search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kerala Temple"

    கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டத்தில் உள்ளது, திருவித்துவக்கோடு திருத்தலம். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டத்தில் உள்ளது, திருவித்துவக்கோடு திருத்தலம். இதனை திருமித்தக்கோடு என்றும் அழைக்கின்றனர். இ்ங்கு பஞ்சபாண்டவர்களால் நிறுவப்பட்ட நான்கு விஷ்ணு சிலைகளைக் கொண்ட நான்கு சன்னிதிகளுடன், சிவபெருமானுக்கும் ஒரு சன்னிதி சேர்ந்து அமைந்த ‘அஞ்சுமூர்த்திக் கோவில்’ இருக்கிறது.

    தல வரலாறு :

    நபாகணன் என்ற மன்னனின் மகனான அம்பரீஷன் முக்தி பெறுவதற்காக, மகாவிஷ்ணுவை நோக்கிக் கடுந்தவம் செய்தான். அவனைச் சோதித்துப் பார்க்க விரும்பிய விஷ்ணு, அவன் முன்பாகத் தேவேந்திரன் வடிவில் தோன்றினார். அதனைக் கண்ட அம்பரீஷன், “நான் தேவேந்திரனைக் காண இத்தவத்தைச் செய்யவில்லை, மகாவிஷ்ணுவைக் காணும் என் முயற்சிக்கு இடையூறு செய்ய வேண்டாம்” என்று பணிவோடு சொன்னான்.

    அவனுடைய உண்மையான பக்தியில் மகிழ்ந்த மகாவிஷ்ணு, அவனுக்குத் தனது உண்மையான தோற்றத்தைக் காண்பித்தருளினார். அம்பரீஷன் அவரிடம், தனக்கு எந்தத் திசையிலிருந்து பார்த்தாலும், மகாவிஷ்ணுவே தெரிந்திட வேண்டுமென்று வேண்டினான். விஷ்ணுவும் அவன் விரும்பியபடி, வாசுதேவன், சங்கர்ஷணன், பிரத்யும்னன், அநிருத்தன் எனும் நான்கு தோற்றங்களில் தனது வியூகத் தோற்றத்தைக் காட்டியருளி, அவனுக்கு முக்தியும் அளித்தார்.

    பிற்காலத்தில், பஞ்சபாண்டவர்கள் வனவாசத்திற்காக இப்பகுதிக்கு வந்தனர். அங்கே, அவர்களுக்கு மகாவிஷ்ணுவின் வியூகத் தோற்றம் தெரிந்தது. அதனைக் கண்டு மகிழ்ந்த பஞ்சபாண்டவர்கள் அவ்விடத்தில் ஒரு கோவிலைக் கட்ட முடிவு செய்தனர். அங்கு முதலில், அர்ச்சுனன் ஒரு மகாவிஷ்ணு சிலையினை நிறுவி வழிபட்டான். அவனைத் தொடர்ந்து, தருமர், பீமன் ஆகியோர் தனித்தனியே விஷ்ணு சிலைகளை நிறுவ, நகுலன் மற்றும் சகாதேவன் ஆகியோர் சேர்ந்து ஒரு விஷ்ணு சிலையை நிறுவி வழிபட்டனர்.

    பஞ்சபாண்டவர்கள் நிறுவி வழிபட்ட நான்கு விஷ்ணு சிலைகளில், அர்ச்சுனன் நிறுவி வழிபட்ட விஷ்ணு சிலையே இக்கோவிலில் மூலவராக இருக்கிறது. மற்ற மூன்று விஷ்ணு சிலைகளும் தனித் தனிச் சன்னிதிகளில் இடம் பெற்றிருக்கின்றன என்று இக்கோவில் அமைந்த தல வரலாறு சொல்லப்படுகிறது.

    விஷ்ணுவுக்கு அமைந்த சிறப்புமிக்க இக்கோவிலில், சிவபெருமான் சன்னிதி ஒன்றும் தனியாக அமைந்திருக்கிறது. அதுபற்றிச் சுவையான வரலாறு ஒன்று சொல்லப்படுகிறது.

    இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, இப்பகுதியில் வசித்து வந்த முனிவர் ஒருவர் காசிக்குச் சென்று, அங்கேயேத் தங்கிச் சிவபெருமானை வழிபட்டு வந்தார். இந்நிலையில், அவரது தாயின் உடல்நிலை சரியில்லாமல் இருப்பது அவருக்குத் தெரிய வந்தது. உடனே அவர், தன் தாயைக் காண்பதற்காகக் காசியில் இருந்து திரும்பி வந்தார். அவர் பயணத்திற்காகக் கையில் எடுத்துக் கொண்டு வந்த தாழங்குடையில், அவர் வழிபட்டு வந்த காசி விசுவநாதரும் அவருக்குத் தெரியாமல் அமர்ந்து கொண்டு வந்தார்.

    அந்த முனிவர், பஞ்சபாண்டவர்கள் வழிபட்ட விஷ்ணு சிலைகள் அமைந்த கோவில் பகுதிக்கு வந்த போது, தான் கொண்டு வந்த குடையைக் கீழே வைத்துவிட்டு, அருகிலிருந்த ஆற்றுக்குக் குளிக்கச் சென்றார். அவர் குளித்துவிட்டு வந்த போது, அங்கிருந்த குடை வெடித்துச் சிதறியது. பின்னர், அவ்விடத்தில் ஒரு சிவலிங்கம் வெளிப்பட்டது. அதன் பிறகு, அம்முனிவர், அங்கு சிவபெருமானுக்கு தனிச் சன்னிதி ஒன்றை அமைத்தார் என்று சொல்கின்றனர்.

    கோவில் அமைப்பு :

    இக்கோவிலில் அர்ச்சுனன் நிறுவிய விஷ்ணு மூலவராக இருக்கிறார். தெற்கு நோக்கி நின்ற கோலத்தில் இருக்கும் இந்த விஷ்ணுவை, சமஸ்கிருதத்தில் ‘அபயப்பிரதான்’ என்றும், தமிழில் ‘உய்ய வந்த பெருமாள்’ என்றும் அழைக்கின்றனர். இச்சன்னிதிக்கு வலதுபுறம், தருமர் நிறுவிய விஷ்ணு சிலையுடனான சன்னிதி, நகுலன் மற்றும் சகாதேவன் ஆகியோரால் நிறுவப்பட்ட விஷ்ணு சிலையுடனான சன்னிதி என்று இரண்டு சன்னிதிகள் அமைந்திருக்கின்றன. இடதுபுறம் சிறிது பின்புறமாக, பீமன் நிறுவிய விஷ்ணு சிலையுடைய சன்னிதி இருக்கிறது.

    பஞ்சபாண்டவர்கள் நிறுவிய நான்கு விஷ்ணு சிலைகளும் நின்ற கோலத்தில், சங்கு, சக்கரம், கதாயுதம் மற்றும் தாமரையைக் கொண்ட நான்கு கைகளுடன் அமைந்திருக்கின்றன. இங்கு தாயாருக்குத் தனிச் சன்னிதியோ, சிலையோ இல்லை. இங்குள்ள இறைவன் உய்யவந்த பெருமாள் மார்பில், தாயார் இருப்பதாக நம்பிக்கை இருக்கிறது. இந்தத் தாயார் நாச்சிவல்லி, பத்மபாணி நாச்சியார் என்று இரு பெயர்களால் அழைக்கப் பெறுகிறார்.

    இக்கோவிலில் கணபதி, தட்சிணாமூர்த்தி, சாஸ்தா, நாகர், பகவதி ஆகியோருக்கும் தனியாகச் சன்னிதிகள் இருக்கின்றன.

    வழிபாடுகள் :

    இக்கோவிலில் விஷ்ணுவுக்குரிய சிறப்பு நாட்களில் நான்கு விஷ்ணு சன்னிதிகளிலும், சிவபெருமானுக்குரிய சிறப்பு நாட்களில் சிவன் சன்னிதியிலும் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. மேலும் மலையாள நாட்காட்டியின்படி, மேடம் (சித்திரை) மாதம் ஆண்டுத் திருவிழா, இடவம் (வைகாசி) மாதம் மிருகசீருடம் நாள், கர்க்கடகம் (ஆடி) மாதம் குரு பூர்ணிமா நாள், சிங்கம் (ஆவணி) மாதம் கிருஷ்ணர் தோற்றம் (கோகுலாஷ்டமி) நாள், கன்னி (புரட்டாசி) மாதம் வரும் நவராத்திரி நாட்கள், விருச்சிகம் (கார்த்திகை) மாதம் வரும் கார்த்திகை தீபத்திருநாள், தனு (மார்கழி) மாதம் வரும் வைகுண்ட ஏகாதசி நாள் மற்றும் கும்பம் (மாசி) மாதம் சிவராத்திரி நாளை ஒட்டி நான்கு நாட்கள் இக்கோவிலில் விழாநாட்களாகக் கொண்டாடப்பட்டு வருகின்றன.

