search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "vandalur zoo"

    • காணும் பொங்கலை கொண்டாட லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் மாமல்லபுரத்தில் குவிந்தனர்.
    • புராதன சின்னங்களான கடற்கரை கோவில், ஐந்துரதம், வெண்ணை உருண்டைக் கல் பாறை உள்ளிட்ட பகுதிகளை அருகில் சென்று 20 ஆயிரம் பேர் பார்த்து ரசித்தனர்.

    வண்டலூர்:

    பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த 14-ந்தேதி முதல் தொடர் விடுமுறை விடப்பட்டது. இதனால் விடுமுறை நாட்களில் பொதுமக்கள் குடும்பத்துடன் சுற்றுலா இடங்களுக்கு அதிக அளவில் சென்று வந்தனர்.

    காணும் பொங்கலையொட்டி நேற்று வண்டலூர் பூங்கா, கிண்டி சிறுவர் பூங்கா, மாமல்லபுரம், பழவேற்காடு பகுதியில் லட்சக்கணக்கானோர் குவிந்தனர்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதி மக்களின் முக்கிய சுற்றுலா இடமாக வண்டலூர் பூங்கா உள்ளது. பொங்கல் தொடர் விடுமுறையால் வண்டலூர் பூங்காவில் கடந்த 4 நாட்களாக சுற்றுலா பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

    கடந்த 4 நாட்களில் வண்டலூர் பூங்காவை 1 லட்சம் பேர் பார்த்து ரசித்து உள்ளனர். நேற்று மட்டும் 31 ஆயிரம் பேர் குவிந்து இருந்தனர்.

    இது தொடர்பாக வண்டலூர் பூங்கா இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    காணும் பொங்கல் பண்டிகையினை கொண்டாட வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா மிகவும் விரும்பத்தக்க இடங்களில் ஒன்றாகும். பார்வையாளர்களின் வருகையினை முன்னிட்டு பூங்காவின் நேரம் நீட்டிக்கப்பட்டது.

    கூடுதல் நுழைவுச் சீட்டு வழங்குமிடம், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, கூடுதல் உணவு விற்பனை நிலையங்கள், கழிப்பறைகள், இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு தனித்தனியாக நிறுத்த அடையாளக் குறியீடுகள் செய்யப்பட்டது. கூடுதல் வாகன நிறுத்துமிடத்திற்கு செல்ல மாற்று வழி அமைக்கப்பட்டது.

    பூங்கா நிர்வாகம் செய்த பொங்கல் ஏற்பாடுகள் பார்வையாளர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. பெரிய எல்.இ.டி. திரைகள் மூலம் பூங்காவின் திரை தொகுப்பு திரையிடல், தாவர உண்ணிகளுக்கு உணவு வழங்குதல், யானை குளியல் மற்றும் புகைப்படம் எடுக்குமிடம் பார்வையாளர்களால் மிகவும் விரும்பப்பட்டது. பூங்காவில் 3 கண்காணிப்பு கோபுரங்கள், கட்டுப்பாட்டு அறையில் இருந்து சி.சி.டி.வி. கண்காணிப்பு, வனத்துறை அலுவலர்கள் காவல் துறையுடன் இணைந்து பூங்கா ரோந்து பணி போன்றவற்றின் மூலம் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

    பூங்காவிற்கு பொங்கல் பண்டிகை நாட்களில் 1 லட்சத்துக்கும் மேல் பார்வையாளர்கள் வருகை புரிந்தனர்.

    14-ந்தேதி 7,630 பேர், 15-ந்தேதி- 17,762 பேர், 16-ந்தேதி 34,183 பேர், 17-ந்தேதி, 31,440 பேர் மற்றும் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகள் சுமார் 9 ஆயிரம் பேர் வந்து இருக்கிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    காணும் பொங்கலை கொண்டாட லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் மாமல்லபுரத்தில் குவிந்தனர். அங்குள்ள புராதன சின்னங்களான கடற்கரை கோவில், ஐந்துரதம், வெண்ணை உருண்டைக் கல் பாறை உள்ளிட்ட பகுதிகளை அருகில் சென்று 20 ஆயிரம் பேர் பார்த்து ரசித்தனர். இந்தியருக்கு ரூ.40-ம், வெளிநாட்டவருக்கு ரூ.600-ம் தொல்லியல்துறை நுழைவு கட்டணமாக வசூலித்தது.

