பயணிகளில் வீராங்கனைகள் ஏராளமானோரும் இந்தச் சாதனையில் ஈடுபட்டனர். ஸ்வெட்லேனா சாவிட்ஸ்கி, சாலி ரைட், கிறிஸ்டா மக்லிப், மே ஜெமிசன், ஐலீன் காலின்ஸ், இந்திய வீராங்கனையான கல்பனா சாவ்லா, பெக்கி விட்சன், கிறிஸ்டினா கோச், ரெசிகா மெய்ர், கேட் ரூபின்ஸ் செய்த சாத னைகள் வியப்பூட்டுபவை; பிரமிக்க வைப்பவை.

    உத்வேகமூட்டும் பெண்மணிகள்:

    உலகளாவிய விதத்தில் உத்வேகமூட்டும் பெண்மணிகள் பட்டியலைத் தயாரிக்கும் பத்திரிகைகளும், சர்வே நிபுணர்களும் தரும் தகவல்கள் சுமார் பத்தாயிரம் பேரைச் சுட்டிக் காட்டுகின்றன. அரசியலில் நியூசிலாந்து பிரதம மந்திரி, ஜேசிந்தா ஆர்டன், அமெரிக்காவின் கமலா ஹாரிஸ் மற்றும் ஹில்லாரி க்ளிண்டன், இந்தியாவின் நிர்மலா சீதாராமன், அழகிகள் மற்றும் திரைப்படத் துறையில் ஐஸ்வர்யா ராய், சீன நடிகை யாங் மி, ப்ரியங்கா சோபிரா, பாடகிகளில் டெய்லர் ஸ்விப்ட் உள்ளிட்டோர் முன்னணியில் இடம் பெறுகின்றனர்.

    இன்போசிஸ் பவுண்டேஷனை நிறுவிய சுதா மூர்த்தி சிறந்த எழுத்தாளர். சேவை மனப்பான்மை கொண்டவர். கோவிட் காலத்தில் அவர் ஆற்றிய சேவையை அனைவரும் பாராட்டினர். உலகத்தில் மீடியா துறையில் ஒரு கலக்கு கலக்கி முன்னணியில் நிற்பவர் ஓபிரா வின்பிரே. சிறு வயதில் பல கொடுமைகளுக்கு ஆளாகி சுயமாக முன்னுக்கு வந்த இவர் பெண்களுக்காக குரல் கொடுப்பது நியாயமானதே.

    நீண்ட இந்த பட்டியலில் அன்றாடம் சேரத் துடிக்கும் பெண்மணிகளால், இது ஆயிரம் ஆயிரமாகப் பெருகும் என்பதில் ஐயமில்லை. விளையாட்டுத் துறையிலும் அறிவியலிலும் சாதனை படைக்கத் துடிக்கும் பெண்மணிகள் எங்களுக்கு இங்கு சில இடைஞ்சல்கள் இருக்கின்றன என்று சொல்வது கவனிக்கப்பட வேண்டிய ஒரு அம்சம்!

    பிரபலம் வேண்டாம்; சாதனையே முக்கியம்!

    எங்களுக்குப் பெயர் வேண்டாம், புகழ் வேண்டாம், காசு பணம் வேண்டாம் என்று சொல்லும் அபூர்வப் பெண்மணிகளும் இல்லாமல் இல்லை. எடுத்துக்காட்டிற்கு திம்மக்காவைக் கூறலாம். இவருக்கு இப்போது வயது 112. கர்நாடகத்தில் பழைய மைசூர் ராஜ்யத்தில் குப்பி தாலுக்காவில் (இப்போது தும்கூர்) 1911, ஜூலை 8-ம் நாள் பிறந்த இவர் ஏராளமான மரக்கன்றுகளை சிறு வயதிலிருந்தே நட்டு வந்திருக்கிறார். இவர் நட்டு வைத்த ஆலமரங்கள் மட்டும் 400. பத்மஸ்ரீ விருது இவருக்கு வழங்கப்பட்டது.

    இதிகாசத்திலும் இலக்கியத்திலும் பெண்கள்:

    ராமாயண மகாபாரத இதிகாசங்களில் வரும் அறிவுசால் பெண்மணிகளைப் பற்றி எழுதப் புகுந்தால் ஒரு கலைக்களஞ்சியமே உருவாகும்.

