search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "TN Health ministery"

    செங்குன்றம் அருகே உள்ள சோத்துப்பாக்கத்தில் உள்ள குட்கா வியாபாரி கிடங்குக்கு டெல்லி சி.பி.ஐ. அதிகாரிகள் சீல் வைத்தனர். #GutkhaScam #GutkhaCBIProbe

    சென்னை:

    தமிழ்நாட்டில் குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    கடந்த 2013-ம் ஆண்டு முதல் இந்த தடை அமலில் இருந்து வருகிறது. ஆனால் தடையை மீறி சென்னையில் குட்கா விற்பனை நடப்பதாக புகார்கள் எழுந்தன.

    சென்னையில் உள்ள போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு கோடிக்கணக்கில் லஞ்சம் கொடுத்து விட்டு குட்கா விற்கப்படுவதாகவும், இதன் தொடர்ச்சியாக குட்கா நிறுவனங்கள் வரி ஏய்ப்பில் ஈடுபடுவதாகவும் வருமான வரித்துறைக்கு ரகசிய தகவல்கள் சென்றன. அதன் பேரில் 2016-ம் ஆண்டு ஜூலை மாதம் செங்குன்றம் அருகே உள்ள சோத்துப்பாக்கத்தில் உள்ள குட்கா கிடங்கில் திடீர் சோதனை நடத்தினார்கள்.

    அந்த கிடங்கு குட்கா பங்குதாரர்கள் மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா ஆகியோருக்கு சொந்தமானதாகும். அங்கு கணக்கில் வராத பல்வேறு மூலப் பொருட்கள் மற்றும் குட்கா பதுக்கி வைத்து இருப்பதை கண்டுபிடித்தனர். இதையடுத்து அந்த குட்கா கிடங்குக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் “சீல்” வைத்தனர்.

    இதைத் தொடர்ந்து செங்குன்றத்தில் குட்கா வியாபாரி மாதவராவின் வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது ரகசிய டைரி ஒன்று சிக்கியது. அந்த டைரியில் குட்கா எத்தனை கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது என்ற புள்ளி விபரம் இருந்தது.

     


     

    மேலும் தடையை மீறி குட்கா விற்பனை செய்வதற்கு சென்னையில் உள்ள இரண்டு உயர் போலீஸ் அதிகாரிகள் உள்பட 23 பேருக்கு சுமார் ரூ.40 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்ட தகவல் இடம் பெற்றிருந்தது. டி.ஜி.பி. அந்தஸ்தில் உள்ள அந்த இரு போலீஸ் உயர் அதிகாரிகளுக்கும் எந்தெந்த தேதிகளில் லட்சக்கணக்கில் லஞ்சப் பணம் கை மாறியது என்று எழுதப்பட்டிருந்தது.

    இவர்கள் தவிர கலால் வரித்துறை அதிகாரிகள், மத்திய உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆகியோருக்கும் குட்கா வியாபாரிகள் லஞ்சம் கொடுத்து இருப்பது தெரிய வந்தது.

    அந்த ரகசிய டைரி மூலம் பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு நடந்து இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த டைரியில் இடம் பெற்றிருந்த ஒரு அமைச்சர் மற்றும் 2 போலீஸ் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி தமிழக அரசுக்கு டெல்லியில் இருந்து வருமான வரித்துறை கடிதம் அனுப்பியது. டைரியில் உள்ள தகவல்களையும் வருமான வரித்துறை அனுப்பியிருந்தது.

    ஆனால் தமிழக அரசு இந்த விவகாரத்தில் உடனடி நடவடிக்கை எதுவும் எடுக்க வில்லை. லஞ்ச ஒழிப்பு போலீசாரும் தீவிர விசாரணை நடத்தவில்லை என்ற அதிருப்தி எழுந்தது. இதையடுத்து இந்த விவகாரம் பற்றி சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட கோரி தி.மு.க. சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அதை ஏற்றுக் கொண்ட ஐகோர்ட்டு கடந்த ஏப்ரல் மாதம் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டது.

    அதன்படி டெல்லி சி.பி.ஐ. அதிகாரிகள் இந்த விவகாரத்தை கையில் எடுத்தனர். கடந்த மே மாதம் இது தொடர்பான வழக்கை பதிவு செய்த சி.பி.ஐ. அதிகாரிகள் ஜூன் மாதம் விசாரணையை தொடங்கினார்கள். முதலில் லஞ்சம் பெற்றதாக கூறப்படும் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளை அழைத்து விசாரித்தனர்.

     


     

    நேற்று முன்தினம் சி.பி.ஐ. அதிகாரிகள் டெல்லியில் இருந்து மீண்டும் வந்தனர். இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான குட்கா வியாபாரி மாதவராவை நுங்கம்பாக்கத்தில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்துக்கு வரவழைத்து விசாரித்தனர். சுமார் 10 மணி நேரம் இந்த விசாரணை நடந்தது.

