search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எண்ணெய் கசிவு"

    • கடலில் எண்ணெய் கசிவு காரணமாக கடந்த ஒரு மாதமாகவே காசிமேடு மீன் மார்க்கெட்டில் மீன் விற்பனை சரிவை சந்தித்தது.
    • வரும் வாரங்களிலும் மீன்கள் விற்பனை தொடர்ந்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

    சென்னை:

    சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் வழக்கமாக மீன்வாங்க பொதுமக்கள் கூட்டம் அலை மோதும். இந்நிலையில், 4 நாட்கள் தொடர் விடுமுறை வந்ததால், நேற்று காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் வழக்கத்தைவிட கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.

    விசைப் படகுகள் மூலம் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் நேற்று அதிகாலை கரை திரும்பினர். சுமார், 500-க்கும் மேற்பட்ட படகுகளில் மீன்களுடன் மீனவர்கள் கரை திரும்பினர். மீனவர்களுக்கு கடலில் அதிக அளவு மீன்கள் கிடைத்ததால், காசிமேடு மீன் மார்க்கெட்டில் நேற்று மீன் விற்பனைகளை கட்டியது.

    வஞ்சிரம், வவ்வால், சீலா, பாறை, சூறை, பால் சுறா உள்ளிட்ட பெரிய வகை மீன்களும் மற்றும் சிறிய வகை மீன்களான சங்கரா, நண்டு, இறால், கானாங் கத்தை, நவரை, நெத்திலி உள்ளிட்ட மீன்களின் வரத்தும் அதிகமாக காணப்பட்டது. காசிமேடு மீன் மார்க்கெட்டில் ஏலம் முறையில் மீன்கள் விற்பனை செய்யப்பட்டன. மேலும் பொதுமக்கள் கூட்டம் அதிகரித்ததால் மீன்களின் விலையும் அதிகரித்தது.

    இதுவரை கிலோ ரூ.700-க்கு விற்கப்பட்ட வஞ்சிரம் மீன் கிலோ ரூ.900 ஆக அதிகரித்தது. வெள்ளை நிற வவ்வால், கொடுவா மீன் ஆகியவை ரூ.600-க்கும், சிறிய வகை வவ்வால், சங்கரா மீன் ஆகியவை ரூ.500-க்கும், பாறை ரூ.400-க்கும், சீலா, இறால், நண்டு, கடமா பெரியது ஆகியவை தலா ரூ.300-க்கும், நவரை, கானாங்கத்தை, நெத்திலி மீன்கள் தலா ரூ.250-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    இதுகுறித்து, காசிமேடு மீனவர்கள் கூறியதாவது:-

    விடுமுறை நாளான நேற்று மீன்களை வாங்க அதிகாலை முதலே பொதுமக்கள் குவிந்தனர். இதனால், மீன்கள் விற்பனை அதிக அளவில் நடைபெற்றது. கடலில் எண்ணெய் கசிவு காரணமாக கடந்த ஒரு மாதமாகவே காசிமேடு மீன் மார்க்கெட்டில் மீன் விற்பனை சரிவை சந்தித்தது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப் பட்டது. வாடிக்கையாளர்கள் மீன் வாங்க பயந்ததால் மீன்களை விலையை குறைத்து விற்கவேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் ஒரு மாதத்துக்கு பிறகு மீண்டும் மீன் விற்பனை அதிகரித்துள்ளது.

    இதன் காரணமாக கடந்த வாரத்தை விட நேற்று மீன் விலை அதிகமாக காணப்பட்டது. மீன்களின் விலை 10 சதவீதம் அதிகரித்துள்ளது. வரும் வாரங்களிலும் மீன்கள் விற்பனை தொடர்ந்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    • சுனாமி மற்றும் இயற்கை சீற்றத்தின் போது தண்ணீர் மற்றும் அலையின் வேகத்தை குறைப்பதில் இதன் பங்கு அளப்பரியது.
    • தனியார் துறைமுகம் வர உள்ளதா?அல்லது தொழிற்சாலைகள் தான் முக்கியமானதா? என்பதை அதிகாரிகள் தெளிவுபடுத்த வேண்டும்.

    அலையாத்தி காடுகள் கடலின் கரையோரங்களில் உள்ள சதுப்புநிலங்களிலும், நதி முகத்துவாரங்களிலும், உவர் நீரிலும் வளரும் தாவரங்கள் ஆகும். இவை காடுகளை மட்டுமல்லாமல் மனிதர்கள் வாழும் நிலப்பரப்பையும் பாதுகாப்பதில் முக்கிய பங்காற்றுகின்றன.

    சுனாமி மற்றும் இயற்கை சீற்றத்தின் போது தண்ணீர் மற்றும் அலையின் வேகத்தை குறைப்பதில் இதன் பங்கு அளப்பரியது.

    இதற்கு முன்பு மெரினா-பெசன்ட் நகர் இடையே அடையாறு ஆற்று கரையோரத்தில் அலையாத்தி காடுகள் இருந்து உள்ளன. தற்போது இல்லை. கொசஸ்தலை ஆற்றின் முகத்துவார பகுதிகளில் அலையாத்தி தாவரங்கள் சுமார் 9 அடி வரை உள்ளன. எண்ணெய் கசிவால் இந்த அலையாத்தி மரங்களில் சுமார் 3 அடி உயரத்திற்கு எண்ணெய் படர்ந்து இருந்தது.

