என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Jeyakumar Thanasingh"
- கிணற்றில் இருந்து தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்பட்டது.
- கிணற்றில் உள்ள சகதியில் தடயங்களை தேடும் பணியில் தீயணைப்பு படையினரும், முத்துக்குளி வீரர்களும் ஈடுபட்டனர்.
நெல்லை:
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மர்ம மரண வழக்கு தொடர்பாக போலீசார் கூடுதல் தடயங்களை தேடுவதற்காக அவரது தோட்டத்தில் உள்ள கிணற்றில் இருந்து தண்ணீரை வெளியேற்றும் பணியில் நேற்று ஈடுபட்டனர்.
கிணற்றில் இருந்து தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்பட்ட நிலையில் இன்று 2-வது நாளாக கிணற்றில் உள்ள சகதியில் தடயங்களை தேடும் பணியில் தீயணைப்பு படையினரும், முத்துக்குளி வீரர்களும் ஈடுபட்டனர்.
இந்நிலையில் ஜெயக்குமார் தோட்டத்தில் உள்ள கிணற்றில் கத்தி கண்டெடுக்கப்பட்டது. அதனை கைப்பற்றிய போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டது ஜெயக்குமார் என்பதில் சந்தேகம் இருப்பதாக அவரது மனைவி ஜெயந்தி புகார் கூறியிருந்தார்.
- சம்பவ இடத்தில் கைப்பற்றப்பட்ட சடலத்தில் இருந்து எடுக்கப்பட்ட எலும்புகளை போலீசார் டி.என்.ஏ. பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் மர்மமரணம் வழக்கு தொடர்பாக தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணையை விரிவுபடுத்தி உள்ளனர்.
இந்நிலையில் வள்ளியூர் டி.எஸ்.பி. யோகேஷ்குமார் தலைமையிலான தனிப்படை போலீசார் இன்று ஜெயக்குமாரின் சகோதரர், மகன்கள் மற்றும் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது வழக்கு தொடர்பாக பல்வேறு விபரங்களை போலீசார் அவர்களிடம் கேட்டறிந்தனர்.
இதற்கிடையே எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டது ஜெயக்குமார் என்பதில் சந்தேகம் இருப்பதாக அவரது மனைவி ஜெயந்தி புகார் கூறியிருந்தார். எனவே மீட்கப்பட்ட சடலம் ஜெயக்குமார் தானா? என்பதை உறுதிப்படுத்துவதற்காக டி.என்.ஏ.பரிசோதனை நடத்துவதற்கு போலீசார் முடிவு செய்துள்ளனர்.
இதற்காக சம்பவ இடத்தில் கைப்பற்றப்பட்ட சடலத்தில் இருந்து எடுக்கப்பட்ட எலும்புகளை போலீசார் டி.என்.ஏ. பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
- ஜெயக்குமாரின் குடும்பத்தினரிடமும் தனிப்படையினர் விசாரித்து வருகின்றனர்.
- சுமார் 15-க்கும் மேற்பட்டவர்களிடம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் தலைமையில் தனிப்படையினர் துருவி துருவி விசாரணை நடத்தினர்.
நெல்லை:
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.பி.கே. ஜெயக்குமார் மர்மமரண வழக்கில் தொடர்ந்து மர்மங்கள் நீடித்து வருகிறது.
கடந்த 2-ந்தேதி மாயமான அவர் 4-ந்தேதி வீட்டருகே உள்ள தோட்டத்தில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
பிரேத பரிசோதனை அறிக்கையில் அவரது குரல்வளை நெரிக்கப்பட்டிருந்ததும், உடல் முழுவதும் கம்பியால் சுற்றப்பட்டிருந்ததும், முதுகில் கடப்பா கல் கட்டப்பட்டிருந்ததும் தெரியவந்தது. எனவே அவரை மர்ம நபர்கள் கடத்தி கொலை செய்து தோட்டத்தில் வைத்து எரித்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
ஜெயக்குமாரின் தொண்டை குழிக்குள் பாத்திரம் கழுவ பயன்படுத்தும் ஸ்கிரப்பர் துகள்கள் இருந்ததாக தகவல்கள் பரவிய நிலையில், அவரது வீட்டின் மாட்டு தொழுவத்தில் அந்த ஸ்கிரப்பரின் கவர் கிடந்துள்ளது. இதனால் அவர் அந்த இடத்தில் வைத்து கொலை செய்யப்பட்டிருக்கலாமா? என்று போலீசாருக்கு சந்தேகம் வலுத்துள்ளது.
