search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வண்டலூர் பூங்காவை 4 நாட்களில் ஒரு லட்சம் பேர் பார்வையிட்டனர்
    X

    வண்டலூர் பூங்காவை 4 நாட்களில் ஒரு லட்சம் பேர் பார்வையிட்டனர்

    • காணும் பொங்கலை கொண்டாட லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் மாமல்லபுரத்தில் குவிந்தனர்.
    • புராதன சின்னங்களான கடற்கரை கோவில், ஐந்துரதம், வெண்ணை உருண்டைக் கல் பாறை உள்ளிட்ட பகுதிகளை அருகில் சென்று 20 ஆயிரம் பேர் பார்த்து ரசித்தனர்.

    வண்டலூர்:

    பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த 14-ந்தேதி முதல் தொடர் விடுமுறை விடப்பட்டது. இதனால் விடுமுறை நாட்களில் பொதுமக்கள் குடும்பத்துடன் சுற்றுலா இடங்களுக்கு அதிக அளவில் சென்று வந்தனர்.

    காணும் பொங்கலையொட்டி நேற்று வண்டலூர் பூங்கா, கிண்டி சிறுவர் பூங்கா, மாமல்லபுரம், பழவேற்காடு பகுதியில் லட்சக்கணக்கானோர் குவிந்தனர்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதி மக்களின் முக்கிய சுற்றுலா இடமாக வண்டலூர் பூங்கா உள்ளது. பொங்கல் தொடர் விடுமுறையால் வண்டலூர் பூங்காவில் கடந்த 4 நாட்களாக சுற்றுலா பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

    கடந்த 4 நாட்களில் வண்டலூர் பூங்காவை 1 லட்சம் பேர் பார்த்து ரசித்து உள்ளனர். நேற்று மட்டும் 31 ஆயிரம் பேர் குவிந்து இருந்தனர்.

    இது தொடர்பாக வண்டலூர் பூங்கா இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    காணும் பொங்கல் பண்டிகையினை கொண்டாட வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா மிகவும் விரும்பத்தக்க இடங்களில் ஒன்றாகும். பார்வையாளர்களின் வருகையினை முன்னிட்டு பூங்காவின் நேரம் நீட்டிக்கப்பட்டது.

    கூடுதல் நுழைவுச் சீட்டு வழங்குமிடம், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, கூடுதல் உணவு விற்பனை நிலையங்கள், கழிப்பறைகள், இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு தனித்தனியாக நிறுத்த அடையாளக் குறியீடுகள் செய்யப்பட்டது. கூடுதல் வாகன நிறுத்துமிடத்திற்கு செல்ல மாற்று வழி அமைக்கப்பட்டது.

    பூங்கா நிர்வாகம் செய்த பொங்கல் ஏற்பாடுகள் பார்வையாளர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. பெரிய எல்.இ.டி. திரைகள் மூலம் பூங்காவின் திரை தொகுப்பு திரையிடல், தாவர உண்ணிகளுக்கு உணவு வழங்குதல், யானை குளியல் மற்றும் புகைப்படம் எடுக்குமிடம் பார்வையாளர்களால் மிகவும் விரும்பப்பட்டது. பூங்காவில் 3 கண்காணிப்பு கோபுரங்கள், கட்டுப்பாட்டு அறையில் இருந்து சி.சி.டி.வி. கண்காணிப்பு, வனத்துறை அலுவலர்கள் காவல் துறையுடன் இணைந்து பூங்கா ரோந்து பணி போன்றவற்றின் மூலம் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

    பூங்காவிற்கு பொங்கல் பண்டிகை நாட்களில் 1 லட்சத்துக்கும் மேல் பார்வையாளர்கள் வருகை புரிந்தனர்.

    14-ந்தேதி 7,630 பேர், 15-ந்தேதி- 17,762 பேர், 16-ந்தேதி 34,183 பேர், 17-ந்தேதி, 31,440 பேர் மற்றும் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகள் சுமார் 9 ஆயிரம் பேர் வந்து இருக்கிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    காணும் பொங்கலை கொண்டாட லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் மாமல்லபுரத்தில் குவிந்தனர். அங்குள்ள புராதன சின்னங்களான கடற்கரை கோவில், ஐந்துரதம், வெண்ணை உருண்டைக் கல் பாறை உள்ளிட்ட பகுதிகளை அருகில் சென்று 20 ஆயிரம் பேர் பார்த்து ரசித்தனர். இந்தியருக்கு ரூ.40-ம், வெளிநாட்டவருக்கு ரூ.600-ம் தொல்லியல்துறை நுழைவு கட்டணமாக வசூலித்தது.

    Next Story
    ×