    • இன்று பார்வையாளர்களின் வசதிக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
    • பூங்காவை பொதுமக்கள் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை சுற்றி பார்க்கலாம்.

    வண்டலூர் :

    சென்னையை அடுத்த வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் 2 ஆயிரத்து 382 விலங்குகள் மற்றும் பறவைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் பொங்கல் பண்டிகையன்று வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு 17 ஆயிரம் பேர் வருகை தந்து பூங்காவை சுற்றி பார்த்து மகிழ்ந்தனர்.

    நேற்று மாட்டுப்பொங்கல் தினத்தில் சென்னை மற்றும் புறநகர் பகுதியான கோயம்பேடு, கிண்டி, அம்பத்தூர், ஆவடி, பல்லாவரம், தாம்பரம், சோழிங்கநல்லூர், வேளச்சேரி, குன்றத்தூர், மாங்காடு, பூந்தமல்லி, செங்குன்றம், செங்கல்பட்டு, மாமல்லபுரம் காஞ்சீபுரம், மதுராந்தகம் ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து பொதுமக்கள் தங்களது குடும்பத்துடன் வண்டலூர் உயிரியல் பூங்காவை சுற்றி பார்ப்பதற்காக வருகை தந்தனர்.

    பூங்காவில் எங்கு பார்த்தாலும் பொதுமக்களின் கூட்டம் அலைமோதியது. பூங்காவில் பொதுமக்களுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் பூங்கா நிர்வாகம் செய்திருந்தது.

    பொங்கல், மாட்டு பொங்கல் ஆகிய 2 தினங்களில் மட்டும் வண்டலூர் உயிரியல் பூங்காவில் 47 ஆயிரம் பேர் சுற்றி பார்த்துள்ளனர். குறிப்பாக நேற்று ஒரே நாளில் வண்டலூர் உயிரியல் பூங்காவை 30 ஆயிரம் பேர் சுற்றி பார்த்து மகிழ்ந்தனர்.

    வண்டலூர் பூங்காவுக்கு கார், மோட்டார் சைக்கிள், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களில் வரும் பொதுமக்களால் வண்டலூர் பூங்கா மேம்பாலம் கீழ் பகுதியில் உள்ள ஜி.எஸ்.டி. சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கடும் அவதிக்குள்ளானார்கள்.

    இந்த நிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) காணும் பொங்கலையொட்டி வண்டலூர் உயிரியல் பூங்கா திறந்து இருக்கும், காணும் பொங்கல் அன்று பூங்காவுக்கு வருகை வரும் பொதுமக்களுக்கு பூங்கா நிர்வாகம் பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளது.

    காணும் பொங்கல் என்பதால் வண்டலூர் உயிரியல் பூங்காவை பொதுமக்கள் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை சுற்றி பார்க்கலாம். பூங்காவில் உள்ள இந்திய காட்டுமாடு, காண்டாமிருகம், வெளிமான், கடமான், வராக மான், புள்ளிமான், சதுப்புநில மான், நீலமான் போன்ற தாவர வகை விலங்குகளுக்கு காலை 11 மணிக்கு மேல் உணவளிக்கும் காட்சிகளை பார்வையாளர்கள் கண்டுகளிக்கலாம்.

    அதேபோல் பூங்காவில் உள்ள யானைகள் சவரில் குளிக்கும் காட்சிகளை பிற்பகல் 2 மணி முதல் 3 மணி வரையும், பின்னர் 3 மணி முதல் 4 மணி வரையும் பொதுமக்கள் கண்டுகளிக்கலாம். பூங்காவின் செயல்பாடுகளை விவரிக்கும் ஆவணப்படம் மற்றும் பூங்கா விலங்குகளின் திரை தொகுப்புகள் 2 பெரிய எல்.இ.டி. திரையில் திரையிடப்படுகிறது.