    வழிபாட்டுப் பலன்கள் :

    இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் முதலில் இங்குள்ள காசி விசுவநாதர் சன்னிதிக்குச் சென்று வழிபடுகின்றனர். அதன் பின்னர், மூலவரான உய்ய வந்த பெருமாள் மற்றும் பிற சன்னிதிகளில் உள்ள விஷ்ணுவையும் தீபம் ஏற்றித் துளசி அர்ச்சனை செய்து வழிபடுகின்றனர். இங்கு வழி படுபவர்களுக்கு மனதில் இருக்கும் துன்பங்கள் அனைத்தும் நீங்கி மன அமைதி கிடைக்கும் என்கின்றனர்.

    திருமணத்தடை, வேலைத்தடை உடையவர்கள் இக் கோவிலில் சிறப்புக் கட்டணம் செலுத்தி, அர்ச்சகர் மூலம் ரிக் வேத சுலோகங்களைச் சொல்லச் செய்து வழிபட்டால், விரைவில் திருமணம் நடைபெறும், வேலை கிடைக்கும் என்று இங்கு வந்து செல்லும் பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.

    பத்து நதிகள் இணைந்த பாரதப்புழா ஆற்றின் கரையில் அமைந்திருக்கும் இக்கோவிலில் காசி விசுவநாதர் சன்னிதி அமைந்திருப்பதால், இக்கோவிலில் முன்னோர்களுக்கான வழிபாடு (தர்ப்பணம்) செய்வது அதிக அளவில் நடைபெறுகிறது. கேரள மாநிலத்தில் அதிக அளவில் முன்னோர்களுக்கான வழிபாடு (தர்ப்பணம்) நடைபெறுவது இங்குதான் என்று சொல்கின்றனர்.

    பாரதப்புழா ஆற்றங்கரையில் அமைந்திருக்கும் இக் கோவில் காலை 5 மணி முதல் 10.30 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

    கோவில் சிறப்புகள் :

    * இக்கோவில் 108 வைணவத் திருத்தலங்களில் 67-வது திருத்தலமாக இருக்கிறது.

    * குலசேகராழ்வார் இக்கோவில் இறைவனைப் போற்றிப் பத்துப் பாசுரங்கள் பாடியுள்ளார்.

    * இறைவன் விஷ்ணு, மன்னன் அம்பரீஷனுக்குத் தனது நான்கு வடிவங்களைக் கொண்ட வியூகத் தோற்றம் காண்பித்து முக்தியளித்த தலம் இது.

    * பஞ்சபாண்டவர்கள் வனவாசக் காலத்தில் பெரும்பான்மையான நாட்கள் இங்கேதான் தங்கியிருந்தனர் என்றும், இக்கோவிலில் அவர்கள் தொடர்ந்து பல வழிபாடுகளைச் செய்து, அவர்களது பாவங்கள் அனைத்தும் நீங்கப் பெற்றனர்.

    * இக்கோவில் மூலவர் பக்தர்களுக்கு ஏற்படும் துயரங்கள் அனைத்தையும் களைந்து, அவர்களுக்கு அபயமளிப்பவராகவும் இருப்பதால், அபயப்பிரதான் (தமிழில் உய்ய வந்த பெருமாள்) என்று அழைக்கப்படுகின்றார்.

    * காசிக்குச் செல்ல முடியாதவர்கள் இக்கோவிலில் இருக்கும் காசி விசுவநாதரை வழிபட்டு, அதற்கான பலன்களை அடையலாம்.

    * இக்கோவில் சைவம், வைணவம் என்று இரு பிரிவினரும் வழிபடும் கோவில்களில் ஒன்றாக இருக்கிறது.

    அம்பரீஷனின் சிறப்பு :

    மன்னனான அம்பரீஷன் ஒவ்வொரு அமாவாசை நாளிலும், இறைவன் விஷ்ணுவை நினைத்து விரதமிருந்து வந்தான். அந்நாட்களில் தனது விரதம் முடிந்து, விஷ்ணுவுக்கு வழிபாட்டுப் பாடல்கள் பாடிப் போற்றிய பின் ஒரு பக்தருக்கு உணவளித்த பின்னரே உணவு உண்ணும் வழக்கத்தைக் கொண்டிருந்தான். ஒருநாள், துர்வாச முனிவர் அவனது விரதம் முடியும் வேளையில் அங்கு வந்தார். அவரை வரவேற்ற அம்பரீஷன், அவரைத் தானளிக்கும் உணவை ஏற்கும்படி வேண்டினான். அவர் அருகிலுள்ள ஆற்றில் குளித்துவிட்டு வந்து அவனளிக்கும் உணவை ஏற்றுக் கொள்வதாகச் சொல்லிச் சென்றார்.

    அவர் துவாதசி முடியும் வரை திரும்பி வரவில்லை. தன் விரதத்தை முடிக்க வேண்டிய நிலையில், அம்பரீஷன் சிறிது நீர் பருகித் தன் விரதத்தை முடித்தான். இதனையறிந்த துர்வாச முனிவர் கடும் கோபம் கொண்டார். தன் தவ வலிமையால் ஒரு அரக்கனை உருவாக்கி, அம்பரீஷனைக் கொல்ல ஏவினார். அம்பரீஷன் அந்த அரக்கனிடமிருந்து காப்பாற்றும்படி இறைவன் விஷ்ணுவை வேண்ட, அவர் தன் சக்கரத்தை அனுப்பி அந்த அரக்கனைக் கொன்றார். அதன் பிறகே, துர்வாச முனிவருக்கு அம்பரீஷனின் சிறப்பு தெரிந்தது. அவரும் அவனை வாழ்த்திச் சென்றார்.

    அமைவிடம் :

    கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டத்தில் ஷோரனூர் கள்ளிக்கோட்டைக்கு இடையில் அமைந்திருக்கும் பட்டாம்பி என்னும் இடத்திலிருந்து 6 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் திருவித்துவக்கோடு (திருமித்தக்கோடு) எனும் ஊரில் அமைந்திருக்கும் இக்கோவிலுக்குச் செல்ல, ஷோரனூர் மற்றும் பட்டாம்பி ஆகிய இடங்களில் இருந்து நகரப் பேருந்து வசதிகள் இருக்கின்றன.
    காலையில் சரஸ்வதியாகவும், மதியம் மகாலட்சுமியாகவும், மாலையில் துர்க்கையாகவும் நினைத்து வழிபடும் அம்மன் வீற்றிருக்கும் ஆலயம், ஏமூர் பகவதியம்மன் கோவிலாகும்.
    காலையில் சரஸ்வதியாகவும், மதியம் மகாலட்சுமியாகவும், மாலையில் துர்க்கையாகவும் நினைத்து வழிபடும் அம்மன் வீற்றிருக்கும் ஆலயம், கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டத்தில் உள்ள ஏமூர் பகவதியம்மன் கோவிலாகும்.

    தல வரலாறு :

    குரூர் மற்றும் கைமுக நம்பூதிரி ஆகிய இருவர், துர்க்கையம்மன் வழிபாட்டுப் பகுதியாக இருந்த வடமலைக் காட்டுப்பகுதிக்குள் சென்று, அம்மனை நினைத்து வழிபட்டுத் திரும்புவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். ஒருநாள் அம்மனை வழிபட்டுத் திரும்பும்போது, அவர் களுக்கு களைப்பு அதிகமாகத் தோன்றியதால், அவர்கள் இருவரும் அங்கிருந்த ஒரு மரத்தின் கீழ் அமர்ந்து ஓய்வெடுத்தனர். அப்போது, அங்கு வந்த வயதான பெண்மணி ஒருவர், அவர்களுக்குச் சில இனிப்பான பழங்களை வழங்கினார். அந்தப் பழங்களைச் சாப்பிட்ட அவர்களுக்கு களைப்பு மறைந்து புத்துணர்ச்சி ஏற்பட்டது.

    மறுநாள் அவர்கள் இருவரும் அம்மன் வழிபாட்டிற்குச் சென்ற போது, முதல் நாள் அவர்கள் ஓய்வெடுத்த மரத்தின் அடியில் யானை ஒன்றும், அதன் பின்புறம் தங்க நிறத்திலான அம்மன் உருவம் ஒன்றும் தோன்றி மறைந்தது. அதனைக் கண்ட இருவரும், முதல் நாள் வயதான தோற்றத்தில் வந்து தங்களுக்குப் பழங்களை வழங்கியது அம்மனே என்பதை உணர்ந்து கொண்டனர். அதன் பிறகு, அம்மன் காட்சியளித்த இடத்தையும் வணங்குவது அவர்களின் வாடிக்கையாகிப் போனது.