    இது குறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர் ஒருவர் கூறும்போது, எண்ணெய் கசிவு காரணமாக கொசஸ்தலை ஆற்று முகத்துவாரத்தில் உள்ள அலையாத்தி காடுகளும் பாதிக்கப்பட்டு உள்ளன. சுமார் 3 அடி உயரத்திற்கு இந்த தாவரங்களில் எண்ணெய் படந்து உள்ளது. இந்த பாதிப்பில் இருந்து இந்த மரங்கள் எப்படி மீளும் என்று தெரியவில்லை. அங்குள்ள விலங்குகளும் மிகவும் முக்கியமானது. இங்குள்ள அலையாத்தி காடுகளை பாதுகாக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பிச்சாரவத்தில் உள்ள அலையாத்தி காடுகளை போல் இங்குள்ள அலையாத்தி காடுகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்காதது ஏன்.?

    இங்கு தனியார் துறைமுகம் வர உள்ளதா?அல்லது தொழிற்சாலைகள் தான் முக்கியமானதா? என்பதை அதிகாரிகள் தெளிவுபடுத்த வேண்டும்.

    பிச்சாவரத்தை போல் அலையாத்தி காடுகளை பாதுகாக்க அரசு ஊழியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி பாதுகாத்தால் தான் அடுத்துவரும் பாதிப்பு களில் இருந்து தற்காத்து கொள்ளமுடியும். இதனை அரசு உடனடியாக செய்ய வேண்டும் என்றார்.

    • மீனவர்கள் வாழ்வாதாரம் முற்றிலும் முடங்கி தவித்து வருகிறார்கள்.
    • பொதுமக்களின் உயிர் சம்பந்தப்பட்ட விஷயத்தில் எந்த சமரசமும் இன்றி அரசு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யவேண்டும்.

    சென்னையில் இந்த மாத தொடக்கத்தில் மிச்சாங் புயல் காரணமாக பலத்த மழை வெள்ளம் ஏற்பட்டது. அப்போது எண்ணூர் பகுதியில் உள்ள தொழிற்சாலையில் இருந்து எண்ணெய் கழிவு பக்கிங்காம் கால்வாயில் கலந்து கொசஸ்தலை ஆறு மற்றும் எண்ணூர் முகத்துவார பகுதியில் பரவி கடலில் கலந்தது. இதனால் . எண்ணூர் குப்பம், நெட்டு குப்பம், தாளான் குப்பம் உள்ளிட்ட சுற்றி உள்ள மீனவ கிராமங்களுக்குள்ளும் மழை வெள்ளத்தின்போது எண்ணெய் பரவி வீடுகளில் படிந்தது. மீன்பிடி படகுகள், வலைகள் பாழாகின. எண்ணெய் கழிவால் மீனவர்களும்,திருவொற்றியூர் மேற்கு பகுதி, சடையங்குப்பம், பர்மா நகர் இருளர் காலனியை சேர்ந்த பொதுமக்களும் கடும் பாதிப்புக்கு உள்ளாகினர்.

    இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண தொகை வழங்க அரசு உத்தரவிட்டு உள்ளது. எனினும் எண்ணூரை சுற்றி உள்ள மீனவ கிராமத்தினர் சிலரும், திருவொற்றியூர் மேற்கு பகுதியை சேர்ந்த பொதுமக்களும் தங்களுக்கு நிவாரண உதவித்தொகை வழங்க வேண்டும் என்று தொடர்ந்துகோரிக்கை விடுத்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்த எண்ணெய் கழிவு எண்ணூரில் இருந்து பழவேற்காடு வரை பரவி உள்ளது. இதனால் அங்குள்ள மீனவ கிராமத்தினரும் நிவாரண உதவி கேட்டு போராட்டங்கள் அறிவித்து உள்ளனர்.

    கடலில் கலந்த எண்ணெய் கழிவுகளை பெரும்பாலும் படகில் சென்று மீனவர்கள் மக்கு மூலம் எடுத்து அகற்றினர். அதற்கு நீண்ட நாட்கள் ஆனது. இதற்குள் எண்ணெய் கழிவுகள் தரையில் 3 அடி வரை சென்றுவிட்டது, எண்ணெய் கழிவுகளை அகற்ற எந்த வித நவீன எந்திரமோ, மாற்று ஏற்பாடோ செய்யப்படவில்லை. இதுவும் தற்போது சமூக ஆர்வலர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    கடந்த 2017-ம் ஆண்டு ஜனவரி 28-ந்தேதி எண்ணூர் துறைமுகத்தில் கடலில் 2 கப்பல்கள் மோதிக்கொண்டபோது பல டன் கச்சா எண்ணெய் கடலில் கலந்தது. இந்த எண்ணெய் படலம் எண்ணூரில் இருந்து திரு வான்மியூர் வரை பரவியது.

