search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வண்டலூர் உயிரியல் பூங்கா"

    • வார விடுமுறை நாட்களில் 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் பேர் வந்து செல்கின்றனர்.
    • கீழ் கிரிபோன் கழுகுகள் மற்றும் ஒரு ஜோடி எகிப்திய கழுகுகள் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு கொண்டு வரப்பட்டன.

    வண்டலூர்:

    சென்னை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் சிங்கம், புலி, கரடி, யானை, மான்கள் மற்றும் பறவைகள், பாம்புகள் பாலூட்டிகள் என 2700-க்கும் மேற்பட்ட உயிரினங்கள் உள்ளன. தமிழகத்தில் மிகச்சிறந்த சுற்றுலா தலமாகவும் வண்டலூர் உயிரியல் பூங்கா விளங்குகிறது.

    இந்த பூங்காவுக்கு தினம்தோறும் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் வந்து செல்வது வழக்கம். வார விடுமுறை நாட்களில் 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் பேர் வந்து செல்கின்றனர்.

    இந்த நிலையில் உத்தரபிரதேச மாநிலம், கான்பூரில் உள்ள உயிரியல் பூங்காவில் இருந்து விலங்கு மற்றும் பறவைகள் பரிமாற்ற திட்டத்தின் கீழ் கிரிபோன் கழுகுகள் மற்றும் ஒரு ஜோடி எகிப்திய கழுகுகள் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு கொண்டு வரப்பட்டன. இவற்றை ராட்சத கூண்டுகள் மூலம் பூங்கா ஊழியர்கள் பராமரித்து வந்தனர். வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு வரும் பார்வையாளர்கள் இந்த கழுகுகளை கண்டுகளித்து விட்டு சென்றனர்.

    இந்நிலையில், வண்டலூர் உயிரியல் பூங்காவில் இருந்து ஒரு கழுகை கடந்த மாதம் முதல் காணவில்லை என்று பூங்கா ஊழியர்கள் தெரிவித்தனர். பல்வேறு இடங்களில் தேடியும் அந்த கழுகு கிடைக்கவில்லை. ஒரு மாதம் ஆகியும் பூங்காவிலிருந்து தப்பிச்சென்ற கழுகை கண்டுபிடிக்க முடியாமல் பூங்கா நிர்வாகத்தினர் திணறி வருகின்றனர்.

    இதுகுறித்து பூங்கா இயக்குனர் சீனிவாசரெட்டியிடம் கேட்டதற்கு, 'தப்பிச்சென்ற கழுகை பிடிப்பதற்காக பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. விரைவில் பிடித்து விடுவோம்' என்றார்.

    • வண்டலூர் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த விஜயன் என்ற 21 வயது ஆண் புலி இன்று காலை உயிரிழந்துள்ளது.
    • புலியின் ரத்தத்தை மதிப்பீடு செய்ததில் கல்லீரல் மற்றும் சிறுநீரகம் பாதிப்புகளுக்குள்ளானது தெரியவந்தது.

    வண்டலூர் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த விஜயன் என்ற 21 வயது ஆண் புலி இன்று காலை உயிரிழந்துள்ளது. வயது மூப்பு மற்றும் உடல் உறுப்புகள் செயலிழந்ததால் வங்கப்புலி விஜயன் உயிரிழந்ததாக உயிரியல் பூங்கா நிர்வாகம் அறிவிப்பு.

    வண்டலூர் உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும், விஜயன் என்கிற 21 வயது ஆண் வங்கப்புலியானது கடந்த மாதம் 24-ந்தேதி முதல் உணவு உட்கொள்ளுதலைக் குறைத்துக் கொண்டது. இதன் காரணமாக படிப்படியாக அதன் உடல்நிலை சரியில்லாமல் போனது.

    புலியின் ரத்தத்தை மதிப்பீடு செய்ததில் கல்லீரல் மற்றும் சிறுநீரகம் பாதிப்புகளுக்குள்ளானது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து கால்நடை மருத்துவ பல்கலைக்கழகத்தின் ஆலோசனையுடன் வங்கப்புலிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி இன்று ஆண் புலி உயிரிழந்துள்ளது.

    • கூட்ட நெரிசலை சமாளிப்பதற்காக தற்காலிக போலீஸ் நிலையங்களும் ஏற்படுத்தப்படுகின்றன.
    • டிரோன்கள் மூலமாகவும் கண்காணிப்பு பணி மேற் கொள்ளப்பட உள்ளது.

