search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Women Prisoners"

    • பெட்ரோல் பங்க் மூலம் சிறைத் துறைக்கு நல்ல வருவாய் கிடைப்பதுடன், கைதிகளும் சம்பாதித்து வருகின்றனர்.
    • ரூ. 1.92 கோடி மதிப்பில் 1,170 சதுர மீட்டர் பரப்பளவில் மற்றொரு பெட்ரோல் பங்க் கட்டப்பட்டு வருகிறது.

    சென்னை:

    தமிழக சிறைத் துறை, கைதிகளை நல்வழிப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக கடந்த 2018-ம் ஆண்டு கைதிகள் பெட்ரோல் பங்க், சென்னை புழலில் முதல் முறையாக திறக்கப்பட்டது.

    இதைத் தொடர்ந்து திருச்சி, வேலூர், கோவை உள்ளிட்ட இடங்களிலும் சிறைத் துறை சார்பில் பெட்ரோல் பங்க்குகள் திறக்கப்பட்டன. இந்த பங்க்குகளை தற்போது ஆண் கைதிகள் இயக்கி வருகின்றனர்.

    நன்னடத்தை கைதிகள் தேர்வு செய்யப்பட்டு, உரிய பயிற்சி அளிக்கப்பட்ட பின்னர் பெட்ரோல் பங்க்குகளில் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். ஒவ்வொரு பெட்ரோல் பங்க்கு மூலம் சுமார் 25 கைதிகள் வேலை வாய்ப்பு பெற்று வருகின்றனர்.

    பெட்ரோல் பங்க் மூலம் சிறைத் துறைக்கு நல்ல வருவாய் கிடைப்பதுடன், கைதிகளும் சம்பாதித்து வருகின்றனர்.

    இந்த திட்டத்தை மேலும் விரிவாக்கும் வகையில், புழல் சிறை வளாகத்தில் பெண்கள் தனிச்சிறை அருகே ரூ. 1.92 கோடி மதிப்பில் 1,170 சதுர மீட்டர் பரப்பளவில் மற்றொரு பெட்ரோல் பங்க் கட்டப்பட்டு வருகிறது.

    இந்த பெட்ரோல் பங்க்குகளை பெண் கைதிகள் மட்டுமே இயக்க உள்ளனர்.

    'இந்தியாவிலேயே முதல் முறையாக பெண் கைதிகள் மட்டும் இயக்கக் கூடிய பெட்ரோல் பங்க் புழலில் தான் திறக்கப்படுகிறது. இது ஒரு மாதத்தில் திறக்கப்படும்' என்று சிறைத்துறை டி.ஜி.பி. அமரேஷ் புஜாரி தெரிவித்தார்.

    இந்த பெட்ரோல் பங்க்கின் ஒரு பகுதியில் கைதிகள் தயாரிக்கும் பொருள்களும் விற்பனை செய்யப்படும்.

    பெட்ரோல் பங்க் கட்டுமானப் பணிகளை தமிழக சட்டம், நீதி, சிறைகள் சீர்திருத்தப் பணிகள் துறை அமைச்சர் ரகுபதி ஆய்வு செய்தார். அவருடன் சிறைத்துறை டி.ஜி.பி. அமரேஷ் புஜாரி, சிறைத்துறை டி.ஐ.ஜி.க்கள் கனகராஜ், முருகேசன் ஆகியோர் இருந்தனர்.

    பின்னர் அமைச்சர் ரகுபதி, புழல் சிறை வளாகத்தில் நடைபெற்ற 'சிறைகளின் கலை' என்ற புதிய திட்ட தொடக்க விழாவில் பங்கேற்றார்.

    இந்தத் திட்டத்தின்படி, கைதிகளுக்கு தியானம், யோகா, இசை, நாடகம், இலக்கியம், விளையாட்டு போன்ற பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.

    • மதுரை ஜெயிலில் மகளிர் தினம் கொண்டாடிய பெண் கைதிகள் கொண்டாடினர்.
    • இதில் 35-க்கும் மேற்பட்ட ஜெயில் பெண் ஊழியர்கள், கைதிகள் நெய்த சுங்குடி சேலையை அணிந்து விழாவில் பங்கேற்றனர்.

    மதுரை

    தென் தமிழகத்தில் மிகப்பெரிய ஜெயில்களில் ஒன்று மதுரை மத்திய ஜெயில் ஆகும். இங்கு 1,850 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் 100 பெண் கைதிகள் தனி சிறையில் உள்ளனர். இவர்களின் வாழ்வாதாரத்திற்காக சிறையில் இருக்கும் போது பல்வேறு சுயதொழில் பயிற்சிகள் கற்றுத்தரப்படுகின்றன.

    அதில் உணவு தயாரிப்பது, தையல், தறி நெய்தல் போன்றவை குறிப்பிடத்தக்கதாகும். பெண் கைதிகள் தயாரிப்பில் நெய்யப்படும் சுங்கடி சேலைகள் ஜெயில் பஜார் அங்காடியில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    உலக மகளிர் தினத்தை முன்னிட்டு இன்று மதுரை ஜெயிலில் மகளிர் தினவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதில் 35-க்கும் மேற்பட்ட ஜெயில் பெண் ஊழியர்கள், கைதிகள் நெய்த சுங்குடி சேலையை அணிந்து விழாவில் பங்கேற்றனர். தொடர்ந்து மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. இதனை பெண் கைதிகள் ரசித்து பார்த்தனர்.

    இந்த விழாவில் மதுரை சரக போலீஸ் டி.ஐ.ஜி. பழனி, போலீஸ் சூப்பிரண்டு வசந்தகண்ணன், ஜெயிலர் பாலகிருஷ்ணன், போலீஸ் அதிகாரி பழனிகுமார், சப்-இன்ஸ்பெக்டர் திருமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். விழாவில் கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கப்பட்டது.

    ×