    உடைந்த கப்பலில் இருந்து கொட்டிய எண்ணெய் கடல் நீரில் ஒரு அடி உயரத்திற்கு திட்டாக படர்ந்தது. அதனை பிரித்து எடுக்கும் பணியில் கடலோர காவல் படையினர் ஈடுபட்டனர். ஆனால் கடல் நீரில் இருந்து எண்ணெய்யை பிரித்தெடுக்கும் நவீன எந்திரம் இல்லாததால் பணியாளர்களே நேரடியாக வாளிமூலம் எண்ணெய் படலத்தை அப்புறப்படுத்தினர்.

    இதேபோல் தற்போதும் எண்ணூர் கடலில் கலந்த எண்ணெய் படலத்தை அப்புறப்படுத்தவும் நவீன எந்திரம் எதுவும் இல்லாததால் எப்போதும் போல் மீனவர்களே படகில் சென்று மக்கு மூலம் எடுத்து பீப்பாய்களில் நிரப்பினர். இது பொதுமக்கள் சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடையே மீண்டும் கேள்வியை எழுப்பி உள்ளது.

    2017-ம் ஆண்டு ஏற்பட்ட எண்ணெய் கசிவை படிப்பினையாக வைத்து கடலில் எண்ணெய் கலந்தால் அதனை எளிதில் பிரித்து எடுக்கும் வகையில் திட்டங்கள் மற்றும் நவீன எந்திரங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். ஆனால் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எதுவும் இல்லாமல் 2017-ம் ஆண்டின் சம்பவத்திற்கு பிறகும் பாடம் கற்காமல் இருப்பதாக பொதுமக்கள் ஆதங்கத்துடன் தெரிவித்தனர்.

    இதேபோல் அடுத்தடுத்து மழை வெள்ளம், எண்ணெய் கசிவு பாதிப்பில் இருந்து எண்ணூர் மற்றும் சுற்றி உள்ள மீனவ கிராமமக்களுக்கு தேவையான உதவிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளும் முறையாக செய்யப்படாததால் அப்பகுதி மக்கள் தவித்து வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்து இருக்கிறது. மொத்தத்தில் எண்ணூர் எண்ணெய் கசிவால் அப்பகுதியில் சுற்றுச்சூழல், கடல் வளம் முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளது.

    வெளிநாடுகளில் இதுபோன்று எண்ணெய் கசிவு மற்றும் தொழிற்சாலை விபத்துக்கள் ஏற்படும் போது பாதிக்கப்படும் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு அபராத தொகை கோடிக்கணக்கில் இருக்கும். மேலும் சம்பந்தப்பட்ட தொழிற்சாலை அல்லது நிறுவனம் மூடப்படும் நிலையும் ஏற்படும். ஆனால் இங்கு அந்த அளவுக்கு கடுமையான நடவடிக்கைகள் இல்லை என்று தெரிகிறது. மேலும் இழப்பீடுகளும் வெளிநாடுகளைப் போல் வழங்கப்படுவதில்லை. பொதுமக்களின் பாதுகாப்புக்கும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றே கூறப்படுகிறது. எனவே தொழிற்சாலை நிர்வாகத்தினர் இதுபோன்ற விபத்துக்கள் ஏற்படுவததை தடுக்க எந்த வகையான நடவடிக்கைகளை எடுத்து உள்ளனர்? விபத்து ஏற்பட்டால் தடுப்பு நடவடிக்கைகள் என்ன? போன்ற விரிவான திட்டங்களை செயல்படுத்துவதில் அரசு தீவிர கண்காணிப்பு மற்றும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    இதுகுறித்து சமூகஆர்வலர் ஒருவர் கூறியதாவது:-

    மழை வெள்ளம், எண்ணெய் கசிவு அமோனியா வாயு கசிவு என அடுத்தடுத்து ஏற்பட்ட இன்னல்களால் எண்ணூர் பொதுமக்கள் சொல்ல முடியாத அளவுக்கு பாதிக்கப்பட்டு உள்ளனர். இதிலிருந்து இன்னும் அவர்கள் மீளவில்லை.கடலில் எண்ணெய் கலந்ததால் மீன்கள் இறந்து உள்ளன. மீனவர்கள் வாழ்வாதாரம் முற்றிலும் முடங்கி தவித்து வருகிறார்கள்.