    இந்நிலையில் வயது முதிர்ந்த குரூருக்கு, காட்டிற்குள் சென்றுவருவது கடினமாக இருந்தது. அதை நினைத்து அவர் வருத்தமடைந்தார். இந்நிலையில், அவரது கனவில் தோன்றிய அம்மன், அருகிலுள்ள குளத்தில் அவருக்குக் காட்சியளிப்பதாகத் தெரிவித்தார். குரூரும் மகிழ்ச்சி யடைந்தார். மறுநாள் அங்கிருந்த குளத்திற்குச் சென்ற அவர் அம்மனைக் காண்பதற்காகக் காத்திருந்தார். சிறிது நேரத்தில் அந்தக் குளத்தின் நடுவில் இருந்து அம்மனின் கைகள் வெளிப்பட்டன. அதனைக் கண்ட ஆர்வத்தில், குளத்திற்குள் இறங்கிய குரூர் நீந்திச் சென்று அம்மனின் கைகளைப் பற்றிக் கொள்ள, அம்மனின் உருவம் முழுவதும் தெரியாமல் மறைந்து போனது. தெரிந்த கையும் கல்லாய் மாறிப் போனது. தனது செயலுக்காக வருத்தமடைந்த குரூர், அம்மனிடம் மன்னிப்பு கோரினார்.

    பின்னர் குரூர், அப்போதைய பாலக்காடு அரசர் சேகரி வர்மா வலிய ராசாவிடம் சென்று, நடந்ததைத் தெரிவித்து அம்மனுக்குக் கோவில் கட்ட வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்தார். அரசரும் குரூர் வேண்டுகோளை ஏற்று, அங்கு அம்மனின் கைகளையே வழிபாட்டுக் குரியதாகக் கொண்டு கோவிலைக் கட்டுவித்தார் என்று ஆலய தல வரலாறு சொல்கிறது.

    ஒரு துறவியின் வேண்டுகோளுக்காக, அங்கிருக்கும் குளத்தில் அவருக்குக் காட்சி தருவதாகச் சொன்ன அம்மன், அவ்வேளையில் அங்கு வேறு யாரும் இருக்கக் கூடாது என்கிற கட்டுப்பாட்டையும் விதித்தாள். மறுநாள் அவருக்குக் காட்சி தருவதற்காக அங்கிருந்த குளத்தில் அம்மன் எழுந்தருளிய போது, முதலில் அம்மனின் கைகள் மட்டும் நீரிலிருந்து வெளிப்பட்டிருக்கிறது. அம்மன் விதித்த கட்டுப்பாட்டை மீறி அங்கு பலரும் கூடியிருப்பதை அறிந்த அம்மன், முழுமையாகக் காட்சி தராமல் மறைந்து விட்டார் என்றும், அதன் பின்னர், அம்மனின் கைகளை மட்டும் வழிபாட்டுக்குரியதாகக் கொண்டு கோவில் அமைக்கப்பட்டது என்று இத்தல வரலாற்றைச் சொல்வதுண்டு.


    கை வடிவத்தில் பகவதி அம்மன்

    பாலக்காடு அரச குடும்பத்தினரின் குலக் கோவிலாக இருந்து வரும் இந்த ஆலயத்தை ‘கைப்பதி அம்பலம்’ என்றும் சொல்கின்றனர். இக்கோவிலில் இருக்கும் அம்மனைப் பக்தர்கள் காலையில் சரஸ்வதியாகவும், மதியம் மகா லட்சுமியாகவும், மாலையில் துர்க்கையாகவும் நினைத்துத் தங்களுக்குத் தேவையானதை வேண்டி வழிபாடு செய்கின்றனர்.

    இத்தலத்தில் மலையாள நாட்காட்டியின்படி கும்பம் (மாசி) மாதம் வரும் சிவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இவ்விழாக் காலத்தில் மலையாள மரபு வழியிலான ஓட்டந்துள்ளல், சாக்கியர்கூத்து, கதகளி, கழச்ச சீவேலி உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

    இதே போல் மீனம் (பங்குனி) மாதத்தில் வரும் அம்மன் நிறுவப்பட்ட நாளில் (பிரதிஷ்டா தினம்) லட்சார்ச்சனையும், கன்னி (புரட்டாசி) மாதத்தில் வரும் நவராத்திரி திருநாட்களில் சிறப்பு வழி பாடுகளும் செய்யப்படுகின்றன. விருச்சிகம் (கார்த்திகை) மாதம் ‘தாரிகா வதம்’ நிகழ்வு சிறப்பாகக் நடக்கிறது.

    மேஷம் (சித்திரை) மாதத்தில் வரும் விசு நாள் மற்றும் சிங்கம் (ஆவணி) மாதம் வரும் ஓணம் பண்டிகை நாட்களிலும், கேரளாவில் ராமாயண மாதம் என்று சொல்லப்படும் கரிகடகம் (ஆடி) மாதம் முழுவதிலும் அம்மனுக்குச் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன.

    இந்த ஆலயம் தினமும் காலை 5 மணி முதல் 11.30 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் பக்தர்கள் வழி படுவதற்காக திறந்திருக்கும்.

    நான்கு அம்பிகைகள் :

    பரசுராமரால் தோற்றுவிக்கப்பட்டது கேரள மாநிலம் என்கிறது புராணம். இதனால் தான் கேரளத்தை இறைவனின் பூமி என்கிறோம். தான் தோற்றுவித்தக் கேரள நிலப்பகுதியை கடல் நீரில் இருந்து பாதுகாப்பதற்காக, 4 இடங்களில் அம்மனை பிரதிஷ்டை செய்து வழிபட்டாராம், பரசுராமர். அந்த நான்கு அம்மன்களும் கன்னியாகுமரியில் பாலாம்பிகா, லோகனார் காவுவில் லோகாம்பிகா, மங்களூரில் மூகாம்பிகா, பாலக்காடு (ஏமூர்) ஹேமாம்பிகா என்று கோவில் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

    அமைவிடம் :

    கேரள மாநிலம், பாலக்காடு நகரில் இருந்து ஏழு கிலோமீட்டர் தொலைவில் இருந்து இந்த ஆலயத்திற்கு இரண்டு வழிகளில் செல்ல முடியும். பாலக்காடு - மலம்புழா அல்லது பாலக்காடு - தோணி செல்லும் சாலையில் பயணித்துக் கல்லேக்குளங்கரா பஸ் நிறுத்தத்தில் இறங்கிக் கோவிலுக்குச் செல்லலாம். பாலக்காட்டிலிருந்து இத்தலத்திற்குச் செல்லப் பேருந்து வசதிகள் உள்ளன.

    கேரளா திருக்கடித்தானத்தில் (திருக்கொடித்தானம்) உள்ள மகாவிஷ்ணு கோவிலில் இருக்கும் இறைவனை ஒரு கணப்பொழுது வேண்டினாலே போதுமாம், வெற்றியும், மோட்சமும் கிடைக்கும் என்கின்றனர்.
    கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், சங்கணாச்சேரி அருகில் இருக்கிறது திருக்கடித்தானம் (திருக்கொடித்தானம்). இங்குள்ள மகாவிஷ்ணு கோவிலில் இருக்கும் இறைவனை ஒரு கணப்பொழுது வேண்டினாலே போதுமாம், வெற்றியும், மோட்சமும் கிடைக்கும் என்கின்றனர்.

    தல வரலாறு :

    இந்தப் பகுதியை ஆட்சி செய்து கொண்டிருந்தவன், சூரிய வம்சத்து அரசனான ருக்மாங்கதன். இவனது நந்தவனத்திலிருந்த அழகிய, நறுமணம் மிகுந்த மலர்கள் தினமும் காணாமல் போய்க் கொண்டிருந்தன. அதனால் கோபமடைந்த அரசன், நந்தவனத்தில் இருக்கும் மலர்களைத் திருட்டுத்தனமாகப் பறித்துச் செல்பவர்களைக் கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டான். அரண்மனைக் காவலர்கள் நந்தவனத்தில் மறைந்திருந்தனர். அவ்வேளையில், அங்கு வந்த சிலர் மலர்களை பறிக்கத் தொடங்கினர். அவர்களை மறைந்திருந்த காவலர்கள் கைது செய்து அரசன் முன்பாகக் கொண்டு வந்து நிறுத்தினர்.