    திரவுபதி, தமயந்தி, சாவித்திரி. இப்படி அறத்தின் அடிப்படையிலான நூற்றுக்கணக்கான பெண்மணிகளை நமது இதிகாசங்களும் இலக்கியமும் சுட்டிக் காட்டுகின்றன. தமிழ் இலக்கியத்தை மட்டும் எடுத்துக் கொண்டோமானால் சங்க இலக்கியத்தில் நாம் காணும் பெண் புலவர்கள் ஏராளமானோர்.

    அஞ்சில் ஆந்தைமகள் நாகையார், அள்ளூர் நன்முல்லையார், ஒக்கூர் மாசாத்தியார், அவ்வையார், கழார்க் கீரனெயிற்றியார், குமிழிஞாழார் நப்பச லையார், நக்கண்ணையார், போந்தைப் பசலையார், மதுரை நல்வெள்ளியார், முள்ளியூர்ப் பூதியார், வெள்ளிவீதியார் என்று இந்தப் பட்டியல் நீளும். அவ்வையாரைப் போல இன்னொரு பெண் புலவர் இலக்கிய உலகில் உண்டா, என்ன?

    பெண்களுக்கு இன்று இருக்கும் பிரச்சனைகள்:

    "ஆண்களோடு பெண்களும் சரி நிகர் சமானமாக வாழ்வம் இந்த நாட்டிலே" என்று மகாகவி பாரதியாரின் முழக்கம் முழங்கி நூறு ஆண்டுகள் கடந்து விட்டன. என்றாலும் நம் நாட்டைப் பொறுத்தவரையில்அரசியலுக்குத் தேவையான அளவு தலைமைப் பண்புள்ள பெண்மணிகள் இன்னும் தேவை. வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள, கல்வியறிவில்லாப் பெண்மணிகள் ஏற்றம் பெற உரிய நடவடிக்கை தேவை.

    பாலியல் கொடுமைகளும், இல்லத்தில் ஏற்படும் வன்கொடுமைகளும் முற்றிலுமாக நீக்கப்பட வேண்டும். நீதித்துறை, விளையாட்டு, அறிவியல், கல்வி, விண்வெளி, பாதுகாப்பு, மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் பெண்களுக்கு இருக்கும் தடைகள் இனம் காணப்பட்டு அகற்றப்பட வேண்டும்.

    ஆணுக்கு அறிவு அதிகமா பெண்ணுக்கு அதிகமா?

    பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்

    பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்

    எட்டும் அறிவினில் ஆணுக்கிங்கே பெண்

    இளைப்பில்லை காண் என்ற கும்மியடி என்று மகாகவி பாரதியார் கூற்றை மெய்ப்பிக்கும் சம்பவத்தை சுட்டிக் காட்டுகிறது கொங்கு மண்டல சதகத்தில் உள்ள பாடல் எண் 65.

    தக்கையிசை ராமாயணம் என்ற நூலை இயற்றிய சிறந்த கவிஞரான எம்பிரான் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சங்ககிரியில் வாழ்ந்து வந்தார்.

    ஒரு நாள் கவிஞர் வெளியில் சென்றிருந்தபோது அவருடன் அளவளாவி மகிழ சில வித்துவான்கள் அவர் வீட்டிற்கு வந்தனர்.

    அறிவில் சிறந்த அவரது மனைவி பூங்கோதையார் அவர்களை வரவேற்று உபசரித்து கவிராயர் வெளியில் சென்றிருப்பதையும் சற்று நேரத்தில் வந்து விடுவார் என்பதையும் கூறினார். திண்ணையில் அமர்ந்த வித்துவான்கள் தங்களுக்குள் பல்வேறு விஷயங்களைப் பற்றிப் பேச ஆரம்பித்தனர்.

    அவர்களுள் ஒருவர் எவ்வளவு தான் கற்றாலும் ஆணுக்கு முன்னால் பெண்ணின் அறிவு குறைவு தான் என்ற தன் கருத்தை முன் வைத்தார். அதை அனைவரும் சந்தோஷமாக ஆதரித்து பெண்களை இழித்துச் பேச ஆரம்பித்தனர். வீட்டின் உள்ளேயிருந்து இதைக் கேட்டுக் கொண்டிருந்த பூங்கோதையாரால் ஒரு அளவுக்கு மேல் பொறுக்க முடியவில்லை.