    குடும்பமாக வரும் பொதுமக்கள் மற்றும் பார்வையாளர்கள், நண்பர்கள் ஆகியோர் புகைப்படம் எடுத்துக்கொள்ள ஒரு புகைப்பட கூடம் அமைக்கப்பட்டுள்ளது.

    காணும் பொங்கலை முன்னிட்டு பூங்காவுக்கு 50 ஆயிரத்துக்கும் மேல் பார்வையாளர்கள் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால் பொதுமக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும், பாதுகாப்பு நடவடிக்கைகளும் பூங்கா நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    சென்னை மற்றும் சென்னை புறநகர், காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் இருந்து வண்டலூர் பூங்காவுக்கு, தமிழ்நாடு போக்குவரத்து கழகம் மற்றும் மாநகர போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    • கடந்த 8 நாட்களில் வண்டலூர் பூங்காவுக்கு ஒரு லட்சம் பேர் வருகை தந்துள்ளனர்.
    • மாமல்லபுரத்திலும் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

    சென்னை :

    சென்னையை அடுத்த வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் 2,382 விலங்குகள் மற்றும் பறவைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. அரையாண்டு விடுமுறையை முன்னிட்டு கடந்த 8 நாட்களில் வண்டலூர் பூங்காவுக்கு ஒரு லட்சம் பேர் வருகை தந்து பூங்காவை சுற்றி பார்த்து சென்றனர்.

    நேற்று ஆங்கில புத்தாண்டையொட்டி சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு வருகை தந்ததால் பூங்கா நுழைவாயில் பகுதியில் கட்டுக்கடங்காத கூட்டம் அலைமோதியது. நேற்று ஒரே நாளில் வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு 25 ஆயிரம் பார்வையாளர்கள் வருகை தந்து பூங்காவில் உள்ள விலங்குகள், பறவைகள், ஊர்வனங்கள் போன்றவற்றை குடும்பத்துடன் பார்த்து ரசித்து மகிழ்ந்தனர்.

    பூங்காவில் உள்ள 20 டிக்கெட் கவுண்ட்டர்களில் 10 டிக்கெட் கவுண்ட்டர்கள் மட்டுமே திறந்து இருந்தது. இதனால் பூங்காவை சுற்றி பார்ப்பதற்காக வந்த பொதுமக்கள் முண்டியடித்து கொண்டு டிக்கெட்டுகளை பெற முயன்றனர். பூங்கா ஊழியர்களும் பூங்காவுக்கு வருகை தந்த பொதுமக்களுக்கு டிக்கெட் வழங்க முடியாமல் திணறினார்கள்.

    இதனால் அவ்வப்போது நுழைவு டிக்கெட் வழங்கும் இடத்தில் சலசலப்புகளும், பரபரப்பும் ஏற்பட்டு கொண்டே இருந்தது. இதனால் குடும்பத்துடன் பூங்காவை சுற்றி பார்க்க வந்த பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளானார்கள்.

    அப்போது கூட்ட நெரிசலில் சிக்கி படப்பையைச் சேர்ந்த 20 வயது இளம்பெண் மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை மீட்டு குரோம்பேட்டையில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    ஆங்கில புத்தாண்டையொட்டி வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு மாநகர போக்குவரத்து மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. பூங்காவில் ஏராளமான போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    இது குறித்து பூங்கா அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    எதிர்பார்த்ததைவிட நேற்று கூட்டம் அலைமோதியது. பூங்காவுக்கு ஆன்லைன் மூலமாகவும் டிக்கெட் பதிவு செய்யும் வசதி ஏற்கனவே உள்ள காரணத்தால், 10 கவுண்ட்டர்கள் மட்டுமே டிக்கெட் வாங்குவதற்காக திறந்து வைத்திருந்தோம்.