    இது தொடர்பாக தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்வு தாமாக முன்வந்து வழக்கு பதிந்து விசாரித்து வருகிறது. இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட எண்ணெய் நிறுவனம் இழப்பீடு கொடுப்பதாக அறிவித்து உள்ளது. ஆனால் இது எத்தனை பேருக்கு போதுமானதாக இருக்கும் என்று தெரியவில்லை. . கடந்த 2017-ம் ஆண்டு எண்ணூர் துறைமுகத்தில் கப்பல்கள் மோதி எண்ணெய் கடலில் கலந்த போது அதனை அகற்ற பெரும் சிரமம் ஏற்பட்டது. தற்போது தொழிற்சாலையில் இருந்து எண்ணெய் கலந்து உள்ளது. 2017-ம்ஆண்டுக்கு பிறகு அந்த எண்ணெய் விபத்தில் இருந்து எந்த பாடமும் படிக்காமல் அதே நிலையில் தான் நாம் உள்ளோம். எந்த பாதுகாப்பு உபகரணங்களும், எண்ணெய் தண்ணீரில் கலந்தால் அதனை அகற்ற தொழில் நுட்ப எந்திரங்களும் இதுவரை இல்லை. இது தொடர்பாக எந்த தெளிவான யோசனையும் இல்லை. இது தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியாவிலும் எங்கும் இல்லை என்றே தெரிகிறது. மீண்டும் இது போன்ற விபத்து ஏற்படாமல் இருக்க எண்ணூரை சுற்றி உள்ள தொழிற்சாலைகளில் பாதுகாப்பு குறித்து உரிய ஆய்வு செய்யவேண்டும். பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் மீட்பு பணிகள் அனைத்தும் காகித அளவில்தான் உள்ளன. இதுபோன்ற சம்பவம் மீண்டும் நடைபெறாமல் இருக்கவும், நடந்தால் அடுத்து எடுக்கவேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

    ஏற்கனவே பாதிப்பில் இருந்த எண்ணூர் பகுதி மக்கள் இப்போது உரத்தொழிற்சாலையில் இருந்து கசிந்த அமோனியா வாயுவால்மீண்டும் நிலைகுலைந்து உள்ளனர். அவர்களது உயிருக்கு பாதுகாப்பு கேள்விக்குறி ஆகி உள்ளது. தொழிற்சா லைகள் சரியான முறைப்படி பாதுகாப்புடன் இயங்குவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். ஆனால் இங்கு தொடர்ந்து விபத்து ஏற்பட்டு வருகிறது. தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்க அரசு தயங்குவது எதற்காக என்று தெரியவில்லை. இங்கு இது போன்ற தொழிற்சாலைகளை முக்கிய நபர்கள் மற்றும் அரசு நடத்துவதால் நடவடிக்கை இல்லையா? என்று புரியவில்லை. நமது நாட்டில் இதுபோன்ற தொழிற்சாலை விபத்துக்களில் எவ்வளவு பேருக்கு நிவாரண உதவிவழங்கப்பட்டு உள்ளது.

    பொதுமக்களின் உயிர் சம்பந்தப்பட்ட விஷயத்தில் எந்த சமரசமும் இன்றி அரசு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யவேண்டும்.

    எண்ணெய் கசிவால் கடலில் உள்ள மீன்கள், நீர்வாழ் உயிரினங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன.

    பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டிருந்தாலும் மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை எப்படி மீட்டெடுப்பார்கள் என்பது இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளது. இது பற்றிய எந்த தெளிவான விளக்கமும் இதுவரை இல்லை.

    மேலும் கொசஸ்தலை ஆற்றின் முகத்துவார பகுதியில் உள்ள அலையாத்தி காடுகளும் கடும் பாதிப்பை சந்தித்து உள்ளது. இங்குள்ள தாவரங்களில் சுமார் 3 அடி உயரத்திற்கு எண்ணெய் படிந்து இருந்ததை நாங்கள் பார்த்தோம். இதனால் சுற்றுச்சூழலின் சமநிலையே கேள்விக்குறியாக மாறி இருக்கிறது. இந்த அலையாத்தி காடுகள் கடுமையான கடல் சீற்றம் மற்றும் சுனாமியின் போது பாதுகாப்பு அரணாக இருக்கும். அங்குள்ள விலங்குகள் மிகவும் முக்கியமானது.


    இதேபோல் பறவைகளின் இறக்கைகளில் எண்ணெய் படர்ந்து பறக்க முடியாத அளவில் இருந்தன.

    இந்த விவகாரத்தில் நிறுவனங்கள் அஜாக்கிரதையாக இருப்பதாகவே தெரிகிறது. சம்பந்தப்பட்ட நிறுவனம் மீது கடுமையான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இது போன்ற சம்பவங்கள் இனிமேல் நடைபெறாது. அபராத தொகையும் கூடுதலாக விதிக்க வேண்டும். அப்படியானால் தான் இது போன்ற நிறுவனங்கள் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து யோசித்து சரியான நடவடிக்கை எடுப்பார்கள். வெளிநாடுகளைப் போல் விபத்து ஏற்படும் தொழிற்சாலைகளுக்கு கூடுதல் அபராதம் விதிக்கப்பட வேண்டும். 2017-ம் ஆண்டு முதல் இதுவரை என்ன முயற்சி எடுத்து உள்ளோம்? இப்போதைய எண்ணெய் கசிவு பற்றி 2017-ம் ஆண்டு போல் பேசப்படவில்லை. இது மிகவும் வருந்தத்தக்கது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கடலில் கலந்து எண்ணெய் கழிவால் மீன்கள், பறவைகள் பாதிக்கப்பட்டன.
    • மணல் நிறைந்த கடற்கரைகளுக்கு மட்டுமே ஆமைகள் வரும்.