    அரசன் அவர்களைப் பார்த்து, ‘அரசருடைய நந்தவனத்தில் திருட்டுத்தனமாக மலர்களைப் பறித்துச் செல்வது தவறு என்றும், பிடிபட்டால் கடுமையான தண்டனை கிடைக்கும் என்றும் உங்களுக்குத் தெரியாதா?’ என்று கேட்டான்.

    அதனைக் கேட்ட அவர்கள், “அரசே, நாங்கள் அனைவரும் தேவலோகத்தைச் சேர்ந்தவர்கள். இங்கு மலரும் மலர்களின் அழகும், நறுமணமும் எங்களுக்குப் பிடித்துப் போனதால், தினமும் தேவலோகத்தில் இருந்து பூலோகம் வந்து, இங்கிருக்கும் மலர்களைப் பறித்துச் சென்று இறைவனுக்கு அணிவித்து வழிபட்டு வந்தோம். நாங்கள் தெரியாமல் செய்த இத்தவறை மன்னித்து எங்களை விடுவியுங்கள்’ என்று வேண்டினர்.

    அவர்கள் தேவர்கள் என்பதை அறிந்த அரசன், அனைவரையும் உடனடியாக விடுவித்தான். இருப்பினும் தேவலோகத்தைச் சேர்ந்த அவர்கள் பூலோகத்தினரால் சிறைப்பிடிக்கப்பட்டதால், தேவலோகம் செல்லும் சக்தியை இழந்திருந்தனர். அதனால் அவர்களால் தேவலோகம் செல்ல முடியவில்லை.

    அதனை அறிந்து வருத்தமடைந்த அரசன், ‘நீங்கள் மீண்டும் தேவலோகம் செல்ல நான் என்ன செய்ய வேண்டும்?’ என்று கேட்டான்.

    உடனே அவர்கள், ‘அரசே! நீங்கள் ஆண்டுதோறும் ஏகாதசி விரதமிருந்த பலன்கள் அனைத்தையும் எங்களுக்குக் கொடுத்தால், நாங்கள் மீண்டும் தேவலோகம் சென்று விடுவோம்’ என்றனர்.

    அரசனும், தன்னுடைய ஏகாதசி விரதப் பலன்கள் அனைத்தையும் அவர்களுக்கு வழங்கினான். அதனைப் பெற்ற அவர்கள், மீண்டும் தேவலோகம் சென்றனர்.

    இதனை அறிந்த மகாவிஷ்ணு, அரசன் ருக்மாங்கதனுக்குக் காட்சியளித்து அருளினார். இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒரு கடிகை (24 நிமிடங்கள்) நேரத்தில் இத்தானத்தில் (தலத்தில்) நடந்ததால் இத்தலத்திற்குத் திருக்கடித்தானம் என்ற பெயர் உண்டாயிற்று.

    பிற்காலத்தில், இப்பகுதிக்கு மன அமைதி தேடி வந்த பஞ்சபாண்டவர்களில் சகாதேவனுக்கு மேற்சொன்ன வரலாற்றுக் கதை தெரியவந்தது. அவன் அங்கு, மகாவிஷ்ணுவுக்குச் சிலை நிறுவிக் கோவில் அமைக்க விரும்பினான். ஆனால், அவனுக்குக் கோவிலில் நிறுவ மகாவிஷ்ணு சிலை எதுவும் கிடைக்கவில்லை.

    மனம் வருந்திய அவன் அவ்விடத்தில் நெருப்பு மூட்டி, அதில் இறங்கி உயிர்விடத் துணிந்தான். அப்போது அந்த இடத்தில் மகாவிஷ்ணு சிலை ஒன்று தோன்றியது. சகாதேவன் அந்தச் சிலையை அவ்விடத்தில் நிறுவிக் கோவில் அமைத்தான். அதனால், இத்தல இறைவனுக்கு ‘அற்புத நாராயணர்’ என்று பெயர் ஏற்பட்டதாக ஆலய தல வரலாறு சொல்லப்படுகிறது.

    கோவில் அமைப்பு:

    இக்கோவிலில் வட்டவடிவமான ஒரே கருவறையில் அற்புத நாராயணர் கிழக்கு நோக்கியும், நரசிம்மர் மேற்கு நோக்கியும் இருக்கின்றனர். இங்கிருக்கும் நரசிம்மர் உருவம் பிற்காலத்தில் நிறுவப்பட்டது என்கின்றனர். இருவருக்கும் தனித்தனியாக இரண்டு கொடிமரங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இத்தல இறைவி ‘கற்பகவல்லி நாச்சியார்’ என்றழைக்கப்படுகிறார்.

    கருவறையின் தெற்குப் பகுதியில் தெற்கு நோக்கியபடி தட்சிணாமூர்த்தி, கணபதி சன்னிதிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இந்தச் சன்னிதிகளுக்கு கதவுகள் எதுவும் கிடையாது. அங்கு அமைக்கப்பட்டிருக்கும் மரத் துவாரங்களின் வழியாக அவர்களைப் பார்த்து வணங்கிக் கொள்ளலாம். இக்கோவிலின் சுற்றுப்பகுதியில் சாஸ்தா, சுப்பிரமணியர், பத்ரா போன்ற துணை தெய்வங்களுடன் நாகதெய்வங்களும் இடம் பெற்றிருக்கின்றன. ஆலய மேற்புறம் தசாவதார சிற்பங்கள் காணப்படுகின்றன.

    கிழக்குக் கோபுரத்துக்கு அருகில் கழுமரத்தில் ஒரு மனிதர் படுத்த நிலையிலான சிலை ஒன்று இருக்கிறது. ‘கையூட்டு, ஊழல், ஏமாற்றுதல் போன்ற குற்றங்கள் கழுமரத் தண்டனைக்குரியவை’ என்பதை வலியுறுத்தும் வகையில் அந்தச் சிலை அங்கு இடம் பெற்றிருப்பதாக கூறுகிறார்கள். இந்தச்சிலை அமைந்ததற்கும் ஒரு கதை சொல்லப்படுகிறது.

    இப்பகுதியை ஆட்சி செய்த அரசர் ஒரு முறை இந்தக் கோவிலுக்கு வந்திருக்கிறார். அவர் வந்த வேளையில் கோவில் நடை மூடப்பட்டிருந்திருக்கிறது. அப்போது அங்கிருந்த வாயிற்காப்பாளன் வந்திருப்பது அரசர் என்று தெரியாமல், அவரிடம் சிறிது பணம் பெற்றுக் கொண்டு, கோவில் நடையைத் திறந்துவிட்டானாம். அதனால் அந்த வாயிற்காப்பாளன் கழுமரத்தில் ஏற்றப்பட்டுக் கொல்லப்பட்டிருக்கிறான். அதை நினைவுபடுத்தி எச்சரிக்கும் நோக்கத்தில் இங்கு கழுமரத்தில் மனிதன் படுத்த நிலையிலான சிலை அமைக்கப்பட்டிருக்கிறது என்கிறார்கள்.


    அற்புத நாராயணர், நரசிம்மர்

    வழிபாடுகள்:

    ஆலயம் அதிகாலை 5 மணி முதல் 11.30 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

    இக்கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி, ஏகாதசி உள்ளிட்ட விஷ்ணுவுக்குரிய அனைத்துச் சிறப்பு நாட்களிலும் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. மலையாள நாட்காட்டியின்படி விருச்சிகம் (கார்த்திகை) மாதம் வரும் திரு வோணம் நட்சத்திர நாளில் கொடியேற்றித் தொடங்கும் பத்து நாட்கள் திருவிழா நடைபெறும். இத்திருவிழாவில் ஒன்பதாம் நாளில் ‘சங்கேதம்’ எனும் தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்தத் தீபங்கள் மறுநாள் காலை வரை எரிந்து கொண்டிருக்கும் என்றும், இதனைக் காணப் பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்றும் சொல்கின்றனர்.

    இத்தலத்தில் தீபத்திருவிழா நடத்தப் பெறுவதற்கும் ஒரு கதை சொல்லப்படுகிறது. முன்னொரு காலத்தில் சிவபெருமான் இப்பகுதியில் நெருப்புப் பிழம்பாக தோன்றியிருக்கிறார். அவரிடமிருந்து வரும் வெப்பத்தால் இந்தப் பகுதி அழிந்து போய்விடக் கூடாது என்று நினைத்த பிரம்மாவும், விஷ்ணுவும் சிவபெருமானை வேண்ட, ஈசன் சிறு தீபமாக மாறி நின்ற ருளியதாக சொல்கிறார்கள். அதனால்தான் இந்த விஷ்ணு ஆலயத்தில் திருக்கார்த்திகை நாளில் தீபத்திருவிழா நடத்தப்படுகிறது.

