search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கருத்தடை அறுவை சிகிச்சை"

    • கடந்த 10 நாட்களில் சென்னை மாநகராட்சியில் உள்ள 15 வார்டில் மொத்தம் 551 நாய்கள் பிடிக்கப்பட்டு உள்ளது.
    • 407 நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    சென்னை மாநகராட்சியில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சுற்றித்திரியும் நாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, ஒவ்வொரு மாதமும் வார்டு வாரியாக நாய்கள் அதற்கான வாகனங்கள் மூலம் பிடித்து வரப்பட்டு கருத்தடை சிகிச்சை செய்யப்படுகிறது. ஒரு வார்டில் பிடிக்கப்படும் நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு பின்னர் அதே வார்டில் விடப்படுகிறது.

    அந்தவகையில், கடந்த 10 நாட்களில் சென்னை மாநகராட்சியில் உள்ள 15 வார்டில் மொத்தம் 551 நாய்கள் பிடிக்கப்பட்டு உள்ளது. இதில், 407 நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

    அதிகபட்சமாக புளியந்தோப்பில் 150 நாய்களும், கண்ணம்மாப் பேட்டையில் 70 நாய்களும், மீனம்பாக்கத்தில் 57 நாய்களும் பிடிக்கப்பட்டு உள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

    • 13 குழந்தைகள் பெற்றதால் குழந்தைகளின் தாய் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டு இருந்தார்.
    • பெண்ணின் கணவருக்கு ஆண்களுக்கான அதிநவீன கருத்தடை அறுவை சிகிச்சை செய்ய மருத்துவ குழுவினர் ஆலோசனை வழங்கினர்.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர் மலைப்பகுதி ஒன்னகரை என்ற கிராமத்தை சேர்ந்த 45 வயது மதிக்கத்தக்க ஒரு விவசாய கூலி தொழிலாளிக்கு ஏற்கனவே 7 ஆண் குழந்தைகள், 5 பெண் குழந்கைள் என மொத்தம் 12 குழந்தைகள் இருந்தனர்.

    இந்த நிலையில் இவர்களுக்கு கடைசியாக கடந்த 4 நாட்களுக்கு முன்பு 13-வது குழந்தையாக ஒரு ஆண் குழந்தை 3 கிலோ எடையில் பிறந்தது.13 குழந்தைகளும் நலமுடன் உள்ளனர். இதையடுத்து மருத்துவ குழுவினர் அவர்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்தனர்.

    13 குழந்தைகள் பெற்றதால் குழந்தைகளின் தாய் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டு இருந்தார். இதனால் அவருக்கு குடும்ப நல அறுவை சிகிச்சை செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து அந்த பெண்ணின் கணவருக்கு ஆண்களுக்கான அதிநவீன கருத்தடை அறுவை சிகிச்சை செய்ய மருத்துவ குழுவினர் ஆலோசனை வழங்கினர். ஆனால் அவர் அச்சம் அடைந்து மறுப்பு தெரிவித்து வந்தார். மருத்துவ குழுவினர் 8 முறை அவரது வீட்டிற்கு சென்று உள்ளனர். ஆனால் அவர் மருத்துவ குழுவினர் வரும் போதெல்லாம் வனப்பகுதியில் ஓடி மறைந்து கொண்டார்.

    இந்த நிலையில் கடைசி முயற்சியாக வட்டார மருத்துவ அலுவலர் சக்தி கிருஷ்ணன், கிராம நிர்வாக அலுவலர் பாபு மற்றும் காவல் துறை மற்றும் தன்னார்வலர்கள் அடங்கிய குழு உதவியுடன் வட்டார மருத்துவ அலுவலர் தலைமையில் நேற்று ஒன்னகரை கிராமத்திற்கு நேரடியாக சென்று அவரை ஆண் அறுவை சிகிச்சை செய்து கொள்ள அறிவுறுத்தினார்கள்.

    ஆனால் அவர் தானும் செய்து கொள்ள முடியாது தனது மனைவியும் செய்து கொள்ள முடியாது என்று கூறி பிடிவாதம் பிடித்தார். மீண்டும் மீண்டும் கர்ப்பம் தரித்தால் அவர்களுக்கு அது குறித்தான பக்க விளைவுகளை எடுத்துக்கூறி அவரை சம்மதிக்க வைத்து மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவருக்கும் 5 நாட்களுக்கு தேவையான அனைத்து விதமான உணவுப் பொருட்களையும் மருத்துவ குழுவினரின் சொந்த செலவில் வாங்கி அவரது மனைவியிடம் கொடுத்து விட்டு அவருக்கு பாதுகாப்பாக 2 நாட்களுக்கு ஆஷா பணியாளர்களை உடன் இருக்க வைத்தனர்.

