search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காவேரி நீர்"

    • காவேரி நதிநீர் திறப்பில் உறுதியான, திடமான முடிவினை எடுக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் தி.மு.க. அரசுக்கு இருக்கிறது.
    • தி.மு.க., காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் காவேரி விஷயத்தில் மென்மையானப் போக்கினை கடைபிடிப்பது வருந்தத்தக்கது.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டின் குறுவை சாகுபடிக்காக, கர்நாடகாவில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் என்ற எதிர்பார்ப்பில், ஜூன் 12-ந்தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு, விவசாயிகள் வேளாண் பணிகளை மேற்கொண்ட நிலையில், 'தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்துவிட முடியாது' என அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கர்நாடகா முடிவு எடுத்திருப்பது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு மட்டுமல்லாமல், சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பினை அவமதிப்பதாகும்.

    சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பின்படி, தமிழ்நாட்டிற்கு ஆண்டு தோறும் 177.25 டி.எம்.சி. அடி நீரை கர்நாடகா அரசு திறந்துவிட வேண்டும்.

    ஆனால், இதுவரை வெறும் 20 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே திறந்து விடப்பட்டதாக கூறப்படுகிறது. இன்னும் 55.83 டி.எம்.சி. தண்ணீர் திறந்துவிடப்பட வேண்டிய நிலையில், தமிழ்நாட்டின் சார்பில் சுப்ரீம்கோர்ட்டில் மனுத் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து, இதுகுறித்து கர்நாடக அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டி விவாதித்துள்ளது.

    இந்தக் கூட்டம் முடிந்தவுடன் நிருபர்களிடம் பேட்டியளித்த கர்நாடக மாநில முதலமைச்சர், இனியும் தண்ணீர் கொடுக்க முடியாது என்றும், இந்த விஷயத்தில் தீர்வு காண்பதற்காக பிரதமரை சந்திக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

    கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது என்பதற்காக வழக்கம்போல், தி.மு.க., காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் காவேரி விஷயத்தில் மென்மையானப் போக்கினை கடைபிடிப்பது வருந்தத்தக்கது.

    தமிழ்நாட்டிற்கு உரிய காவேரி நீரை திறந்து விட்டால்தான் காங்கிரஸ் கட்சியுடன் தமிழ்நாட்டில் தேர்தல் கூட்டணி அமைக்கப்படும் என்று தி.மு.க. தலைமை கூறுமேயானால், தமிழ்நாட்டிற்கு உரிய நீர் உடனடியாக கிடைப்பதற்கு உண்டான வாய்ப்பு உண்டு. ஆனால், அதைச் சொல்ல தி.மு.க. தயங்குகிறது. இது தமிழ்நாட்டிற்கு எதிரான செயல்.

    காவேரி நதிநீர் திறப்பில் உறுதியான, திடமான முடிவினை எடுக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் தி.மு.க. அரசுக்கு இருக்கிறது.

    தி.மு.க. அரசு தனது பொறுப்பினை உணர்ந்து, உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி தமிழ்நாட்டிற்கு உரிய நீரை கர்நாடகம் திறந்துவிட வலியுறுத்தி தீர்மானத்தினை நிறைவேற்ற வேண்டும் என்றும், பிரதமர் மோடியை நேரில் சந்தித்து தமிழ்நாட்டின் பக்கம் உள்ள நியாயத்தினை எடுத்துரைக்க வேண்டும் என்றும், சுப்ரீம் கோர்ட்டிலும் வலுவான வாதங்களை தமிழ்நாட்டின் சார்பில் எடுத்துரைக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    • ஜூலை மாதத்தில் 31 டி.எம்.சி. அடி தண்ணீரையும் கர்நாடகம் திறந்துவிட வேண்டும்.
    • தண்ணீரை திறந்து விடுவது கஷ்டம் என்றும் கர்நாடக மாநில துணை முதலமைச்சர் பேசி இருக்கிறார்.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில், பாசனத்திற்கான தண்ணீரை கோடை மழை மூலமாகவும், கர்நாடகம் தண்ணீரை திறந்துவிடும் என்ற எதிர்பார்ப்பிலும், ஐந்து லட்சம் ஏக்கர் நிலத்தில் புழுதி அடித்து நேரடி விதைப்பு பணியை டெல்டா விவசாயிகள் மேற்கொண்டு விட்டனர்.

    குறுவை நேரடி நெல் விதைப்பு மேற் கொள்ளப்பட்டுள்ள நிலையில், நீரின்மை காரணமாக விதைகள் முளைக்காமலும்; நிலத்தடி நீர்மூலம் முளைப்பு கண்ட பயிர்கள் பாதிக்கும் நிலையில் உள்ளதாகவும்; கடைமடைப் பகுதிகளுக்கு இன்னும் தண்ணீர் சென்றடையவில்லை என்றும், இந்த நிலை நீடித்தால், லட்சக்கணக்கான ஏக்கரில் மேற்கொள்ளப்பட்டுள்ள நேரடி விதைப்பு பாதிக்கப்படும் என்றும், ஏக்கருக்கு ஆயிரக்கணக்கான ரூபாய் செலவு செய்துவிட்டு கவலையில் உறைந்து போயுள்ளது.

    உச்ச நீதிமன்றத் தீர்ப்பு மற்றும் காவேரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி ஜூன் மாதத்தில் 9.1 டி.எம்.சி. அடி தண்ணீரையும், ஜூலை மாதத்தில் 31 டி.எம்.சி. அடி தண்ணீரையும் கர்நாடகம் திறந்துவிட வேண்டும். ஆனால், தண்ணீரை திறந்துவிட முடியாது என்றும், காவேரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டாலும் தண்ணீரை திறந்து விடுவது கஷ்டம் என்றும் கர்நாடக மாநில துணை முதலமைச்சர் பேசி இருக்கிறார்.

    தி.மு.க. அரசின் திட்டமின்மை காரணமாக, பணத்தை போட்டு நேரடி விதைப்பினை மேற் கொண்ட விவசாயிகள் மன முடைந்து இருக்கிறார்கள். தி.மு.க.வின் மெத்தனப் போக்கிற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×