    வழிபாட்டுப் பலன்கள் :

    இவ்வாலய இறைவனுக்குப் பால்பாயசம், கடும்பாயசம், பானகம், கதலிப்பழம் போன்றவை சமர்ப்பிக்கப்படுகின்றன. இங்கு சதுர்சத வழிபாடு, சந்தனக்காப்பு வழிபாடு நடத்துவோருக்கு, அவர்கள் எடுத்துக் கொண்ட அனைத்து முயற்சிகளும் வெற்றியடையும் என்கின்றனர். இங்குள்ள நரசிம்மருக்கு, அவரது கோபத்தைக் குறைப்பதற்காகப் பால்பாயசம் சமர்ப்பிக்கப்படுகிறது. நரசிம்மர் வழிபாட்டின் போது, “நாராயணீயம்” சொல்லப்படுகிறது. பொதுவாக, இத்தலத்து இறைவனை நினைத்து வேண்டினால், அவர்கள் எடுத்துக் கொண்ட செயலில் வெற்றியும், மோட்சமும் உறுதியாகக் கிடைக்கும் என்கின்றனர்.

    குடக்கூத்த அம்மான்:

    திருக்கடித்தானத்து இறைவன் ‘அற்புத நாராயணர், அமிர்த நாராயணர்’ என்று போற்றி வழிபடப்படுகிறார். இந்தநிலையில் நம்மாழ்வார் இங்குள்ள இறைவனை, ‘குடக்கூத்த அம்மான்’ என்று போற்றிப் பாடியிருக்கிறார். குடக்கூத்த அம்மான் என்று அவர் குறிப்பிடுவது ஏன்? என்று சில விளக்கங்கள் சொல்லப்படுகின்றன.

    இந்திரனின் சீற்றத்தால் உருவான பெருமழையில் இருந்து கோகுலவாசிகளைக் காக்கக் கிருஷ்ணன், கோவர்த்தன மலையைக் குடையாகப் பிடித்திருந்து அருளினார். அதனை நினைவு கொள்ளும் விதமாக, பெண்கள் குடை பிடித்தபடி நடனமாடும் ‘குடைக் கூத்து’ என்றழைக்கப்பட்ட நடனம் இந்த ஆலயத்தில் நடந்திருக்கலாம் என்று சிலர் சொல்கின்றனர்.

    குடத்தினைச் சுமந்துகொண்டு செல்லும் கோபியர்கள், ஒவ்வொருவருக்கும் தன் மீது தான் கிருஷ்ணனுக்கு அதிக அன்பு என்ற நினைப்பு இருந்தது. அவர்கள் கர்வத்தைப் போக்க விரும்பிய கிருஷ்ணன் அவர்கள் சுமந்து சென்ற குடங்களைப் பந்துகள் போல மேலெழும்பித் தன்னிடம் வரவழைத்து, மாயச் செயல்களை நிகழ்த்தினான். அப்போது கோபியர்கள் கிருஷ்ணனை மறந்து, குடங் களைப் பிடிக்க அங்கும், இங்குமாக ஓடத் தொடங்கினர். தாங்கள் கொண்டு வந்த வெறும் குடத்துக்காகக் கிருஷ்ணனை மறந்து தாவித்தாவிக் கூத்தாடியதைத் தான், ‘குடக் கூத்து’ என்று உருவாக்கியிருப்பதாகவும் சிலர் சொல்கிறார்கள்.

    அமைவிடம்:

    கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், சங்கணாச்சேரியில் இருந்து காவியூர் செல்லும் சாலையில் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது இந்த ஆலயம். இங்கு செல்ல சங்கணாச்சேரியில் இருந்து பேருந்து வசதிகள் இருக்கின்றன.

    பஞ்சபாண்டவர்களில் ஒருவனான பீமன், மன அமைதி வேண்டிப் புதுப்பித்து வழிபட்டக் கோவிலாகக் கேரள மாநிலம் திருப்புலியூர் மகாவிஷ்ணு கோவில் அமைந்திருக்கிறது.
    பஞ்சபாண்டவர்களில் ஒருவனான பீமன், மன அமைதி வேண்டிப் புதுப்பித்து வழிபட்டக் கோவிலாகக் கேரள மாநிலம் திருப்புலியூர் மகாவிஷ்ணு கோவில் அமைந்திருக்கிறது.

    தல வரலாறு :

    மகாபாரதப் போரில் பதினைந்தாம் நாளில் பாண்டவர்கள் படையை எதிர்த்துத் துரோணர் கடுமையாகப் போர் செய்தார். அதைக் கண்ட கிருஷ்ணர் அவரை வீழ்த்துவதற்கு ஒரு குறுக்கு வழியைக் கையாண்டார். அதன்படி பீமனை அழைத்து, மாளவநாட்டு மன்னனிடம் இருக்கும் அசுவத்தாமா எனும் யானையைக் கொன்று விட்டு, ‘அசுவத்தாமா கொல்லப்பட்டான்’ என்று மட்டும் சொல்லச் சொன்னார்.

    பீமனும் அப்படியேச் செய்தான். துரோணர் உண்மையறியாமல், போரில் தன் மகன் அசுவத்தாமாவைக் கொன்று விட்டனரே என்று நினைத்துக் கவலையடைந்தார். அந்த வேளையில் துரோணரைப் பாண்டவர்கள் எளிதில் வீழ்த்தி விட்டனர். போர் முடிந்து பல ஆண்டுகள் கடந்துவிட்ட பின்பும், பீமனுக்குத் தான் சொன்ன பொய்யால்தான் துரோணர் மரணமடைய நேரிட்டது என்கிற குற்ற உணர்வு இருந்து கொண்டேயிருந்தது.

    பீமன், அந்தக் குற்ற உணர்வில் இருந்து மீண்டு மன அமைதி பெறவும், தான் அறியாமல் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கவும் வேண்டி ஒரு பழமையான விஷ்ணு கோவிலைப் புதுப்பித்து வழிபடுவதென்று முடிவு செய்தார். அப்போது அங்கிருந்த பழமையான மகாவிஷ்ணு கோவில் ஒன்று அவனது கண்ணில் பட்டது. அதே நேரத்தில் அந்தக் கோவில் அமைந்த வரலாறும், அவன் கண்முன்பாக காட்சியாகத் தெரிந்தது.

    சூரியகுலத்தில் தோன்றிய சிபி சக்கரவர்த்தியின் மகன் விருட்சதர்பி தவறான வழியில் ஆட்சி செய்தான். அதனால் அந்நாட்டில் கடுமையான பஞ்சம் ஏற்பட்டது. ரிஷிகளுக்குத் தானமளித்தால் நாட்டில் நிலவும் கடும் பஞ்சம் நீங்கும் என அறிந்த மன்னன், அத்திரி, வசிஷ்டர், காச்யபர், கவுதமர், பரத்வாஜர், விஸ்வாமித்ரர் மற்றும் ஜமதக்னி எனும் சப்தரிஷிகளை வரவழைத்து அவர்களுக்குச் செல்வத்தைத் தானமாக அளித்தான்.

    சப்தரிஷிகள், தீய வழியில் சேர்த்த செல்வத்தைத் தானமாக ஏற்க இயலாது என்று சொல்லி அதை வாங்கிக் கொள்ள மறுத்து விட்டனர். ஆனால், அந்த மன்னன் ரிஷிகளுக்குத் தெரியாமல் எப்படியாவது சிறிது செல்வத்தைக் கொடுத்து, அதன் மூலம் நற்பலனை அடைந்து விட முயன்றான். ஆனால், அவன் செய்த முயற்சி கள் அனைத்தும் பலனளிக்காமல் போனது.

    அதனால் கோபமடைந்த மன்னன் சப்தரிஷி களைக் கொல்வதென்று முடிவு செய்தான். அதற்காக மிகப்பெரிய வேள்வி ஒன்றைச் செய்தான். அந்த வேள்வியில் தோன்றிய ‘கிருத்தியை’ எனும் அரக்கியிடம் சப்தரிஷி களைக் கொல்லும்படி கட்டளையிட்டு அனுப்பி வைத்தான்.

    அதனையறிந்த சப்தரிஷிகள் அரக்கியிடம் இருந்து தங்களைக் காத்துக் கொள்வதற்காக மகாவிஷ்ணுவை நினைத்து வேண்டியபடி ஓடினர். உடனே மகாவிஷ்ணு இந்திரனை அழைத்து, அந்த அரக்கியை அழித்து சப்தரிஷிகளைக் காக்கும்படிச் சொன்னார். இந்திரன் புலியாக உருவம் மாறி அரக்கியை அழித்தான்.