    திருவொற்றியூர்:

    மிச்சாங் புயல்காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தின்போது எண்ணூரில் எண்ணெய் நிறுவனத்தில் இருந்து வெளியேறி எண்ணெய் கழிவு கடல் மற்றும் முகத்துவார பகுதியில் கலந்தது. இதனால் மீனவர்களின் படகுகள், வலைகள் சேதம் அடைந்தன. மேலும் மீனவர்கள் கடலுக்கு செல்ல முடியாத அளவுக்கு அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. இதை த்தெடர்ந்து எண்ணூரை சுற்றி உள்ள மீனவர்களுக்கு நிவாரண உதவி வழங்க அரசு உத்தரவிட்டு உள்ளது.

    இதற்கிடையே கடலில் கலந்து எண்ணெய் கழிவால் மீன்கள், பறவைகள் பாதிக்கப்பட்டன. இதேபோல் ஜனவரிமாதத்தில் கரைக்கு கூடுகட்ட வரும் ஆமைகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளதா? ஆமைகள் கூடுகட்ட வரும் கரையில் பாதிப்பு இருக்கிறதா? என்பதை ஆய்வு செய்ய வனத்துறையினர் கடந்த 12-ந்தேதி சிறப்பு குழுவை நியமித்தது.

    இந்த குழுவினர் எண்ணெய் கழிவு படர்ந்த எண்ணூர் கடற்கரை பகுதிகளை ஆய்வு செய்தது. இதில் எண்ணெய் கழிவுகளால் ஆமைகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இந்த அறிக்கை விரைவில் அரசிடம் சமர்ப்பிக்கப்பட உள்ளது.

    இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது,

    எண்ணூர் கடல்பகுதியில் பரவிய எண்ணெய் கழிவால் ஆமைகளுக்கு பாதிப்பு இல்லை. அவை ஆண்டு தோறும் ஜனவரி மாதம் கூடு கட்டி முட்டையிட கடற்கரைக்கு வரும். எண்ணூர் முகத்துவாரத்தில் கசிவு ஏற்பட்டதாலும், எண்ணெய் கழிவு கடலில் அதிகம் பரவாததாலும் பெரிய அளவில் பாதிப்பு இல்லை. மேலும், எண்ணூர் அருகே உள்ள கடற்கரையில் கற்கள்தான் அதிகஅளவில் உள்ளன. மணல் நிறைந்த கடற்கரைகளுக்கு மட்டுமே ஆமைகள் வரும். இதனால் ஆமைகள் முட்டையிட கடற்கரைக்கு வருதில் எந்த பாதிப்பும் இருக்காது. எண்ணெய் கழிவால் மீன்கள் மற்றும் நீர்வாழ் உயிரினங்கள் பறவைகள் மற்றும் சதுப்புநிலங்களுக்கு மட்டும் பாதிப்பு உள்ளது என்றார்.

    • மீனவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை உடனடியாக திரும்பப் பெறுமாறும் இந்த அரசை வலியுறுத்துகிறேன்.
    • மீனவ கிராமங்களுக்கும் அரசின் நிவாரணம் முழுமையாக கிடைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தல்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    மிச்சாங் புயலின் போது ஏற்பட்ட வெள்ள பாதிப்பின் காரணமாக வெள்ளநீர் கழிவுகளுடன் எண்ணெய் கழிவு கலந்து எண்ணூர் முகத்துவாரம் பகுதி வழியாக கடலில் கலந்தது. இதனால் குடியிருப்பு பகுதிகள் மற்றும் மீனவர்கள் தொழில் செய்யக்கூடிய பகுதிகள் அனைத்தும் எண்ணெய் படலமாக மாறி அப்பகுதியில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது.

    இதன் காரணமாக, அப்பகுதியில் குடியிருந்த மீனவர்களின் படகுகள், மீன்பிடி வலைகள் மற்றும் மீன்பிடி சாதனங்கள் அனைத்தும் எண்ணெய் படலத்தால் சேதமடைந்து, மீனவர்கள் மீன்பிடிக்கும் தொழில் செய்ய முடியாமல், அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வீட்டில் முடங்கி உள்ளனர். இதனால் மீனவர்கள் கடலிலும், முகத்துவாரத்திலும் மின்பிடிக்க முடியவில்லை.

    இந்நிலையில், இந்த விடியா திமுக அரசு எண்ணூரில் எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட சுமார் 6,700 பேருக்கு தலா 7,500/- ரூபாய் நிவாரணமாகவும், மீனவ கிராமங்களைச் சேர்ந்த சுமார் 2,300 மீனவ குடும்பங்களுக்கு நிவாரணத் தொகையாக தலா 12,500/- ரூபாயும், படகுகளை சரிசெய்ய படகு ஒன்றுக்கு 10,000/- ரூபாயும் வழங்கப்படும் என்று விடியா திமுக அரசு அறிவித்துள்ளது. அறிவிக்கப்பட்ட இந்நிவாரணம் மிகவும் குறைவாக உள்ளது.