    ஒரு சிறிய துண்டுச் சீட்டில் ஒரு பாடலை எழுதி ஒரு சிறுமி மூலம் புலவர்களிடம் அனுப்பினார். அந்தப் பாடல்:

    அறிவில் இளைஞரே ஆண்மக்கள்; மாதர்

    அறிவில் முதிஞரே ஆவர் – அறிகரியோ

    தான் கொண்ட சூல் அறிவர் தத்தையர்; ஆண்மக்கள்

    தான் கொண்ட சூல் அறியார் தான்

    இதைப் படித்துப் பார்த்த புலவர்கள் திகைத்துப் போனார்கள். அந்த நேரத்தில் வெளியில் சென்றிருந்த கவிராயர் திரும்பி வந்தார். நடந்ததை அறிந்து கொண்ட கவிராயர் தன் மனைவியிடம் அதற்கான விளக்கத்தைக் கேட்டார். ஆண்மக்களை இழித்துக் கூறலாமா என்ற அவர் கேள்விக்கு அம்மையார், "நான் இழித்துக் கூறவில்லையே ஆண், பெண் இருவரும் அறிவைக் கொண்டிருந்தாலும் அறிவில் சிறந்தவர்கள் பெண் மக்களே என்றல்லவா கூறி இருக்கிறேன்.

    ஆன்மாவானது நீர்த்துளி வழியே பூமியில் சேர்ந்து உணவு வழியாக புருஷ கர்ப்பத்தில் தங்கி பின்னர் பெண்ணின் கருப்பையை அடைந்து கர்ப்பமுற்று சிசு பிறக்கிறது. ஆகவே தங்கள் கர்ப்பத்தைத் தெரிந்து கொள்ளாத ஆண்களை விட அதை அறிந்திருக்கும் பெண்களே அறிவில் சிறந்தவர்கள் என்கிறேன்" என்றார்.

    மேல் உலகம் சென்ற ஒரு உயிரானது, பூமிக்குத் திரும்பும்போது முறையே துறக்கம், மேக மண்டலம், நிலம், தந்தை, தாய் ஆகிய ஐந்து இடத்துப் புகுந்து வருவதை தியானித்தலே பஞ்சாக்கினி வித்தை என்று அறநூல்கள் கூறுகின்றன.

    சொர்க்கம் சென்ற ஆன்மா, மேகத்தை அடைந்து மழைத்துளி மூலம் நிலத்தை அடைந்து உணவுப் பொருளாய் புருஷ தேகத்தை அடைந்து பின்னர் இந்திரிய மயமாக பெண்ணின் கருப்பையை அடைந்து சிசுவாகப் பிறக்கிறது. புருஷ கர்ப்பத்தில் இரண்டு மாதம் தங்கி இருப்பதை ஆண்கள் அறிவதில்லை. ஆனால் கருவுற்ற உடனேயே பெண் மக்கள் அதை அறிந்து போற்றிப் பாதுகாத்து குழந்தையைப் பிரசவிக்கின்றனர்.

    அறிவில் சிறந்தவர் ஆணா, பெண்ணா? பெண்ணே தான் என்று அடித்துக் கூறினார் பூங்கோதையார்.

    விக்கித்துப் போன புலவர்கள் அதை ஒப்புக் கொண்டனர்.

    விஷயம் கொங்கு மண்டலம் வழியே தமிழகமெங்கும் பரவியது. அனைவரும் பூங்கோதையாரைப் பாராட்டி மகிழ்ந்தனர். தாய்க்குலத்தின் மகிழ்ச்சியைச் சொல்லவும் வேண்டுமோ!

    சிக்கலான கேள்விக்கு சரியான பதிலை அளித்த அறிவில் சிறந்த பெண்மணியான பூங்கோதையைப் பெற்ற மணியான பூமி கொங்கு மண்டலமே என்று கொங்கு மண்டல சதகத்தில் கார்மேகக் கவிஞர் பாடியுள்ளார்.

    குறுமுனி நேர் தமிழ் ஆழி உண் வாணர் குழாம் வியப்ப

    அறிவில் இளைஞரே ஆண் மக்கள் என்ன அறுதியிட்ட

    சிறிய விடைச்சி எம்பெருமான் மனைவி சிறந்து வளர்

    மறுவறு சங்ககிரி சேர்வது கொங்கு மண்டலமே

    பொருள்:

    தமிழ்க் கடலை உண்ட அகத்திய முனி போன்ற பல புலவர்கள் வியக்குமாறு, அறிவில் இளைஞர் ஆண் மக்களே என்று முடிவு கூறிய எம்பெருமான் கவிராயரது மனையாட்டியார் வாழும் சங்க கிரியும் கொங்கு மண்டலமே!