    சப்தரிஷிகள் மகாவிஷ்ணுவிற்கு நன்றி தெரிவித்து வணங்கினர். அப்போது அவர்கள் முன்பு காட்சியளித்த மகாவிஷ்ணுவிடம் சப்தரிஷிகள், தங்களுக்குக் காட்சியளித்த இடத்தில் கோவில் கொண்டருள வேண்டினர். அவர்களது வேண்டு கோளை ஏற்று மகாவிஷ்ணுவும் அங்கு கோவில் கொண்டார். அந்தக் கோவிலே பராமரிப்பின்றி பழமையடைந்து போனது.

    பழமையான அந்தக் கோவிலைப் புதுப்பித்த பீமன், மகாவிஷ்ணுவை வழிபட்டு மன அமைதி யடைந்தான் என்று இக்கோவிலின் தல வரலாறு தெரிவிக்கிறது.


    பீமன் பயன்படுத்தியதாக கூறப்படும் கதாயுதம்

    கோவில் அமைப்பு :

    தரை மட்டத்தில் இருந்து சற்று உயரமாக அமைந்திருக்கிறது இந்த ஆலயம். இங்குள்ள இறைவன் நின்ற திருக்கோலத்தில் வலது கையில் சக்கரமும், இடது கையில் சங்கும் ஏந்தி, கிழக்கு நோக்கிப் பார்த்தபடி இருக் கிறார். இங்குள்ள இறைவன் ‘மாயபிரான்’ என்றும், இறைவி ‘பொற்கொடி நாச்சியார்’ என்றும் அழைக்கப்படுகின்றனர். இக்கோவில் வளாகத்தில் கணபதி, சிவபெருமான், ஐயப்பன் ஆகியோருக்கும் தனிச்சன்னிதி அமைக்கப்பட்டிருக்கிறது.

    இக்கோவிலில் ஒவ்வொரு மாதமும் திருவோணம் நட்சத்திர நாளிலும், விஷ்ணுவுக்குரிய பிற சிறப்பு நாட்களிலும் சிறப்பு வழிபாடுகள் செய்யப் படுகின்றன. மலையாள நாட்காட்டியின்படி தனு (மார்கழி) மாதம் வரும் அஸ்தம் நட்சத்திர நாளில் கொடியேற்றித் தொடங்கும் பத்து நாட்கள் திருவிழா, பத்தாம் நாளில் நடைபெறும் ஆறாட்டு விழாவுடன் நிறைவடைகிறது. இதே போல் மகரம் (தை) மாதம் முதல் நாளில் இக்கோவிலில் காவடியாட்டம் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

    இக்கோவிலில் வழிபடுபவர்களுக்கு எதிரிகள் மறைமுகமாகச் செய்யும் அனைத்துத் தீயசெயல்களும் முறியடிக்கப்பட்டு வெற்றிகள் வந்தடையும் என்கிறார்கள். மேலும் ஒருவர் அறியாமல் செய்த அனைத்துப் பாவங்களும் நீங்கி மன அமைதி கிடைக்கும் என்கின்றனர்.

    ஆலய சிறப்புகள் :

    * இக்கோவில் சப்தரிஷிகளுக்கு மகாவிஷ்ணு மாயப்பிரானாகக் காட்சியளித்த தலமாகும்.

    * பஞ்சபாண்டவர்களால் புதுப்பிக்கப்பட்ட ஐந்து கோவில்களில் (அஞ்சம் பலம்) ஒன்றாக இருக்கிறது.

    * பீமனால் புதுப்பிக்கப்பட்டதால் இக்கோவில் ‘பீமன் கோவில்’ (பீமச் சேத்திரம்) என்றும் அழைக்கப்படுகிறது.

    * இத்தல இறைவனைத் திருப்புலியூரப்பன் என்றும் அழைக்கின்றனர்.

    * இந்த ஆலயம் 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகவும், நம்மாழ்வார் மற்றும் திருமங்கையாழ்வார் போன்றவர்களால் பாடல் பெற்ற தலமாகவும் இருக்கிறது.

    * பீமன் பயன்படுத்தியதாகச் சொல்லப்படும் கதாயுதம் ஒன்று இக்கோவிலின் முன்பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் மேடையில் வைக்கப்பட்டிருக்கிறது.

    * இக்கோவிலின் முன்பகுதியிலுள்ள கொடிமரம் பிற கோவில்களை விட அழகிய வேலைப்பாடுகளுடன் அமைக்கப்பட்டிருக்கிறது.

    ஆலயம் தினமும் காலை 5 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

    அமைவிடம் :

    கேரள மாநிலம், ஆலப்புழை மாவட்டம் செங்கணூரில் இருந்து மேற்குப் பக்கமாக நான்கு கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது திருப்புலியூர். கோட்டயம் நகரில் இருந்து 38 கிலோமீட்டர் அல்லது திருவல்லா நகரில் இருந்து 10 கிலோமீட்டர் தூரம் பயணித்துச் செங்கணூர் சென்று இத்தலத்தினைச் சென்றடையலாம். செங்கணூரில் இருந்து பேருந்து வசதிகள் இருக்கின்றன.

    கேரள மாநிலம், ஆலப்புழை மாவட்டம், ஹரிப்பாடு எனும் இடத்தில் உள்ளது, சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில். இந்த ஆலயம் கேரளாவின் தென்பழனி என்று போற்றப்படுகிறது.
    கேரள மாநிலம், ஆலப்புழை மாவட்டம், ஹரிப்பாடு எனும் இடத்தில் உள்ளது, சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில். இந்த ஆலயம் கேரளாவின் தென்பழனி என்று போற்றப்படுகிறது.

    தல வரலாறு :

    பரம்பொருளாக விளங்குபவர் ஈசன். அவரது நெற்றிக் கண்ணில் இருந்து வெளியேறிய நெருப்புப் பொறிகளில் இருந்து தோன்றியவர் முருகப்பெருமான். இவர் சிறுவனாக இருந்தபோதே, தேவர்களுக்கும் மனிதர்களுக்கும் தொல்லைகளைக் கொடுத்து வந்த சூரபத்மன், சிங்கமுகன், தாரகன் எனும் மூன்று அசுரர்களையும் அழித்து வெற்றிவேலனாக வலம் வந்தார்.

    சூரர்களை வதம் செய்தபிறகு பூலோகத்தை தன்னுடைய மயிலில் வலம் வந்த முருகப்பெருமானை, ஓரிடத்தில் மகாவிஷ்ணு வரவேற்றார். அப்போது முருகப்பெருமானை வாழ்த்திப் பாடல்களும் பாடினார். பின்னர் மகாவிஷ்ணு கேட்டுக் கொண்டதற்கிணங்க, அந்த இடத்திலேயே முருகப்பெருமான் கோவில் கொண்டார் என்று இந்த ஆலயத்தின் தல வரலாறு சொல்லப்படுகிறது.

    மகாவிஷ்ணு முருகப்பெருமானை வரவேற்றுப் பாடிய பாடல்கள் ‘ஹரிப்பாடல்கள்’ என்றும், அவர் பாடிய இந்த இடத்திற்கு ‘ஹரிப்பாடு’ என்றும் பெயர் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

    இந்தக் கோவிலில் அமைந்திருக்கும் முருகப்பெருமானின் சிலையைப் பற்றியும், கோவில் அமைக்கப்பட்ட விதம் குறித்தும் மற்றொரு செய்தி சொல்லப்படுகிறது.

    முன்னொரு காலத்தில் முருகப்பெருமான் சிலை ஒன்றை வைத்து, பரசுராமர் பூஜை செய்து வழிபட்டு வந்தார். அதன்பிறகு அந்தச்சிலையை ஏதோ ஒரு காரணத்தால் கந்தநல்லூரில் உள்ள கோவிந்தமட்டம் உப்பங்கழியில் விட்டுச் சென்றுள்ளார். அந்தச்சிலை பிற்காலத்தில் காயம்குளம் ஏரிப்பகுதிக்கு வந்து சேர்ந்திருக்கிறது.

    காயம்குளம் ஏரிப்பகுதியில் முருகன் சிலை இருப்பது குறித்த தகவல், அப்போதைய ஏகச்சக்கரா (ஹரிப்பாடு) நில உடைமையாளர்கள் அனைவருக்கும், ஒரே நேரத்தில் கனவாகத் தோன்றியிருக்கிறது. அதனையடுத்து அவர்கள், காயம்குளம் ஏரிப்பகுதிக்குச் சென்று அந்தச் சிலையைத் தேடியிருக்கின்றனர். அந்தத் தேடுதல் வேட்டையில் நெல்புரவுக் கடவு என்னும் இடத்தில் அந்தச் சிலை கிடைத்திருக்கிறது.