    பின்னர் அவரை அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்து அவருக்கு ஆண்களுக்கான நவீன கருத்தடை அறுவை சிகிச்சை செய்து முடித்து அவருக்கு ஊக்கத்தொகையும் அளித்து மீண்டும் அவரை பத்திரமாக மருத்துவக் குழுவினர் அவரது வீட்டுக்கு கொண்டு சென்று விட்டு வந்தனர். ஒரு வழியாக போராடி 13 குழந்தைகளின் தந்தைக்கு மருத்துவ குழுவினர் கருத்தடை அறுவை சிகிச்சை செய்து முடித்தனர்.

    • கருத்தடை அறுவை சிகிச்சையில் அலட்சியமாக செயல்பட்டதாக தூத்துக்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை தலைமை மருத்துவர் மீது வழக்கு.
    • தூத்துக்குடி மாவட்ட அரசு மருத்துவமனை தலைமை மருத்துவருக்கு நோட்டீஸ்.

    உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் மனுதாரர், தூத்துக்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொண்டோம் என்றும், அறுவை சிகிச்சை செய்த பின்னரும், 5.8.2019ல் கருவுற்றதாகவும், 26.2.2020ல் பெண் குழந்தை பிறந்தது என்றும் இழப்பீடாக ரூ.10 லட்சம் வழங்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டது.

    இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், கருத்தடை அறுவை சிகிச்சையில் அலட்சியமாக செயல்பட்டதாக தூத்துக்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை தலைமை மருத்துவர் மீது வழக்கு தொடரப்பட்டது.

    இந்த வழக்கு மீதான விசாரணை இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நடைபெற்றது. இந்நிலையில், தூத்துக்குடி மாவட்ட அரசு மருத்துவமனை தலைமை மருத்துவருக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

    • சேலம் மாநகரில் உள்ள அனைத்து பகுதிகளிலும் தெரு நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
    • இந்த தெரு நாய்களை மாநகராட்சி ஊழியர்கள் பிடித்து கருத்தடை செய்து வருகின்றனர்.

    அன்னதானப்பட்டி:

    சேலம் மாநகரில் உள்ள அனைத்து பகுதிகளிலும் தெரு நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த தெரு நாய்களை மாநகராட்சி ஊழியர்கள் பிடித்து கருத்தடை செய்து வருகின்றனர். இதற்காக ஒவ்வொரு மண்டலத்திலும் தலா ஒரு வாகனம் மூலம் தெரு நாய்கள் பிடிக்கப்பட்டு, கருத்தடை மையத்திற்கு கொண்டு சென்று அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.

    சேலம் பொன்னம்மாப்பேட்டை அடுத்த வாய்க்கால்பட்டறை பகுதியில் மாநகராட்சி தெரு நாய்கள் கருத்தடை அறுவை சிகிச்சை மையம் உள்ளது.

    இங்கு தினமும் 50 முதல் 60 நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வருகிறது. இதனை மேலும் மேம்படுத்த வேண்டும் என்று, பாதுகாப்பாக தெரு நாய்களை பிடிக்கும் பணியாளர்களுக்கு, சேலம் மாநகராட்சி புளுகிராஸ் அமைப்புடன் இணைந்து சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. இதையடுத்து தெரு நாய்கள் அதிகம் உள்ள பகுதிகளில் அவற்றைப் பிடித்து கருத்தடை அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடு நடந்து வருகிறது. மேலும் கருத்தடை அறுவை சிகிச்சையை அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

    இது குறித்து மாநகராட்சி சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறுகையில், " மாநகர பகுதிகளில் பொது மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தி, சுற்றித் திரியும் தெரு நாய்கள் பிடிக்கப்பட்டு, அவற்றிற்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வருகிறது. வாய்க்கால்பட்டறையில் செயல்பட்டு வரும் தெரு நாய்கள் அறுவை சிகிச்சை மையத்தில், மாதந்தோறும் 450 முதல் 500 தெரு நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, மீண்டும் பிடிக்கப்பட்ட இடத்திலேயே அவை விடப்பட்டு வருகின்றன.

    இந்த மாதத்தில் இது வரை 150-க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் பிடிக்கப்பட்டு அவற்றிற்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

    தற்போது குளிர்காலம் என்பதால் நாய்கள் அதிகளவில் இனச்சேர்க்கையில் ஈடுபடும். எனவே தொடர்ந்து நாய்கள் பிடிக்கப்பட்டு, கருத்தடை சிகிச்சை செய்து, அவற்றின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது." என்று கூறினர்.

    ×