    ஆனால் ஆன்லைனில் டிக்கெட் பெறும் வசதி பற்றி பலருக்கு தெரியாததால் பூங்காவில் உள்ள டிக்கெட் கவுண்ட்டர்களில் கூட்டம் அதிகரித்தது. எனவே இனிவரும் காலங்களில் ஆன்லைன் மூலமாக வண்டலூர் பூங்காவுக்கு டிக்கெட் வழங்கப்படுவது பற்றி பொதுமக்களுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த பூங்கா நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அதேபோல் புத்தாண்டு விடுமுறையையொட்டி மாமல்லபுரத்திலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அர்ச்சுனன் தபசு, கணேசரதம், வெண்ணை உருண்டைக்கல், ஐந்துரதம் உள்ளிட்ட புராதன சின்னங்களுக்கு குடும்பம், குடும்பமாக வந்திருந்த சுற்றுலா பயணிகள் அங்குள்ள சிற்பங்களை சுற்றி பார்த்து புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

    நேற்று காலையில் பனி மூட்டத்தால் குளிர் நிலவிய சூழலில், பகலில் வெயில் அதிகமாக வாட்டி வதைத்ததால் பலர் புராதன சின்ன வளாகத்தில் உள்ள மரத்தடி நிழலில் அமர்ந்து ஓய்வு எடுத்தனர்.

    அர்ச்சுனன் தபசு சிற்ப வளாகத்தில் உள்ள உயரமான பாறைக்குன்று மீது ஏறிய வாலிபர்கள் ஆபத்தை உணராமல் செல்பி எடுத்தனர். அவர்களை தொல்லியல் துறை பாதுகாவலர்கள் எச்சரித்து அனுப்பினர்.

    நேற்று சுற்றுலா பயணிகள் அதிகமானோர் மாமல்லபுரத்தில் திரண்டதால் மாமல்லபுரத்தில் உள்ள முக்கிய சாலைகளில் சுற்றுலா வாகனங்களால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சாலையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. அவை ஒன்றன்பின், ஒன்றாக மெதுவாக ஊர்ந்து சென்றன. போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.

    சுற்றுலா பயணிகள் வருகை நேற்று அதிகமாக இருந்ததால் மாமல்லபுரம் பஸ் நிலையம் தற்காலிகமாக கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பல்லவன் சிலை அருகே மாற்றப்பட்டது. மாலை 5 மணி முதல் மாமல்லபுரம் புறவழிச்சாலையில் பஸ்கள் வராததால் சுற்றுலா வந்திருந்த பொதுமக்கள் பல மணி நேரம் பஸ்சுக்காக காத்திருந்தனர்.

    இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை மாமல்லபுரம் போலீசார் சமாதானப்படுத்தினர். பின்னர் ஒவ்வொரு பஸ்சாக வந்தது. அதில் ஏறி பொதுமக்கள் புறப்பட்டு சென்றனர்.

    • கொரோனா கட்டுப்பாடு தளர்வுகளால் 2 ஆண்டுகளுக்கு பிறகு பூங்காவுக்கு வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை பழைய நிலைக்கு திரும்பி உள்ளது.
    • பூங்காவில் புதிதாக திறக்கப்பட்டு உள்ள வண்ணத்துப்பூச்சி பூங்கா, மீன் கண்காட்சியகம், குழந்தைகள் பூங்கா, இரவு நேர விலங்குகள் பூங்கா, பாம்புகள் இருப்பிடம் வெகுவாக கவர்ந்துள்ளதாக பார்வையாளர்கள் தெரிவித்தனர்.

    வண்டலூர்:

    வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விலங்குகள் மற்றும் பறவைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. வெள்ளைப் புலிகள், வங்க புலிகள், சிங்கங்கள், சிறுத்தைகள், யானைகள், மனித குரங்கு, காண்டா மிருகம், நீர்நாய், முதலைகள் உள்ளிட்ட ஏராளமான விலங்குகள் பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்து வருகிறது.