தடயவியல் பரிசோதனையிலும் அவர் கொலை செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்தன. எனினும் கொலையாளிகள் யார் என்பதை இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்த சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் தலைமையில் 10 தனிப்படை அமைக்கப்பட்டு பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.
ஜெயக்குமார் எழுதியிருந்த கடிதங்களில் குறிப்பிடப்பட்டிருந்த அரசியல் கட்சி பிரமுகர்கள், தொழிலதிபர்கள், ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் என பலதரப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தினர்.
அவர் கடிதத்தில் சுட்டிக்காட்டிய முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு உள்ளிட்ட 35-க்கும் மேற்பட்டவர்களை நேற்று நேரில் வரவழைத்து, தனிப்படை போலீசார் விசாரித்துள்ளனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையை வீடியோ பதிவு செய்து கொண்டதோடு பணம் வரவு-செலவு குறித்த தகவல்களை அவர்கள் கைப்பட கடிதமாக எழுதவைத்து போலீசார் வாங்கி கொண்டனர்.
இதுஒருபுறம் இருக்க, ஜெயக்குமாரின் குடும்பத்தினரிடமும் தனிப்படையினர் விசாரித்து வருகின்றனர். அவரது மனைவி, 2 மகன்கள் மற்றும் உறவினர்கள், அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் என சுமார் 15-க்கும் மேற்பட்டவர்களிடம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் தலைமையில் தனிப்படையினர் துருவி துருவி விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் நேற்று புதிய வீடியோ ஒன்று வெளியானது. அதாவது எரிக்கப்பட்ட நிலையில் கிடந்த ஜெயக்குமார் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கும்போது அவரது கழுத்தில் தொடங்கி கால் பாதம் வரையிலும் மின் வயர் சுற்றப்பட்டிருப்பதும், முதுகு பகுதியில் கடப்பா கல் ஒன்று வைக்கப்பட்டு கட்டப்பட்டிருப்பதும் அந்த வீடியோவில் தெரிய வந்துள்ளது. மேலும் அதில் அவரது கழுத்து பகுதியில் வயரால் நெரிக்கப்பட்டு இருப்பது போன்ற காட்சிகளும் இடம் பெற்றுள்ளது.
இதனால் அவர் கொலை தான் செய்யப்பட்டிருப்பார் என்று போலீசார் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. அதே நேரத்தில் கூலிப்படையினர் தான் இதுபோன்ற முறையில் கொலை செய்வார்கள் என்பதால், ஜெயக்குமார் கொலை வழக்கில் கூலிப்படைக்கு தொடர்பு இருக்கலாமா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
ஜெயக்குமார் அரசியலில் மட்டுமல்லாது அரசு ஒப்பந்ததாரராக பல தொழில்களை செய்து வந்தார். மேலும் வட்டிக்கு விடும் தொழிலும் செய்து வந்துள்ளார். இதனால் தொழில் ரீதியாக ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டு, அந்த நபர்கள் கூலிப்படையை ஏவி கொலை செய்திருக்கலாமா? என்று போலீசார் சந்தேகம் அடைந்துள்ளனர். இதனால் அந்த கோணத்திலும் விசாரணை நடத்தப்படுகிறது.
இதற்கிடையே ஜெயக்குமாரின் மனைவி ஜெயந்தியின் கோரிக்கையின் அடிப்படையில், இறந்த நபர் ஜெயக்குமார் தானா? என்பதை அறிய அவரது மகன்கள் 2 பேரிடமும் டி.என்.ஏ. மாதிரி எடுப்பதற்கு போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
அதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனிப்படை போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
ஜெயக்குமார் தனது கடிதங்களில் தனக்கு வர வேண்டிய பணம் பற்றி மட்டுமே குறிப்பிட்டுள்ளார். ஆனால் அவர் கடன் வாங்கியது பற்றி எந்தஒரு இடத்திலும் அவர் பெரிதாக எதுவும் சொல்லவில்லை. அவரது செல்போன் இதுவரை கிடைக்காவிட்டாலும் அவருக்கு வந்த அழைப்புகள் பற்றி ஆய்வு செய்தோம்.