    சென்னை:

    சென்னையில் வருகிற 17-ந்தேதி காணும் பொங்கல் அன்று மெரினா கடற்கரையில் பொதுமக்கள் அதிக அளவில் கூடுவார்கள்.

    இதனை கருத்தில் கொண்டு அங்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் கூடுதல் கமிஷனர் பிரேமானந்த் சின்கா, இணை கமிஷனர் தர்மராஜ் ஆகியோர் பாதுகாப்பு ஏற்பாடுகளை முடுக்கிவிட்டுள்ளனர்.

    மெரினாவில் மட்டும் 3 ஆயிரம் போலீசார் காணும் பொங்கல் அன்று பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். 5 துணை கமிஷனர்கள் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள உள்ளனர்.


    கூட்ட நெரிசலை சமாளிப்பதற்காக தற்காலிக போலீஸ் நிலையங்களும் ஏற்படுத்தப்படுகின்றன. கடற்கரை மணல் பரப்பில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு அங்கிருந்தபடியே பைனாகுலர் மூலமாக போலீசார் கண்காணிக்க உள்ளனர். கடலில் குளிக்க தடை விதிக்கப்படுகிறது.

    டிரோன்கள் மூலமாகவும் கண்காணிப்பு பணி மேற் கொள்ளப்பட உள்ளது. சென்னை மாநகர் முழுவதும் மற்ற கடற்கரை பகுதிகளிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட உள்ளது.

    கிண்டி சிறுவர் பூங்கா, வண்டலூர் உயிரியல் பூங்கா உள்ளிட்ட அனைத்து சுற்றுலா பகுதிகள், பூங்காக்களிலும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர். சென்னை மாநகர் முழுவதும் 16 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.

    • பல்வேறு மாவட்டங்களில் இருந்து சிறப்பு மாநகர பஸ்கள் மற்றும் அரசு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
    • புகையிலை பொருட்கள், மது பானங்கள், கத்தி மற்றும் பிற ஆயுதங்கள் கொண்டு வர தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    பொங்கல் பண்டிகையையொட்டி வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு வருகிற 14-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை சுமார் 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் சுற்றிப்பார்க்க வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக காணும் பொங்கலான வருகிற 17-தேதி பார்வையாளர்கள் கூட்டம் அலைமோதும் என்பதால் வண்டலூர் உயிரியல் பூங்காவில் சிறப்பு முன்னேற்பாடு பணிகளை செய்வது தொடர்பாக பூங்கா நிர்வாகம் பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியது.

    இது தொடர்பாக வண்டலூர் உயிரியல் பூங்கா அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    பொங்கல் பண்டிகையையொட்டி வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு பல்லாயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவார்கள் என்பதால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சிறப்பு மாநகர பஸ்கள் மற்றும் அரசு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

    மேலும் 100-க்கும் மேற்பட்ட போலீசார், வனத்துறை ஊழியர்கள், தன்னார்வலர்கள் என 500 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். பொதுமக்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் மருத்துவ வசதிகளும் செய்து கொடுக்கப்படுகிறது. அவசர சிகிச்சை தேவைப்படும் பொதுமக்களுக்கு உதவ ஆம்புலன்சு ஒன்று தயார் நிலையில் இருக்கும். தீயணைப்பு வாகனமும் நிறுத்தி வைக்கப்பட உள்ளது. பூங்காவுக்கு வரும் குழந்தைகளின் பாதுகாப்புக்காக அவர்களின் கையில் அடையாள சீட்டு கட்டுவதற்கும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை விடுமுறை தினமாகும். பொங்கல் பண்டிகைக்கு மறுநாள் 16-ந்தேதி செவ்வாய்க்கிழமை திருவள்ளுவர் தினம் வருவதால் அன்றைய தினம் வண்டலூர் உயிரியல் பூங்கா பொதுமக்கள் பார்வைக்காக திறந்திருக்கும்.

    பூங்காவுக்கு வரும் பார்வையாளர்கள் கரும்பு, பிளாஸ்டிக் மற்றும் பிளாஸ்டிக் பையில் அடைக்கப்பட்ட உணவு பொருட்கள், பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள், சிகரெட், புகையிலை பொருட்கள், மது பானங்கள், கத்தி மற்றும் பிற ஆயுதங்கள் கொண்டு வர தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    பொதுமக்கள் கூட்ட நெரிசல் இன்றி நுழைவு சீட்டு பெறும் வகையில் கூடுதல் டிக்கெட் கவுண்டர்கள் மூலம் டிக்கெட் வழங்கப்படும். மேலும் பொதுமக்கள், பூங்கா மொபைல் செயலி, இணையதளம் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம். டிஜிட்டல் முறையிலும் பணம் செலுத்தி டிக்கெட் பெறும் முறைகளும் அறிமுகப்ப டுத்தப்பட உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • புயலில் விழுந்த மரங்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன.
    • கூண்டில் அடைக்கப்பட்டு இருந்த சிங்கம், புலி உள்ளிட்ட விலங்குகள் வெளியே விடப்பட்டுள்ளது.