    கொரோனா கட்டுப்பாடு தளர்வுகளால் 2 ஆண்டுகளுக்கு பிறகு பூங்காவுக்கு வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை பழைய நிலைக்கு திரும்பி உள்ளது. தினமும் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பூங்காவுக்கு வந்து செல்கின்றனர். வார விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் வந்து செல்வது வழக்கம். தற்போது பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை விடப்பட்டு உள்ளதால் வண்டலூர் பூங்காவுக்கு வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிரடியாக உயர்ந்து உள்ளது.

    தொடர்ச்சியாக கடந்த இரண்டு நாட்களாக பூங்காவுக்கு வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை 17ஆயிரத்தை தொட்டு உள்ளது. இதற்கு முன்பு கொரோனா பரவலுக்கு முந்தைய காலகட்டத்தில் விடுமுறை நாட்களில் இதேபோல் பார்வையாளர்கள் வந்து சென்றுள்ளனர். நீண்ட இடைவெளிக்கு பின்பு 17 ஆயிரம் பார்வையாளர்கள் வந்து சென்றுள்ளதாக வண்டலூர் பூங்கா அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    பூங்காவில் புதிதாக திறக்கப்பட்டு உள்ள வண்ணத்துப்பூச்சி பூங்கா, மீன் கண்காட்சியகம், குழந்தைகள் பூங்கா, இரவு நேர விலங்குகள் பூங்கா, பாம்புகள் இருப்பிடம் வெகுவாக கவர்ந்துள்ளதாக பார்வையாளர்கள் தெரிவித்தனர். பார்வையாளர்கள் வருகை திடீரென அதிகரித்ததால் வண்டலூர் பகுதியில் கடந்த 2 நாட்களாக வாகனங்களை நிறுத்த இடம் இல்லாததால் ஏராளமான கார்கள் சாலையின் இருபுறங்களிலும் நிறுத்தப்பட்டது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    • வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் 2,382 விலங்குகள் மற்றும் பறவைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது.
    • வண்டலூர் உயிரியல் பூங்கா பொதுமக்கள் பார்வைக்காக இன்று திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

    வண்டலூர்:

    சென்னையை அடுத்த வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் 2,382 விலங்குகள் மற்றும் பறவைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இதனை தினந்தோறும் ஏராளமான பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வந்து பார்த்து ரசித்து செல்கின்றனர்.

    இந்த நிலையில் வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு வாரம் தோறும் வழக்கமாக செவ்வாய்க்கிழமை விடுமுறை தினமாகும், ஆனால் இன்று (செவ்வாய்க்கிழமை) வண்டலூர் உயிரியல் பூங்கா பொதுமக்கள் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

    இந்த தகவலை வண்டலூர் பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • வங்கக்கடலில் மாண்டஸ் புயல் நேற்று நள்ளிரவு மாமல்லபுரம் அருகே புயல் கரையை கடந்தது.
    • வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு விடுமுறை அளிக்கப்பட்டு பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

    தாம்பரம்:

    வங்கக்கடலில் மாண்டஸ் புயல் நேற்று நள்ளிரவு மாமல்லபுரம் அருகே புயல் கரையை கடந்தது.

    இதனால் இன்று (10-ந் தேதி) பராமரிப்பு பணிகளுக்காக வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா விடுமுறை அளிக்கப்பட்டு பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என பூங்கா நிர்வாகம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

    • வண்டலூர் உயிரியல் பூங்காவில் மொத்தம் 9 சிங்கம், 110 வெள்ளை புலிகள், வங்க புலிகள் உள்ளிட்ட விலங்குகள் உள்ளன.
    • வண்டலூரில் இருந்து 2 வெள்ளைப் புலிகள் குஜராத்தில் உள்ள சக்கார்பாக் பூங்காவுக்கு வழங்கப்படுகிறது.

    வண்டலூர்:

    வண்டலூர் உயிரியல் பூங்காவில் 180 வகையான சுமார் 2400-க்கும் அதிகமான விலங்குகள் மற்றும் பறவைகள் உள்ளன. பூங்காவில் மொத்தம் 9 சிங்கம், 110 வெள்ளை புலிகள், வங்க புலிகள் உள்ளிட்ட விலங்கு கள் உள்ளன.