அதுபோல அவர் யார்-யாரிடம் தொடர்பு கொண்டு பேசி இருக்கிறார் என்பது பற்றி பட்டியல் தயாரித்து ரகசியமாக விசாரணை நடத்தினோம். அப்போது தான் அவர் 50-க்கும் மேற்பட்டவரிடம் கடன் வாங்கியிருப்பது எங்களுக்கு தெரியவந்தது. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் மட்டுமின்றி மதுரை, ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களிலும் சென்று அவர் கடன் வாங்கி இருக்கிறார்.
பெரும்பாலும் வட்டிக்கு பணம் கொடுப்பவர்களிடம் அவர் கடன் பெற்றிருப்பது தெரிய வந்துள்ளது. நாங்கள் இதுவரை திரட்டி உள்ள தகவல்படி அவர் ரூ.40 கோடி வரை கடன் வாங்கியிருப்பது தெரிய வந்துள்ளது.
கோடிக்கணக்கில் வாங்கிய கடன் பணத்தை வைத்து தான் அவர் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு இருக்கிறார். ஆனால் ரியல் எஸ்டேட் தொழில் கை கொடுக்காததால் பணத்தை திருப்பி கொடுக்க இயலவில்லை. இதனால் வட்டிக்கு பணம் கொடுத்தவர்கள் பணம் கேட்டு மிரட்டி இருக்கிறார்கள்.
அந்த சமயத்தில் காங்கிரஸ் தலைவர் என்ற முறையில் ஜெயக்குமார் அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி தன்னிடம் பணம் திருப்பி கேட்டவர்களை பதிலுக்கு மிரட்டி இருக்கிறார். இதைத் தொடர்ந்துதான் அவருக்கு கொலை மிரட்டல் வந்து இருக்கிறது.
அப்படி கொலை மிரட்டல் விடுத்தவர்களில் ஒருவர்தான் ஜெயக்குமாரை திட்டமிட்டு கொலை செய்து இருக்க வேண்டும் என்று சந்தேகிக்கிறோம். அந்த நபர் நேரடியாக இந்த கொலையில் ஈடுபடாமல் கூலிப்படையை ஏவி காரியத்தை முடித்து இருக்கிறார். தென் மாவட்டங்களை பொறுத்தவரை முக்கிய நகரங்களில் கூலிப்படைகள் செயல்பட்டு வருகின்றன.
மதுரை கூலிப்படையினர் ஒருவிதமாகவும், தூத்துக்குடி கூலிப்படையினர் ஒரு விதமாகவும், நெல்லை கூலிப்படையினர் ஒருவிதமாகவும் தங்களது பாணியில் கொலை செயல்களில் ஈடுபடுவார்கள். ஜெயக்குமாரின் கை, கால்களை கட்டி கொலை செய்து இருப்பது மதுரை கூலிப்படையினர் நடத்தும் பாணியாகும்.
எனவே மதுரையைச் சேர்ந்த ஏதாவது ஒரு கூலிப்படைதான் ஜெயக்குமாரை கொலை செய்து எரித்து இருக்க வேண்டும். அது தொடர்பாக அடுத்த கட்ட விசாரணையை நாங்கள் தொடங்கி இருக்கிறோம்.
கூலிப்படையை ஏவிய பிரமுகர் அரசியல் பிரமுகரா? அல்லது வட்டிக்கு பணம் கொடுப்பவரா? என்பது தெரியவில்லை. அது பற்றியும் விசாரணை நடத்தி வருகிறோம். ஜெயக்குமார் கொன்று எரிக்கப்பட்டது பல ஆய்வுகள் மூலம் உறுதியாகி விட்டது.
அவர் தற்கொலை செய்து இருந்தால் அவரது கால் பாதம் எரிந்து இருக்க வாய்ப்பில்லை. தற்கொலை செய்யும் எண்ணத்துடன் தீக்குளித்து இருந்தால் தீ புகையை அவர் சுவாசித்து இருப்பார். பிரேத பரிசோதனை அறிக்கையில் அவரது நுரையீரலில் அத்தகைய புகை தாக்கம் எதுவும் இல்லை.
எனவே ஜெயக்குமார் கை, கால்கள் கட்டப்பட்டு கடப்பா கல்லில் இணைத்து கொலை செய்யப்பட்டு இருக்கிறார். பிறகு அவரை தீ வைத்து எரித்துள்ளனர். இந்த பாணியிலான கொலையாளிகள் பற்றி விசாரித்து வருகிறோம். விரைவில் குற்றவாளிகளை கைது செய்து விடுவோம்.
இவ்வாறு அந்த போலீஸ் அதிகாரி கூறினார்.