    வண்டலூர்:

    மிச்சாங் புயல் கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்கள் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. புயல் காரணமாக வண்டலூர் உயிரியல் பூங்கா கடந்த திங்கட்கிழமை முதல் 4 நாட்கள் மூடப்பட்டது.

    இந்நிலையில், 4 நாட்களாக மூடப்பட்ட வண்டலூர் உயிரியல் பூங்கா இன்று திறக்கப்பட்டுள்ளது. புயலில் விழுந்த மரங்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன. சுற்றுச்சுவர் இடிந்த நிலையில், மறைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

    தேங்கிய மழைநீர் அகற்றப்பட்ட நிலையில் கூண்டில் அடைக்கப்பட்டு இருந்த சிங்கம், புலி உள்ளிட்ட விலங்குகள் வெளியே விடப்பட்டுள்ளது.

    • ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வந்த புலியை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர்.
    • தற்போது புலி நலமாக உள்ளது. அதை வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஒப்படைத்துள்ளோம்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டம் பேச்சி பாறை அருகே சிற்றார் ரப்பர் கழக தொழிலாளர் குடியிருப்பு பகுதியில் கடந்த ஜூலை மாதம் 3-ந்தேதி ஆடு ஒன்றை புலி கடித்துக் கொன்றது. அடுத்தடுத்து 6 ஆடுகள் மற்றும் 2 மாடுகளை புலி கொன்றதால் பொது மக்கள் அச்சமடைந்தனர். அட்டகாசம் செய்யும் புலியை பிடிக்க வனத்துறையினர் அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    இதையடுத்து ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வந்த புலியை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர். புலி நடமாட்டம் உள்ள பகுதியாக கருதப்பட்ட இடங்களில் கூண்டு மற்றும் கண்காணிப்பு கேமிராக்கள் அமைத்து தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. ஆனால் புலி சிக்கவில்லை.

    ட்ரோன் கேமரா, எலைட்படையினர் மூலமாகவும் தேடுதல் வேட்டை நடத்தினர். 10 நாட்களுக்கு மேலாக தேடியும் புலியை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்த எலைட் படையினரும், மருத்துவ குழுவினரும் திரும்பி சென்றனர்.

    இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பத்துகாணி அருகே ஒரு நூறாம் வயல் பகுதியில் குடியிருப்புக்குள் புகுந்து 4 ஆடுகளை புலி கடித்துக் கொன்றது. இதுபற்றிய தகவல் வனத்துறைக்கு தெரிவிக்கப்பட்டது.

    மாவட்ட வன அலுவலர் இளையராஜா தலைமையிலான குழுவினர் அந்த பகுதிக்கு விரைந்து சென்றனர். அங்கேயே முகாமிட்டு புலியை பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டனர். முதுமலை புலிகள் சரணாலயத்தில் இருந்து வனத்துறையை சேர்ந்த பழங்குடியினர் வரவழைக்கப்பட்டு தேடும் பணி நடந்தது.

    இந்நிலையில் நேற்று மதியம் 12 மணியளவில் கல்லறைவயல் பகுதியில் புலி நடமாட்டத்தை வனத்துறையினர் பார்த்தனர்.

    இதைத்தொடர்ந்து புலியை தொடர்ந்து கண்காணித்தனர். அப்போது புலி அந்த பகுதியில் உள்ள குகைக்குள் சென்றது. புலியை பொருத்தமட்டில் பகல் நேரங்களில் ஓய்வு எடுக்கும். இரவு நேரங்களில் மட்டுமே வெளியே சுற்றி தெரியும்.

    பகல் நேரத்தில் புலி குகைக்குள் சென்றதால், அது வெளியே வருவதற்கு நீண்ட நேரமாகும், அங்கேயே ஓய்வெடுக்கும் என்று வனத்துறையினர் கருதினார்கள். இதைத்தொடர்ந்து அந்த குகையின் வெளியே வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    இரண்டு மணி நேரமாக புலியை பிடிக்க வியூகங்கள் வகுக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து மயக்க ஊசி மூலமாக புலியை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. புலி இருந்த குகைக்குள் மயக்க ஊசி செலுத்தினார்கள். அதில் புலி மயக்கமடைந்தது. பின்னர் சிறிது நேரத்துக்கு பிறகு வனத்துறையினர் குகைக்குள் சென்று புலியை பிடித்தனர்.