    இந்த நிலையில் வண்டலூர் உயிரியல் பூங்காவில் சிங்கத்தின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் விலங்குகள் பரிமாற்றம் திட்டம் மூலம் குஜராத்தில் இருந்து 2 ஆசிய சிங்கங்களை பெற திட்டமிடப்பட்டு உள்ளது.

    இதற்காக வண்டலூரில் இருந்து 2 வெள்ளைப் புலிகள் குஜராத்தில் உள்ள சக்கார்பாக் பூங்காவுக்கு வழங்கப்படுகிறது. இதேபோல் ஒரு வெள்ளைப் புலி லக்னோவில் உள்ள உயிரியல் பூங்காவிற்கு கொடுத்து அங்கிருந்து ஒரு பெண் சிங்கம் விரைவில் கொண்டு வரப்பட உள்ளது என்று வண்டலூர் பூங்கா அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    • வண்டலூர் பூங்காவில் பெரியவர்களுக்கு ரூ.90, சிறியவர்களுக்கு ரூ.50, கேமராவுக்கு ரூ.25 மற்றும் வெளிநாட்டினருக்கு ரூ.500 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
    • கடந்த 3 ஆண்டுக்கான வரவு, செலவுத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டது.

    வண்டலூர்:

    வண்டலூர் உயிரியல் பூங்கா மிகவும் சிறப்பு வாய்ந்தது. விலங்குகள் இயற்கை சூழலில் வாழ்வதற்கு ஏற்றார்போல் இந்த பூங்கா இயற்கையாகவே அமைந்து உள்ளது. இங்கு ஆண்டுக்கு 20 லட்சம் பார்வையாளர்கள் வந்து செல்கிறார்கள்.

    இந்த நிலையில் நேற்று தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு உயிரியல் பூங்கா ஆணையத்தின் 21-வது ஆட்சி மன்ற குழு கூட்டம் நடைபெற்றது.

    இதில் பூங்காக்களில் அடிப்படை வசதிகள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ஆலோசிக்கப்பட்டது. வண்டலூர் பூங்காவில் மாற்றுத்திறனாளிகளுக்கு சாய்வு தளப்பாதைகள், ஓய்வு அறைகள், மாற்றுத்திறனாளிகளுக்கான வசதியான வாகனங்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு சுத்தமான குடிநீர், கழிவறை வசதிகள் ஏற்படுத்த அதிகாரிகளிடம் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

    மேலும் கூட்டத்தின்போது வண்டலூர் பூங்கா பார்வையாளர்கள் நுழைவு கட்டணம் உயர்வு குறித்தும் விவாதிக்கப்பட்டது. எனவே பார்வையாளர்கள் கட்டணம் உயர்வு குறித்து விரைவில் தகவல் வெளியாகும் என்று தெரிகிறது.

    தற்போது வண்டலூர் பூங்காவில் பெரியவர்களுக்கு ரூ.90, சிறியவர்களுக்கு ரூ.50, கேமராவுக்கு ரூ.25 மற்றும் வெளிநாட்டினருக்கு ரூ.500 கட்டணம் வசூலிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. இந்திய மற்றும் வெளிநாட்டு பார்வையாளர்களுக்கான கட்டண வித்தியாசத்தை நீக்க உயிரியல் பூங்காவுக்கு அனுமதி கிடைத்து உள்ளது. கூட்டத்தில் கடந்த 3 ஆண்டுக்கான வரவு, செலவுத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டது.

    இந்த ஆண்டுக்கான வரவு, செலவு திட்ட முன்மொழிவும் அங்கீகரிக்கப்பட்டது. இதுகுறித்து வண்டலூர் பூங்கா அதிகாரி ஒருவர் கூறும்போது, 'மாற்றுத்திறனாளிகள் பூங்காவை சுற்றி பார்க்க சாய் தளங்கள், பிரத்யேக வாகனங்கள் சேர்க்கப்பட உள்ளது. இதன் மூலம் பூங்காவை மாற்றுத்திறனாளிகளும் எளிதாக சுற்றி பார்க்க முடியும்' என்றார்.