    அந்தச் சிலையை நிரந்தரமான இடமொன்றில் வைக்கும் வரை, அருகிலிருந்த ஓரிடத்தில் வைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி அந்தச்சிலை அருகில் இருந்த கிறித்தவக் குடும்பம் ஒன்றுக்குச் சொந்தமான இடத்தில் இருந்த ஆலமரம் ஒன்றின் கீழ் வைக்கப்பட்டது. பின்னர் தற்போதுள்ள இடத்தில் புதிதாக ஆலயம் கட்டப்பட்டு, அந்த முருகர் சிலையை நிறுவியதாக அந்த வரலாறு சொல்கிறது.

    புதியதாக கட்டப்பட்ட ஹரிப்பாடு கோவிலுக்கு முருகர் சிலையை எடுத்துச் செல்வதற்கு முன்பாக, ஆலமரத்தின் அடியில் இருந்த அந்த சிலைக்குச் சிறிது நேரம் வழிபாடு செய்யப்பட்டது. இப்படி வழிபாடு செய்யப்பட்ட இடத்திலும் ஒரு சிறிய கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலை மலையாளத்தில் ‘அரை நாழிகை அம்பலம்’ (அரை மணி நேரம் கோவில்) என்கின்றனர்.



    கோவில் அமைப்பு :

    கேரளாவில் ‘தென்பழனி’ என்று போற்றப்படும் ஹரிப்பாடு சுப்பிரமணியசாமி கோவில், நான்கு கோபுரங்களுடன் வட்ட வடிவக் கருவறையுடன் அமைக்கப்பட்டிருக்கிறது. இக்கோவிலில் இருக்கும் முருகப்பெருமான் சிலை ஒரு முகத்துடன் கிழக்கு நோக்கிய நிலையில் நின்ற கோலத்தில் 8 அடி உயரத்தில் காட்சி தருகிறார். நான்கு கரங்களுடன் அருளும் இத்தல இறைவன், ஒரு கையில் வேல், மற்றொரு கையில் வஜ்ராயுதம் ஆகிய ஆயுதங் களுடனும், ஒரு கை அபய முத்திரையுடனும், மற்றொரு கையை இடுப்பில் வைத்திருப்பது போன்றும் அருள்கிறார்.

    இங்குள்ள முருகப்பெருமான் ‘சுப்பிரமணிய சுவாமி’ என்று அழைக்கப்படுகிறார். இந்தச் சிலை சிவ பெருமான், மகாவிஷ்ணு மற்றும் பிரம்மன் எனும் முப்பெருங்கடவுள்களின் அருளாசிகளுடன் அமைந்திருப்பதாக நம்பப்படுகிறது. இக்கோவி லில் முருகப்பெருமான் தனித்து காணப்படுகிறார். இந்த ஆலயம் திரு மணத்திற்கு முன்பாக அமைந்தது என்பதால், இங்கு வள்ளி, தெய்வானை ஆகியோருக்கு சிலைகள் அமையவில்லை என்று கூறப்படுகிறது. இக்கோவில் வளாகத்தில் கணபதி, தட்சிணாமூர்த்தி, கிருஷ்ணர், தர்மசாஸ்தா, யட்சி, குருதிக்காமன், பஞ்சமி போன்றவர்களுக்கான சிலைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

    இக்கோவிலில் மலையாள ஆண்டு 1096- ல் ஏற்பட்ட தீவிபத்தில் கோவிலின் பெரும்பான்மையான பகுதிகள் சேதமடைந்தன. அதன் பின்னர், அப்போதைய அரசர் சித்திரைத் திருநாள் ராம வர்மா என்பவரால், இக்கோவில் மீண்டும் புதுப்பித்துக் கட்டப்பட்டது என்கின்றனர்.

    ழிபாடுகள் :

    இந்த ஆலயத்தில் ஒவ்வொரு மாதமும் கார்த்திகை நட்சத்திர நாளிலும், முருகப்பெருமானுக்குரிய பிற நாட்களிலும் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. இது தவிர மலையாள நாட்காட்டியின்படி சிங்கம் (ஆவணி) மாதத்தில் ஆவணிப் பெருவிழா, தனு (மார்கழி) மாதத்தில் மார்கழிப் பெருவிழா, மேடம் (சித்திரை) மாதத்தில் சித்திரைப் பெருவிழா என்று பத்து நாட்கள் கொண்ட திருவிழாக்கள் நடத்தப் பெறுகின்றன. மேலும் விருச்சிகம் (கார்த்திகை) மாதத்தில் திருக்கார்த்திகை தீபத்திருநாள், இடவம் (வைகாசி) மாதத்தில் சிலை நிறுவப்பட்ட நாள், துலாம் (ஐப்பசி) மாதத்தில் கந்தாஷ்டமி, கன்னி (புரட்டாசி) மாதத்தில் நவராத்திரி மற்றும் மகரம் (தை) மாதத்தில் தைப்பூசம் போன்ற விழாக்களும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகின்றன.

    இக்கோவிலில் வழிபடுபவர்களுக்குத் திருமணத்தடை நீங்குதல், குழந்தைப்பேறு கிடைத்தல், கல்வியில் மேன்மை போன்றவை கிடைக்கும் என்கின்றனர். சிறப்பு மிகுந்த இந்த ஆலயம் தினமும் காலை 4 மணி முதல் 11.30 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

    அமைவிடம் :

    கேரள மாநிலம், ஆலப்புழையில் இருந்து திருவனந்த புரம் செல்லும் சாலையில் 22 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது ஹரிப்பாடு நகரம். அங்கிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவிலுள்ள இந்த ஆலயத்தைச் சென்றடைவதற்கு ஆட்டோ வசதி உள்ளது. ஆலப்புழையிலிருந்து ஹரிப்பாடு செல்ல அதிகமான பேருந்து வசதிகள் இருக்கின்றன. 
    நாரதீய புராணத்தை இயற்றச் செய்த பெருமைக்குரிய கோவிலாகக் கேரள மாநிலம், ஆலப்புழை மாவட்டத்தில் இருக்கும் திருவண்வண்டூர் பாம்பணையப்பன் கோவில் இருக்கிறது.
    தெய்வங்களின் பெருமைகளை எடுத்துரைக்கும் வகையில் ஏராளமான புராணங்கள் எழுதப்பட்டுள்ளன. புராணங்களில் முக்கியமானவையாக பதினெண் புராணங்கள் திகழ்கின்றன. இவை தவிர்த்து பல புராணங்கள், தெய்வங்களின் பெருமைகளையும், புராண சிறப்புகளையும் பறைசாற்றும் வகையில் பக்தர்கள் மனம் லயிக்கச் செய்து கொண்டிருக்கின்றன. இவற்றில் நாராதரைப் பற்றிய சிறப்புகளைக் கூறும் நாராதீயப் புராணமும் ஒன்று.

    ஈரேழு உலகங்களுக்கும் சென்று வரக்கூடிய அற்புத சக்தி படைத்தவர் நாரத முனிவர். இவர், திருப்பாற்கடலில் பள்ளிகொண்டிருக்கும் ஸ்ரீமன் நாராயணரின் மேல் அளவு கடந்த பக்தி கொண்டவர். அதனால் எப்போதும் இவரது நாவில் இருந்து ‘நாராயண... நாராயண..’ என்ற திருநாமம் ஒலித்துக் கொண்டே இருக்கும். இவர் தொடங்கும் கலகம், உலக நன்மையின் பொருட்டே இருக்கும் என்பது பல புராணங்கள் தெரிவிக்கும் கருத்து.

    நாரதீய புராணத்தை இயற்றச் செய்த பெருமைக்குரிய கோவிலாகக் கேரள மாநிலம், ஆலப்புழை மாவட்டத்தில் இருக்கும் திருவண்வண்டூர் பாம்பணையப்பன் கோவில் இருக்கிறது.

    தல வரலாறு :

    படைப்புக் கடவுளான பிரம்மாவும், அவரது புத்திரரான நாரதரும் ஒரு முறை, உயிர்களின் உருவாக்கம் பற்றிப் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது, பிரம்மா சொன்ன கருத்து நாரதருக்குச் சரியாகத் தோன்றவில்லை. எனவே அவர் தந்தையின் கருத்தை மறுத்துப் பேசத் தொடங்கினார். அதனால், அவர்களுக்கிடையே பெரும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் கோபமடைந்த பிரம்மா, மகனென்றும் பாராமல் நாரதரைத் தன்னைவிட்டுப் பிரிந்து செல்லும்படி சாபம் கொடுத்தார்.