    தமிழ் மங்கையர் பொறுப்பு:

    இப்படி உலகிற்கே அரிய உண்மையை உணர்த்திய பெருமை தமிழ் மங்கையையே சாரும். பெண்களின் சம உரிமையை நிலை நாட்டி உலகெங்கும் அவர்களை மேல்நிலைக்குக் கொண்டு செல்ல தமிழ் மங்கையரை விட தகுதி வேறு யாருக்கு உண்டு. உலக மகளிர் தினத்தில் சிந்திப்போம். செய்வார்களா?


    தொடர்புக்கு:-

    snagarajans@yahoo.com

    • அரசியல் தலைவர்கள் மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    உலகம் முழுவதும் நாளை (மார்ச்-8ம் தேதி) மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. பெண்களை போற்றும் விதமாக கொண்டாடப்படும் இத்தினத்தை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

    அந்த வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மகளிர் தினத்தை முன்னிட்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

    சமூகத்தின் சரிபாதியான பெண்கள் அவர்களுக்கு உரிய அனைத்து உரிமைகளையுயும், நலன்களையும் முழுமையாக பெறும்வரை அதை நோக்கிய நமது பயணம் தொடரும் என்ற உறுதியுடன் மகளிர் தன வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • அதியமானுக்காகக் காஞ்சியிலிருந்து ஆட்சிப் புரிந்த தொண்டைமானிடம் தூது சென்று நிகழவிருந்த போரை நிறுத்திய பெருமை மிக்கவர் அவவையார்.
    • உலக வரலாற்றில் இரண்டு வேந்தர்களுக்கிடையில் தூது சென்ற பெரு மடந்தையராகப் பெருமை கொண்டவர் அவ்வையார் ஆவார்.

    சென்னை:

    ஈராயிரம் ஆண்டுகளாகத் தமிழ் மக்கள் நன்கு அறிந்திருக்கும் புலவர் பெருமாட்டியருள் அவ்வையாரின் அருமைத் திருப்பெயர் என்றும் அழியாமல் நிலைத்திருக்கும் திருப்பெயரும் தவப்பெயருமாகும்.

    'அகர முதல எழுத்தெல்லாம்' என்பது போல ஒளவை முதல அறிவெல்லாம் என்று அறிவுக்கே பரியாய நாமமாக அவ்வையார் ஆண், பெண், இளைஞர், முதியவர் என எல்லோராலும் வழிபாட்டுணர்ச்சியோடு வணங்கப்படுகிறார்.

    அதியமானுக்காகக் காஞ்சியிலிருந்து ஆட்சிப் புரிந்த தொண்டைமானிடம் தூது சென்று நிகழவிருந்த போரை நிறுத்திய பெருமை மிக்கவர் அவவையார். உலக வரலாற்றில் இரண்டு வேந்தர்களுக்கிடையில் தூது சென்ற பெரு மடந்தையராகப் பெருமை கொண்டவர் அவ்வையார் ஆவார்.

    சேரமான் மாரி வண்கோவும், சோழன் ராச சூயம் வேட்ட பெரு நற்கிள்ளியும், பாண்டியன் கானப்பேர் தந்த உக்கிரப் பெருவழுதியும் ஒருங்கிருப்பக் கண்டு உவந்து' என்றும் தமிழ் மூவேந்தர்கள் இவ்வாறே இருப்பீர்களாக' என அறிவுறுத்திய புலமைச் செல்வியார் ஆவார். நெடுமான் அஞ்சி போர்க் களத்தில் வேல் பாய்ந்து இறந்தபோது, அவ்வையார் வருந்திப் பாடிய கையறு நிலைப்பாட்டு மிகவும் உருக்கம் வாய்ந்தது.

    சங்கப் புலமைப் பெரும் செவ்வியராகிய இப்பெருமாட்டியார் பாடியனவாக உள்ள ஐம்பத்தொன்பது பாடல்களுள் அகப்பொருள் பற்றியன இருபத்தாறாகும். எஞ்சிய முப்பத்து மூன்று பாடல்களுள் புறப்பொருளுக்குரியன வாய்ப் புறநானூற்றில் இடம் பெற்றுள்ளன.