    • 13 வயதான ஏஞ்சல் என்ற பெண் ஆசிய காட்டு கழுதை லேமினிடிஸ் கால்குளம்பு பாதிப்பு நோய் காரணமாக அவதிப்பட்டு வந்தது.
    • பெண் காட்டு கழுதை சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தது.

    வண்டலூர்:

    சென்னை அடுத்த வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் ஏராளமான விலங்குகள் மற்றும் பறவைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த 13 வயதான ஏஞ்சல் என்ற பெண் ஆசிய காட்டு கழுதை லேமினிடிஸ் கால்குளம்பு பாதிப்பு நோய் காரணமாக அவதிப்பட்டு வந்தது. இதையடுத்து பூங்கா டாக்டர்கள் தொடர்ந்து ஆசிய காட்டு கழுதைக்கு சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் பெண் காட்டு கழுதை சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தது.

    பூங்காவில் காட்டு கழுதை இறந்ததை தொடர்ந்து பூங்காவில் உள்ள மற்ற விலங்குகளுக்கு நோய்த்தொற்று ஏற்படாதவாறு பூங்கா நிர்வாகம் சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    • வண்டலூர் பூங்காவிற்கு சாதாரண நாட்களில் 3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் பேர் வருகை தருகிறார்கள்.
    • வண்டலூர் பூங்காவிற்கு சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் 5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் பேர் வரை வருகிறார்கள்.

    வண்டலூர்:

    வண்டலூர் அண்ணா உயிரியல் பூங்கா கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு இயல்பு நிலை பார்வையாளர்களை கையாண்டுள்ளது.

    சென்னை மற்றும் அதனையொட்டிய மாவட்ட மக்கள் வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு குடும்பத்துடன் செல்வது வழக்கம். கொரோனா பரவல் காரணமாக 2 வருடமாக குழந்தைகளை பூங்கா மற்றும் சுற்றுலா தலங்களுக்கு அழைத்து செல்ல முடியாத நிலை இருந்தது.

    இந்த நிலையில் ஆயுத பூஜை, காலாண்டு தேர்வு விடுமுறையையொட்டி பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு தொடர் விடுமுறை கிடைத்துள்ளது.

    ஒவ்வொரு செவ்வாய் கிழமையும் உயிரியல் பூங்காவுக்கு வழக்கமாக விடுமுறை விடப்படும். தற்போது பண்டிகை கால விடுமுறை என்பதால் அன்று உயிரியல் பூங்கா செயல்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

    இதனால் சுற்றுலா பயணிகள் வண்டலூர் உயிரியல் பூங்காவில் குவிந்தனர். கடந்த 3 நாட்களில் 40 ஆயிரம் பேர் பார்வையிட்டனர்.

    இதுகுறித்து உயிரியல் பூங்கா இயக்குனர் கூறியதாவது:-

    கடந்த வருடத்திற்கு பிறகு இப்போது பார்வையாளர்கள் அதிகரித்துள்ளனர். பூங்காவிற்கு 3-ந்தேதி 9 ஆயிரம் பேரும், 4-ந்தேதி 13 ஆயிரம் பேரும், 5-ந்தேதி 18 ஆயிரம் பேரும் பார்வையாளர்களாக வருகை புரிந்துள்ளனர்.

    சாதாரண நாட்களில் 3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் பேர் வருகை தருகிறார்கள். சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் 5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் பேர் வரை வருகிறார்கள்.

    பண்டிகை விடுமுறை காலம் என்பதால் தற்போது பார்வையாளர்கள் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    வண்டலூர் உயிரியல் பூங்காவை பார்த்து விட்டு வந்த பார்வையாளர் ஒருவர் கூறுகையில், பூங்கா முறையாக பராமரிக்கப்படவில்லை. உயிரினங்கள் குறைந்த அளவில் தான் உள்ளன. பறவைகள் முன்பை போல அதிகளவில் இல்லை.