    பிடிபட்ட புலியை வனத்துறையினர் பொதுமக்கள் உதவியுடன் சாலை பகுதிக்கு தூக்கி வந்தனர். தொடர்ந்து புலியை கூண்டுக்குள் அடைத்து டெம்போவின் ஏற்றி பேச்சிப்பாறை சோதனை சாவடிக்கு கொண்டு வந்தனர். அங்கு மருத்துவ குழுவினர் மீண்டும் புலியை பரிசோதனை செய்தனர். புலி பிடிபட்டது குறித்து அந்த பகுதியில் உள்ள பழங்குடி மக்களுக்கு தெரியவந்தது. இதைக் கேட்டு அவர்கள் நிம்மதி அடைந்தனர்.

    பிடிபட்ட புலி கடந்த 37 நாட்களாக வனத்துறையினருக்கு சவால் விடும் வகையில் சுற்றி திரிந்தது. சிற்றாறு சிலோன் காலனி பகுதியில் வனத்துறையினர் தேடுதல் வேட்டை நடத்தியதையடுத்து அதன் எதிர்புறம் உள்ள பத்துகாணி பகுதிக்கு புலி வந்துள்ளது. சுமார் 7 கிலோ மீட்டர் சுற்றளவிலேயே புலி சுற்றி திரிந்தபடி இருந்துள்ளது.

    பிடிபட்ட புலியை வனத்துறையினர் வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஒப்படைக்க முடிவு செய்தனர். இதையடுத்து இரவோடு இரவாக வன அதிகாரி இளையராஜா தலைமையில் புலியை ஒரு வாகனத்தில் ஏற்றி வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு கொண்டு சென்றனர்.

    பலத்த பாதுகாப்புடன் புலி கொண்டு செல்லப்பட் டது. புலியை கொண்டு சென்ற வாகனம் மிகவும் மெதுவாகவே சென்றது. நேற்று மாலை 6 மணிக்கு பேச்சிபாறையிலிருந்து புலியை ஏற்றி புறப்பட்ட வாகனமானது, இன்று காலை 11 மணியளவில் வண்டலூர் உயிரியல் பூங்கா விற்கு சென்றடைந்தது. அங்கு புலியை முறைப்படி ஒப்படைத்தனர்.

    இதுகுறித்து வன அதிகாரி இளையராஜா கூறியதாவது:-

    குமரி மாவட்டத்தின் மலையோர பகுதியில் புலி நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவல் அடிப்படையில் சிற்றாறு சிலோன் காலனி பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. இரண்டு இடங்களில் கூண்டு மற்றும் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கேமரா அமைக்கப்பட்டு தேடும் பணியில் ஈடுபட்டோம். ஆனால் புலி சிக்கவில்லை.

    அதே வேளையில் புலியின் கால் தடங்கள் ஒரு சில இடங்களில் கிடைத் தது. அதை வைத்து பார்த்த போது வயதான புலி என்பது தெரிய வந்தது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பத்துகாணி பகுதியிலும் புலி அட்டகாசம் செய்தது. இதனால் தேடும் பணி முடுக்கி விடப்பட்டது. நேற்று மதியம் புலி நடமாட்டம் உறுதி செய்யப்பட்டது. புலியும் கண்ணில் தென்பட்டது.

    உடனே அதை பின்தொடர்ந்து சென்று கண்காணித்தோம். அப்போது புலி அந்த பகுதியில் உள்ள குகைக்குள் சென்றது. குகைக்குள் சென்ற புலியை மயக்க ஊசி செலுத்தி பிடித்துள்ளோம். பிடிபட்ட புலிக்கு 13 வயது இருக்கும். தற்போது புலி நலமாக உள்ளது. அதை வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஒப்படைத்துள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • உயிரியல் பூங்காவில் தற்போது 10 சிங்கங்கள் உள்ளன.
    • சிங்கம் சபாரி மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட உள்ளது.

    வண்டலூர் உயிரியல் பூங்காவில் தற்போது 10 சிங்கங்கள் உள்ளன. இந்நிலையில் இங்கு சிங்கம் சபாரியை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான பணிகள் தற்போது தீவிரமாக நடந்து வருகின்றன.