- ஜெயக்குமார் தனது மருமகன் ஜெபாவுக்கு எழுதிய கடிதத்தில் தனக்கு வரவேண்டிய பணம், மற்றவர்களுக்கு தான் கொடுக்க வேண்டிய பணம் குறித்தும் விளக்கமாக எழுதி இருந்தார்.
- இதுவரை சுமார் ரூ.50 லட்சம் வரையிலான பணம் ஜெயக்குமாரின் குடும்பத்தினரிடம் திரும்ப வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு கடந்த 30-ந்தேதி எழுதியிருந்த கடிதத்தில் தனக்கு பணம் கொடுக்க வேண்டியவர்களின் விபரங்களை எழுதியிருந்தார்.
மேலும் அவர் தனது மருமகன் ஜெபாவுக்கு எழுதிய கடிதத்தில் தனக்கு வரவேண்டிய பணம், மற்றவர்களுக்கு தான் கொடுக்க வேண்டிய பணம் குறித்தும் விளக்கமாக எழுதி இருந்தார்.
இந்நிலையில் தற்போது அவர் இறந்துவிட்ட நிலையில் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த தொழில் அதிபர்கள் உள்பட சுமார் 5-க்கும் மேற்பட்டோர் ஜெயக்குமாருக்கு வழங்க வேண்டிய பணத்தை திருப்பி ஒப்படைத்து விடுவதாக போலீசாரிடம் விசாரணைக்கு ஆஜராகும்போது தெரிவித்திருந்தனர்.
அதன்படி இதுவரை சுமார் ரூ.50 லட்சம் வரையிலான பணம் ஜெயக்குமாரின் குடும்பத்தினரிடம் திரும்ப வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
- திசையன்விளை சுற்றுவட்டார பகுதி முழுவதும் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.
- ஜெயக்குமார் மாயமான அன்று கையுடன் எடுத்துச்சென்ற 2 செல்போன்களும் மாயமாகி விட்டது.
நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் கடந்த 2-ந்தேதி மாலையில் மாயமானார். 4-ந்தேதி தோட்டத்தில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார்.
இதற்கு இடைப்பட்ட நேரத்தில் அவர் எங்கெல்லாம் சென்றார்? யாரையெல்லாம் சந்தித்தார்? என்பது குறித்து தனிப்படையினர் விசாரித்து வருகின்றனர். இதற்காக திசையன்விளை சுற்றுவட்டார பகுதி முழுவதும் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த 2-ந்தேதி இரவு 10.20 மணியளவில் அவர் திசையன்விளை பஜாரில் உள்ள ஒரு கடையில் பொருட்கள் வாங்கும் சி.சி.டி.வி. காட்சிகளை வைத்து விசாரித்து வரும் நிலையில் இரவு 10.30 மணிக்கு பிறகு அவரது செல்போனுக்கு பெயர் சேமித்து வைக்காத 2 வெவ்வேறு எண்களில் இருந்து போன் வந்துள்ளது. அதில் ஜெயக்குமார் பேசியுள்ளார். அந்த எண்களை போலீசார் ஆய்வு செய்து போன் செய்து பார்த்தனர். அவை சுவிட்ச்-ஆப் என்று வந்துள்ளது.
ஏற்கனவே அவர் மாயமான அன்று கையுடன் எடுத்துச்சென்ற 2 செல்போன்களும் மாயமாகி விட்டது. அதனை இதுவரை போலீசார் கண்டுப்பிடிக்கவில்லை. அந்த செல்போன்கள் கிடைக்கும் பட்சத்தில் அவரது மரண வழக்கில் ஒரு உறுதியான முடிவு கிடைத்துவிடும் என்று போலீசார் நம்புகின்றனர்.
அதேநேரத்தில் அவர் மாயமாவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு அவரது செல்போனுக்கு வந்த 2 அழைப்புகளையும் போலீசார் ஆய்வு செய்து அவர்கள் யார்? எங்கிருந்து போன் செய்தார்கள்? எதற்காக ஜெயக்குமாரை தொடர்பு கொண்டார்கள்? என்பதை அறிய தீவிரம் காட்டி வருகின்றனர்.
- மக்களுக்கு ஏமாற்றத்தை தான் தி.மு.க. அரசு பரிசாக கொடுத்துள்ளது.
- 3 ஆண்டுகால தி.மு.க. ஆட்சியில் 300 ஆண்டுக்கான சுமைகளை மக்கள் மீது சுமத்தியுள்ளனர்.