    வருமான வரித்துறை, தமிழக லஞ்ச ஒழிப்புத் துறையிடம் இருந்து பெற்ற தகவல்களின் அடிப்படையில் ஏராளமான கேள்விகளை சி.பி.ஐ. அதிகாரிகள் தயார் செய்து கொண்டு வந்திருந்தனர். அந்த கேள்விகளை சரமாரியாக கேட்டு விசாரணை நடத்தப்பட்டது.

    குட்கா விற்பதற்கு உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு எப்படி லஞ்சம் கொடுக்கப்பட்டது? ஒவ்வொரு அதிகாரியும் எவ்வளவு லஞ்சம் வாங்கினார்கள்? லஞ்சப் பணம் கைமாறியதில் யார்- யாரெல்லாம் உடந்தையாக இருந்தனர்? என்பன போன்ற கேள்விகள் கேட்கப்பட்டன.

    சில கேள்விகளை சி.பி.ஐ. அதிகாரிகள் கையில் ஆதாரத்தை வைத்துக் கொண்டு கேட்டனர். இதனால் மாதவராவ் பல்வேறு உண்மைகளை கூறி இருப்பதாக கூறப்படுகிறது. அவரிடம் நடத்தப்பட்ட விசாரணை முழுமையாக வீடியோவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    குட்கா வியாபாரி மாதவராவ் கொடுத்துள்ள தகவல்கள் பல கோடி லஞ்சம் கை மாறியதை உறுதிபடுத்தி இருப்பதாக சி.பி.ஐ. வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று மதியம் விசாரணை முடிந்தது. இதைத் தொடர்ந்து சி.பி.ஐ. அதிகாரிகள் அடுத்த அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

    முறைகேடுகள் உறுதியாகி இருப்பதால் சோத்துப்பாக்கத்தில் உள்ள மாதவராவின் குட்கா குடோனுக்கு ‘சீல்’ வைக்க உத்தரவிட்டனர். அதை ஏற்று சுகாதாரத்துறை அதிகாரிகளும் உணவு மற்றும் பாதுகாப்புத் துறை அதிகாரிகளும் அந்த கிடங்குக்கு சீல் வைத்தனர். ஏற்கனவே வருமான வரித்துறையினர் சீல் வைத்துள்ள நிலையில் தற்போது சி.பி.ஐ.யும் அந்த கிடங்குக்கு சீல் வைத்துள்ளது.

    இதற்கிடையே குட்கா வியாபாரி மாதவராவ் கொடுத்துள்ள தகவல்களை அடிப்படையாக வைத்து அடுத்தக்கட்ட விசாரணைக்கு சி.பி.ஐ. அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். குற்றம் சாட்டப்பட்டுள்ள 2 உயர் போலீஸ் அதிகாரிகள், கலால் துறை அதிகாரிகள், உணவு மற்றும் பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பி வரவழைத்து விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.

    இரு உயர் போலீஸ் அதிகாரிகள் இந்த வழக்கில் சிக்கி இருக்கும் நிலையில் சி.பி.ஐ.யின் வேகமான விசாரணை காவல் துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #GutkhaScam #GutkhaCBIProbe

    குட்கா ஊழல் வழக்கில் சிபிஐ விசாரணையை எதிர்த்து தமிழக சுகாதாரத்துறை அதிகாரி சிவக்குமார் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். #Gutkha #supremeCourt #CBI
    புதுடெல்லி:

    தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய குட்கா ஊழல் வழக்கு விசாரணையை லஞ்ச ஒழிப்புத்துறையிடம் இருந்து சி.பி.ஐ.க்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்த ஊழலில் அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு உள்ளதால் அவர்கள் பதவி விலகவேண்டும் என்று தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

    சிபிஐ விசாரணை தொடர்பான உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்படலாம் என பேசப்பட்டது. ஆனால், அரசு மேல்முறையீடு செய்யாது என்றும், சி.பி.ஐ. விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தரும் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருந்தார்.


    எனினும், எந்த நேரத்திலும் நிலைமை மாறலாம் என்பதால், தி.மு.க. தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு ஏற்கனவே தாக்கல்  செய்யப்பட்டுள்ளது. குட்கா வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றிய சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக யார் மனு தாக்கல் செய்தாலும் தங்களை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்க கூடாது என தி.மு.க. தனது மனுவில் கூறியிருந்தது.

    இந்நிலையில், குட்கா ஊழலில் சிபிஐ விசாரணை தொடர்பான உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக சுகாதாரத்துறை அதிகாரி சிவக்குமார் மேல் முறையீடு செய்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. குட்கா வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளவர்களில் சிவக்குமாரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. #Gutkha #supremeCourt #CBI
    ×