    எனவே, எண்ணெய் கசிவினால் சுமார் 20 நாட்கள் மீன்பிடி தொழிலுக்குப் போகாமல், மீனவர்கள் வாழ்வாதாரம் இழந்த நிலையில், தற்போது இந்த அரசு அறிவித்துள்ள நிவாரணம் போதுமானதாக இல்லை. எனவே, பாதிக்கப்பட்ட மீனவர்கள் விடியா திமுக அரசை எதிர்த்து, நிவாரணத்தை உயர்த்தி வழங்கக் கோரி வீதிக்கு வந்து போராடிய நிலையில், அவர்களைக் கைது செய்துள்ள விடியா திமுக அரசிற்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை உடனடியாக திரும்பப் பெறுமாறும் இந்த அரசை வலியுறுத்துகிறேன்.

    2017-ஆம் ஆண்டு அம்மாவின் ஆட்சியின் போது, காமராஜர் துறைமுகத்தில் இருந்த இரண்டு கப்பல்கள் மோதிக்கொண்ட நிகழ்வில் ஏற்பட்ட எண்ணெய் கசிவினால் பாதிக்கப்பட்ட அனைத்து மீனவ கிராமங்களுக்கும், மீனவர் கூட்டுறவு சங்கங்கள் மூலம் நிவாரணமும், மீன்பிடி படகுகள் மற்றும் சாதனங்களுக்கான நிவாரணமும் வழங்கப்பட்டது.

    மேலும், பெரிய படகு ஒன்றுக்கு 35,000/- ரூபாயும், கண்ணாடி இழை படகிற்கு (FRP) 15,000/- ரூபாயும், கட்டுமரத்திற்கு 10,000/- ரூபாயும் வழங்கினோம். மேலும், மீனவர்களின் வாழ்வாதாரத்திற்கு முதற்கட்டமாக குடும்பம் ஒன்றிற்கு 5,000/- ரூபாயும், அடுத்தகட்டமாக மீன்பிடி கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினர்களாக இருந்த ஒவ்வொரு மீனவருக்கும் தலா 12,000/- ரூபாயும் வழங்கப்பட்டது.

    அதுதவிர, மீனவ மகளிர் கூட்டுறவு சங்க உறுப்பினராக இருந்த ஒவ்வொரு மீனவ மகளிருக்கும் 10,000/- ரூபாயும், மீன்பிடி தொழில் சார்ந்த தொழிலாளர்களுக்கு நிவாரணமாக தலா 10,000/- ரூபாயும் வழங்கினோம்.

    எனவே, தற்போது பாதிக்கப்பட்டுள்ள மீனவர்களின் நியாயமான கோரிக்கைகளை உதாசீனப்படுத்தாமல், அவர்கள் மீண்டும் மீன்பிடித் தொழில் செய்வதற்கு ஏதுவாக, தற்போதுள்ள விலைவாசியை கருத்திற்கொண்டு ஒவ்வொரு படகிற்கும் நிவாரணமாக 50,000/- ரூபாயும், கண்ணாடி இழை படகிற்கு (FRP) 30,000/- ரூபாயும், கட்டுமரத்திற்கு 20,000/- ரூபாயும், மீன்பிடி வலைக்கு 25,000/- ரூபாயும் வழங்க இந்த விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன்.

    மேலும், 20 நாட்கள் மீன்பிடித் தொழிலுக்கு செல்ல முடியாததால், அவர்களின் வாழ்வாதாரத்திற்கு வழிசெய்யும் வகையில் தற்போது அறிவித்துள்ள நிவாரணத் தொகையை இருமடங்காக உயர்த்தி வழங்குமாறு இந்த விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன்.

    எண்ணெய் கசிவு, முகத்துவாரத்தில் இருந்து கடலில் கலந்துள்ள நிலையில், கடற்கரையை ஒட்டியுள்ள, பாதிக்கப்பட்ட அனைத்து மீனவ கிராமங்களையும் கண்டறிந்து, அந்த மீனவ கிராமங்களுக்கும் அரசின் நிவாரணம் முழுமையாக கிடைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு இந்த விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு, அத்தொகையும் ஏற்கெனவே பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
    • நிவாரணத் தொகையினை பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அவர்களது வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும்.

    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,

    கொசஸ்தலை ஆற்றில், எண்ணூர் முகத்துவார பகுதியில் கடந்த 05.12.2023 அன்று ஏற்பட்ட எண்ணெய் கசிவினை அகற்றிட தமிழ்நாடு அரசு துரித நடவடிக்கைகளை மேற்கொண்டது. இந்நிகழ்வில் காட்டுக்குப்பம், சிவன்படை குப்பம், எண்ணூர் குப்பம், முகத்துவாரகுப்பம், தாழங்குப்பம் நெட்டுக்குப்பம் வ.உ.சி.நகர், உலகநாதபுரம் மற்றும் சத்தியவாணி முத்து நகர் ஆகிய கடலோர மீனவ கிராமங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீன்பிடி படகுகள் மற்றும் மீன்பிடி வலைகளில் எண்ணெய் படிந்து சேதம் ஏற்பட்டது. மேலும், இக்கிராமங்களை சார்ந்த மீனவர்கள் எண்ணெய் கசிவினால் மீன்பிடித் தொழிலுக்கு செல்ல இயலாததால் அவர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டது. இதைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு, அத்தொகையும் ஏற்கெனவே பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

    இதனை தொடர்ந்து, கூடுதலாக எண்ணெய் கசிவினால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மேற்கண்ட மீனவ கிராமங்களை சார்ந்த 2,301 குடும்பங்களுக்கு நிவாரணத் தொகையாக தலா ரூ.12,500 வீதமும், மேலும் எண்ணெய் கசிவினால் பாதிக்கப்பட்ட 787 மீன்பிடி படகுகளை சரிசெய்திட படகு ஒன்றிற்கு தலா ரூ.10,000 வீதமும் மொத்தம் 3 கோடி ரூபாய் அரசினால் ஒப்பளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்நிவாரணத் தொகை பாதிக்கப்பட்ட மீனவர்களின் வங்கி கணக்கிற்கு வரவு வைக்கப்பட்டு வருகிறது.