மதுரை:
மதுரையில் இன்று சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:-
இன்றைக்கு 3 ஆண்டுகள் முடிந்து 4-ம் ஆண்டு தொடக்க விழாவை தி.மு.க. அரசு காண்கிறது. கடுமையான மின்கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, பால் விலை உயர்வு, விலைவாசி ஏற்றம் என இந்த மூன்று ஆண்டுகளில் 30 ஆண்டுக்கான சுமைகளை மக்கள் அனுபவித்து வருகின்றனர்
தமிழ்நாட்டின் சட்டம்-ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ளது. இந்த மூன்று ஆண்டுகளில் அதிகமான கடன் சுமை உள்ள மாநிலமாக தமிழகம் முதல் இடத்தில் உள்ளது. சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மின் கட்டணத்தை உயர்த்த மாட் டோம் என்று கூறினார்கள். ஆனால் கடுமையாக மின் கட்டத்தை உயர்த்தி விட்டனர்.
நீட் தேர்வு, கல்விக்கடன் ரத்து செய்வோம் என்று கூறினார்கள். அது கிணற்றில் போட்ட கல்லாக இருக்கிறது. கியாஸ் மானியம் 100 ரூபாய் தருவோம் என்று கூறினார்கள். அதுவும் அப்படியே இருக்கிறது. பெட்ரோல் விலையை கண்துடைப்பாக மட்டும் குறைத்து விட்டு டீசலுக்கான விலையை குறைக்கவில்லை. ஆயிரம் ரூபாய் அனைத்து குடும்பங்களுக்கு வழங்குவோம் என்று கூறினார்கள். தமிழகத்தில் 2 கோடியே 15 லட்சம் குடும்பங்கள் உள்ளது. ஆனால் ஒரு கோடி பேருக்கு கொடுத்துவிட்டு பாரபட்சம் பார்க்கிறார்கள்.
மக்களுக்கு ஏமாற்றத்தை தான் தி.மு.க. அரசு பரிசாக கொடுத்துள்ளது. இனியும் இந்த 2 ஆண்டுகளில் அரசை மக்கள் நம்ப தயாராக இல்லை. மீண்டும் தமிழகத்தில் எடப்பாடியார் ஆட்சி அமைவதற்காக மக்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
அம்மா அரசின் திட்டங்கள் அனைத்தையும் நிறுத்தி விட்டனர். இன்றைக்கு மக்கள் மனதில் மகிழ்ச்சி உள்ளதாக முதலமைச்சர் கூறுகிறார். மக்கள் மனதில் மகிழ்ச்சி இல்லை, வீழ்ச்சி தான் உள்ளது. அதுதான் உண்மையான கள நிலவரம். தி.மு.க. ஆட்சி எப்போதும் வருகிறதோ அப்போதெல்லாம் தமிழகத்தில் மின் தட்டுப்பாடு ஏற்படும்.
நெல்லை காங்கிரஸ் தலைவர் கொலையா? தற்கொலையா? என்ற முடிவு கூட இன்னும் வரவில்லை. இது காவல்துறை மெத்தனமா? அரசியல் குறுக்கீடா? அழுத்தமா? என்று தெளிவாக தெரியவில்லை.
புகார் கடிதம் கொடுக்கப்பட்டது என்று கூறுகிறார்கள். ஆனால் காவல்துறையில் கடிதம் கொடுக்கவில்லை என்று கூறுகிறார்கள். காவல்துறையை சுதந்திரமாக விட்டால் ஒரு மணி நேரத்தில் குற்றவாளிகளை கண்டுபிடித்து விடுவார்கள். அதற்கு நான் உத்தரவாதம் தருகிறேன். ஆனால் இன்றைக்கு காவல்துறை செயல் இழந்து உள்ளது.
3 ஆண்டுகால தி.மு.க. ஆட்சியில் 300 ஆண்டுக்கான சுமைகளை மக்கள் மீது சுமத்தியுள்ளனர். தமிழகம் மகிழ்ச்சி இல்லை வீழ்ச்சியில் தான் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஜெயக்குமாரின் குடும்பத்தினரிடமும் எஸ்.பி. தலைமையிலான போலீசார் இன்றும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- எரிந்த நிலையில் கிடந்த ஜெயக்குமாரின் வாயில் பாத்திரங்களை துலக்கும் இரும்பு பிரஸ் ஒன்று இருந்தது.