    சிங்கம் சபாரிக்கான வாகனங்களை புதுப்பித்தல், சிங்கங்கள் உலவும் பகுதியை சுற்றி போடப்பட்டுள்ள கம்பி வேலி மற்றும் இரும்பு கதவுகளை புனரமைத்தல் உள்ளிட்ட பணிகள் முடிந்துவிட்டன. இதையடுத்து இன்னும் 2 நாட்களில் வண்டலூர் உயிரியல் பூங்காவில் சிங்கம் சபாரி மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட உள்ளது.

    • கோடைகாலம் என்பதால் 2 கரடிகளுக்கும் நீர்ச்சத்து குறையாமல் இருக்க இரவில் பயணம் செய்து கொண்டு வரப்பட்டன.
    • பூங்கா ஊழியர்கள் 2 கரடி குட்டிகளுக்கு காய்கறி, பழங்கள், தேன், ரொட்டி, வேகவைத்த முட்டை, பால் உள்ளிட்டவை வழங்கி உபசரித்து வருகிறார்கள்.

    கூடுவாஞ்சேரி:

    விலங்குகள் பரிமாற்ற திட்டத்தின் கீழ், மைசூரில் இருந்து வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு ஒரு ஆண் மற்றும் பெண் என இரண்டு கரடிகள் கொண்டு வரப்பட்டு உள்ளது.

    ஆண் கரடியின் பெயர் அப்பு ஆகும். இதற்கு 2 வயது ஆகிறது. பெண்கரடியின் பெயர் புஷ்பா. இதற்கு ஒன்றரை வயது ஆகிறது. தற்போது கோடைகாலம் என்பதால் 2 கரடிகளுக்கும் நீர்ச்சத்து குறையாமல் இருக்க இரவில் பயணம் செய்து கொண்டு வரப்பட்டன. பூங்கா ஊழியர்கள் 2 கரடி குட்டிகளுக்கு காய்கறி, பழங்கள், தேன், ரொட்டி, வேகவைத்த முட்டை, பால் உள்ளிட்டவை வழங்கி உபசரித்து வருகிறார்கள்.

    இதுகுறித்து பூங்கா அதிகாரி ஒருவர் கூறும்போது, விலங்குகள் பரிமாற்ற திட்டத்தில் மைசூரில் இருந்து 2 கரடிகள் வண்டலூர் பூங்காவுக்கு கொண்டு வரப்பட்டு உள்ளன. பகல் நேர பயணத்தை தவிர்க்க இரவு நேரத்தில் வாகனம் மூலம் கொண்டு வரப்பட்டது. பயணத்தின் போது 2 மணி நேரத்திற்கு ஒரு முறை வாகனம் நிறுத்தப்பட்டது. அதற்கு பழங்கள், தேன் வழங்கப்பட்டன. இது கரடிகளின் மன அழுத்தத்தை தவிர்க்க உதவியது. தற்போது இந்த கரடிகள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளன. விரைவில் சுற்றுலா பயணிகளின் பார்வைக்கு விடப்படும். இவற்றிற்கு காலை 11 மணிக்கு பழங்கள், காய்கறிகள், மதியம் 1.30 மணிக்கு ரொட்டி, வேகவைத்த முட்டை, மாலையில் கஞ்சியும் பாலும் வழங்கப்படுகிறது என்றார்.

    இதில் ஒரு கரடியின் வயது ஒன்றரை மற்றொரு கரடியின் வயது இரண்டு. இவ்விரண்டு கரடிகளையும் 21 நாள் தனி கூண்டில் வைத்து பராமரித்து பின்னர் மற்ற கரடிகளுடன் பழகிய பிறகு பார்வையாளர்கள் கண்டுகளிக்கும் வகையில், ஏற்பாடுகள் செய்து தரப்படும் என்று பூங்கா நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

    • கூண்டுக்கு வெளியே சுற்றி திரியும் 2 புலிகளும் பெண் ஊழியரின் அன்பு கட்டளையை ஏற்று கூண்டுக்குள் செல்கின்றன.
    • புலிகளை பெண் ஊழியர் ஒருவர் புலிகளின் பெயரை சொல்லி தேவா, மாலா என்று அழைக்கிறார்.

    வண்டலூர்:

    சென்னை வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவுக்கு கோடை விடுமுறையையொட்டி ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருவதால் வண்டலூர் உயிரியல் பூங்காவில் கூட்டம் அலை மோதுகிறது.

    மேலும் உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகள் மற்றும் பறவைகள் கோடை வெயிலை சமாளிப்பதற்கு சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன.

