ரஷியாவில் கரை ஒதுங்கிய சீன சரக்கு கப்பல்

கப்பலில் சுமார் 1 லட்சம் டன் எண்ணெய் மற்றும் நிலக்கரி போன்றவை கொண்டு செல்லப்பட்டன.தகவலறிந்த கடலோர போலீசார் அங்கு விரைந்தனர்.
ரஷியாவில் கரை ஒதுங்கிய சீன சரக்கு கப்பல்
Published on

மாஸ்கோ:

ரஷியாவின் சகலின் நெவெல்ஸ்கி கடற்கரை அருகே சீன சரக்கு கப்பல் கரை ஒதுங்கியது. அந்த கப்பலில் இருந்து எண்ணெய் வெளியேறும் அபாயம் இருப்பதால் அங்கு அவசர நிலை அறிவிக்கப்பட்டு உள்ளது.

ரஷியாவின் பால்டிக் கடற்பகுதியில் அன் யாங்-2 என்ற சரக்கு கப்பல் சென்று கொண்டிருந்தது. சீனாவுக்குச் சொந்தமான அந்த கப்பலில் சுமார் 1 லட்சம் டன் எண்ணெய் மற்றும் நிலக்கரி போன்றவை கொண்டு செல்லப்பட்டன.

சகலின் நெவெல்ஸ்கி நகரில் உள்ள உஸ்ட்-லுகா துறைமுகம் அருகே சென்றபோது அந்த கப்பல் எதிர்பாராதவிதமாக தரை தட்டியது. இதுகுறித்து தகவலறிந்த கடலோர போலீசார் அங்கு விரைந்தனர்.

பின்னர் அந்த கப்பலில் சிக்கித் தவித்த 20 பணியாளர்களையும் அவர்கள் பத்திரமாக மீட்டனர். இதற்கிடையே அந்த கப்பல் கொஞ்சம் கொஞ்சமாக சேதமடைந்து வருகிறது.

இதனால் கப்பலில் இருந்து எண்ணெய் கசியும் அபாயம் உள்ளது. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அதனை அப்புறப்படுத்தும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன்காரணமாக சகலின் நெவெல்ஸ்கி பிராந்திய கவர்னர் வலேரி லிமரென்கோ அங்கு அவசர நிலை அறிவித்து உத்தரவிட்டுள்ளார். மேலும் அந்த கப்பலை அங்கிருந்து மீட்கும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே இந்த கப்பல் சிக்கிக் கொண்டது குறித்து கடலோர போலீசார் விசாரித்து வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில், சகலின் நெவெல்ஸ்கி கடற்கரை ஆழமற்றது என்பதால் கப்பலின் என்ஜின் தரையில் சிக்கிக் கொண்டது தெரிய வந்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com