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் எரிந்த நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். இதுதொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் தலைமையில் 8 தனிப்படையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதுதொடர்பாக அவர் எழுதியதாக கூறப்படும் கடிதத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்களிடமும், ஜெயக்குமாரின் குடும்பத்தினரிடமும் எஸ்.பி. தலைமையிலான போலீசார் இன்றும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்நிலையில் ஜெயக்குமார் மரண வழக்கில் புதிய தடயம் ஒன்று கிடைத்துள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எரிந்த நிலையில் கிடந்த ஜெயக்குமாரின் வாயில் பாத்திரங்களை துலக்கும் இரும்பு பிரஸ் ஒன்று இருந்தது. தற்போது போலீசார் ஜெயக்குமார் வீடு மற்றும் அவரது குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தி வரும் நிலையில் இரும்பு பிரசின் பிளாஸ்டிக் கவர் அவரது வீட்டின் உள்ளே உள்ள மாட்டுக்கொட்டகையில் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அதனை கைரேகை நிபுணர்கள் உதவியுடன் போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நமது காவல்துறை உலகப்புகழ் பெற்ற காவல் துறை என்று பெயர் பெற்றது என்பது அனைவரும் அறிவோம்.
- எனது அரசியல் அனுபவத்தில் எந்த காங்கிரஸ்காரர்களிடமும் நான் பணம் வாங்கியதும் கிடையாது. வாங்க வேண்டிய அவசியமும் எனக்கு கிடையாது என்றார்.
தூத்துக்குடி:
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மரணம் தொடர்பான வழக்கு விசாரணையில் ஆஜராக காங்கிரஸ் முன்னாள் மாநில தலைவர் கே.வி. தங்கபாலு இன்று தூத்துக்குடி வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மரணம் தொடர்பாக காவல்துறையினர் எனக்கு சம்மன் அனுப்பி உள்ளனர். அதற்காக வந்துள்ளேன். இப்போது இந்த வழக்கு தொடர்பாக எந்த கருத்தும் சொல்ல விரும்பவில்லை.
நண்பர் ஜெயக்குமார் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர். அவருடைய மரணம் கொலை அல்லது தற்கொலை எதுவாக இருந்தாலும் அது வருத்தத்திற்குரியது. அவரது குடும்பத்திற்கு எனது அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த செயல் நடந்திருக்கக்கூடாது. இதைபற்றிய முழுமையான தகவல்களை காவல்துறை முழுமையாக விசாரித்து வருவதாக அறிகிறேன்.
தமிழக காவல்துறை மிக சிறந்த முறையில் பணியாற்றக் கூடியது. நமது காவல்துறை உலகப்புகழ் பெற்ற காவல் துறை என்று பெயர் பெற்றது என்பது அனைவரும் அறிவோம். அவர்கள் உரிய முறையில் விசாரணை செய்வார்கள் என்று நாம் நம்புவோம்.
விரைவில் குற்றவாளிகளை கண்டுபிடிக்கப்பட வேண்டும். உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பது எங்களுடைய கருத்து. காங்கிரஸ் கட்சியின் கருத்து.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது நீங்கள் பணம் கொடுக்க வேண்டும் என்று கடிதத்தில் இருப்பது பற்றி நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர், எனது அரசியல் அனுபவத்தில் எந்த காங்கிரஸ்காரர்களிடமும் நான் பணம் வாங்கியதும் கிடையாது. வாங்க வேண்டிய அவசியமும் எனக்கு கிடையாது என்றார்.
- ஜெயக்குமார் தனசிங் இறப்பதற்கு முன் தனது கைப்பட 2 கடிதங்களை எழுதி இருந்தார்.
- விசாரணைக்கு ஆஜராகுமாறு எம்.எல்.ஏ. உள்பட 30 பேருக்கு போலீசார் நேற்று சம்மன் அனுப்பினர்.
நெல்லை:
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங் கடந்த 4-ந்தேதி அவரது வீட்டின் பின்னால் உள்ள தென்னந்தோப்பில் கை, கால்கள் கட்டப்பட்டு எரிந்த நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். ஜெயக்குமார் தனசிங் இறப்பதற்கு முன் தனது கைப்பட 2 கடிதங்களை எழுதி இருந்தார். அந்த கடிதங்களில் முக்கிய பிரமுகர்களின் பெயர்களை எழுதி யாரெல்லாம் தனக்கு பணம் தர வேண்டும், மிரட்டல் விடுத்தவர்கள் யார், யார் என குறிப்பிட்டு இருந்தார்.