    இங்குள்ள பறவைகளுக்கு நீர்ச்சத்து உள்ள பழங்கள் வழங்கப்படுகின்றன. மேலும் பறவைகள் உள்ள கூண்டுகளை சுற்றி சணல் கோணி மூலம் அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அந்த கோணிகளில் 2 மணி நேரத்துக்கு ஒருமுறை தண்ணீர் பீச்சி அடிக்கப்படுகிறது. இதனால் கூண்டுக்குள் எப்போதும் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. கூண்டுகளின் மேல் தென்னை, பனை ஓலைகளும் போடப்பட்டு உள்ளன.

    மேலும் விலங்குகள் குளிக்கும் இடத்தில் செயற்கை நீரூற்றுகளும் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு வழக்கத்தை விட அதிகமான தண்ணீர் திறந்து விடப்படுகிறது. யானை உள்ளிட்ட விலங்குகள் பிரத்தியேகமாக அமைக்கப்பட்டுள்ள ஷவர்களில் குளியல் போடுகின்றன. குளியல் போட்டபடியே கரும்புகளை கடித்து சுவைக்கின்றன.

    சிங்கம், புலி உள்ளிட்ட விலங்குகளுக்கு குளிர் சாதன பெட்டியில் வைக்கப் பட்ட இறைச்சி ஜில்லென வழங்கப்படுகிறது. மேலும் இங்குள்ள விலங்குகள் கோடையில் பாதுகாப்பாக இருக்க 2 மணி நேரத்திற்கு ஒருமுறை கால்நடை மருத்துவர்கள் கண்காணிக்கிறார்கள்.

    வண்டலூர் உயிரியல் பூங்காவில் தேவா, மாலா ஆகிய 2 புலிகள் உள்ளன. இந்த புலிகள் கூண்டுக்குள்ளேயும், கூண்டுக்கு வெளியேயும் திரிகிறது. கூண்டுக்கு வெளியே சுற்றி திரியும் 2 புலிகளும் பெண் ஊழியரின் அன்பு கட்டளையை ஏற்று கூண்டுக்குள் செல்கின்றன.

    கூண்டுக்கு வெளியே இருக்கும் புலிகளை பெண் ஊழியர் ஒருவர் புலிகளின் பெயரை சொல்லி தேவா, மாலா என்று அழைக்கிறார். அவர் கூப்பிட்டதும் அந்த புலிகள் அவரை திரும்பி பார்க்கின்றன. பின்னர் புலிகளை பார்த்து கூண்டுக்குள் போ என்று பெண் ஊழியர் சொல்கிறார். உடனே 2 புலிகளும் எழுந்து நட ந்து வந்து கூண்டுக்குள் செல்கின்றன. இதை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.

    வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு கர்நாடகாவில் இருந்து சிங்கம் ஒன்று கொண்டு வரப்பட்டது. இந்த சிங்கத்தை 2 நாட்கள் கழித்து பொதுமக்கள் பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    • மனித குரங்கு வசிக்கும் பகுதியில் திறந்தவெளி தண்ணீர் குளியலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    • பறவைகளுக்கு கோடை ஷவர் குளியல் வழங்கி வெயில் பாதிக்காமல் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

    வண்டலூர்:

    இந்தியாவில் மிகப்பெரிய பழமையான உயிரியல் பூங்கா வண்டலூர் உயிரியல் பூங்காவாகும். உலகின் பல்வேறு பகுதியில் இருந்து இந்த பூங்காவை சுற்றிப் பார்க்க வருகின்றனர்.

    தற்போது பள்ளிகளுக்கு கோடைவிடுமுறை விடப்பட்டுள்ளதால் உயிரியல் பூங்காவிற்கு வரும் பார்வையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

    மேலும் கோடை காலத்தையொட்டி வெயிலின் தாக்கத்தில் இருந்து விலங்குகளை பாதுகாக்க வண்டலூர் உயிரியல் பூங்காவில் தேவையான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது.