    முதலை, காண்டாமிருகம், நீர் யானை போன்ற மிருகங்களுக்கு சூழ்ந்துள்ள தண்ணீர் மாசு அடைந்து துர்நாற்றம் வீசும் வகையில் உள்ளது. தண்ணீரை அடிக்கடி சுத்தம் செய்யப்படாமல் உள்ளன.

    இதனால் முறையான பராமரிப்பு பணிகளை மேற்கொண்டால் பார்வையாளர்கள் மேலும் அதிகரிப்பார்கள் என்றார்.

    • கொரோனா கட்டுப்பாடுகளுக்கு பிறகு தற்போது வண்டலூர் பூங்காவுக்கு வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.
    • வண்டலூர் பூங்காவுக்கு வாரம் தோறும் செவ்வாய்க்கிழமை விடுமுறை நாள்.

    வண்டலூர்:

    வண்டலூர் உயிரியல் பூங்காவில் சுமார் 2 ஆயிரத்திற்கும் அதிகமான விலங்குகள் மற்றும் பறவைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. தற்போது புதிதாக திறக்கப்பட்ட வண்ணத்துப்பூச்சி பூங்கா, மீன் கண்காட்சியகம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

    கொரோனா கட்டுப்பாடுகளுக்கு பிறகு தற்போது வண்டலூர் பூங்காவுக்கு வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. வார விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சுமார் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் வந்து செல்கிறார்கள்.

    வண்டலூர் பூங்காவுக்கு வாரம் தோறும் செவ்வாய்க்கி ழமை விடுமுறை நாள் ஆகும். நாளை (4-ந்தேதி) ஆயுத பூஜை விடுமுறை நாள் என்பதால் பெரும்பாலானோர் சுற்றுலா தலங்களுக்கு அதிகஅளவில் குடும்பத்துடன் செல்வது வழக்கம்.

    எனவே விடுமுறை நாளான நாளை பார்வையாளர்கள் வருகைக்காக வண்டலூர் பூங்காவை திறக்க பூங்கா நிர்வாகம் முடிவு செய்து உள்ளது.

    இது தொடர்பாக பூங்கா நிர்வாகம் வெளியிட்டு உள்ள அறிவிப்பில், ஆயுத பூஜை விடுமுறை நாளான நாளை பார்வையாளர்கள் வருகைக்காக வண்டலூர் உயிரியல் பூங்கா திறந்திருக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. எனவே நாளை வண்டலூர் பூங்காவில் வழக்கத்தை விட கூடுதலாக பார்வையாளர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • நாட்டிலேயே சிறந்த உயிரியல் பூங்காவாக வண்டலூர் பூங்கா தேர்வு செய்யப்பட்டுள்ளது.
    • சிறந்த மேலாண்மை, பராமரிப்பு என்ற அடிப்படையில் 82 சதவீத புள்ளிகளைப் பெற்றது.

    சென்னை:

    செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்து அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா வண்டலூரில் அமைந்துள்ளது. இங்கு 2 ஆயிரத்திற்கும் அதிகமான விலங்குகள் மற்றும் பறவைகள் உள்ளன. இந்த பூங்காவில் வெள்ளைப் புலிகள் வங்க புலிகள், சிங்கங்கள், சிறுத்தைகள், யானைகள், மனித குரங்கு காண்டாமிருகம், நீர்நாய், முதலைகள் உள்ளிட்ட ஏராளமான விலங்குகள் உள்ளது.

    இந்தப் பூங்காவில் கண்காணிப்பு கேமராக்கள் உதவியுடன் விலங்குகளின் செயல்பாடு நடவடிக்கைகள் தொடர்ந்து 24 மணிநேரமும் ஊழியர்கள் கண்காணித்து வருகின்றனர்.

    இந்நிலையில், வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா நாட்டில் சிறந்த உயிரியல் பூங்காவாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நேற்று நடந்த தேசிய உயிரியல் பூங்கா இயக்குநர்கள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் சிறந்த மேலாண்மை, பராமரிப்பு என்ற அடிப்படையில் 82 சதவீத புள்ளிகளைப் பெற்ற வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா நாட்டிலேயே சிறந்த உயிரியல் பூங்காவாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    ×