    தன் தந்தை கொடுத்த சாபத்தின்படி பிரம்மலோகத்தில் இருந்து பூலோகம் வந்த நாரதர், மன அமைதியைத் தேடி ஒவ்வொரு இடமாக அலைந்து கொண்டிருந்தார். பல இடங்களில் அலைந்து திரிந்தும் கிைடக்காத மன அமைதி, ஒரு இடத்தில் கிடைத்தது. அந்த இடத்தில் நாரதர், தன்னுடைய விருப்பத்திற்குரிய தெய்வமான விஷ்ணுவை நினைத்துத் தவமியற்றத் தொடங்கினார்.

    அவரது நீண்டகாலத் தவத்தில் மகிழ்ந்த விஷ்ணு, நாரதருக்குக் காட்சியளித்தார். நாரதர் தனக்கு காட்சி தந்த விஷ்ணுவிடம், ‘இறைவா! எனக்கு அனைத்து உயிர்களின் உருவாக்கம் குறித்தத் தத்துவ ஞானத்தைத் தந்தருள வேண்டும்’ என்று வேண்டினார். விஷ்ணுவும் அவர் கேட்ட ஞானத்தை அவருக்கு வழங்கினார். அதில் மகிழ்ச்சியடைந்த நாரதர், தனக்குக் காட்சியளித்த இடத்தில் கோவில் கொண்டருளும்படி விஷ்ணுவை வேண்டினார். விஷ்ணுவும் நாரதரின் விருப்பப்படி அங்கு கோவில் கொண்டார்.

    அதனைக் கண்டு மேலும் மகிழ்ச்சியடைந்த நாரதர், அவ்விடத்தில் தான் விஷ்ணுவை வழிபட்ட முறை, அவரைப் போற்றிப் பாடிய பாடல்கள் போன்றவைகளைப் பூலோக மக்களுக்கு அளிக்கும் எண்ணத்துடன் நான் காயிரம் அடிகள் கொண்ட ‘நாரதீய புராணம்’ எனும் நூலினை அங்கேயே அமர்ந்து இயற்றினார் என்று இந்த ஆலயத்தின் வரலாறு சொல்கிறது. இந்த நாரதீய புராணத்தில் விஷ்ணுவின் மகிமை, நாரதருக்கு விஷ்ணு அளித்த கருணை உள்ளிட்ட பல சிறப்புகள் சொல்லப்பட்டிருகின்றன.

    பிற்காலத்தில் இந்த ஆலயம் பராமரிப்பின்றி, வழிபாடுகள் இல்லாமல் போனது. பஞ்ச பாண்டவர்கள் வனவாசத்திற்காக இந்தப் பகுதிக்கு வந்த போது, பாண்டவர்களில் ஒருவனான நகுலன் இங்கிருந்த கோவிலைக் கண்டு, அதனைப் புதுப்பித்து வழிபட்டு வந்ததாக தல புராணம் தெரிவிக்கிறது. இதனால் இந்தக் கோவிலை இங் கிருப்பவர்கள் ‘நகுலன் கோவில்’ என்றே அழைக்கின்றனர். இதேபோல், இத்தலம் அமைந்திருக்கும் பகுதி வண்டுகளும், அவை எழுப்பும் ஒலிகளும் நிறைந்த பகுதியாக இருந்ததால் ‘திருவண்வண்டூர்’ எனப்பெயர் பெற்றது என்றும் சொல்கிறார்கள்.



    கோவில் அமைப்பு :

    இந்த ஆலயத்தின் கருவறை வட்ட வடிவமாக அமைந்திருக்கிறது. கருவறையில் இருக்கும் இறைவன் மேற்கு நோக்கி நின்ற நிலையில் இருக்கிறார். இக்கோவில் இறைவன் ‘பாம்பணையப்பன்’, ‘கமலநாதன்’ எனும் பெயர்களால் அழைக்கப்பெறுகிறார். இங்கு இறைவியாகக் கமலவல்லி நாச்சியார் இருக்கிறார்.

    இந்தப் பகுதியில் ஒரு இடத்தைத் தோண்டும்போது ஒரு கிருஷ்ணர் சிலை கிடைக்கப்பெற்றது. அந்தச் சிலையைக் கொண்டு வந்து, இந்த ஆலயத்தின் வளாகத்திற்குள் வைத்து புதிய சன்னிதி களும், மண்டபங்களும் கட்டப்பட்டிருக்கின்றன. நின்ற கோலத்தில் வெள்ளித் திருவாபரணம் அணிந்து காட்சியளிக்கும் இவரைக் கோசாலை கிருஷ்ணன் என்றழைக்கின்றனர். இக்கோவில் வளாகத்தில் கணபதி, தட்சிணாமூர்த்தி, சாஸ்தா, சிவன், நாகர் சிலைகளும் இடம் பெற்றிருக்கின்றன.

    இந்தக் கோவிலின் மேற்கு நுழைவுவாசலில் அமைக்கப்பட்டிருக்கும் கோபுரத்தின் மேற்பகுதியில் காளிங்கன் மீது கண்ணன் நடனமாடுவது போன்ற அருமையான சிற்பம் இருக்கிறது. இதன் கீழ்ப்பகுதியில் விஷ்ணுவின் பத்துத் தோற்றங்களிலான (தசாவதாரக் காட்சி) சிற்பங்கள் இடம் பெற்றிருக்கின்றன. நுழைவுவாசலின் முன்புறச் சுவரில் ஒரு பகுதியில் அனுமன், மற்றொரு பகுதியில் கருடன் ஆகியோரது சிற்பங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

    ஆலய சிறப்புகள் :

    * விஷ்ணுவின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்யதேசங்களில், இது 75-வது திவ்யதேசமாக இருக்கிறது.

    * பன்னிரண்டு ஆழ்வார்களில் ஒருவரான நம்மாழ்வார், இத்தலத்து இறைவனைப் பற்றிப் பத்துப் பாசுரங்களில் பாடிச் சிறப்பித்திருக்கிறார்.

    * இந்தக் கோவில் இறைவனை வழிபாடு செய்தால், வேண்டியது அனைத்தும் அப்படியே கிடைக்கும் என்பது இங்கு வரும் பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கிறது.

    * இத்தல இறைவனிடம் வைத்த வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள், இத்தல இறைவனுக்குப் பால் பாயசம் நைவேத்தியமாக படைத்து தங்களது நன்றிக்கடனைத் தெரிவித்துக்கின்றனர்.

    * குழந்தை வரம் வேண்டி இந்த ஆலயத்திற்கு வரும் பக்தர்கள், கோவில் வளாகத்தில் இருக்கும் கோசாலை கிருஷ்ணர் சன்னிதிக்கு வெளியே மரத்தொட்டில்கள் வாங்கி வைத்து வழிபடுகின்றனர்.

    வழிபாடுகள் :

    இத்தலத்தில் மலையாள நாட்காட்டியின்படி சிம்மம் (ஆவணி) மாதம் வரும் அஷ்டமி நாளில் கிருஷ்ணர் தோற்றம் பெற்ற நாளும், தனுர் (மார்கழி) மாதம் வரும் ஏகாதசி நாளில் வைகுண்ட ஏகாதசி நாளும் மிகச் சிறப்புடையதாக இருக்கின்றன. மேலும், இக்கோவிலில் மலையாள நாட்காட்டியின்படி கும்பம் (மாசி) மாதம் வரும் அனுசம் நட்சத்திர நாளில் கொடியேற்றம் செய்து பத்து நாட்கள் நடைபெறும் சிறப்புத் திருவிழா ஆண்டுதோறும் நடத்தப்பெறுகிறது. இவ்விழாவின் போது இறைவன் மோகினித் தோற்றம் மற்றும் அவரது பத்துத் தோற்றக் (தசாவதாரம்) காட்சிகளில் அலங்கரிக்கப்பட்டுப் பக்தர்களுக்குக் காட்சியளிக் கிறார். இந்த நிகழ்வின் போது ஏராளமான பக்தர்கள் கூடி தரிசனம் செய்வதைக் காண முடியும். இவைத் தவிர விஷ்ணுவுக் குரிய அனைத்துச் சிறப்பு நாட்களிலும் இங்கு சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன.

    இந்த ஆலயத்தில் தினமும் காலை 5.30 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் நடை திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

    அமைவிடம் :

    கேரள மாநிலம், ஆலப்புழை மாவட்டத்தில் இருக்கும் செங்கணூரில் இருந்து 6 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது திருவண்வண்டூர் திருத்தலம். இந்த இடத்திற்குச் செல்ல ஆலப்புழை, செங்கணூர் ஆகிய இடங்களில் இருந்து பேருந்து வசதிகள் உள்ளன. 
    ×