    மனித குரங்கு வசிக்கும் பகுதியில் திறந்தவெளி தண்ணீர் குளியலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவைகள் தண்ணீர் குடிப்பதற்கு ஏதுவாக குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் உடல் சூட்டைத் தணிக்க கூடிய பழங்கள் தர்பூசணி, கிர்ணிப்பழம் மற்றும் இளநீர் அனைத்தும் சேர்க்கப்பட்டு அந்த பழங்களை குளிர்சாதன பெட்டியில் வைத்து பழங்கள் உறைந்த நிலையில் அல்வா போன்று விலங்குகளுக்கு கொடுக்கிறார்கள் பறவைகளுக்கு அவைகள் இருப்பிடத்தை சுற்றி ஜன்னல் கோணி கட்டப்பட்டு அவைகளுக்கும் கோடை ஷவர் குளியல் வழங்கி வெயில் பாதிக்காமல் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

    அதேபோன்று சிங்கம், புலிகளுக்கு நீந்தி குளிக்கும் தொட்டி வைக்கப்பட்டுள்ளது. காண்டாமிருகத்திற்கு ஷவர் குளியலுடன் இருக்கும் இடத்தை சுற்றி சேற்று குளியல் அமைத்துள்ளனர்.

    அதேபோல் நீர்யானை இருக்கும் இடத்தையும் தண்ணீரால் நிரப்பி சேற்றுத் தன்மை மாறாதபடிக்கு ஈரப்பதத்தை கொடுத்து அந்த விலங்குகளின் சூட்டை தணிக்கின்றனர்.

    அதேபோல் யானைக்கு ஷவர் குளியல் மற்றும் சேற்று குளியல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நெருப்புக்கோழி, ஒட்டகச்சிவிங்கி, வரிக்குதிரை போன்றவைகளுக்கு ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை தண்ணீரை சுழற்றி அடிக்கும் வகையில் குழாய்கள் அமைக்கப்பட்டு இருக்கிறது.

    மேலும் பார்வையாளர்களின் வசதிக்காக ஆங்காங்கே தண்ணீர் குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் புதுப் பொலிவுடன் திறக்கப்பட்ட உணவகங்கள், நிழற்குடைகள் என்று பார்வையாளர்களுக்கும் கோடை காலத்தில் சிறப்பான ஏற்பாடுகளை உயிரியல் பூங்கா நிர்வாகம் செய்துள்ளது.

    • கொரோனா தொற்று காரணமாக வண்டலூர் பூங்காவில் 2021-ம் ஆண்டு சிங்கங்களை பார்ப்பதற்கான சவாரி நிறுத்தப்பட்டது.
    • கோடை விடுமுறைதான் வண்டலூர் உயிரியல் பூங்காவின் முக்கியமான சுற்றுலா சீசன் ஆகும்.

    வண்டலூர்:

    சென்னை வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா பொதுமக்களின் பொழுதுபோக்கு இடமாக திகழ்கிறது. வண்டலூர் உயிரியல் பூங்காவுக்குள் மிருகங்களை பார்வையிட செல்லும் பொதுமக்கள், வண்டியில் சவாரியாக சென்று காட்டில் உலவும் சிங்கங்களை அருகில் இருந்தபடியே பார்ப்பது வழக்கம்.

    இந்நிலையில் கொரோனா தொற்று காரணமாக வண்டலூர் பூங்காவில் 2021-ம் ஆண்டு சிங்கங்களை பார்ப்பதற்கான சவாரி நிறுத்தப்பட்டது. மேலும் கொரோனா தொற்று பரவலின் போது 2021-22 கால கட்டத்தில் பல மிருகங்கள் தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்தன. 2021-ம் ஆண்டு 4 சிங்கங் கள், 3 புலிகள், ஒரு சிறுத்தை ஆகியவை இறந்தன.

    2022-ம் ஆண்டு ஒரு சிங்கம், ஒரு புலி, ஒரு சிறுத்தை உள்ளிட்ட 4 விலங்குகள் இறந்தன. இவற்றில் 2 சிங்கங்கள் மிகவும் ஆரோக்கியமான சிங்கங்கள் ஆகும்.

    இதன் காரணமாக வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள சிங்கங்களின் எண்ணிக்கை 9 ஆக குறைந்தது.

    இந்நிலையில் வண்ட லூர் உயிரியல் பூங்காவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சிங்கம் சவாரி மீண்டும் எப்போது தொடங்கப்படும் என்று பார்வையாளர்கள் எதிர்பாார்த்து காத்திருந்தனர். இதையடுத்து பொது மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் வண்லூர் உயிரியல் பூங்காவில் சிங்கம் சவாரி கோடை விடுமுறையின் போது தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. கோடை விடுமுறைதான் வண்டலூர் உயிரியல் பூங்காவின் முக்கியமான சுற்றுலா சீசன் ஆகும். எனவே சிங்கம் சவாரியை மீண்டும் தொடங்க திட்டமிடப்பட்டு உள்ளது.

    • இன்று பார்வையாளர்களின் வசதிக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
    • பூங்காவை பொதுமக்கள் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை சுற்றி பார்க்கலாம்.