    மாந்தர் குலத்திற்குப் பெருமை சேர்த்த அவ்வை பெருமாட்டியாரைப் போற்றும் வகையில் உலக மகளிர் நாளான 08.03.2024 வெள்ளிக்கிழமையன்று காலை 10 மணிக்கு தமிழ்நாடு அரசின் சார்பில், தமிழ் வளர்ச்சித் துறையால், சென்னை காமராசர் சாலையில் அமைந்துள்ள அவ்வையாரின் திருவுருவச் சிலைக்கு மலர் மாலை அணிவித்தலும், தமிழ்ப் பெருமாட்டியின் திருவுருவப்படத்திற்கு மலர் வணக்க நிகழ்வும் நடைபெற உள்ளன. அமைச்சர் பெருமக்கள், மேயர், துணை மேயர், அரசு உயர் அலுவலர்கள், தமிழ் அறிஞர்கள், தமிழ் வளர்ச்சித் துறை அலுவலர்கள், பொதுமக்களும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.

    • பொதுத் தளங்களில் இயங்கும் பெண்களை காணுகின்ற போது மனம் பேர் உவகை கொள்கிறது.
    • பெண்மையால் பெருமை கொள்வோம்!

    சென்னை:

    சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பெண்மையைப் போற்றி வணங்கவும், பெண்கள் இன்றி இந்த உலகம் இல்லை என்பதை உணர்த்தவும், பெண்களின் தியாக வாழ்வு க்கு வணக்கம் செலுத்தவும், ஆண்டுதோறும் வருகிற 8-ந் தேதி "சர்வ தேச மகளிர் தினமாக" கொண்டாடப்படு கிறது. பெண்களுக்குப் பெருமை சேர்க்கும் இந்த நாளில் பெண்கள் அனை வருக்கும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது இதயமார்ந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

    ஒரு நூற்றாண்டுக்கு முன், பாரதி கண்ட புதுமைப் பெண்களின் வடிவமாக புரட்சித் தலைவி அம்மா திகழ்ந்ததையும், அவர்களைப் போல பல்வேறு பொதுத் தளங்களில் இயங்கும் பெண்களையும் காணுகின்றபோது மனம் பேர் உவகை கொள்கிறது.

    பெண்மையின் மேன்மையைப் போற்றுவோம்!

    பெண்மையை வணங்கு வோம்!

    பெண்மையால் பெருமை கொள்வோம்!

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • பெண்களை ஆண்களுக்கு அடுத்தப்படியாக வைத்துப் பார்க்கும் மனநிலை விலக வேண்டும்.
    • அனைத்துத் துறைகளிலும் சாதனைகளை படைத்ததைப் போன்றே இதிலும் சாதிப்பார்கள்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    உலகின் தவிர்க்க முடியாத சக்தியான மகளிரைப் போற்றும் உலக மகளிர் தினம் நாளை கொண்டாடப்படவுள்ள நிலையில், உலகெங்கும் வாழும் மகளிருக்கு உளமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

    பெண்களை ஆண்களுக்கு அடுத்தப்படியாக வைத்துப் பார்க்கும் மனநிலை விலக வேண்டும். நாட்டையும், வீட்டையும் தலைமையேற்று நடத்தும் வாய்ப்பு அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். அவ்வாறு வழங்கப்பட்டால், அனைத்துத் துறைகளிலும் சாதனைகளை படைத்ததைப் போன்றே இதிலும் சாதிப்பார்கள்.

    எனவே, வீட்டையும், நாட்டையும் மகளிரே வழிநடத்தும் உன்னத சூழலை உருவாக்குவதற்காக கடுமையாக உழைக்க மகளிர் நாளான இந்த நாளில் நாம் அனைவரும் உறுதியேற்போம் என்று கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • "ஜெ பேபி" திரைப்படத்தின் சிறப்புக்காட்சி சமீபத்தில் திரைத்துறையினருக்கு திரையிடப்பட்டது.
    • குடும்பத்தோடு பார்க்க வேண்டிய படம், சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும்.

    பா.இரஞ்சித் தயாரிப்பில் நடிகை ஊர்வசி, தினேஷ், மாறன் நடிப்பில் "ஜெ பேபி" திரைப்படம் மார்ச் 8-ந் தேதி மகளிர் தினத்தன்று வெளியாக இருக்கிறது.

    பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் இதுவரை வெளிவந்த படங்கள் சமூக கருத்துக்களை உள்ளடக்கிய படங்களாகவே வெளிவந்திருக்கிறது.

    "ஜெ பேபி" படம் குடும்ப உறவுகளைப்பற்றி பேசுகிற படமாகவும், நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்தும் எடுக்கப்பட்டிருக்கிறது.

    "ஜெ பேபி" திரைப்படத்தின் சிறப்புக்காட்சி சமீபத்தில் திரைத்துறையினருக்கு திரையிடப்பட்டது. படத்தை பார்த்த அனைவரும் படக்குழுவினரையும் படத்தின் இயக்குனர் சுரேஷ் மாரி, படத்தின் தயாரிப்பாளர் பா.இரஞ்சித் இருவரையும் வெகுவாக பாராட்டியுள்ளனர்.

    குடும்பத்தோடு பார்க்க வேண்டிய படம், சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும். படம் பார்க்க தியேட்டர் வருபவர்கள் அவசியம் தங்களது அம்மாக்களையும் அழைத்து வாருங்கள். இது எல்லோருக்குமான படம் என்கிறார் இயக்குனர் சுரேஷ் மாரி.

    'ஜெ பேபி' படத்தை சக்தி பிலிம் பேக்டரி வெளியிடுகிறது.

    • தஞ்சாவூர் தெற்கு மாவட்டம் சார்பில் சர்வதேச மகளிர் தின விழா கருத்தரங்கம் நடந்தது.
    • பெண்கள் தலைமையிலான புராதான பொதுவுடைமை சமுதாயம் தான் முதலில் தோன்றியது.

    தஞ்சாவூர்:

    இந்திய மாதர் தேசிய சம்மேளனம் தஞ்சாவூர் தெற்கு மாவட்டம் சார்பில் சர்வதேச மகளிர் தின விழா கருத்தரங்கம் நடைபெற்றது. மாதர் சங்க மாவட்ட செயலாளர் விஜயலட்சுமி தலைமை வகித்தார்.

    கருத்தரங்கத்தில் இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் மாநிலத் தலைவரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பத்மாவதி சிறப்புரையாற்றினார்.

    தொடர்ந்து தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் தஞ்சை மாநகர செயலாளர் எழுத்தாளர் அகிலா கிருஷ்ணமூர்த்தி பேசும்போது,

    மனித குலத்தில் முதன் முதலாக சமூகம் உருவானபோது பெண்கள் தலைமையிலான புராதான பொதுவுடைமை சமுதாயம் தான் முதலில் தோன்றியது.

    மனித குல வரலாற்றில் மனித கூட்டத்தை தலைமை யேற்று வழி நடத்தியவர்கள் பெண்கள் தான்.

    இத்தகைய பொதுவுடமை அரசை வழி நடத்தியவர்கள் பெண்கள் தான் என்பதில் நாம் பெருமை கொள்ள வேண்டும். பொருளாதாரத்தில் பெண்கள் தன்னிறைவு பெறுவது என்பது கல்வி பயில்வதனால் மட்டுமே முடியும்.

    ஆகவே பெண்கள் கல்வி மிக, மிக முக்கியமானது. ஒவ்வொரு பெண் குழந்தையும் கல்வியறிவு பெறுவதற்கு பள்ளிக்கு அனுப்ப வேண்டும் . உயர் படிப்பு வரை படிப்பதற்கு உற்சாகப்படுத்த வேண்டும் என்றார்.

    நிகழ்ச்சியில் தஞ்சாவூர் மாநகர செயலாளர் ராஜலட்சுமி, ஒன்றிய செயலாளர் சிவகாசி , மல்லிகா, மதுக்கூர் ஒன்றிய செயலாளர் ஜெனிதா, பட்டுக்கோட்டை செயலாளர்கள் ஜானகி, சகுந்தலா, சேதுபாவாசத்திரம் செயலாளர் கனகம், ஒரத்தநாடு செயலாளர் எலிசபெத், திருவோணம் செயலாளர் தவமணி, பேராவூரணி செயலாளர் கலைச்செல்வி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக மாவட்ட தலைவர் தனசீலி அனைவரையும் வரவேற்று பேசினார். முடிவில் மாவட்ட பொருளாளர் ஸ்ரீதேவி நன்றி கூறினார்.

    ×