அந்த கடிதங்களை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த வழக்கில் தொடர்ந்து மர்மம் நீடித்து வந்த நிலையில், விசாரணைக்காக 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இதையடுத்து தனிப்படையினர் காங்கிரஸ் கட்சியினர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையில் காங்கிரஸ் தலைவர் மரண வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு எம்.எல்.ஏ. உள்பட 30 பேருக்கு போலீசார் நேற்று சம்மன் அனுப்பினர்.
இந்த நிலையில், நெல்லை காங்கிரஸ் தலைவர் மர்ம மரண வழக்கு தொடர்பாக நாங்குநேரி எம்.எல்.ஏ ரூபி மனோகரனிடம் காவல்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையானது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்று வருகிறது.
- பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த நிலையில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
- ஜெயக்குமார் மரணம் தொடர்பாக முன்னாள் மாநில காங்கிரஸ் தலைவர் கே.வி. தங்கபாலு இன்று நெல்லை மாவட்ட காவல்துறை முன்பு ஆஜராகிறார்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள கரைசுத்துபுதூரை சேர்ந்தவர் கே.பி.கே. ஜெயக்குமார் தனசிங் (வயது 60). இவர் மாயமான நிலையில் அவரது வீட்டுக்கு பின்னால் உள்ள தோட்டத்தில் தீயில் எரிந்து கரிக்கட்டையான நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில், ஜெயக்குமாரின் பிரேத பரிசோதனை அறிக்கை இன்று வெளியாகியுள்ளது.
பிரேத பரிசோதனையில் ஜெயக்குமாரின் குரல்வளை முற்றிலும் எரிந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஜெயக்குமாரின் நுரையீரலில் திரவங்கள் எதுவுமில்லை என தெரியவந்துள்ளது.
ஏற்கனவே உயிரிழந்த நபரை எரியூட்டினால் மட்டுமே குரல்வளை முற்றிலும் எரிந்து போகும்.
இதனால் பிரேத பரிசோதனை அறிக்கை அடிப்படையில் ஜெயக்குமார் தற்கொலை செய்திருக்க வாய்ப்பில்லை என காவல்துறை சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் பிரேத பரிசோதனை அறிக்கை சென்னையில் உள்ள உயர் மருத்துவ குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த நிலையில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
இதனிடையே ஜெயக்குமார் மரணம் தொடர்பாக முன்னாள் மாநில காங்கிரஸ் தலைவர் கே.வி. தங்கபாலு இன்று நெல்லை மாவட்ட காவல்துறை முன்பு ஆஜராகிறார்.
முன்னதாக, 30 பேருக்கு காவல்துறை சம்மன் அனுப்பியிருந்த நிலையில், 15-க்கும் மேற்பட்டோரிடம் காவல்துறையினர் நேரில் விசாரணை நடத்தியுள்ளனர்.
மேலும் மரணத்துக்கு முன் ஜெயக்குமார் எழுதிய கடிதங்களில் தொடர்புடையவர்களிடமும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
- கொல்லப்பட்ட ஜெயக்குமார் மாவட்ட தலைவர் என்பதால் நெல்லை தொகுதி தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டார்.
- தி.மு.க. அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறை விசாரித்தால் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் கொலை வழக்கில் உண்மை வெளிவர வாய்ப்பே இல்லை.
சென்னை:
தமிழக பா.ஜ.க. மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங், அவருக்கு சொந்தமான தோட்டத்திலேயே எரித்து படுகொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. ஆளும் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ஒருவர் கொடூரமாக கொல்லப்பட்டிருப்பதில் இருந்து தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு எந்த அளவுக்கு மோசமடைந்துள்ளது என்பதைக் காட்டுகிறது.
இந்த படுகொலையை சாதாரணமான கொலை சம்பவமாக எடுத்துக் கொள்ள முடியாது. கொல்லப்பட்டவர் அப்பகுதியில் செல்வாக்கானவர். காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவர். நெல்லை மாவட்ட காவல் துறையினருக்கு நன்கு தெரிந்தவர். கடந்த ஏப்ரல் 19-ந்தேதி நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் நெல்லை தொகுதியில் காங்கிரஸ் போட்டியிட்டது. அத்தொகுதிக்கு காங்கிரஸ் கட்சிக்குள் பலத்த போட்டி இருந்தது. கடைசி நேரத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ராபர்ட் புரூஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதனால், கட்சிக்குள்ளேயே பல்வேறு பிரச்சனைகள் இருந்துள்ளன.