    வண்டலூர் :

    சென்னையை அடுத்த வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் 2 ஆயிரத்து 382 விலங்குகள் மற்றும் பறவைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் பொங்கல் பண்டிகையன்று வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு 17 ஆயிரம் பேர் வருகை தந்து பூங்காவை சுற்றி பார்த்து மகிழ்ந்தனர்.

    நேற்று மாட்டுப்பொங்கல் தினத்தில் சென்னை மற்றும் புறநகர் பகுதியான கோயம்பேடு, கிண்டி, அம்பத்தூர், ஆவடி, பல்லாவரம், தாம்பரம், சோழிங்கநல்லூர், வேளச்சேரி, குன்றத்தூர், மாங்காடு, பூந்தமல்லி, செங்குன்றம், செங்கல்பட்டு, மாமல்லபுரம் காஞ்சீபுரம், மதுராந்தகம் ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து பொதுமக்கள் தங்களது குடும்பத்துடன் வண்டலூர் உயிரியல் பூங்காவை சுற்றி பார்ப்பதற்காக வருகை தந்தனர்.

    பூங்காவில் எங்கு பார்த்தாலும் பொதுமக்களின் கூட்டம் அலைமோதியது. பூங்காவில் பொதுமக்களுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் பூங்கா நிர்வாகம் செய்திருந்தது.

    பொங்கல், மாட்டு பொங்கல் ஆகிய 2 தினங்களில் மட்டும் வண்டலூர் உயிரியல் பூங்காவில் 47 ஆயிரம் பேர் சுற்றி பார்த்துள்ளனர். குறிப்பாக நேற்று ஒரே நாளில் வண்டலூர் உயிரியல் பூங்காவை 30 ஆயிரம் பேர் சுற்றி பார்த்து மகிழ்ந்தனர்.

    வண்டலூர் பூங்காவுக்கு கார், மோட்டார் சைக்கிள், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களில் வரும் பொதுமக்களால் வண்டலூர் பூங்கா மேம்பாலம் கீழ் பகுதியில் உள்ள ஜி.எஸ்.டி. சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கடும் அவதிக்குள்ளானார்கள்.

    இந்த நிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) காணும் பொங்கலையொட்டி வண்டலூர் உயிரியல் பூங்கா திறந்து இருக்கும், காணும் பொங்கல் அன்று பூங்காவுக்கு வருகை வரும் பொதுமக்களுக்கு பூங்கா நிர்வாகம் பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளது.

    காணும் பொங்கல் என்பதால் வண்டலூர் உயிரியல் பூங்காவை பொதுமக்கள் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை சுற்றி பார்க்கலாம். பூங்காவில் உள்ள இந்திய காட்டுமாடு, காண்டாமிருகம், வெளிமான், கடமான், வராக மான், புள்ளிமான், சதுப்புநில மான், நீலமான் போன்ற தாவர வகை விலங்குகளுக்கு காலை 11 மணிக்கு மேல் உணவளிக்கும் காட்சிகளை பார்வையாளர்கள் கண்டுகளிக்கலாம்.

    அதேபோல் பூங்காவில் உள்ள யானைகள் சவரில் குளிக்கும் காட்சிகளை பிற்பகல் 2 மணி முதல் 3 மணி வரையும், பின்னர் 3 மணி முதல் 4 மணி வரையும் பொதுமக்கள் கண்டுகளிக்கலாம். பூங்காவின் செயல்பாடுகளை விவரிக்கும் ஆவணப்படம் மற்றும் பூங்கா விலங்குகளின் திரை தொகுப்புகள் 2 பெரிய எல்.இ.டி. திரையில் திரையிடப்படுகிறது.

    குடும்பமாக வரும் பொதுமக்கள் மற்றும் பார்வையாளர்கள், நண்பர்கள் ஆகியோர் புகைப்படம் எடுத்துக்கொள்ள ஒரு புகைப்பட கூடம் அமைக்கப்பட்டுள்ளது.

    காணும் பொங்கலை முன்னிட்டு பூங்காவுக்கு 50 ஆயிரத்துக்கும் மேல் பார்வையாளர்கள் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால் பொதுமக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும், பாதுகாப்பு நடவடிக்கைகளும் பூங்கா நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    சென்னை மற்றும் சென்னை புறநகர், காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் இருந்து வண்டலூர் பூங்காவுக்கு, தமிழ்நாடு போக்குவரத்து கழகம் மற்றும் மாநகர போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    ×