    மேலும் சென்னை மாநகராட்சி மண்டலம் 1, வார்டு 4, 6, மற்றும் 7 ஆகிய பகுதிகளில் எண்ணெய் கசிவினால் பாதிக்கப்பட்ட 6,700 குடும்பங்களுக்கு தலா ரூ.7,500 வீதம், மொத்தம் 5 கோடியே 2 லட்சம் ரூபாய் நிவாரணத் தொகை வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்நிவாரணத் தொகையினை பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அவர்களது வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். எனவே, மிச்சாங் புயல் கனமழையினால் ஏற்பட்ட எண்ணெய் கசிவினால் பாதிக்கப்பட்ட 9,001 குடும்பங்களுக்கு 8 கோடியே 68 லட்சம் ரூபாய் வழங்கிட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்கள்.

    இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    • குடிநீரில் ஆயில் கலந்து வருவதால் குடிப்பதற்கும் குளிப்பதற்கும் மிகவும் சிரமமாக உள்ளது.
    • குடிதண்ணீரில் ஆயில் கலந்து வருகிறது.

    தண்டையார்பேட்டை பகுதியில் உள்ள கருணாநிதி நகர், பட்டேல் நகர், ராஜீவ் காந்தி நகர், வினோபா நகர், தமிழன் நகர், ராஜசேகர் நகர், நெடுஞ்செழியன் நகர் ஆகிய தெருக்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன.

    இங்கு சுத்திகரிக்கப்படும் ஆயில் பல்வேறு விதமாக தரம் பிரிக்கப்பட்டு லாரிகள் மற்றும் ரெயில்கள் மூலம் வெளிமாவட்டங்கள் மற்றும், மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

    தொழிற்சாலையின் உள் பகுதி வரை அமைக்கப்பட்டு உள்ள தண்டவாளப்பகுதிக்கு ஆயிலை கொண்டு செல்லவும், சரக்கு ரெயிலில் வரும் ஆயிலை இறக்கவும் வசதியாக மேல்பகுதியில் குழாய்கள் உள்ளன.

    இந்தநிலையில் சரக்கு ரெயில், லாரிகளில் ஆயில்களை ஏற்றி, இறக்கும் போது அதிக அளவில் எண்ணெய் வீணாக தரையில் கொட்டி வருகிறது. மேலும் ஆயிலை தரம்பிரிக்கும் போதும் ஆயில் பெருமளவு வீணாவதால் அது தரையில் சிதறி பூமிக்கு அடியில் செல்கிறது.

    இந்த எண்ணெய் கசிவுகள் பூமிக்கு அடியில் பரவி உடைப்பு ஏற்பட்ட குடிநீர் பைப்புகளுக்குள் கலந்து விடுவதாக தெரிகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு வரும் குடிதண்ணீரில் ஆயில் கலந்து பயன்படுத்த முடியாத அளவுக்கு வருகின்றன. மேலும் தொட்டியில் சேமித்து வைக்கப்படும் தண்ணீரும் அதிக அளவு ஆயில் படர்ந்து மேல்பகுதியில் மிதக்கின்றன. மழை காலங்களில் ஆயில் கலப்பு அதிக அளவில் இருப்பதாக கூறப்படுகிறது.

    இதனால் அப்பகுதியில் வசிப்பவர்கள் இந்த தண்ணீரை குளிப்பதற்கும் குடிப்பதற்கும் பயன்படுத்த முடியாமல் மிகவும் சிரமத்துக்கு ஆளாகி வருகிறார்கள்.

    இந்த ஆயில் கலந்த தண்ணீரை குடிப்பதாலும், குளிப்பதாலும் தோல் நோய்கள், அலர்ஜி உள்ளிட்ட உடல் பாதிப்புக்கு பலர் ஆளாகி வருகிறார்கள். இது தொடர்பாக அப்பகுதி மக்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் இந்த பிரச்சினைக்கு இன்னும் முடிவு எட்டப்படவில்லை. தொடர்ந்து ஆயில் கலந்த தண்ணீரே வருகிறது. இதுபற்றி பொதுமக்கள் மெட்ரோ வாட்டர் அதிகாரிகளிடம் புகார் செய்தும் தீர்வு கிடைக்கவில்லை.