கொல்லப்பட்ட ஜெயக்குமார் மாவட்ட தலைவர் என்பதால் நெல்லை தொகுதி தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டார். ராகுல்காந்தி கலந்து கொண்ட பொதுக்கூட்ட வரவு-செலவு கணக்குகள் மற்றும் தேர்தல் நிதி விவகாரங்களில் அவருக்கு முக்கிய தலைவர்களுடன் முன் விரோதம், கடும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. எந்த வழக்காக இருந்தாலும், குறிப்பாக அரசியல் தொடர்பான வழக்குகளாக இருந்தால் தி.மு.க.வினர் என்ன சொல்கிறார்களோ அதைத்தான் காவல்துறையினர் செயல்படுத்துவார்கள்.
எனவே, தி.மு.க. அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறை விசாரித்தால் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் கொலை வழக்கில் உண்மை வெளிவர வாய்ப்பே இல்லை. எனவே, இந்த கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
- எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற சம்பவங்கள் நடந்து வருகிறது.
- ஒரு கையெழுத்து போதும் என்று சொன்ன உதயநிதி ஸ்டாலின், ஒரு கோடி கையெழுத்தை பெற்றார். அது சென்ற இடம் ரகசியம், மர்மம் என்ன?
மதுரை:
மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் சமயநல்லூரில் நீர்மோர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி. உதயகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகமே கொலைகார நகரமாக மாறிவிட்டது. நெல்லை காங்கிரஸ் மாவட்ட தலைவர் தன் உயிருக்கு ஆபத்து என்று காவல்துறைக்கு மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் அவர் உயிர் காப்பாற்றப்பட்டு இருக்கும்.
புகாரை விசாரிக்காமல் மெத்தனமாக இருந்து விட்டு தற்போது கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்பது போல உயிர் பறிபோன பிறகு கொலையாளியை பிடிக்க தனிப்படை என்று அரசு கூறி வருகிறது.
அது மட்டுமல்ல மணல் கடத்தலை தட்டி கேட்ட வி.ஏ.ஓ. படுகொலை செய்யப்பட்டார். மணல் கடத்தல் தொடர்பாக தான் கூறியதால் எனக்கு பாதுப்பு வேண்டும் என்று ஆடு மேய்க்கும் ஒருவர் உயர்நீதிமன்றத்தில் மனு கொடுத்ததால் தற்போது நீதிமன்றத்தின் உத்தரவுப்படி அவருக்கு துப்பாக்கி ஏந்திய காவலர்கள் பாதுகாப்பு பணியில் உள்ளனர்.
எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற சம்பவங்கள் நடந்து வருகிறது. தமிழக மக்களே அச்சத்தில் உறைந்து உள்ளனர். மக்களுக்கு உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலை உள்ளது.
இந்த அரசு கும்பகர்ண தூக்கத்தில் உள்ளதாக கூறுகிறார்கள். கும்பகர்ணன் கூட ஆறு மாதம் தூங்குவான், ஆறு மாதம் விழித்து விடுவான். ஆனால் இந்த அரசு விழிக்காமல் காவல்துறையே கோமா நிலையில் உள்ளது.
நாடு முழுவதும் நீட் தேர்வு இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகள், சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி மற்றும் கால்நடைபடிப்பிற்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வுக்காக நீட் தேர்வு நடைபெற்று வருகிறது.
இந்த ஆண்டு தமிழ், ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட 13 மொழிகளில் 557 நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்தியா முழுவதும் 24 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதுகிறார்கள். தமிழகத்தில் ஒன்றரை லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர்.
கல்லூரி படிப்பை முடித்துவிட்டு ஆண்டுக்கு 10 லட்சம் மாணவர்கள் வெளியே செல்கிறார்கள். நீட் தேர்வு எழுத முன் வருகிற மாணவர்கள் இந்த நான்காண்டு காலத்திலே பார்க்கிறபோது ஒரு லட்சம் என்று சொன்னால் பத்தில் ஒரு சதவீதம் தான் உள்ளது.
ஒரு கையெழுத்து போதும் என்று சொன்ன உதயநிதி ஸ்டாலின், ஒரு கோடி கையெழுத்தை பெற்றார். அது சென்ற இடம் ரகசியம், மர்மம் என்ன? நீட் தேர்வு ரத்து ரகசியத்தை வெளியிட உதயநிதி ஸ்டாலின் முன்வருவாரா? அதற்கு முதலமைச்சர் துணை புரிவாரா?
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்