    மெட்ரோ வாட்டர் பைப்புகளில் உடைப்பு ஏற்பட்டு இருக்கலாம் என்று கருதி கடந்த சில மாதங்களுக்கு முன்பு அப்பகுதியில் பூமிக்கு அடியில் இருந்த பழைய குடிநீர் குழாய்கள் முழுவதும் அகற்றப்பட்டு புதிதாக அமைக்கப்பட்டது. ஆனாலும் குடிதண்ணீரில் ஆயில் கலந்து வருகிறது. இதனால் என்ன நடவடிக்கை எடுப்பது என்று தெரியாமல் அதிகாரிகள் தவித்து வருகிறார்கள்.

    இதையடுத்து கருணாநிதி நகர், பட்டேல் நகர், ராஜீவ் காந்தி நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு லாரிகள் மூலம் மெட்ரோ வாட்டர் தண்ணீர் தினமும் வினியோகிக்கப்படுகிறது. குடிநீரில் ஆயில் கலப்பு தொடர்பாக தண்டையார்பேட்டை மண்டல மெட்ரோ வாட்டர் மற்றும் மாநகராட்சி சார்பில் ஆயில் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்ட நிலையில் இன்று வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது. இதற்கிடையே புதிதாக அமைக்கப்பட்ட மெட்ரோ வாட்டர் பைப்புகளில் ஏதேனும் ஓட்டை அல்லது கசிவு உள்ளதா? என்பதை கண்டுபிடிப்பதற்காக மெட்ரோ வாட்டர் துறையினர் ரூ.5 கோடி மதிப்புள்ள ஈ.வி.எம்.கேஸ் என்னும் நவீன கருவியை பயன்படுத்த உள்ளனர். இதற்கு மாநகராட்சி அலுவலகத்தில் முறையாக அனுமதி பெற்ற பின்னரே செயல்படுத்த முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    குடிநீரில் ஆயில் கலந்து வருவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். இதுகுறித்து தண்டையார்பேட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் பூபாலன் கூறியதாவது:-

    குடிநீரில் ஆயில் கலந்து வருவதால் குடிப்பதற்கும் குளிப்பதற்கும் மிகவும் சிரமமாக உள்ளது. ஆயில் கலந்த தண்ணீரை பயன்படுத்துவதால் அலர்ஜி, தோல் தொற்று நோய் அபாயத்தில் அனைவரும் உள்ளனர். இது பற்றி பலமுறை ஆயில் நிறுவனத்திடம் கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியம் காட்டுகிறார்கள். மேலும் ஆயில் நிறுவனத்தின் அருகில் உள்ள இடத்தை லாரிகளை நிறுத்தும் இடமாக பயன்படுத்துவதால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வருகிறது. தண்ணீரில் ஆயில் கலந்து வருவதை தடுக்க அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தேவிகா:-

    நான் கடந்த 20 வருடங்களாக இந்த பகுதியில் வசித்து வருகிறேன். ஆயில் கலந்த தண்ணீரை சமைப்பதற்கு பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. மோசமான நிலையில் உள்ள இந்த தண்ணீரை பயன்படுத்துவதால் தோல் நோய் உள்ளிட்ட நோய்தொற்று அச்சத்தில் அனைவரும் தவித்து வருகிறார்கள். என்னுடைய மகன் தோல் நோயால் பாதிக்கப்பட்டு உள்ளான். விரைவில் இதற்கு தீர்வு காண வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • 14,000 பீப்பாய்கள் வைட்ச் பண்ணையில் இருந்து வருகிறது.
    • பெரென்கோ ஒரு நாளைக்கு சுமார் 40,000 பீப்பாய்கள் எண்ணெயை உற்பத்தி செய்கிறது.

    தெற்கு இங்கிலாந்தின் பூல் துறைமுகத்தில் 200 பீப்பாய்களில் இருந்து எண்ணெய் கசிவு ஏற்பட்டுள்ளது. இதனால் கடலில் எண்ணெய் மிதந்து காணப்படுகிறது.

    இதுகுறித்து ஆங்கிலோ- பிரெஞ்சு எண்ணெய் நிறுவனமான பெபரென்கோவின் இங்கிலாந்து பிரிவு, "தெற்கு இங்கிலாந்தின் டோர்செட்டில் உள் வைட்ச் பண்ணையில் அதன் கிணறு தளங்களில் ஒன்றில் வரையறுக்கப்பட்ட எண்ணெய் கசிவு ஏற்பட்டுள்ளதாக" கூறியது.

    எண்ணெய் கசிவு என்பது மிக ஆபத்தான விஷயம். அதனால், துறைமுகத்தில் என்ன நடந்தது என்பதை அறிய முழு விசாரணை தொடங்கப்படும் என்று பொது மேலாளர் பிராங்க் டி அறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளார்.

    மேலும், கசிவு கட்டுப்படுத்தப்பட்டு வருவதாகவும், விசாரணை தொடங்கப்படும் என்றும் கூறினார்.

    பெரென்கோ ஒரு நாளைக்கு சுமார் 40,000 பீப்பாய்கள் எண்ணெயை உற்பத்தி செய்கிறது. இதில் சுமார் 14,000 பீப்பாய்கள் வைட்ச் பண்ணையில் இருந்து வருகிறது.

    ×